டி. எம். நாயர்

சென்னை மாகாண அரசியல்வாதி

டாக்டர் தரவத் மாதவன் நாயர் (ஜனவரி 15, 1868 - ஜூலை 17, 1919) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தமது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகத் தொடங்கினார். 1904 முதல் 1916 வரை சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் (திருவல்லிக்கேணி தொகுதி) பணியாற்றினார். சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1916 இல் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் தியாகராய செட்டியுடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். 1919 இல் பிரித்தானிய அரசு இந்தியாவிற்கான அரசியல் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க மொண்டேகு-கெம்ஸ்ஃபோர்டு குழுவை ஏற்படுத்தியது. நீதிக்கட்சி சார்பில் அக்குழுவின் முன்தோன்றி பிராமணரல்லோருக்கு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டுமென நாயர் வாதிட்டார். இதற்காக லண்டன் சென்றிருந்த போது அங்கு உடல்நிலை மோசமாகி மரணமடைந்தார். டாக்டர் டி.எம்.நாயர் நீதிக்கட்சியின் மூளையாக விளங்கி 1868 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் பிறந்தார். டி.எம்.நாயரின் தந்தை சங்கரன் நாயர் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்து பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர்.

டி. எம். நாயர்
பிறப்புஜனவரி 15, 1868
திரூர், பாலக்காடு, சென்னை மாகாணம்
இறப்புசூலை 17, 1919(1919-07-17) (அகவை 51)
லண்டன், ஐக்கிய ராச்சியம்
பணிமருத்துவர்
அரசியல்வாதி

இளமைப்பருவம் தொகு

டாக்டர் டி.எம்.நாயர் தனது பள்ளிக்க்லவியை கேரளத்தில் முடித்த பின்பு உயர்கல்வி பெற சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அறிவியலை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்த டி.எம்.நாயர் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். மெட்ரிகுலேசன் படித்த போது மூன்று ஆண்டுகளில் படிக்க வேண்டிய படிப்பை இரண்டு ஆண்டுகளில் முடித்தார். பள்ளிப்பருவத்திலேயே கூர்மையான அறிவும் கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வமும் அவருக்கு இருந்தது.

மருத்துவப் படிப்பு தொகு

அறிவியல் ஆராய்ச்சிக்கு தகுதியான மாணவர் இவர் என்று அவருடைய பேராசிரியர்களால் பாராட்டப்பட்ட டாக்டர் டி.எம்.நாயர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறிது காலம் பயின்றார்.மேல்நாட்டில் மருத்துவப் படிப்பைத் தொடர எண்ணி இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.பி.சி.எம் பட்டம் பெற்றார்.

அரசியல் பணி தொகு

மாணவப்பருவத்திலேயே அரசியல், பொதுப்பணி என செயல்பட்ட நாயர் அவர்களால் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் மருத்துவ தொழிலை மட்டுமே செய்து கொண்டு பார்வையாளராக இருக்க முடியுமா? இந்திய மக்களின் விடுதலைக்காகவும் அரசியல் சுதந்திரம் பெற வேண்டியும் அரசியலில் இணைந்து கூட்டங்கள், மாநாடுகள் என பங்காற்றினார்.

சட்டசபை பணி தொகு

சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தபோதும் தேசிகாச்சாரியின் வறட்டுப் பிடிவாதத்தால் கிடைக்க வேண்டிய பதவியை உதறி விட்டார். அப்போது இழந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதே மாநகராட்சியின் பிரதிநிதிக்கான தேர்தலில் வென்று 1912 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினரானார்.

திராவிட லெனின் தொகு

டாக்டர் டி.எம்.நாயர் ஒரு புரட்சி வீரர்;சுயமரியாதை வீரர்; அவரை ஒரு திராவிட லெனின் என்று அழைக்க வேண்டும் என்று பெரியார் அழைக்கிறார்.

சான்றாதாரம் தொகு

திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர் (நவம்பர் 20-2016).சுயமரியாதை பதிப்பகம்,தந்தை பெரியார் திராவிடர் கழகம்,உடுமலைப்பேட்டை-642 126.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._நாயர்&oldid=3925149" இலிருந்து மீள்விக்கப்பட்டது