கர்ணன் (வகேலா வம்சம்)

இந்தியாவின் குஜராத் பிராந்தியத்தின் கடைசி வகேலா மன்னன்

கர்ணன் (Karna) ( 1296 - 1304) இவர் இந்தியாவின் குஜராத் பிராந்தியத்தின் கடைசி வகேலா மன்னர் ஆவார். தில்லி சுல்தானகத்தின் அலாவுதீன் கில்சிக்கு எதிரான தோல்வியைத் தவிர இவரது வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அலாவுதீனின் படைகள் 1299 ஆம் ஆண்டில் இவரது இராச்சியத்தை கொள்ளையடித்தன. இவரை குசராத்திலிருந்து வெளியேற கட்டாயப்படுத்தின. அடுத்தடுத்த ஆண்டுகளில் கர்ணன் தனது பிரதேசத்தின் ஒரு சில பகுதியின் கட்டுப்பாட்டை மட்டும் பெற்றதாகத் தெரிகிறது. இருப்பினும், 1304 ஆம் ஆண்டில் இரண்டாவது படையெடுப்பு வகேலா வம்சத்தின் முடிவில் விளைந்தது.

பெயர்கள் தொகு

இவரது பெயரின் மாறுபாடுகளில் கர்ணதேவன் (வகேலா கல்வெட்டுகளில்), ராய் கரண் (முஸ்லீம் வெளியீடுகளில்), மற்றும் கரண் தேவ் (வடமொழி இலக்கியங்களில்) ஆகியவை அடங்கும். சௌலூக்கிய மன்னர் முதலாம் கர்ணனிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக அவர் இரண்டாம் கர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். 15 ஆம் நூற்றாண்டின் காவியமான கன்கடதே பிரபந்தம் இவரை "ராவ் கர்னாதே" என்று அழைக்கிறது. [1] 16 ஆம் நூற்றாண்டின் போர்த்துகீசிய வரலாற்றாசிரியர் யாவோ டி பாரோசு இவரை "கலகர்ணா" என்று அழைக்கிறார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கர்ணன் வகேலா மன்னன் ராமனின் மகனவார். [3] கர்ணன் தனது மாமா சரகதேவனுக்குப் பின்னர் (ராமனின் சகோதரர்) அரியணைக்கு வந்தான். சாரங்காதேவனின் இராச்சியம் இன்றைய குஜராத்தை உள்ளடக்கியது, மேலும் இன்றைய ராஜஸ்தானில் அபு வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த முழு நிலப்பரப்பையும் கர்ணன் பெற்றதாகத் தெரிகிறது. [3] அலாவுதீன் கில்சிக்கு எதிரான தோல்வியைத் தவிர, இவரது ஆட்சியைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. [4]

அலாவுதீன் கில்சிக்கு எதிரான தோல்வி தொகு

முதல் கில்சி படையெடுப்பு தொகு

இடைக்கால நாளேடுகளின்படி (மேருதுங்காவின் விசாரம்-சிரேனி மற்றும் பத்மநாபரின் கன்காதே பிரபந்தம் போன்றவை), கர்ணன் தனது மந்திரி மாதவனின் சகோதரனைக் கொன்று விட்டு மாதவனின் மனைவியைக் கடத்திச் சென்றதாகத் தெரிகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக, மாதவன் இவனது இராச்சியத்தை ஆக்கிரமிக்க தில்லி சுல்தானக ஆட்சியாளர் அலாவுதீன் கில்சியிடம் உதவி கேட்டான். [5] [1] 1299 ஆம் ஆண்டில், அலாவுதீன் குசராத்தை ஆக்கிரமித்தான். இது இந்தியாவின் பணக்கார பிராந்தியங்களில் ஒன்றாகும். [6]

அலாவுதீனின் இராணுவம் குஜராத்தை மிகக் குறுகிய காலத்தில் எளிதில் கைப்பற்றியது. கர்ணன் தனது குடிமக்களிடையே செல்வாக்கற்றவனாக இருந்தான். மேலும் அவனிடம் ஒரு பயனற்ற இராணுவ மற்றும் நிர்வாக அமைப்பு இருந்ததாக இது கூறப்படுகிறது. [7] ஆசப்பள்ளியில் (இன்றைய அகமதாபாத்) உலுக் கானின் படைகள் கர்ணனின் படையை தோற்கடித்ததாக சமண வரலாற்றாசிரியர் ஜினபிரப சூரி கூறுகிறார். [8] வரலாற்றாசிரியர் ஏ. கே. மஜும்தார் இசாமியின் எழுத்துக்களில் கர்ணன் ஒரு கோட்டையில் தஞ்சம் புகுந்தார் என்று கூறுகிறது, [8] ஆனால் இசாமியின் எழுத்துக்களில் இருந்து அத்தகைய முடிவை எடுக்க முடியாது என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர் இசட் ஏ. தேசாய் குறிப்பிடுகிறார். [9]

இறுதியில், கர்ணன் அண்டை நாடான யாதவ இராச்சியத்தின் தலைநகரான தேவகிரிக்கு தப்பி ஓடினான். தில்லி இராணுவத்தின் ஒரு பிரிவு இவனைப் பின்தொடர்ந்தது. [10] 14 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் இசாமி, கர்ணன் யாதவர்களால் தஞ்சம் மறுக்கப்பட்டதாகவும், காகத்திய ஆட்சியாளரான ருத்ரமாதேவியிடம் தஞ்சம் கோர வேண்டியிருந்தது என்றும் கூறுகிறார். [5] இதற்கிடையில், தலைநகர் அனகில்வாடா (நவீன பதான்), கம்பாத், சூரத் மற்றும் சோம்நாதபுரம் உள்ளிட்ட குசராத்தின் செல்வந்த நகரங்களை தில்லி இராணுவம் சூறையாடியது. [10]

மீண்டும் அரியணை ஏறுதல் தொகு

அதைத் தொடர்ந்து, குஜராத்தின் ஒருசில பகுதியை கர்ணன் மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிகிறது. [11] குஜராத்தின் சம்ப்லா கிராமத்தில் காணப்படும் 1304 ஆகஸ்ட் 4 ஆம் தேதியிட்ட ஒரு கல்வெட்டில் பதானில் கர்ணன் ஆட்சி செய்ததாக சான்றளிக்கிறது. [12] சமண எழுத்தாளர் மெருதுங்கா, கர்ணன் பொ.ச. 1304 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்ததாகக் கூறுகிறார். [13] 14 ஆம் நூற்றாண்டின் முஸ்லீம் வரலாற்றாசிரியர் இசாமியும் கர்ணன் தனது அதிகாரத்தை மீண்டும் பெற முடிந்தது என்று கூறுகிறார். இசாமியின் கூற்றுப்படி, அலாவுதீன் 1303 ஆம் ஆண்டில் புதிதாக கைப்பற்றப்பட்ட சித்தோர் கோட்டையின் நிர்வாகத்தை மாலிக் சாகினிடம் ஒப்படைத்ததாகவும், சிறிது காலம் கழித்து, அண்டை பிராந்தியத்தை ஆண்ட கர்ணனுக்கு பயந்ததால் மாலிக் கோட்டையை விட்டு வெளியேறியதாகவும் கூறுகிறார்.[14]

படையெடுத்த இராணுவம் தில்லிக்கு திரும்பும் போது, அதன் மங்கோலிய வீரர்கள் குஜராத்தில் இருந்து கொள்ளையடித்ததில் தங்கள் பங்கிற்காக தங்கள் தளபதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இந்த கிளர்ச்சி மங்கோலியர்களில் சிலர் கர்ணனிடம் தஞ்சம் கோரியதாகத் தெரிகிறது. அவரது 1304 ஆம் ஆண்டு கல்வெட்டு மங்கோலிய அதிகாரிகள் பால்சாக் மற்றும் ஷாடி ஆகியோர் அவரது நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகித்ததையும் குறிக்கிறது. [11]

குறிப்புகள் தொகு

நூற்பட்டியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணன்_(வகேலா_வம்சம்)&oldid=3186604" இலிருந்து மீள்விக்கப்பட்டது