இலுப்பை

தாவர இனம்
இலுப்பை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பா. லோங்கிஃபோலியா
இருசொற் பெயரீடு
பாசியா லோங்கிஃபோலியா

இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.

மரத்தின் அமைப்பு தொகு

இலுப்பை மரம் வெப்ப மண்டல மரவகையைச் சேர்ந்தது. கோடைகாலத்தில் இலையை உதிர்த்து விடும். சப்போட்டா தாவரத்தின் குடும்பத்தைச் சேர்ந்தது. இலைகள் சப்போட்டா இலையை ஒத்திருக்கும். நூறு அடிக்குமேல் வளரக்கூடியது. சப்போட்டா குற்று செடி அல்லது குற்று மர வகையைச் சேர்ந்தது, ஆனால் இலுப்பை மிக உயரமாக வளரும்.

பூ மற்றும் காயின் அமைப்பு தொகு

பூக்கள் உருண்டை வடிவமும் இனிப்பு சுவையும் வெண்மை நிறமும் உடையதாய் இருக்கும். இலுப்பைப் பூ முத்தின் வடிவில் சாறுடையதாக இருக்கும். இலுப்பை பழத்தின் சுவை, மணம் அனைத்தும் சப்போட்டா பழத்தை ஒத்திருக்கும். ஆனால் அதன் கொட்டை சப்போட்டா விதையை விட பெரிதாக இருக்கும். இலுப்பை பழம் சிறுவர்கள் உண்பார்கள். இலுப்பை பழத்தை வௌவால்கள் விரும்பி உண்ணும். இலுப்பை கொட்டையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். சப்போட்டா விதைகள் முளைக்கும் தன்மை அற்றது. அதனால் இலுப்பை விதையை முளைக்க வைத்து அதனுடன் சப்போட்டா மரக்கிளையை ஒட்டு சேர்க்கின்றனர்.

மரத்தின் பயன்கள் தொகு

மரத்தின் உள்பாகம் மிகவும் உறுதி உடையது. குளக்கரையிலும் தரிசு நிலங்களிலும் இலுப்பையை நட்டு வளர்க்க முடியும். வெறும் வழிபாடுகளுக்கு மட்டுமல்லாமல் மருத்துவப் பயன்பாட்டிற்குப் பயன்படும் அருமையான மருத்துவ குணம் கொண்ட மருந்து இலுப்பை எண்ணெய்.

இலுப்பை எண்ணெய் தொகு

இதன் எண்ணெய் சற்று வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலேசான கசப்புச் சுவையைப் பெற்றிருக்கும். இதன் எண்ணெய் குளிர்காலத்தில் உறைந்து விடும். இந்த எண்ணெயைச் சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் சிறிது கசப்புச் சுவையாக இருக்கும். கோயில்களில் விளக்கு வைக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தினர். அதனால் சிவன் கோயில் உள்ள இடங்களில் இலுப்பை மரங்களை நட்டு வளர்த்தனர். இதன் எண்ணெய் மருந்தாகவும் பயன்படுகிறது. சவர்க்காரம் தயாரிக்க, கோயில் திருவிளக்கெரிக்க பயன்படும்.

மருத்துவப் பயன்கள் தொகு

கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலுப்பைப்பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; சதை நரம்புகளைச் சுருங்கச்செய்யும்; தும்மலுண்டாக்கும்.

தலமரமாக தொகு

திருஇரும்பைமாகாளம், திருப்பழமண்ணிப்படிக்கரை, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு), திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தலமரமாக உள்ளது. திருப்பழமண்ணிப்படிக்கரை தலமரத்தால் இலுப்பைப்பட்டு என்றே தற்பொழுது விளங்குகிறது.[1] சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேசுவரர்–காமாட்சி ஆலய வளாகத்தில் திருவள்ளுவருக்கு ஏழுப்பப்பட்டுள்ள கோயிலின் தலமரமாக விளங்குவது அங்கு வள்ளுவர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் எழுந்துள்ள இலுப்பை மரமாகும்.[2]

அழிவு தொகு

தமிழகப் பழங்குடி மக்களின் தாகத்தைத் தீர்த்து வந்த இலுப்பைப்பூவின் உற்பத்தி அழிவின் முகப்பில் இருக்கிறது. தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்கள் இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு வாக்கின் கணக்கின்படி 10,000 மரங்களே உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. [3]

புகைப்படக் காட்சியகம் தொகு

இவை இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்கள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இலுப்பை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-08. பார்க்கப்பட்ட நாள் 2012-03-07.
  2. Ramakrishnan, Deepa H. (15 November 2019). "As a war of words rages outside, peace reigns inside this temple". The Hindu (Chennai: Kasturi & Sons): p. 3. https://www.thehindu.com/news/cities/chennai/as-a-war-of-words-rages-outside-peace-reigns-inside-this-temple/article29976407.ece. 
  3. விரியும் கிளைகள் 12: அணையப் போகும் ஜோதிதி இந்து தமிழ் 19 டிசம்பர் 2015

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுப்பை&oldid=3769029" இலிருந்து மீள்விக்கப்பட்டது