ஏனாதி திருக்கிள்ளி

ஏனாதி திருக்கிள்ளி என்பவன் சோழரின் படைத்தலைவன். இவனைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியுள்ளார். இந்தப் புலவரால் பாடப்பட்ட சோழ அரசர்கள் இருவருள் ஒருவன் நலங்கிள்ளியின் மகன் சேட்சென்னி. இந்தச் சேட்சென்னி இலவந்திகைப்பள்ளி என்னுமிடத்தில் துஞ்சியவன். இவனது தந்தை நலங்கிள்ளியின் படைத்தலைவனாக விளங்கியவன் இந்த ஏனாதி திருக்கிள்ளி எனக் கொள்வது பொருத்தமானது.

ஏனாதி திருக்கிள்ளி போரில் விழுப்புண் பட்டுத் தோற்றத்தில் இனிமாயாக இல்லை. ஆனால் இச்செய்தி கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஒன்றில் இனிமை. மற்றொன்றில் இனிமை இல்லாமை. அதுபோல இவனிடம் தோற்றோடிய பகைவனும் ஒன்றில் இனியவனாகவும், மற்றொன்றில் இனிமை இல்லாதவனாகவும் இருக்கிறான். பகைவன் கண்ணுக்கு இனியவன். காதுக்கு இனிமை இல்லாதவன். இருவரும் ஒன்றில் இனியவராகவும், மற்றொன்றில் இன்னாதவராகவும் இருக்கும்போது ஏனாதி திருக்கிள்ளியை மட்டும் உலகம் புகழ்வது எதனால்? என்று புலவர் தன் பாடலில் கூறி இவனைப் பெருமைப்படுத்துகிறார். [1]

இந்தப் புலவர் சோழிய ஏனாதி திருக்குட்டுவன் என்பவனையும் பாடியுள்ளார். [2]

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஏனாதி பட்டம் பெற்ற சோழர்படைத் தலைவன். [3]

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 167
  2. புறநானூறு 394
  3. புறநானூறு 174
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏனாதி_திருக்கிள்ளி&oldid=3052811" இலிருந்து மீள்விக்கப்பட்டது