நடராஜகுரு

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

நடராஜகுரு (நடராஜன்) கேரளவின் ஒரு முக்கிய தத்துவ அறிஞர். இவர் கேரள சமூகசீர்திருத்தவாதியும் ஆன்மீக ஞானியுமான நாராயண குருவின் மாணவர். உலகமெங்கும் நாராயணகுருவின் போதனைகளை கொண்டு சென்றவர்.

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் தொகு

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன (எஸ் என் டி பி) அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்புவின் சிறிய மகன் டாக்டர் நடராஜன், பிற்காலத்தில் அவர் நடராஜ குரு எனஅறியப்படலானார். 1895ல் பிறந்தார். இலங்கையில் கண்டியில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். சென்னை ராஜதானி கல்லூரியில் உயிரியலிலும் நிலவியலிலும் முதுகலை பட்டம் பெற்றார்.

இக்காலகட்டத்தில் நடராஜ குரு நாராயணகுருவை சந்தித்தார். அவருடன் வர்க்கலை ஆசிரமத்தில் தங்கியிருந்தார். வர்க்கலை நாராயண உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தார்.

இக்காலகட்டத்தில் அவருக்கும் நாராயணகுருவின் அமைப்புக்கும் நடுவே முரண்பாடுகள் ஏற்பட்டன. எஸ் என் டி பி அமைப்பு ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து கடுமையாக குரல்கொடுத்து 1921 ல் அவ்வமைப்பை விட்டு முழுமையாக வெளியேறினார்.

பல இடங்களில் அலைந்து திரிந்த நடராஜ குரு ஊட்டிக்கு வந்துச்சேர்ந்தார். ஃபெர்ன் ஹில் என்ற இடத்தில் நாராயணகுருகுலம் ஒன்றை 1923ல் நிறுவினார். அங்கே அனாதைக்குழந்தைகளுக்கான ஒரு கல்விநிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் அதை முன்னெடுக்க முடியவில்லை. அந்நிலையில் நாராயணகுருவின் உடல்நிலை மோசமானது. நடராஜகுரு மீண்டும் வர்க்கலைக்குச் சென்று நாராயணகுருவுடன் தங்கினார்.

அப்போது மேற்கத்திய தத்துவம் கற்க பிரான்ஸ் போகும்படி அவரை நாராயணகுரு கேட்டுக் கொண்டார். லண்டனுக்குச் செல்வதற்காக கப்பலில் ஏரிய நடராஜ குரு கப்பலில் ஒருவர் சொல்லிய ஆலோசனையின்படி ஜெனிவா சென்றார். அங்கே கிளாண்ட் என்ற இடத்தில் இருந்த ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கே இயற்பியல் கற்பித்தார். அப்போது பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றார்.

நடராஜகுரு பாரீஸில் உள்ள சார்போன் பல்கலையில் முனைவர் படிப்புக்கு பதிவு செய்துகொண்டார்.உலகப்புகழ்பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக அவர் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார."Le Facteur Personnel dans le Processus Educatif (Personal factor in Education)" என்ற தலைப்பில் ஐந்தாண்டுகள் ஆராய்ச்சி செய்து தன் ஆய்வை சமர்ப்பித்தார். குருசீட உறவைப்பற்றியது அந்த ஆய்வேடு. அவருக்கு சிறப்பு பாராட்டுகளுடன் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் அவர் காந்தியையும் தாகூரையும் சந்தித்திருக்கிறார்

1933ல் நடராஜகுரு இந்தியா திரும்பினார். இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தபின் மீண்டும் ஊட்டிக்கே திரும்பிவந்து ஊட்டி நாராயணகுருகுலத்தை மீண்டும் ஆரம்பித்தார். அங்கே கிட்டத்தட்ட 15 வருடங்கள் தங்கியிருந்தார். ஸ்காட்லாந்துகாரரான ஜான் ஸ்பியர்ஸ் நடராஜகுருவின் முதல் மாணவரானார்.

துறவு வாழ்க்கை தொகு

ஊட்டி ஃபெர்ஹில் குருகுலத்தில் தங்கியிருந்து நடராஜ குரு அவரது புகழ்பெற்ற நூல்களை எழுதினார். THe Word Of Guru' பகவதிகீதை உரை போன்றவை முக்கியமானவை. 1950ல் நடராஜகுரு உலகக் குடிமகன் என்று தன்னை அழைத்துக்கொண்ட காரி டேவிஸை சந்தித்தார். எந்த நாட்டுக்கும் குடியுரிமை கொள்ளாத ஒரு கலாச்சாரத்துக்காக அவர் போராடிக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து நடராஜ குரு பணியாற்றினார். ஓர் உலக அரசுக்கான முன்வரைவை அவர்கள் உருவாக்கினார்கள்.

அந்த செயல்பாட்டின் நீட்சியாக உலகசிந்தனைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பயிலும் நோக்குடன் ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். ஒட்டுமொத்த தத்துவப்பார்வையை கற்பிக்கக்கூடிய ஒன்றாக இந்த கல்விநிறுவனம் செயல்படவேண்டும் என நடராஜகுரு ஆசைப்பட்டார்.

இக்காலகட்டத்தில் நடராஜ குரு அவரது மகத்தான படைப்பாகிய 'An Integrated Science of the Absolute' என்ற நூலை இரு தொகுதிகளாக எழுதி முடித்தார். கிட்டத்தட்ட ஐம்பதண்டுக்கால தத்துவ ஆராய்ச்சி இதற்கு உதவியது.

நாராயணகுருகுலம் தொகு

1928ல் நாராயணகுரு சமாதியான போது அவரது பிராதனசீடர் குமாரனாசான் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார், சகோதரன் அய்யப்பன், டி கெ மாதவன் போன்ற பலர் எஸ் என் டி பி அமைப்பை விட்டு விலகிவிட்டிருந்தார்கள். அவ்வமைப்பு அன்று ஈழவ சாதியினரான ஓடு, கயிறு தொழில்முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு சாதி அமைப்பாக மாற்றப்பட்டது. புலையர்கள் வெளியேற்றப்பட்டனர். சபா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது.

ஆகவே நாராயணகுருவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு தேவை என உணர்ந்த நடராஜ குரு தீவிரமற்ற நடைமுறை விதிகளுடன் கூடிய நாராயணகுருகுலம் எனும் அமைப்பை நிறுவினார். அதன் தலைமையகமும் வற்கலாவில்தான் அமைந்திருந்தது. சார்போனில் நடராஜ குருவின் சக மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் அவரது முக்கிய மாணவரனதும் நடவடிக்கைகள் விரிவடைந்தன. நடராஜ குரு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். நடராஜ குருவே நாராயணகுருவின் செய்தியை உலகம் முழுக்க கொண்டு சென்றவர்.

நாராயணகுருகுலம் நடராஜகுருவுக்குப் பின்னர் அவரது மாணவரான நித்ய சைதன்ய யதியால் தலைமைதாங்கப்பட்டது. அதன் தலைமையிடம் கேரளத்தில் வர்க்கலையில் உள்ளது. நித்ய சைதன்ய யதியின் மறைவுக்குப் பின்னர் அதன் தலைவராக முனி நாராயணபிரசாத் உள்ளார்.

நடராஜகுருவின் மாணவர்களில் ஜான் ஸ்பியர்ஸ், மங்கலானந்தா, சிதம்பர தீர்த்தா, வினய சைதன்யா, குரு ஃப்ரெடி, நித்ய சைதன்ய யதி, முனி நாராயண பிரசாத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

மரணம் தொகு

நடராஜ குரு 1973ல் மரணமடைந்தார். அவரது சமாதி வற்கலாவில் உள்ளது. அங்கே அவர் நினைவாக ஒரு பிரார்தனைக்கூடமும் தத்துவ நூலகமும் அமைந்துள்ளது

நூல்கள் தொகு

நடராஜகுரு ஆங்கிலத்தில் மட்டுமே அவரது நூல்களை எழுதியிருக்கிறார். தமிழில் அவரது நூல்கள் எவையும் வெளிவரவில்லை.

  • The Word of the Guru: Life and Teachings of Narayana Guru
  • Vedanta Revalued and Restated
  • Autobiography of an Absolutist
  • The Bhagavad Gita, Translation and Commentary
  • An Integrated Science of the Absolute (Volumes I, II)
  • Wisdom: The Absolute is Adorable
  • Saundarya Lahari of Sankara
  • The Search for a Norm in Western Thought
  • The Philosophy of a Guru
  • Memorandum on World Government
  • World Education Manifesto
  • Dialectical Methodology
  • Anthology of the Poems of Narayana Guru

தமிழில் தொகு

நடராஜகுருவைப்பற்றிய ஒரே ஒரு நூல் தமிழில் உள்ளது. நித்ய சைதன்யயதியுடன் நடராஜ குரு நிகழ்த்திய பயணத்தைப்பற்றி நித்ய சைதன்ய யதி எழுதிய நூல். ;குருவும் சீடனும்’ இந்நூல் ப.சாந்தி மொழிபெயர்ப்பில் வந்துள்ளது

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடராஜகுரு&oldid=3486663" இலிருந்து மீள்விக்கப்பட்டது