ஆள் அல்லது நபர் என்னும் சொல் பொது வழக்கில் ஒரு தனி மனித இனத்தைச் சேர்ந்த தனியொருவரைக் குறிக்கும்.[1][2][3]

சிறப்புப் பொருள் தொகு

சட்டவியல், மெய்யியல், மருத்துவம் போன்ற துறைகளில் சில சூழ்நிலைகளில் இச் சொல் சிறப்புப் பொருள் பெறுவதும் உண்டு. எடுத்துக் காட்டாகச் சில நீதி முறைகளில் ஒரு கூட்டமைப்பு நிறுவனம் சட்டமுறையான ஆளாகக் கணிக்கப்படுவது உண்டு.

மெய்யியலிலும், மருத்துவத்திலும் ஒரு குறித்த வகையில் சிந்திக்கும் வல்லமை கொண்ட மனித இனத்தைச் சார்ந்த ஒருவரே "ஆள்" என்னும் சொல்லால் குறிக்கப்படுவர்.

எவ்வகையான சிந்தனை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பொறுத்து, சில வேளைகளில் கருப்பையில் இருக்கும் முழு வளர்ச்சியடையாத கருவையும், புதிதாய்ப் பிறந்த குழந்தையையும் கூடக் குறிப்பதற்கு இச் சொலைப் பயன்படுத்த முடியும்.

அறிவியல் அணுகுமுறை தொகு

"ஆள் தன்மை" பற்றிய நோக்கு, அதன் தன்மைகள் என்பன பற்றி சமூக உளவியல் துறையிலும், வேறு சில துறைகளிலும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக உளவியலில் "ஆள் தன்மை"யின் பண்பாக்கம் குறித்த துல்லியத்தன்மை, இது குறித்த நோக்கு உருவாகும் வழிமுறைகள், சார்புத்தன்மையின் உருவாக்கம் போன்ற விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் பல அறிவியல், மருத்துவத் துறைகளில் ஆளுமை வளர்ச்சி தொடர்பான பல்வேறு பட்ட விடயங்கள் ஆராயப்படுகின்றன.

ஆள் என்பவர் யார்? தொகு

  • மனிதர் - இன்றைய உலகளாவிய சிந்தனைப் போக்கின்படி ஒரு மனித உயிர் பிறந்ததுமே இயல்பாகவே அதற்கு "ஆள்தன்மை" வந்துவிடுவதாகக் கருதப்படுகிறது.
    • புறநடைகள்: மேற்கூற ஆள்தன்மை குறித்த புற நடைகள் பெரும்பாலும் உணர்வு சார்ந்தவையும், சர்ச்சைக்கு உரியனவும் ஆகும். சிலர், தாய் வயிற்றிலுள்ள கரு, மூளைச் சிதைவு கொண்டோர், ஆழ்மயக்க நிலையில் உள்ளோர் போன்றோரை "ஆள்தன்மை" கொண்டவர்களாகக் கருதுவது ஐயத்துக்கு இடமானது எனக் கருதுகின்றனர். இத்தகைய கருத்துக்கள் இரு பக்கங்களிலும் இருந்து தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. பண்டைக் காலச் சமுதாயங்கள் சிலவற்றில் பெண்கள், பிற இனத்தவர், மூளை பாதிக்கப்பட்டவர்கள், பழங்குடியினர் போன்றோரை "ஆள்தன்மை" கொண்டோராகக் கருதுவது இல்லை.
  • விலங்குகள் - சில மெய்யியலாளர்கள்; விலங்கு நலன்கள், விலங்கு உரிமை போன்ற விடயங்களில் நாட்டம் கொண்டோர் போன்றவர்கள், சில விலங்குகளுக்கும் "ஆள்தன்மை" கொடுக்கப்படவேண்டும் என்கின்றனர். மனிதக் குரங்குகள், யானைகள் போன்றவை அவற்றின் அறிவுத்திறன், சமூக அமைப்பு என்பன தொடர்பில் இவ்வாறான "ஆள்தன்மை" உடையன ஆவதற்கு அருகதை உள்ளவை என்கின்றனர் அவர்கள். விலங்குகளை வணங்கும் சமயங்களைச் சேர்ந்தவர்கள் விலங்குகளையும், தாவரங்களையும் கூட மனிதருக்குச் சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகத் தேவதைகளாகவோ கருதுவது உண்டு. இதன்மூலம் அவை "ஆள்தன்மை" பெற்று விளங்குவது உண்டு.

மேற்கோள்கள் தொகு

  1. "Personhood – Anthropology". www.oxfordbibliographies.com – Oxford Bibliographies.
  2. De Craemer, Willy. “A Cross-Cultural Perspective on Personhood.” The Milbank Memorial Fund Quarterly. Health and Society, vol. 61, no. 1, 1983, pp. 19–34., https://www.jstor.org/stable/3349814.
  3. Christian Smith. 2003. Moral, Believing Animals: Human Personhood and Culture. Oxford University Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆள்&oldid=3768739" இலிருந்து மீள்விக்கப்பட்டது