சுமித்ரானந்தன் பந்த்

சுமித்ரானந்தன் பந்த் (ஆங்கிலம்: Sumitranandan Pant) (பிறப்பு: 20 மே 1900 - இறப்பு: 28 டிசம்பர் 1977) இவர் ஒரு இந்தியக் கவிஞர் ஆவார். அவர் இந்தி மொழியின் மிகவும் பிரபலமான 20 ஆம் நூற்றாண்டின் கவிஞர்களில் ஒருவராகவும் இருந்தார். அவரது கவிதைகள் காதல் வயப்பட்டவை. அவை இயற்கையினாலும், மக்களினாலும், அழகினாலும் ஈர்க்கப்பட்டவை.

பின்னணி தொகு

பந்த் இப்போது உத்தரகண்டம் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தின் கௌசனி கிராமத்தில் ஒரு படித்த நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில் பிறந்தார். பிரசவத்திற்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது தாயார் இறந்துவிட்டார். அவருக்கு பாட்டி, தந்தை அல்லது மூத்த சகோதரரிடமிருந்து எவ்வித பாசமும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இது பின்னர் அவரது எழுத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. [1] அவரது தந்தை ஒரு உள்ளூர் தேயிலைத் தோட்டத்தின் மேலாளராக பணியாற்றினார். மேலும் ஒரு நில உரிமையாளராகவும் இருந்தார். எனவே பந்த் ஒருபோதும் பொருளீட்டுவதை விரும்பவில்லை. அவர் ஒரே கிராமத்தில் வளர்ந்தார். கிராமப்புற இந்தியாவின் அழகு மற்றும் சுவையை எப்போதும் நேசித்தார். இது அவரது அனைத்து முக்கிய படைப்புகளிலும் தெளிவாகத் தெரிகிறது.

பந்த் 1918 இல் பனாரசுவில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் சரோஜினி நாயுடு மற்றும் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஆங்கில காதல் கவிஞர்களின் படைப்புகளைப் படிக்கத் தொடங்கினார். இவை அனைத்தும் அவரது எழுத்தில் ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. [1] 1919 இல் முயர் கல்லூரியில் படிப்பதற்காக அலகாபாத் சென்றார். பிரித்தன் எதிர்ப்பு காரணமாக அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே படித்தார். பின்னர் அவர் கவிதைகளில் அதிக கவனம் செலுத்தி, பல்லவ் என்ற கவிதைத் தொகுப்பை 1926 இல் வெளியிட்டார். இந்த தொகுப்பு ஜெய்சங்கர் பிரசாத்துடன் தொடங்கிய இந்தி மறுமலர்ச்சியின் இலக்கிய நிறுவனமாக அவரை நிறுவியது. புத்தகத்தின் அறிமுகத்தில், இந்தி பேசுபவர்கள் "ஒரு மொழியில் சிந்தித்து, மற்றொரு மொழியில் தங்களை வெளிப்படுத்துகிறார்கள்" என்று பந்த் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேற்கத்திய இந்தி மொழி காலாவதியானது என்று அவர் உணர்ந்தார். மேலும் ஒரு புதிய தேசிய மொழியை பயன்படுத்த உதவ முற்பட்டார்.

பந்த் 1931 இல் கலகங்கருக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் ஒன்பது ஆண்டுகள் இயற்கையோடு நெருக்கமான ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். அதே நேரத்தில் அவர் கார்ல் மார்க்சு மற்றும் மகாத்மா காந்தியின் படைப்புகள் மற்றும் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டார். இந்த நேரத்தில் அவர் தயாரித்த கவிதைகளில் பல வசனங்களை அவர்களுக்கு அர்ப்பணித்தார். பந்த் 1941 இல் அல்மோராவுக்குத் திரும்பினார். அங்கு உதய் சங்கர் கலாச்சார மையத்தில் நாடக வகுப்புகளில் கலந்து கொண்டார். அரவிந்தோவின் தி லைஃப் டிவைனையும் அவர் வாசித்தார். இது அவரை பெரிதும் பாதித்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சென்னைக்கும் பின்னர் பாண்டிச்சேரிக்கும் சென்றார். அரவிந்தரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். நாட்டின் பிற முன்னணி எழுத்தாளர்களிடையே தனது பங்கை மீண்டும் தொடங்க 1946 ஆம் ஆண்டில் அவர் அலகாபாத்திற்கு திரும்பினார்.

இலக்கிய வாழ்க்கை தொகு

இந்தி இலக்கியத்தின் சாயாவாடி பள்ளியின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். பந்த் பெரும்பாலும் சமஸ்கிருதமயமான இந்தியில் எழுதினார். கவிதை, வசன நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் உட்பட வெளியிடப்பட்ட இருபத்தெட்டு படைப்புகளை பந்த் எழுதியுள்ளார்.

சாயாவாடி கவிதைகள் தவிர, முற்போக்கான, சோசலிச மற்றும் மனிதநேய கவிதைகளையும் தத்துவத்தைப் ( ஸ்ரீஅரவிந்தரால் பாதிக்கப்பட்டு) பற்றியும் பந்த் எழுதினார். [2] பந்த் இறுதியில் இந்த பாணியைத் தாண்டி நகர்ந்தார். பின்னர் பந்தைப்பற்றி எழுதிய அறிஞரும் மொழிபெயர்ப்பாளருமான டேவிட் ரூபின் எழுதுவது போல், "நாற்பதுகளின் ஆரம்பத்தில் புதிய உளவியல் மற்றும் சோதனை " பள்ளிகள் " உருவாகின. சூர்யகாந்த் திரிபாதி மற்றும் பந்த் இருவருக்கும் இந்த போக்குகள் பொதுவானது. அவர்களே எதிர்பார்த்தது. புதிய அணுகுமுறைகள் நடைமுறையில் இருந்த நேரத்தில், அவர்கள் ஏற்கனவே புதிய சோதனை பகுதிகளுக்குச் சென்றிருந்தனர்." [1]

விருதுகள் தொகு

1968 ஆம் ஆண்டில், ஞானபீட விருதைப் பெற்ற முதல் இந்தி கவிஞர் ஆனார். இது இலக்கியத்திற்கான இந்தியாவின் மிக உயர்ந்த பாராட்டாக கருதப்படுகிறது. சிதம்பரா என்ற அவரது மிகவும் பிரபலமான கவிதைகளின் தொகுப்புக்காக இது அவருக்கு வழங்கப்பட்டது. [3] இந்தியாவின் தேசிய கடிதங்களின் அகாதமி சாகித்திய அகாதமி வழங்கிய விருதை "காலா அவுர் புத்த சந்த்" படைப்பிற்காக பந்த் பெற்றார்.

இந்திய அரசு அவரை 1961 இல் பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது. [4]

"ஜெயந்தி விதயா சமஸ்தான்" என்ற இரூர்க்கி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் குல்கீதத்தை சுமித்ரானந்தன் பந்த் இயற்றினார் "-

இறப்பு தொகு

பந்த் 1977 டிசம்பர் 28 அன்று இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத்தில் (பிரயாகராஜ்) காலமானார். தற்போது கௌசானியில் உள்ள அவரது குழந்தை பருவ வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் அவரது அன்றாட பயன்பாட்டுக் கட்டுரைகள், அவரது கவிதைகளின் வரைவுகள், கடிதங்கள், விருதுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Rubin, David (1993). The Return of Sarasvati: Four Hindi Poets. Oxford University Press. pp. 105–106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195643695
  2. "Chhayavaadi Poet Sumitranandan Pant". Youtube. https://www.youtube.com/watch?v=CTWrBxcysOU. 
  3. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website. Archived from the original on 13 October 2007.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரானந்தன்_பந்த்&oldid=2874563" இலிருந்து மீள்விக்கப்பட்டது