நாடி என்பதும் நாழி, நாழிகை என்பதும் இந்திய துணைக்கண்டத்தில் பழங்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கால அலகு ஆகும். ஒரு நாள் 60 நாடிகளாகப் (நாழிகைகளாகப்) பகுக்கப்பட்டுள்ளது. நாடி மேலும் 60 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படும். இந்த ஒவ்வொரு உட்பிரிவும் விநாடி அல்லது நொடி எனப்படும்.

தற்கால தமிழ்ப் பஞ்சாங்கமொன்றில் மணி, மினிற்(மினிட்டு) கால அலகுகளுடன் நாடி, விநாடி கால அலகுகளிலும் தகவல்கள் தரப்பட்டிருப்பதை இங்கே காணலாம்.

தற்போது எங்கும் வழக்கிலுள்ள கால அளவுக் கணக்கில் ஒரு நாள் 24 மணி நேரம் கொண்டதாகும். இது 1440 (= 24 X 60) நிமிடங்களுக்குச் சமன். எனவே ஒரு நாடி அல்லது நாழிகை என்பது 24 (24 X 60 / 60) நிமிடங்கள் கொண்டதாகும். மேற்கத்திய முறைகள் அறிமுகப் படுத்தப்படும் முன் நாடி, விநாடி அலகுகளே இந்தியாவிலும், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் வழங்கி வந்தன. இன்றும் சோதிடம் முதலிய மரபு சார்ந்த துறைகளில் (திருமணம், குழந்தைப் பிறப்பு, இறந்தார் சடங்கு) நேரத்தைக்குறிக்க இவ்வலகு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நாடி என்பதற்குப் பொருள்: "நாடிநாழிகை நரம்பாம்" - "கடிகை நாழிகையே" - சூடாமணி நிகண்டு. ஆக நாடி என்பதற்கு நரம்பு என்றொரு பொருள் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடி&oldid=2740237" இலிருந்து மீள்விக்கப்பட்டது