ஜக்கம்மா தேவி

ஜக்கம்மா தேவி (Jakkamma) என்பது தொட்டிய நாயக்கர் சாதியினரால் வணங்கப்படும் குல தெய்வம். தொட்டிய நாயக்கர் சாதியினரில் சிலர் குறி சொல்தல், கோடாங்கி சொல்தல், அருள் வாக்களித்தல், குடுகுடுப்பை சொல்தல், கைரேகை சோதிடம் பார்த்தல், மாந்திரீகம் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஜக்கம்மாதான் முதல் தெய்வம். ஜக்கம்மா காளி தேவியின் அவதாரம் என்றும், இவர் போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா போன்ற வேறு சில பெயர்களாலும் இச்சாதியினரால் அழைக்கப்படுகிறார்.[1]

ஜக்கம்மா வரலாறு தொகு

கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாமியரின் படை எடுப்பால் இருக்குமிடங்களிலிருந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இதற்கு இசுலாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக கம்பள நாட்டை ஆண்டு வந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னர் இசுலாமியர்களிடம் இருந்து தங்கள் குல பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள தெற்கு நோக்கி தமிழகத்திற்கு செல்ல ஆணையிட, ஜக்கம்மா என்ற பெண் தலைமையில் கம்பளத்து சமுதாய மக்கள் சிலர் அங்கிருந்து தெற்கு நோக்கி தமிழகத்துக்கு வந்தனர். இப்படி வரும் வழியில் பல தடைகள் ஏற்பட்டதாகவும் , அதனை வீரம், மாந்தரிகம் போன்றவற்றால் கலைத்து அவர்களை ஜக்கம்மா காத்ததால் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இதனால் இவர் ராஜகம்பளம் சாதியினரால் குல தெய்வமாக வணங்கப்படுகின்றார். என்று இச்சாதியினர் தெரிவிக்கின்றனர். மேலும் காப்பு இனத்தில் பிறந்த ஜக்கம்மாளுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்ததாகவும் , இந்தப் பிள்ளைகளின் வம்சம்தான் தற்போதைய ஒன்பது கம்பளத்து மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.

மாந்தரிகம் தொகு

ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை சோதிட நம்பிக்கையுடைய பலருக்கும் உண்டு. குடுகுடுப்பை, கைரேகை சோதிடம், மாந்தரிகம், கோடாங்கி பார்த்தல் போன்ற வேலைகள் ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்கப்படுகிறது. இந்த சாதியினர் சொல்லும் வாக்கு உண்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை முன்பு பலருக்கும் இருந்தது. எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள் எனப்படுபவர்கள். இவர்களும் கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களே. சோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான் திருமண வைபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திருமணம் மட்டுமல்ல, இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.[2]

கட்டபொம்மன் தொகு

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சில மன்னர்களுள் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். இவர் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார். இவருடைய அரண்மனை அமைந்திருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைப் பகுதியில் ஜக்கம்மாவுக்கு கோவில் ஒன்றும் அமைத்திருந்தார். இவர் தினமும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதுடன் தன்னுடைய செயல்பாடுகளுக்கு இங்குதான் வேண்டிக் கொள்வார் என்பதும் ஒரு கும்மிப் பாடல் மூலம் தெரிகிறது .

கம்பளத்து மக்கள் தொகு

பொதுவாக தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம் சாதியினைச் சேர்ந்தவர்கள் ஜக்கம்மாவைக் குல தெய்வமாகக் கொண்டுள்ளதால் இவர்கள் சாதி விழாக்களில் ஜக்கம்மா வழிபாடும் ஒன்றாக உள்ளது.

திருவிழா தொகு

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் திங்கள் கிழமையில் ஜக்கம்மா உயிர் நீத்தார் என்ற நம்பிக்கையில் சித்திரை மாதத் திங்கள் கிழமைகளில் ஜக்கம்மாவுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பாஞ்சாலங்குறிச்சியிலிருக்கும் ஜக்கம்மா கோவிலில் கம்பளத்து சாதியினர் சிறப்பு வழிபாடுகளுடன் தேவராட்டம், சேர்வைஆட்டம், கும்மி போன்றவைகள் மூலம் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடுகின்றனர். இந்த ஜக்கம்மாளுக்கு காவல் தெய்வம் எதுவும் கிடையாது என்பதால் ஆடு, கோழி எனப் பலியிடுதல் வழக்கமோ அதை உணவாக்கிப் படைக்கும் வழக்கமோ இல்லை.

சக்கதேவி நாட்டுப் பாடல். தொகு

சாலிகு ளத்துப் பக்கத்திலே
சார்ந்திடும் செம்மணல் மேட்டினிலே
காடை வேட்டைநான் ஆடையிலே
கண்ட அதிசயம் சொல்லுகிறேன்.
முன்முயல் சென்றிடப் பின்னே நாய்
முடுக்க மேட்டுக்குப் போனவுடன்
முன்னோடி நின்ற முயலுதான்
பின்னோடும் நாயை விரட்டியதே
நாயை முயல் வெற்றி கொண்டதனால்
நாமிதில் கோட்டைகள் போட வேண்டும்
ஓங்கிய பாஞ்சாலன் பக்கத்திலே
ஓடுங்குறிச்சியைச் சேர்க்க வேண்டும்
தங்கச் சிம்மாதனம் போட வேண்டும்
தாழ்ச்சியில்லா தரசாள வேண்டும்
எண்ணிய காரியம் ஈடேற
எப்போதும் காப்பவள் சக்கதேவி!

என்று கம்பளத்தார் ஜக்கம்மாவை வணங்கும் விதம் குறித்து கட்டபொம்மன் நாட்டுப் பாடல் மூலம் அறிய முடிகிறது. [3]

மேற்கோள்கள் தொகு

  1. Sinnakani, R. (2007). Tamil Nadu State: Thoothukudi District. Vol. 1. Director of Stationery and Print. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020 – via Google Books.
  2. "கோடாங்கி நாயக்கர்கள்". Archived from the original on 2011-11-11. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.
  3. காக்கைக் கூட மேலேப் பறக்க பயந்தக் கோட்டை எது?

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்கம்மா_தேவி&oldid=3716987" இலிருந்து மீள்விக்கப்பட்டது