நகம் கடித்தல்

நகம் கடித்தல் (Nail biting, அல்லது onychophagia) மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவவயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். அனேகமானோர் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். பலர் தமது இந்தச் செயற்பாட்டினால் திருப்தியின்மையை அடைந்தாலும், இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். [1], [2], [3]

நகம் கடித்தல்
நகம் கடிப்பவர் ஒருவரின் நகங்கள்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉளநோய் மருத்துவம், உளவியல்
ஐ.சி.டி.-10F98.8 (ILDS F98.810)
ஐ.சி.டி.-9307.9

நகம் கடிக்கத் தொடங்குதல் தொகு

குழந்தைகளிலும், பருவவயதினரிலும் 30 வீதமானோரும், வயது வந்தவர்களில் 10இல் இருந்து 15 வீதமானோரும் நகங்களைக் கடிக்கிறார்கள். அனேகமாகக் குழந்தைகள் கிண்டர்கார்டன் வயதான நான்கிலிருந்து ஆறுவயதுக்குள்ளான காலப்பகுதியில் நகங்களைக் கடிக்கப் பழகத் தொடங்குகிறார்கள். இப்பழக்கம் பத்து வயது வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி 12-13வயதில் உச்சநிலையை அடைந்து வாலிபப் பருவத்தில் இல்லாமலே போய் விடுவதும் உண்டு. குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள்.

அறிகுறிகள் தொகு

ஒரு குழந்தை தனது நகங்களைக் கடிக்கத் தொடங்குவது அந்தக் குழந்தைக்கு அது வாழும் சூழலில் ஏதோ ஒன்றுடனோ அல்லது யாரோ ஒருவருடனோ ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறி.

ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் தொகு

  • குழந்தைகளில் 30 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
  • வயது வந்தவர்களில் 10இலிருந்து 15 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
  • நகம் கடிக்கும் பழக்கம் ஆழ்மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்கிறார் Bad Säckingen, Baden-Württemberg ஜெர்மனியைச் சேர்ந்த Markus Biebl (Diplom-Psychologe). பெரியவர்களிடம் அனேகமாக இந்த ஆழ்மனமுரண் தொழில் இடங்களிலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏற்படும், சண்டைகள், பிரச்சனைகளாலேயே தோன்றுகிறது என்றும் சொல்கிறார் இவர்.
  • குழந்தைகளிடம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகளின் பிரதிபலிப்பும், அவர்களது கடினமான நிலைகளின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் கூட நகம் கடித்தலுக்குக் காரணமாகின்றன என்கிறார் Bonn, ஜெர்மனியைச் சேர்ந்த Gisela Dreyer (Psychologin). நகங்களைக் கடித்தலின் மூலம் அவர்கள் தமது மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

நம்பப்படும் காரணிகள் தொகு

  • தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.
  • தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத இயலாமை நிலையைக் கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.

நகம் கடிப்பதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் தொகு

  • கைகளுக்கு வேறு வேலைகள் கொடுத்தல். (சில குழந்தைகள் அவர்களின் கைகளுக்கு வேறு வேலைகள் கொடுக்கும் போது நகங்களைக் கடிப்பதை நிறுத்துகிறார்கள். குழந்தைகள் கடிக்கக் கூடிய வளையம், பந்து போன்ற பொருட்களைக் கைகளில் கொடுக்கலாம்.)
  • மருந்துக்கடையில் கிடைக்கக் கூடிய கசப்புத் தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவதொன்றை விரல்களில் பூசி விடுதல் அல்லது விரல்களை அவற்றுள் தோய்த்தெடுத்தல்.
  • விரல்களை துணிகளால் சுற்றிக் கட்டி விடுதல் அல்லது கையுறை போட்டு விடுதல். (குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் பொழுதுகளில் நகங்களை அதிகமாகக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் இந்த முறையைக் கையாளலாம்.)
  • குறிப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கு நகங்களைக் கடிக்காமல் இருந்தால் குழந்தைக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு பொருளைத் தருவதாக வாக்குறுதி கொடுத்தல்
  • நகங்களைப் பராமரித்தல் (நகங்களை ஒட்ட வெட்டி, நகங்களுக்குரிய அரத்தால் தேய்த்து, நகங்களை உரமாக்கக் கூடிய சாயம் பூசி, அதன் பின் எண்ணெய் பூசி, மசாஜ் செய்து விடலாம்.)
  • அழுத்தத்தைத் தீர்த்து வைத்தல் (கண்டிப்பதோ, பேசுவதோ நகங்களைக் கடிப்பதிலிருந்து மீளுவதற்கு இதுவரை உதவியதில்லை. அதற்காகப் பெற்றோர் நகம் கடிப்பதைப் பற்றி அக்கறை கொள்ளாது இருந்து விடலாகாது. கூடுதலாகக் குழந்தைகள் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் பெற்றோர் அதை மெதுவாகச் சுட்டிக் காட்ட வேண்டும். பொது இடங்களில் நகங்களைக் கடித்தல் கூடாது என்பதை ஏதாவதொரு புனை சொல்லால் குழந்தைக்கு ஞாபகப் படுத்த வேண்டும். நகம் கடித்தல் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு. ஆதலால் பெற்றோர் குழந்தை ஏதாவது வகையில் மனம் வருந்திக் கொண்டிருக்கிறதோ என்பதையும், வீட்டிலிருந்தா, பாடசாலையிலிருந்தா குழந்தைக்குக் கிடைக்கிறது என்பதையும் கண்டறிந்து அதிலிருந்து குழந்தை மீளுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டும்.) [4],

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகம்_கடித்தல்&oldid=3217740" இலிருந்து மீள்விக்கப்பட்டது