இஹ்றாம் என்பது இசுலாமியர்கள் மக்காவிற்கு ஹஜ் அல்லது உம்றா எனப்படும் புனிதப் பயணம் செல்லும் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் ஆகும். புனிதப் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்தபின் ஹஜ் அல்லது உம்றா பயணத்தின் குறிப்பிட்ட கடமைகளை நிறைவேற்றி முடிப்பது வரை அவர்களின் உடை, நடத்தை, சிந்தனை ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். இதற்கு 'இஹ்றாம்' என்று பெயர்.

இஹ்றாம் அணிந்துள்ள குழந்தை

இஹ்றாமின் வகைகள் தொகு

தமத்துஉ தொகு

தமததுஉ என்பது தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு இஹ்றாம செய்தலாகும். இந்த முறையில் ஹஜ் செய்பவர்கள் " முதமத்திஉ" என்றழைக்கப்படுவார்கள். இவர்கள் மீக்காத்தில் உம்றாவுக்காக மட்டும் இஹ்றாம் கட்டி மக்கா சென்று உம்றாவை முடித்த பிறகு 'தஹல்லுல்'(தடைகளை விடும் நிலை) ஆகிவிடுவார்கள். பிறகு துல்ஹஜ் 8-ஆம் நாள் ஹஜ் பயணத்திற்காக மீண்டும் இஹ்றாம் கட்டிக் கொண்டு ஹஜ் நட்களில் ஹஜ்ஜை முடிப்பார்கள். அதற்குப் பின் விரும்பினால் மீண்டும் உம்றா செய்வார்கள்.(இந்தியாவில் இருந்து செல்லும் பயணிகள் பெரும்பாலும் இம்முறையையே பின்பற்றுகிறார்கள்.)

இஃப்றாத் தொகு

இஃப்றாத் என்பது ஒன்றுக்காக மட்டும் இஹ்றாம் செய்வது என்று பொருள்படும்.இந்த முறையில் ஹஜ் செய்பவர்கள் 'முஃப்ரித் என்றாழைக்கப்படுவார்கள். முஃப்ரித்துகள் மீக்காத்தில் ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்றாம் கட்டுவார்கள். ஹஜ் நாட்களில் ஹஜ்ஜை முடிப்பார்கள். குர்பானி கொடுப்பது முஃப்ரிதுக்கு கட்டாயமல்ல. விரும்பினால் கொடுக்கலாம். இவர்கள் ஹஜ் முடித்த பின்னரே உம்றா செயாலாம்.

கிரான் தொகு

சேர்த்துச் செய்தல் என்று பொருள்படும். கிரானாக ஹஜ் செய்பவர்கள் "காரின்" என்றழைக்கப்படுவார்கள். இவர்கள் மீக்காத்தில் உம்றாவையும் ஹஜ்ஜையும் நாடி இரண்டிற்காகவும் இஹ்றாம் கட்டிக்கொண்டு மக்கா சென்று உம்றாவின் தவாஃபையும் சயீயையும் முடித்துவிட்டு, ஆனால் தலைமுடியை நீக்காமலும் இஹ்றாமை விடாமலும் இருப்பார்கள். அதே இஹ்றாமில் ஹஜ் நாட்களில் ஹஜ்ஜையும் முடிப்பார்கள்.

இஹ்றாமின் முறை தொகு

1-மீக்காத்தில் அல்லது மீக்காத்தை அடைவதற்குமுன் இஹ்றாம் கட்டுவதற்காக குளித்து சுத்தமாகி உடலில் நறுமணங்களைப் பூசிக் கொண்டு ஆண்கள் இஹ்றாமின் ஒரு துணியை வேட்டியாகக் கட்டிக்கொண்டு, மற்றதை உடலில் ஒரு போர்வையாகப் போர்த்திக் கொள்ள வேண்டும்.
பெண் ப்யணிகள் அவர்களின் வழக்கமான உடைகளை அணிந்து கொள்ளலாம். தலையை மறைக்கலாம் ஆனால் முகத்தை மறைக்கக் கூடாது. இஹ்றாம் கட்டியபின் சிலவற்றைச் செய்யக்கூடாது என்பதால் மீக்காத்தில் இஹ்றாம் கட்ட குளிப்பதற்கு முன்னரே நகங்களை வெட்டிக் கொள்ளுதல், ஆண்கள் மிசையைக் கத்தரித்துக்கொள்ளுதல், பெண்கள் மருதாணி பூசுவது முதலியனவற்றைச் செய்துகொள்ள வேண்டும். பெண் பயணிகளுக்கு வழக்கமான ஆடைகள் அணிய அனுமதியிருந்தும்,பெரும்பாலோர் கறுப்பு அல்லது வெள்ளை நிற "புர்கா" எனப்படும் ஆடைகளையே அணிந்துகொள்கிறார்கள்.

2-இஹ்றாம் துணியால் தலையை மறைத்துக்கொண்டு இஹ்றாமின் தொழுகை என்ற நிய்யத்துடன் இரண்டு விதமான சூறாவை ஓதுவது சிறந்தது. தொழுகைக்குப் பின் (ஆண்கள் தலையை மறைக்காமல்) உம்றாவின் அல்லது ஹஜ்ஜின் அல்லது இரண்டையும் சேர்த்துச் செய்வதற்கான நிய்யத்து செய்ய வேண்டும். அதன் பின் மூன்று முறை தல்பியாவை மெல்லிய குரலில் ஓத வேண்டும்.

3- இச்சியல்களை மீக்காத்தைத் தாண்டும் முன் முடித்துக் கொள்ள வேண்டும்.

4- ஹைள் (மாத விலக்கு) ஏற்பட்டிருக்கும் பெண்கள் இஹ்றாமின் தொழுகையை மட்டும் விட்டுவிட்டு, மீதமுள்ள செயல்களைச் செய்ய வேண்டும்.

5 - ஆண்கள் கணுக்கால் வெளியே தெரியும்படி செருப்பை அணிந்து கொள்ள வேண்டும். ரப்பராலான செருப்பு இதற்குப் போதுமானது.
6- இந்த முறைகள் முடிந்ததும் இஹ்றாம் கட்டியதாகப் பொருள். இதனை முடித்ததும் ஒருவர் "முஹ்ரிம்" எனப்படுவார். இதன் பிறகு ஒரு நிலையில் இருந்து ஒரு நிலைக்கு மாறும் போது ஒவ்வொரு நிலையிலும் தல்பியாவை ஓதவேண்டும். சான்றாக நிற்கும் போதும், அமரும் போது, படிகளில் ஏறி இறங்கும் போதும், மற்றவர்களுக்கு சலாம் சொல்லும் போதும், மற்றவர்களுடன் கைகுலுக்கும் போதும் 'லப்பைக்' என்று சொல்ல வேண்டும். மற்றபடி தல்பியாவை ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். தொழுகைக்குப் பிறகும், தூங்கி எழும்போதும் தல்பியாவை ஓதவேண்டும்.
7- இஹ்றாம் அணிந்திருக்கும் போது ஆண் புனிதப் பயணிகள் (தொழுகை வேளியில் கூட) தலையை மறைக்கக் கூடாது.

8- இஹ்றாம் அணிந்திருக்கும்போது இஹ்றாமில் செய்யக் கூடாதவைகளிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்.

முஹ்ரிம் செய்யக் கூடாதவை தொகு

  • ஆண்கள் தையலுள்ள உள்ளாடைகள் முதலியவற்றை அணிவது.(சான்றாக பனியன், ஜட்டி, சட்டை, தொப்பி, தலைப்பாகை முதலியவைகளை); இஹ்றாமின் துணிகளைக் கூட்டிக் காட்டுவது; பாதத்தின் மேல்புறமுள்ள எலும்பை மறைப்பது.
  • உடம்பிலோ, உடையிலோ, விரிப்பிலோ, மணம்பூசுவது; மணமுள்ள பொருட்களை முகர்ந்து பார்ப்பது: நறுமணம் வீசும் உணவு பானங்களைச் சாப்பிடுவது.
  • தலை முடிக்கும் தாடிக்கும் எண்ணெய் தேய்ப்பது.
  • நகம், முடி வெட்டுதல், உடம்பிலுள்ள மயிர்களைக் களைதல்; மயிர்கள் விழும்படி அழுக்கைத் தேய்த்தல்; அலங்கரிக்கும் நோக்கத்துடன் குளித்தல்;
  • திருமணம் செய்தல், திருமணத்திற்கு ஒப்பந்தம் செய்தல், பிறாருக்கு திருமணம் செய்துவைத்தல்;
  • காம இச்சை உண்டாக்கக்கூடிய ஏதாவது செயல்களைச் செய்தல்; கணவன்-மனைவி உறவு; இச்சையூட்டும் செய்திகளைப் பேசுதல்;
  • வன விலங்குகளை வேட்டையாடுவது, அதற்கு உதவி செய்வது, வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்பது;
  • சண்டை சச்சரவு செய்தல், கெட்ட வார்த்தைகளைப் பேசுதல்.
  • ஹறம் ஷரீஃபின் எல்லைக்குள் உள்ள புல்களையோ, செடிகளையோ, மரங்களையோ முறிப்பது அல்லது வெட்டுவது முதலிய செயல்களிலிருந்து முஹ்ரிம் விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குற்றமாகும்.

உசாத்துணை தொகு

  • எஸ். நாகூர் மீரான், முன்னாள் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர்(வாழ்த்துரை)மற்றும் மு. அபுல் ஹசன், முன்னாள் செயலாளர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, முகவுரையுடன்,"ஹஜ்ஜும் உம்றாவும்", தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வெளியீடு. 9-2-1995
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஹ்றாம்&oldid=2058854" இலிருந்து மீள்விக்கப்பட்டது