ஐவன் ஈலிச்

ஆஸ்திரிய மெய்யியலாளர், கல்விச் சிந்தனையாளர்

ஐவன் ஈலிச் (Ivan Illich, செப்டம்பர் 4, 1926டிசம்பர் 2, 2002) என்பவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மெய்யியலாளரும், ரோமன் கத்தோலிக்க மதகுருவும் ஆவார்.[1][2][3]

ஐவன் ஈலிச்
பிறப்பு(1926-09-04)செப்டம்பர் 4, 1926
வியென்னா, ஆஸ்திரியா
இறப்புதிசம்பர் 2, 2002(2002-12-02) (அகவை 76)
பிரெமன், ஜெர்மனி
காலம்சமகால மெய்யியல்
பகுதிமேற்கத்தைய மெய்யியல்
பள்ளிஅராசகம், கத்தோலிசிசம்
முக்கிய ஆர்வங்கள்
கல்வியியலுக்கான மெய்யியல், தொழிநுட்பத்துக்கான மெய்யியல்
செல்வாக்குச் செலுத்தியோர்
  • ஆர்ணல்ட் டொயின்பீ, எவரெட் ரைமர், சாக் மரிட்டைன், லெப்போல்ட் கோர், சாக் எல்லுல், எம்மானுவேல் லெவினாஸ்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • எவரெட் ரைமர், அந்திரே கோர்ஸ், லீ பெல்சென்ஸ்டைன், வூல்ஃப்காங் சாக்ஸ்

இளமைக்காலம் தொகு

ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் கல்வியறிவு கொண்ட ஒரு குடும்பத்தில் 1926 செப்டெம்பர் 4ஆம் திகதி ஈலிச் பிறந்தார். சமகால மேல்நாட்டு கலாசார ஸ்தாபகராக கொள்ளப்படுபவர்; சிறந்த பொருளாதார வல்லுனர். இவரது தந்தை சிவில் பொறியியலாளராவார். இதனால், தனது கல்வியை சிறந்த பாடசாலைகளில் பெறும் வாய்ப்பு அவருக்குக் காணப்பட்டது. மேலும், இவர் பல அறிஞர்களுடன் இடைவினைகள் கொண்டிருந்தமையால் பல்வேறு மொழிகளையும் கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இத்தாலி, பிரன்சு, ஜேர்மன் ஆகியன அவரது சுயமொழியாகக் காணப்பட்டன. இதனைவிட கிரேக்கம், இலத்தீன், போத்துக்கல், ஸ்பானிஸ், குறௌசியன், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். புகழ்பெற்ற புலமையாளர்களுடன் கொண்ட இடைவினைகள் அவரது அறிவை மேலும் ஆழமாக்கியது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கு அடிக்கடி மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் இன்னும் ஒருவகையில் அனுபவமானது.

பிரபலம் தொகு

1970 களில் கைத்தொழில் உலகில் பாரிய நிறுவனங்கள் தொடர்பாக விமர்சனமான தனது கருத்துக்கள் மூலம் ஈலிச் பிரபலமானார். இவர் கல்வி முறைமைகள், தொழினுட்ப வளர்ச்சி, வலு, மருத்துவம், பொருளாதார விருத்தி போன்ற பல்துறைகளில் காணப்படுகின்ற செயற்பாடுகளை மீள்பார்வைக்கு உட்படுத்தினார். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அவற்றின் அடிப்படை நோக்கங்களுக்கு மாறாகச் செயற்படுவதனை அவதானித்த ஈலிச் அவற்றை மிகக்கடுமையாக விமர்சனம் செய்யலானார்.

1938 ஆம் ஆண்டு ஹிட்லரின் படையணி ஆஸ்திரியாவைக் கைப்பற்றியதும் இவருடைய தாய் யூத வம்சத்தவராக இருந்தமையினால் நாசிகளால் இத்தாலிக்கு நாடுகடத்தப்பட்டனர். இதனால், இவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் அலைந்து திரியவேண்டிய தேவை எழுந்தது. இதுவும் ஈலிச்சிற்கு உலகம் பற்றிய பட்டறிவினை பாடசாலையின்றியே பெறுவதற்கு வாய்ப்பளித்தது. ஈலிச் தன்வாழ்வை சமயத்துறையுடன் இணைத்துக் கொண்டதும் இக்காலத்திலேயாகும். ரோமாபுரியிலுள்ள கிறகரியன் பல்கலைக்கழகம் சென்று இறையியல், மெய்யியல் ஆகிய பாடங்களை 3ஆண்டுகள் (1943–1946) கற்றார். தொடர்ந்து சார்ல்ஸ் பேக் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் வரலாற்றில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஐவன் ஈலிச் தான் பெற்ற அனுபவம், ஆற்றல் என்பனவற்றுடன் உலகினை புதிய கண்ணோட்டத்துடன் உற்று நோக்கலானார். இதனால், மதம் தொடர்பாகவும் மாறுபட்ட சிந்தனைகள் அவரிடங் காணப்பட்டது. 1951 இல் நியோக்கில் ஒருமத போதகராக பணியைத் தொடர்ந்த ஈலிச் அறியாமைக்கு எதிரான பலகருத்தாடல்களை முன்மொழிந்தார். அவரது திறமை, ஆற்றல், மற்றும் புலமை காரணமாக திருச்சபையிலே முதன்மை பெற்றார். எனினும், திருச்சபையின் செயற்பாடுகளை திறனாய்வுக்கு உட்படுத்தியமை அவருக்குப் பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியது. இவரது கல்வி சமநிலைப் போக்குடையதாகக் காணப்பட்டது. மேலாதிக்க சிந்தனையினை பாரதூரமாக வெறுத்தார். ஒடுக்கப்பட்ட அமெரிக்கக் குடியேற்றவாசிகளின் மீது தனது கவனத்தை திசைதிருப்பி அவர்களுக்குள் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தார்.

ஈலிச் 1956 ஆம் ஆண்டு பொன்சியிலுள்ள போட்டரிக்கோ கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் துணை முதல்வராகப் பணியாற்றினார். அக்காலத்தில் Everett reamer என்பவருடன் சேர்ந்து 'கல்வித் தலைமைத்துவம்' சம்பந்தமான ஆய்விலும் ஈடுபட்டார். தான் மேற்கொண்ட புரட்சிகரமானதும் மாறுபட்டதுமான அணுகுமுறைகள் காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டது.

அமெரிக்க மிசனரிமாரை இலத்தின் அமெரிக்காவில் பணிபுரிய பயிற்சியளிக்கும் பல்கலாசார அமைப்புக்கான நிலையத்தை போடொம் (Pordham) பல்கலைக்கழத்தில் ஈலிச் ஸ்தாபித்தார். போப் 13ஆம் ஜோன் அவர்களுடன் இவருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக வத்திக்கானை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டது. தேவாலயப் பொறுப்புக்களிலிருந்தும் போதகர் பதவியிலிருந்தும் ஈலிச் 1969ல் நீங்கிவிட்டார்.

1976ஆம் ஆண்டு முறையான கல்வியியலாளகளின் நிறுவனமயப்படுத்தலிலுள்ள வாய்ப்புக்கள் பற்றிக் கவனஞ் செலுத்தினார். 1977இல் பிரான்சிலுள்ள இடதுசாரிகளிடையே அவர் பிரபலம் பெற்றார். ஈலிச்சின் நவீன சிந்தனைகளும் கருத்தாடல்களும் இடதுசாரிகளைப் பெரிதும் கவர்ந்தன.

ஈலிச் 20ஆம் நூற்றாண்டின்; சிறந்த சிந்தனையாளர் ஆவார். அவர் வரலாற்றாசிரியராக, சமூகத் திறனாய்வாளராக, திருச்சபையின் பங்குத்தந்தையாக, பல்கலைக்கழக நிருவாகியாக, விரிவுரையாளராக, பேராசிரியர், நூலாசிரியர் எனப் பல வகிபாகங்களுக்குரியவர்.

எழுதப்பட்டநூல்கள் தொகு

  • பள்ளிக்கலைப்பு சமூகம்
  • வலுவும் சமநிலையும்
  • தேவைகள் பற்றிய வரலாற்றை நோக்கி
  • பால்நிலை
  • வேலையின் நிழல்
  • மகிழ்ச்சிக்குரிய சாதனங்கள்
  • நோவின் வரலாறு

கல்விச் சிந்தனைகள் தொகு

கல்வியின் எதிர்மறைத் தாக்கங்கள் தொடர்பான ஈலிச்சின் கருத்தாடல்கள் சமூகத்தால் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கப்பட்டன. 1977ஆம் ஆண்டு வெளியான "பள்ளிக் கலைப்பு சமூகம்" (Deschooling Society) எனும் அவரது நூல், கல்வி தொடர்பான மீள்சிந்தனைக்கு அடிப்படையானது. இதில் கல்வியை நவீன பொருண்மியத்துடன் தொடர்புபடுத்தி திறனாய்வு அடிப்படையில்; நோக்குகின்றார். அத்துடன் கல்வியிலுள்ள வினைத்திறனின்மை பற்றியும் சுயதேடலுடன் உள்ள கல்வியின் மேன்மை பற்றியும் அவர் ஆராய்கின்றார். பாடசாலைகளின் எதிர்மறைத் தாக்கங்கள் பற்றிய அவரது கருத்துக்கள் கற்றோர் மற்றும் எதிர்க்கருத்துக்கள் கொண்டோர் மத்தியில் வெகுவாகப் பரவியது; பள்ளிக் கல்வியைப் பெறாதோரின் கரிசனைக்கும் அது உள்ளானது.

ஈலிச்சின் பள்ளிக்கலைப்பு சமூகச் சிந்தனையைப் பற்றி நாம் தெளிவாக நோக்க வேண்டும். பள்ளிக்கலைப்பு என்பது அவற்றை முற்றாக ஒழித்துவிடுவதில்லை, மாறாக அவற்றின் நிறுவனக் கட்டமைப்பினைச் சிதைப்பதையே வற்புறுத்துகின்றது. இது அவரது சமூகம் பற்றிய சமத்துவ சிந்தனைப்போக்கினைக் காட்டுகின்றது. பொது நிதியீட்டங்கள் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்படுவதை ஈலிச் முற்றாக எதிர்த்தார். பாடசாலைகள் ஆடம்பரப் பொருளொன்றாக இனங்காணப்படுமிடத்து பள்ளிக் கல்வியைப் பெறாதவர்கள் கவலையடைய மாட்டார்கள் என்பது இவரது வாதமாகும். அரச கட்டமைப்பினுள் பாடசாலைகள் செயற்படுவது மாணவர்களின் அறியாமையை இன்னும் அதிகரிக்குமே தவிர பரந்துபட்ட அறிவை விருத்தியாக்க உதவாது எனக் கருதினார். இது அவர் நிறுவனங்களை மிகவும் நுட்பமான முறையில் கூறுபோட்டு ஆராய்ந்ததன் பயனாக எழுந்த சிந்தனையாகும். பள்ளிக்கலைப்பு சமூகத்தின் சாத்தியப்பாடுகள் பற்றி தனது Tools for Conviviality(1973) எனும் நூலிலே மேலதிக விளக்கத்தைத் தந்துள்ளார்.

கல்வித் தரத்தை முன்னேற்றவேண்டுமாயின் அதனைக் கட்டுப்படுத்தாது சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலமே யதார்த்தமான கல்வி முன்னெடுக்கப்படும். கற்றல் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் அமைய வேண்டுமாயின் கற்போன் கட்டுப்பாடுகளுக்கு உட்படக்கூடாது என்பதும் பள்ளிக் கலைப்பு சமூகத்தின் அடிப்படைக் கருத்தாகும்.

ஐவன் ஈலிச் பள்ளிக் கூடங்களை மட்டுமன்றி வேறு நிறுவனங்களையும் மிகக்கடுமையாக விமர்சனஞ் செய்தார். நிறுவனங்களும் தொழில் வாண்மையாளர்களும் எவ்வாறு மனிதப்பண்புகளுக்கு முரணாக நடந்துகொள்கின்றார்கள் என்பதன் மீது தனது கவனக்குவிப்பை செலுத்தினார். நிறுவனங்கள் மனிதர்களின் தன்னம்பிக்கையினைக் குறைத்து, அவர்களைக் கீழ்மைப்படுத்தி, பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலை அழித்துவிடுகின்றதென்பது அவரது கருத்தாகும். வைத்திய நிறுவனங்கள் உடல் நலத்திற்குரிய பாரிய அச்சுறுத்தலாகும். நவீன மருத்துவம் மக்களுக்கு நன்மையைவிட தீமையையே செய்கின்றது என்பதும் இவரது அவதானிப்பாகும். நிறுவனங்கள் மகிழ்ச்சிகரமான செயற்பாட்டுத்தன்மை கொண்டதாக விளங்க வேண்டும். தன்னிச்சையான, உருவாக்கும் தன்மையான, சூழலுடன் இணைந்த தன்மையான பண்புகள் நிறுவனங்களிடம் காணப்பட வேண்டும். இவை நிறுவனம் ஒன்றின் இன்றியமையாத பண்புகளாக அவரால் அடையாளங் காணப்பட்டன.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Anheier, Helmut K.; Toepler, Stefan (2009). International Encyclopedia of Civil Society. Springer. பக். 848. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780387939964. 
  2. "iatrogenesis", A Dictionary of Sociology, Encyclopedia.com. updated 31 May 2020.
  3. "Ivan Domenic Illich". Geni.com. May 24, 2018. பார்க்கப்பட்ட நாள் May 25, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐவன்_ஈலிச்&oldid=3889575" இலிருந்து மீள்விக்கப்பட்டது