நாடுகளின் அரண்மனை

பலைஸ் தெ நேசியோன்சு (பிரெஞ்சு: Palais des Nations, ஆங்கில மொழி: Palace of Nations, தமிழ்:நாடுகளின் அரண்மனை) உலக நாடுகள் சங்கத்தின் தலைமையகமாக 1929ஆம் ஆண்டுக்கும் 1936ஆம் ஆண்டுக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கட்டப்பட்டது. 1946ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தத்தை ஐ.நா பொதுச்செயலர் சுவிட்சர்லாந்து அரசுடன் கையொப்பமிட்டபின் ஐக்கிய நாடுகளின் அலுவலகமாக செயற்பட்டு வருகிறது. இங்கு ஐ.நாவின் அலுவலகம் இயங்கினாலும் சுவிட்சர்லாந்து 2002ஆம் ஆண்டிலேயே ஐ.நாவின் உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடுகளின் அரண்மனை
Palais des Nations
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிசெவ்வியல்
இடம்ஜெனீவா, சுவிட்சர்லாந்து
46°13′36″N 6°08′26″E / 46.22667°N 6.14056°E / 46.22667; 6.14056
ஆள்கூற்று46°13′35.63″N 6°8′25.72″E / 46.2265639°N 6.1404778°E / 46.2265639; 6.1404778
கட்டுமான ஆரம்பம்1929
நிறைவுற்றது1938
உரிமையாளர்ஐக்கிய நாடுகள், முன்பு உலக நாடுகள் சங்கம்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கார்லோ பிரோக்கி
யூலியன் பிளெகென்ஹைமர்
கமில் லெஃபெவ்ர்
ஆன்ரீ பால் நெநோட்
யோசஃப் வேகோ

வரலாறு தொகு

1920களில் இந்தக் கட்டிட வளாகத்தை வடிவமைக்க ஓர் போட்டி நடத்தப்பட்டது.

 
இரண்டாவது துவக்கநிலை உலக தகவல் சமூக உச்சி மாநாட்டில்

377 போட்டி ஆக்கங்களிலிருந்து இறுதி வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்க கட்டிட வடிவமைப்பாளர்கள் அடங்கிய நடுவர் குழுவொன்று அமைக்கப்பட்டது. இருப்பினும் இவர்களால் வெற்றியாளரை தீர்மானிக்க இயலவில்லை; முடிவில் சிறந்த வடிவமைப்புகளை வழங்கிய ஐந்து வடிவமைப்பாளர்களைத் (கார்லோ பிரோக்கி, யூலியன் பிளெகென்ஹைமர், கமில் லெஃபெவ்ர், ஆன்ரீ பால் நெநோட், யோசஃப் வேகோ) தேர்ந்தெடுத்து அவர்கள் ஒன்றிணைந்து இறுதி வடிவமைப்பை வடிக்குமாறு தீர்வு வழங்கினர்.

ஐக்கிய நாடுகள் கட்டுப்பாட்டில் வந்தபிறகு இரு விரிவாக்கங்கள் நடந்துள்ளன. 1950களில் "K" கட்டடத்திற்கு மூன்று தளங்கள் சேர்க்கப்பட்டன மற்றும் உலக சுகாதார அமைப்பிற்கு தற்காலிகமாக இடமளிக்க "D" கட்டடம் கட்டப்பட்டது. "E" கட்டடம் அல்லது "புதுக்" கட்டடம் 1973ஆம் ஆண்டில் கலந்தாய்வு அரங்கங்களுடன் முடிக்கப்பட்டது. இவற்றுடன் கட்டட வளாகம் 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளுடன் 600 மீ நீளத்துடன் உள்ளது.

விவரணம் தொகு

 
பின்னணியில் ஜெனீவா ஏரியுடன் ஆரியானா பூங்கா

இந்த அரண்மனை ஆரியானா பூங்காவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவினை ஜெனீவா நகருக்கு 1890இல் கொடையளித்த குஸ்தவ் டெ ரெவில்லியோடு டெ ரீவ் மூன்று நிபந்தனைகளை விதித்திருந்தார்: பூங்கா எப்போதும் பொதுமக்களுக்கு அணுக்கமாக இருக்க வேண்டும்; தான் இந்தப் பூங்காவிலேயே அடக்கம் செய்யப்பட்ட வேண்டும்; பூங்காவெளியில் மயில்கள் எந்நேரமும் சுதந்தரமாக உலாவ வேண்டும். இவை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் 1668ஆம் ஆண்டு சுவிசு கட்டிடம் (chalet) உள்ளது.

உலக நாடுகள் சங்கக் கட்டடத்தின் அடித்தளத்தில் உலக நாடுகள் சங்க உறுப்பினர் நாடுகளின் பட்டியல் அடங்கிய ஆவணம், சங்க அரசியலமைப்பு ஆவணம், பத்தாவது அவையில் பங்கேற்ற நாடுகளின் நாணயங்களின் மாதிரிகள் அடங்கிய காலப்பேழை புதைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடுகளின்_அரண்மனை&oldid=1361149" இலிருந்து மீள்விக்கப்பட்டது