தெடாவூர்

தமிழக கிராமம்

தெடாவூர் (Thedavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

தெடாவூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் கங்கவள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ . கார்மேகம், இ. ஆ. ப [3]
பேரூராட்சித் தலைவர் தற்போது இல்லை
மக்கள் தொகை

அடர்த்தி

8,230 (2011)

1,029/km2 (2,665/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thedavur

அமைவிடம் தொகு

ஆத்தூர் - வீரகனூர் சாலையில், சேலத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்த தெடவூர் பேரூராட்சிக்கு கிழக்கில் வீரகனூர் 5 கிமீ; கங்கவள்ளி 5 கிமீ; தெற்கில் பச்சமலை 6 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,241 குடும்பங்களும், 8,230 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 69.84% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆலயங்கள் தொகு

முற்காலத்தில் சைவம், வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது.

கோவில் கூறும் கதைகள் தொகு

தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்றும், 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் தொகு

கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய் நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது.

கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக அத்தூர் கூற்ற மேல்கங்கபாடியான புத்தூரில் நான்கு எல்லை வரையறுக்கப்பட்டு அனைத்து வரிகளும் நீக்கி நிலம் அளிக்கப்பெற்றது. அக்கோவிலின் பூசைக்கும், திருப்பணிக்கும் உரிமையாக்கி விலாடராயர் என்பவரும், புரவரியாரும் அக்கொடையை ஏற்றி நடத்த உரிமை வழங்கப்பட்டதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் தொகு

கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள் விளக்குகின்றது.

இத் திருப்பணிக்காக இதற்குமுன் கோவிலுக்கு கொடையாக அளிக்கப் பெற்றிருந்த திருவாபரணம் உள்ளிட்ட பொன்னும், குலோத்துங்க சோழ வாணகோவரையரால் கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன.

கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக வீரசோழ நல்லூரில் ஏரி நீர்ப் பாய்ந்த ஏந்தல் நிலமும், ஏந்தல் சூழ்ந்த புன்செய் நிலமும், அனைத்து வரிகளும் உரிமையோடு விலாடராயர் என்பவரும், புரவரியாரும் ஏற்று நடத்த அளிக்கப்பதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல் தொகு

ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. தெடாவூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Thedavur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெடாவூர்&oldid=3059128" இலிருந்து மீள்விக்கப்பட்டது