இருசுற்று வாக்கெடுப்பு முறை

இருசுற்று வாக்கெடுப்பு முறை (அல்லது இரண்டாம் வாக்கு, வழிவு வாக்கெடுப்பு ) வாக்காளர்கள் தங்களால் தெரிந்தெடுக்கபட்ட வேட்பாளருக்கு ஒரு வாக்கு அளித்து ஒரே ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு முறையாகும். இருப்பினும், எந்தவொரு வேட்பாளருமே தேவைப்படும் வாக்கெண்ணிக்கையைப் பெறவில்லை எனில் குறிப்பிட்ட வீத வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களிடையே அல்லது மிகக் கூடுதலான வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்களிடையே ஒருவரைத் தெரிந்தெடுக்க இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். முதல் சுற்றிலேயே வெற்றி பெற தனிப்பெரும்பான்மை அல்லது 5-15% வேறுபாட்டுடன் 40-45% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.

வழிவு வாக்கெடுப்புக்கான ஓர் எடுத்துக்காட்டு. வழிவு வாக்கெடுப்பில் இரு சுற்றுக்களாக வாக்கெடுப்பு நடக்கிறது.இரண்டாவது சுற்றுக்கு இரண்டு வேட்பாளர்களே எஞ்சியிருப்பர்.

உலகின் பல பகுதிகளில் சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் நேரடி அரசுத்தலைவர் தேர்தல்களிலும் இருசுற்று வாக்கெடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. பிரான்சின் குடியரசுத் தலைவர், சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, அவுஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, சிலி, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, குரோசியா, சைப்ரஸ், தொமினிக்கக் குடியரசு, ஈக்குவடோர், பின்லாந்து, கானா, குவாத்தமாலா, இந்தோனீசியா, லைபீரியா, பெரு, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, செனகல், செர்பியா, சிலவாக்கியா, சுலோவீனியா, கிழக்குத் திமோர், உக்ரேன், உருகுவே, சிம்பாப்வே நாட்டு குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பயன்படுத்தப்படுகிறது. 1871-1918 ஆண்டுக்காலங்களில் இடாய்ச்சுப் பேரரசிலும் 1908 மற்றும் 1911 ஆண்டு நியூசிலாந்து நாட்டுத் தேர்தல்களிலும் இந்த முறை பயன்படுத்தப் பட்டுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு