பாலசிங்கம் நடேசன்

பாலசிங்கம் நடேசன் (இறப்பு: மே 18, 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர். இவர் முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்[1]. அவருடன் சேர்ந்து அவரது மனைவி, புலிகளின் அமைதிச் செயலகப் பொறுப்பாளர் சீ. புலித்தேவன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்[2].

பாலசிங்கம் நடேசன்

பிறந்த இடம்: இலங்கை
இறப்பு: மே 18, 2009
இறந்த இடம்: முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, தமிழீழம்
இயக்கம்: தமிழீழ விடுதலைப் புலிகள்
பணி அரசியற்துறைப் பொறுப்பாளர் (2007-2009)
வாழ்க்கைத் துணை விசித்திரா

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

நடேசன் முன்னர் இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்தவர். தலைநகர் கொழும்பில் உள்ள நாரகேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விசித்திரா என்ற சிங்களப் பெண்ணைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். விசித்திரா, சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப் படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர்.

அந்தக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார்.

1990 இல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன் அவர்கள், 1991 இல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தொடங்கிய போது அதன் உருவாக்கப்-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2007, நவம்பர் 2 ஆம் நாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனின் இறப்பை அடுத்து நடேசன் அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

படுகொலை தொகு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாக்குமாறு நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மே 18 (2009) அதிகாலை 5:45 மணி வரை வரை உலக சமூகம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்ததாக புலிகளின் பேச்சாளர் செல்லப்பா பத்மநாதன் தெரிவித்தார்.[3]

ஐநா பொதுச் செயலரின் உயரதிகாரி விஜய் நம்பியார், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உறுதியளித்தன் பேரில் நடேசன், புலித்தேவன், மற்றும் நடேசனின் மனைவி உட்பட பொதுமக்கள் சிலர் வெள்ளைக் கொடியைத் தாங்கி சரணடைய வெளியே வந்த போது அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்[4]. இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் நடேசன், புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. டைம்ஸ் ஆன்லைன் 18 மே 2009
  2. விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மனைவியும் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொலை
  3. "முள்ளிவாய்க்காலில் சிறிலங்காவின் திட்டமிட்ட அதிர்ச்சிகரப் படுகொலை". Archived from the original on 13 சூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2016.
  4. Tigers begged me to broker surrender - சண்டே டைம்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலசிங்கம்_நடேசன்&oldid=2485623" இலிருந்து மீள்விக்கப்பட்டது