கிட்டிப் புள்ளு

கிட்டிப் புள்ளு என்பது தமிழரின் பழமையான ஒரு விளையாட்டு ஆகும். பொதுவாகச் சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் 1950-ஆம் ஆண்டு வரையில் நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்டுவந்தது. [1]

கிட்டிப்புல் விளையாடுதல்
கிட்டிப்புள்ளு ஆட்டப் பாங்குகள்

பெயர்கள் தொகு

கரகொட்டி, குட்டி-கோல் – கேரளம்
கிட்டிதக்கா – இந்தி மொழி
கிட்டிப்புள் – திருச்சி மாவட்டம்
கில்லி-தண்டா – மகாராட்டிரம்
கில்லி-தண்டு – கோவை மாட்டம்
குச்சிக்கம்பு, குச்சி-அடித்தல் – தமிழகப் பொதுவழக்கு
குல்லி-தண்டா – வங்கம்
சிலதா – நீலகிரித் தொதுவர்
சில்லாங்குச்சி – நெல்லை மாவட்டம்
திப்லி – ஆந்திர மாநிலக் கோண்டு மக்கள்
புள்ளுக்கிட்டி, சிங்காம்புள் – குமரி மாவட்டம்

விளையாடும் முறை தொகு

கிட்டிப் புள்ளு சிறுவர்கள் ஆடும் ஒரு விளையாட்டு.

கிட்டிப்புள், கிட்டிக்கோல் ஆகியவை இந்த விளையாட்டுக்குப் பயன்படும் கருவிகள்.

கிட்டிப்புள் சுமார் மூன்றுவிரல் பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. கீந்துகுழி ஆட்டத்துக்கு அதன் இரு முனைகளும் கூராக இருக்கும். அடிகோல் ஆட்டத்துக்கு முனைக்கூர் இருக்காது
கிட்டிக்கோல் ஒருவிரல் அல்லது இருவிரல் பருமனும் சுமார் 50 செனடிமீட்டர் நீளமும் கொண்டது.

ஆட்ட வகை தொகு

கிட்டிப்புள்ளு விளையாட்டில் இரண்டு முறைகள் தமிழத்தில் இருந்துவந்தன.

  1. கீந்து-குழி ஆட்டம் (இந்தியாவிலும், இலங்கையிலும்)
  2. அடிகோல் ஆட்டம்
ஆடிவோர் வகை
குழு ஆட்டம்
அணி ஆட்டம்

குழு ஆட்டத்தில் ஒருவர் அடிக்க ஏனையோர் எதிராளி ஆவர்.
அணி ஆட்டத்தில் ஆடும்-அணி, எதிர்-அணி என இரு குழுக்கள் அமையும்.

கீந்துகுழி ஆட்டம் தொகு

ஆட்ட அரங்காகக் குதிக்காலால் திருகிய குழி, அல்லது சுமார் ஒருமுழம் நீளத்தில் செய்யப்பட்ட குழி அமைக்கப்படும்.
குழியில் ஒருமுனை இருக்கும்படி கிடைமட்டமாகக் கிட்டிப்புள் வைக்கப்படும்.
இந்தப் புள்ளைக் கிட்டிக்கோலால் தட்டிவிடுவர். இதற்குத் தெண்டுதல் என்று பெயர்.
புள் பறக்கும்போது கிட்டிக்கோலால் அடிப்பர். புள் தொலைதூரம் செல்லும். எதிரில் உள்ளவர், அல்லது எதிர்-அணியினர் பறந்துவரும் புள்ளைப் பிடிக்கவேண்டும். இவ்வாறு தடியால்(கிட்டிக்கோலால்) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும்.  

புள் வீழ்ந்த இடத்திலிருந்து குழியை நோக்கிப் புள்ளு வீசப்படும்,
அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும். 
இந்த கிட்டிப் புள் தடியைத் தெண்டில், தாண்டில் என்றெல்லாம் சேலம் மாவட்டத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டம் வேறு வகையிலும் ஆடப்படும்.

வேறு வகையான விளக்கம்[2]

அடிகோல் ஆட்டம் தொகு

அடிகோல் ஆட்டத்தில் கீந்துகுழி இல்லை. கிட்டிப்புள்ளின் முனை கூராக இருக்காது. ஒவ்வொருவரும் 4 முறையில் விளையாடவேண்டும்.

ஒன்றான் (வெற்றிப்புள்ளி 1)
ஒருகையால் புள்ளைத் தூக்கிப் போட்டு, மற்றொரு கையிலுள்ள கோலால் அடித்தல்
இரண்டான் (வெற்றிப்புள்ளி 2)
ஒரு கையிலுள்ள கோலின்மீது புள்ளை வைத்துத் தூக்கிப்போட்டு அதே கையிலுள்ள கோலால் அடித்தல்
மூன்றான் (வெற்றிப்புள்ளி 3)
ஒரு கையின் ஆள்காட்டி-விரல், சுண்டு-விரல் ஆகியவற்றில் புள்ளை நிறுத்தித் தூக்கிப் போட்டு மறுகையில் உள்ள கோலால் அடித்தல்
நாலான் (வெற்றிப்புள்ளி 4)
ஒரு காலின் மேல்-பாத்ததில் புள்ளை நிறுத்தி அக்காலால் தூக்கிப்போட்டுக் கையிலுள்ள கோலால் அடித்தல்
ஆடும் முறை தொகு

ஒன்றான், இரண்டான், மூன்றான், நாலான் முறைமையை ஒவ்வொருவரும் வரிசையாகப் பின்பற்ற வேண்டும். ஆட்டம் தவறாமல் ஆடினால் ஒருவர் தொடர்ந்தாற்போல் 4 படிநிலைகளையும் முடித்து 10 வெற்றிப் புள்ளிகளையும் ஈட்டலாம். ஒன்றில் ஒருவர் தவறினால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு மாறும். எல்லாரும் அடித்து முடிந்தபின் மறுமுறை ஆட்டம் வரும்போது ஒவ்வொருவரும் தான் தவறிய படிநிலையில் ஆடவேண்டும். ஒரு படிநிலை முடிந்தால்தான் அடுத்த படிநிலை.

பந்தைப் பிடித்தல் தொகு
ஒருவர் புள்ளை அடிக்கும்போது பிறர் பறந்துவரும் புள்ளைக் கையாலோ, துணியை விரித்தோ பிடிக்கலாம். புள் தரையில் விழாமல் பிடிக்கப்பட்டுவிட்டால் அடித்து-ஆடியவர் ஆட்டம் இழப்பார்.
விழுந்த புள்ளை எறிதல் தொகு
பிடிபடாமல் புள் விழுந்துவிட்டால் அதனை எடுத்து அடித்த உத்திக் குழி அடையாளத்தை நோக்கி எறிவர். எறியும் பந்தை அடித்தவர் தடுத்து அடிக்கலாம். அடித்தாலும் அடிக்காவிட்டாலும் புள் விழுந்த இடத்திலிருந்து உத்திக் குழி வரையில் தான் அடித்த கோலால் அளந்து வரும் எண்ணிக்கையைத் தன் வெற்றிப்புள்ளி ஆக்கிக் கொள்ளலாம். புள் விழுந்த இடத்துக்கும், உத்திக்கும் இடையேயுள்ள இடைவெளி அவரது கோலின் அளவுக்குக் குறைந்தால், அடித்தவர் ஆட்டம் இழப்பர்.

ஆட்ட விதிகள்

ஆட்டக்காரர் புள்ளை அடிக்கும் போது எதிர் அணியினரால் புள் பிடிபட்டால் அடிப்பவர் ஆட்டம் இளப்பார்.அது போல் அடிப்பவர் கையில் இருக்கும் அடி கோலை தவற விட்டு விட்டால் எதிர் அணியினர் அடி கோலையோ அல்லது புள்ளையோ எடுத்து குழியில் வைக்க வேண்டும் அவ்வாறு வைத்தால் அடிப்பவர் ஆட்டம் இளப்பார்.அதற்கு முன்பு அடித்தவர் தவறவிட்ட அடி கோலை கையில் எடுத்து விட்டால் ஆட்டத்தை தொடரலாம்.

தண்டனை

ஆட்டத்தின் முடிவில் குறைந்த புள்ளிகள் பெற்றவருக்குத் தண்டனை உண்டு.
அதிக புள்ளி பெற்றவர் தன் விருப்பம்போல் புள்ளைப் பிடித்துத் தொலைவுக்கு அடிப்பர். அங்கிருந்து பிறர் ஒவ்வொருவராக அவரவர் அடிக்குப் புள் சென்ற தொலைவிலிருந்து மூச்சுவிடாமல் பாடிக்கொண்டே கிட்டி அடித்த உத்தி-இடத்தைத் தொடவேண்டும்.

மேலும் காண்க் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. செங்கைப் பொதுவன் விளையாடியது
  2. விளையாடும் முறைகள்
    கிட்டிப் புள்ளு விளையாடும் முறைகள் பெரும்பாலும் இரண்டு வகைகளாகக் காணப்படுகிறது.
    முதல் முறை
    முதல் வகையான கிட்டிப்புள்ளு விளையாட்டு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், இலங்கையிலும் காணப்படுகின்றது. இதற்கு ஒரு முழம் நீளத்திற்கு தரையில் ஒரு ஆழமான குழிக்கோடு எற்படுத்த வேண்டும். அந்த குழிக்கோட்டை கீந்து குழி என்று அழைப்பர்.  இவ்விளையாட்டில் இரண்டு அணிகள் உண்டு. ஒரு அணி, புள்ளை குழிக்கோட்டிலிருந்து தண்டிலால்அழுத்தி எதிர் அணியினர் இருக்கும் பக்கம் கீந்த வேண்டும். எதிர் அணியினர் கீந்தியபுள்ளைப் பிடிக்க வேண்டும். எதிர் அணியினர் புள்ளை தரையில் விழுமுன் தவ்விப் பிடித்துவிட்டால், கீந்தியவர் ஆட்டத்தை விட்டு வெளியேர வேண்டும். கீந்திய புள் தரையில் விழுந்த பின்னரே, எதிர் அணியினர் அந்த புள்ளை கையில் எடுத்தால், அப்புள்ளை திரும்ப கீந்தியவர் கிட்டி அல்லது தாண்டிலை நோக்கி
     வீசியெரிய வேண்டும். அவ்வாறு வீசுவதற்கு  முன்பு கீந்தியவர் கீந்து குழியில் இருந்து பின்னோக்கி இரண்டு தாண்டில் நீளம் அளவெடுத்து தரையில் வைக்க வேண்டும். 
    எதிர் அணியினர் வீசிய புள் தாண்டிலின் மீது பட்டால் கீந்தியவர் ஆட்டத்தை விட்டு வெளியேர வேண்டும். அப்படி புள் தாண்டில் மீது படாவிட்டால், கீந்தியவர் தாண்டிலால் 
    கீந்து குழியில் இருந்து புள்ளை நோக்கி அளப்பார். எத்தனை தாண்டில் நீளம் தொலைவில், எதிர் அணியினர் வீசிய அந்த புள் இருக்கிறதோ அத்தனை புள்ளிகள் கீந்தியவர் அணியைச் 
    சேரும். பின் மறுபடியும் அதே ஆட்டக்காரர் கீந்த வேண்டும். இப்படி ஒரு அணியில் உள்ள அனைத்து ஆட்டக்காரர்களும் ஆட்டத்தை விட்டு வெளியேரும் வரை கீந்துவர். 
    அனைவரும் வெளியேரிய நிலையில் அந்த அணி எத்தனை புள்ளிகள் எடுத்துள்ளதோ அதுவே அந்த அணியின் மதிப்பு ஆகும். இதே போன்று எதிர் அணியினரும் கீந்துவார்கள். 
    யார் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அந்த அணியினரே வென்றவர்கள் ஆவர்.
    இரண்டாவது முறை
    இம்முறையில் கீந்து குழி கிடையாது. கீந்துதலும் கிடையாது. கிட்டியால் புள்ளை அந்தரத்திலேயே முடிந்தவரை தட்டிவிட்டு பின் கீழ்விழுந்த புள்ளின் ஒரு கூர்முனையில் கிட்டியால் தட்டி மேலெலும்பிய புள்ளை கீழ்விழும் முன் தொலைவில் அடித்து விலாச வேண்டும். விலாசிய புள்ளை பின் கிட்டி கொண்டு அளக்க வேண்டும். பிறகு ம்று அணியினர் இதே போல் விளையாடுவர். யார் அதிக புள்ளிகள் எடுக்கிறார்களோ அவர்களே வென்றவர்கள்.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டிப்_புள்ளு&oldid=3727038" இலிருந்து மீள்விக்கப்பட்டது