ஓமர் கய்யாம்

ஓமர் கய்யாம் என அழைக்கப்படும் கியாஸ் ஒத்-தீன் அபொல்-ஃபத் ஓமார் இபின் எப்ராகிம் கய்யாம் நேஷபூரி (பாரசீக மொழி:غیاث الدین ابو الفتح عمر بن ابراهیم خیام نیشابوری பிறப்பு நேஷபூர், பாரசீகம், மே 18, 1048, இறப்பு டிசம்பர் 4, 1122) ஒரு பாரசீகக் கவிஞரும், கணிதவியலாளரும், மெய்யியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் ஓமர் அல் கய்யாமி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவரது கவிதைகளுக்காகவே கூடுதலாக அறியப்படுகிறார். இயற்கணிதப் புதிர்கள் தொடர்பான செயல்விளக்கம் குறித்த ஆய்வுக்கட்டுரை (Treatise on Demonstration of Problems of Algebra), கணிதவியலில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்றாகும். இதில் முப்படிச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான வடிவவியல் முறை ஒன்றைக் கொடுத்துள்ளார். இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் விதியைத் தந்தார். இவர் இயற்றிய இயற்கணக்கியல் பர்சியாவில் பாடநூலாகப் பயன்பட்டது.காலக்கணிப்பு முறையின் மேம்பாட்டுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். பர்சியக் காலங்காட்டியைத் திருத்தியமைத்தார். இது 365 நாட்களைக் கொண்ட எகிப்தியவகை ஆகும். உயர் வெப்ப தட்ப ஆண்டின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டார்.

ஓமர் கய்யாம்
Omar Khayyám
عمر خیام
பிறப்பு18 மே[1] 1048[2]
நிசாப்புர், கொரசான்
இறப்பு4 டிசம்பர்[1] 1131 (அகவை 83)[2]
கொரசான்
பள்ளிபாரசீகக் கணிதம், பாரசீக இலக்கியம், பாரசீக மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள்
கணிதம், வானியல், மெய்யியல், இலக்கியம்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • நிசாப்புரின் அத்தார்

இளமைக்காலம் தொகு

 
ஓமர் கய்யாம் எழுதிய இரண்டு அத்தியாயங்கள் கொண்ட அவருடைய நூலின் முதல் பக்கத்தில் உள்ள "முப்படிய சமன்பாடும் கூம்பு வெட்டுகளின் வெட்டுகளும்" இந்த கையெழுத்துப் படி ஈரானில் உள்ள டெஃகரான் (Tehran) பல்கலைக்கழகத்தில் உள்ளது.

கய்யாம், ஈரானில் உள்ள, அன்றைய செல்யூக் பேரரசின் கோராசானின் தலைநகரமான நிஷாப்பூரில் பிறந்தார். இது அன்று கெய்ரோ, பாக்தாத் ஆகிய நகரங்களுக்குப் போட்டியாக விளங்கியது. இவர் கூடாரங்கள் செய்யும் ஒரு குடும்பத்தில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இவர் தனது சிறு வயதின் ஒரு பகுதியை இன்றைய வடக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள பால்க் என்னும் நகரில் கழித்தார். அங்கே ஷேக் முகம்மத் மன்சூரி என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர், கோராசான் பகுதியில் சிறந்த ஆசிரியராக விளங்கிய இமாம் மோவாபாக் நிஷாபூரி என்பவரிடம் கல்வி பயின்றார்.[1]

மிகப் பிரபலமான மூன்று பள்ளித் தோழர்கள் என்னும் கதைப்படி, கய்யாமுடன் இன்னும் இரண்டு பெயர் பெற்ற மாணவர்களும் படித்து வந்தனர். அவர்களில் ஒருவர் நிசாம்-உல்-முல்க். இவர் பின்னர் செல்யூக்கிட் பேரரசில் வாசிர் எனப்படும் பெரிய பதவியில் அமர்ந்தார். மற்றவர் ஹசன்-இ-சாபா. இவர் ஹஷ்ஷாஷின் மதப்பிரிவுக்குத் தலைவரானார். இம் மூவரும் நண்பர்களாயினர். நிசாம்-உல்-முல்க் வாசிர் ஆனதும், மற்ற இரு நண்பர்களும் அவரிடம் சென்று அவரிடம் உதவி கோரினர். ஹசன்-இ-சாபா தனக்கு அரசில் ஒரு பதவி கேட்டுப் பெற்றுக்கொண்டார். ஆனால் அவர் பேராசை கொண்டவராக தனக்கு உதவிய வாசிரை பதவியிலிருந்து அகற்றும் தோல்வியுற்ற சதியொன்றில் பங்குபற்றியதனால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். ஓமர் கய்யாம் அடக்கமாகத் தனக்கு வசிப்பதற்கும், அறிவியலைக் கற்பதற்கும், தொழுவதற்கும் ஒரு இடம் மட்டுமே கேட்டார். இவருக்கு உதவிப் பணமாக ஆண்டுக்கு 1,200 மித்கால் பொன் கொடுக்கப்பட்டது. கய்யாம் இதைக் கொண்டே தனது எஞ்சிய காலத்தைக் கழித்தார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Omar Khayyam (Persian poet and astronomer)". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-30.
  2. 2.0 2.1 Professor Seyyed Hossein Nasr and Professor Mehdi Aminrazavi. “An Anthology of Philosophy in Persia, Vol. 1: From Zoroaster to ‘Umar Khayyam”, I.B. Tauris in association with The Institute of Ismaili Studies, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமர்_கய்யாம்&oldid=2764343" இலிருந்து மீள்விக்கப்பட்டது