பத்து பகாட் மாவட்டம்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

(பத்து பகாட் எனும் பெயரில் பத்து பகாட் மாவட்டம்; பத்து பகாட் நகரம் என இரு இடங்கள் உள்ளன.)

பத்து பகாட் மாவட்டம்
Daerah Batu Pahat
Batu Pahat District
 ஜொகூர்
Map
ஆள்கூறுகள்: 1°55′N 103°0′E / 1.917°N 103.000°E / 1.917; 103.000
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்பத்து பகாட் மாவட்டம்
தொகுதிபத்து பகாட்
நகராட்சிபத்து பகாட் நகராட்சி (மேற்கு)
யோங் பெங் நகராட்சி (கிழக்கு)
அரசு
 • மாவட்ட அதிகாரிஎசார் அபு சைரின்
(Ezahar Abu Sairin)
பரப்பளவு
 • மொத்தம்1,872.58 km2 (723.01 sq mi)
மக்கள்தொகை (2016)
 • மொத்தம்4,43,600
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு83000
தொலைபேசி எண்கள்07-42xxxxx to 07-45xxxxx
போக்குவரத்து பதிவெண்கள்J
பத்து பகாட் நகராட்சி
Batu Pahat Municipal Council
Majlis Perbandaran Batu Pahat
வரலாறு
தோற்றுவிப்பு1 சனவரி 2001
முன்புபத்து பகாட் மேற்கு மாவட்ட நகராட்சி
தலைமை
நகராட்சித் தலைவர்
எசார் அபு சாயின்
(Ezahar Abu Sairin)
செயலாளர்
அப்துல் கரிம் பக்கர்
(Abdul Karim Bakar)
குறிக்கோளுரை
முன்னேற்றம் செழிப்பு
(Maju dan Sejahtera)
(Progress and Prosper)
கூடும் இடம்
பத்து பகாட் நகராட்சி தலைமையகம்
Menara MPBP, Jalan Rugayah, 83000 பத்து பகாட் நகரம், ஜொகூர்
வலைத்தளம்
www.mpbp.gov.my

பத்து பகாட் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Batu Pahat; ஆங்கிலம்: Batu Pahat District; சீனம்: 峇株巴辖县) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடமேற்கில் மூவார் மாவட்டம்; தென்கிழக்கில் குளுவாங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; ஆக வடக்கில் சிகாமட் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் பண்டார் பெங்காரம் (Bandar Penggaram) எனும் பத்து பகாட் நகரம்.

இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமுமான பத்து பகாட் நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 239 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 50 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

வரலாறு தொகு

 
பத்து பகாட் நகரம்
 
பத்து பகாட் ஆறு
 
பத்து பகாட் கிணற்றுக்கு அருகில் ஒரு நினைவுத் தகடு.
 
பத்து பகாட் பேருந்து நிலையம்

பத்து பகாட் என்றால் மலாய் மொழியில் உளியால் செதுக்கப்பட்ட கல் என பொருள்படும். ஒரு கற்சுரங்கத்தில் இருந்த ஒரு கல்லில் இருந்து இந்தப் பெயர் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. இது குறித்து பல கோட்பாடுகள் உள்ளன.

மலாக்கா மீது சயாமியர் படையெடுப்பு தொகு

1456-ஆம் ஆண்டில், சயாமிய இராணுவம், மலாக்காவைத் தாக்குவதற்கு களம் இறங்கியது. சயாமிய இராணுவத்திற்குக் கடல்படைத் தளபதி அவி டி சூ (Admiral Awi Di Chu) என்பவர் தலைமை தாங்கினார்.

சயாமிய இராணுவத்தால் மலாக்காவைத் தாக்க முடியவில்லை. பின்வாங்கிய நிலையில் கடலோர கிராமமான கம்போங் மினியாக் பெக்கு எனும் இடத்தில் தண்ணீர் பெறுவதற்கு முகாமிட்டது.

அங்கே ஒரு பெரிய கற்பாறை. அந்தக் கற்பாறையில் ஒரு சிறிய குழி. அதில் சிறிதளவு நீர் இருந்து இருக்கிறது. மேலும் நீர் கிடைக்கும் எனும் ஆர்வத்தில் கூர்மையான உளிகளைக் கொண்டு குழியை அகலமாகத் தோண்டி இருக்கிறார்கள்.

ஆ பாமோசா கருங்கல் பாறைகள் தொகு

 
மலாக்காவில் ஆ பாமோசா கோட்டை

இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அந்த இடத்திற்கு பத்து பகாட் எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. அந்தக் கற்பாறை, ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் பத்து பகாட்டில் உள்ளது.[1]

பத்து பகாட் பெயரின் தோற்றத்திற்கான மற்றொரு சாத்தியமான விளக்கம் உள்ளது. மலாக்காவைக் கைப்பற்றிய பின்னர் போர்த்துகீசியர்கள், தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார்கள். அந்தக் கோட்டையின் பெயர் ஆ பாமோசா.

அந்தக் கோட்டையைக் கட்டுவதற்கான கருங்கல் பாறைகள் பத்து பகாட் நதியின் முகத்துவாரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். ஆக அந்த வகையில் பத்து பகாட்டிற்குப் பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. [2]

1893-ஆம் ஆண்டில் பத்து பகாட் தொகு

முன்பு காலத்தில் உப்பு சேர்க்கப்பட்ட மீன்களுக்குப் பத்து பகாட் புகழ்பெற்ற இடமாக விளங்கியது. அதனால் முன்பு இந்த நகரம் பத்து பகாட் நகரம்பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) என்று அழைக்கப்பட்டது. அதாவது "உப்பு தயாரிப்பாளர்களின் நகரம்" என்று பொருள்.

1893-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தான் அபுபாக்கரின் கட்டளையின் பேரில் தற்போதைய நகரத்தை டத்தோ பெந்தாரா லுவார் முகமட் சல்லே பெராங் (Dato' Bentara Luar, Mohamed Salleh bin Perang) என்பவர் நிறுவினார்.[3]

மலாயா அவசரகாலத்தில் பிஜி நாட்டுக் காலாட்படை தொகு

1952 முதல் 1956 வரை மலாயா அவசரகாலத்தில் பொதுநலவாய (காமன்வெல்த்) படைகளின் ஒரு பகுதியாக பிஜி நாட்டைச் சேர்ந்த தரைப்படை (1Bn Fiji Infantry Regiment) இங்குதான் இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.

அந்தப் படைப் பிரிவில் 1,600 இராணுவ வீரர்கள் இருந்தார்கள். ஜொகூர், மலாக்கா மாநிலப் பகுதிகளைப் பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பு வழங்கி உள்ளார்கள்.[4]

பத்து பகாட் வரலாற்றில் ஒரு சோக நாள் தொகு

அண்மைய பத்து பகாட் வரலாற்றில், 1980 அக்டோபர் 16-ஆம் தேதி ஓர் இரத்தக்களரி நாளாகக் குறிக்கப் படுகிறது. அன்று காலை 9:30 மணியளவில் நடந்த நிகழ்ச்சி. முகமட் நசீர் இசுமாயில் என்பவரின் தலைமையில், 20 முசுலிம் தீவிரவாதிகள், பத்து பகாட் காவல் நிலையத்திற்குள் வீச்சு அரிவாள்களுடன் நுழைந்தார்கள்.

காவல் நிலையத்தில் இருந்த 23 காவல் அதிகாரிகளையும்; பொதுமக்களையும் வெட்டி காயப் படுத்தினார்கள். இந்தத் துர்நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் 8 பேரைப் காவல் அதிகாரிகள் சுட்டுக் கொன்றார்கள். தாக்குதலின் நோக்கம் இன்று வரையிலும் முழுமையாகத் தெரியவில்லை.[5]

பத்து பகாட் (நகரம்), அண்மையில் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) எனும் புதுப் பெயரைப் பெற்றது. இந்த நகரம் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இப்போது ஜொகூர் பாருவுக்கு அடுத்த நிலையில் ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் தொகு

பத்து பகாட் மாவட்டத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 398,014. இதில் 2000-ஆம் ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி விழுக்காடு 1.55% ஆகும். [6] அதிக மக்கள் தொகை கொண்ட முக்கிம் சிம்பாங் கானான் ஆகும். இதன் மக்கள் தொகை: 311,862. குறைந்த மக்கள் தொகை கொண்ட முக்கிம் பாகன். அதன் மக்கள் தொகை: 4,692.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினர் (51%); சீனர்கள் மிகப்பெரிய சிறுபான்மையினர் (46%); மலேசிய இந்தியர்கள் (3%). இசுலாம், பௌத்தம், தாவோயிசம், கன்பூசியம், கிறிஸ்தவம் மற்றும் இந்து மதம் ஆகியவை முக்கிய மதங்கள்.

400-க்கும் மேற்பட்ட சீனக் கோயில்கள் தொகு

இந்த மாவட்டத்தில் சீன மக்கள் தொகை அதிகம். அதன் காரணமாக பத்து பகாட்டில் 400-க்கும் மேற்பட்ட சீனக் கோயில்கள் உள்ளன. ஒரு சில கோயில்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலானவை. இவற்றுள் பல கோயில்கள் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன.

பக்தர்கள் பலரும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கோயில்களைப் பார்க்க வருகின்றனர். இது ஒரு வகையில் உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் மாறியுள்ளது.

இங்குள்ள சோங் லோங் கோங் கோயில் (Chong Long Gong Temple) 1864-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கோயில் பக்தர்களின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சான்றுகள் தொகு

  1. Today, the ancient well can still be found in Minyak Beku, though little was done to maintain this ancient landmark which gives name to the town.
  2. After capturing Melaka, the Portuguese built the “A Famosa” fortress of granite rocks taken from the mouth of Sungai Batu Pahat.
  3. On 11 November 1893, Sultan Abu Bakar of Johor instructed Perang begin development of Batu Pahat into a city. He started by preparing roads, government departments, and a modernized management system.
  4. "YouTube - மலாயா அவசரகாலத்தில் பிஜி நாட்டுக் காலாட்படை". www.youtube.com.
  5. Webmaster, MT (31 March 2014). "Malaysians mudah lupa – Malaysia Today". www.malaysia-today.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-16.
  6. பத்து பகாட் மாவட்டத்தின் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_பகாட்_மாவட்டம்&oldid=3946125" இலிருந்து மீள்விக்கப்பட்டது