பிருந்தாவனம்

பிருந்தாவனம்[1] (Vrindavan; Hindi: वृन्दावन) உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரிடமாகும். இது இந்துக்களின் புனித இடமாக வழிபடப்படுகிறது. இதிகாசமான மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் கடவுளான கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இது. கண்ணனின் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக `விரஜபூமி' என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் அரியானாவிலும் அமைந்துள்ளன. இங்கு ராதை மற்றும் கிருஷ்ணரின் வழிபாட்டுக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோயில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. இங்கு இந்துமத குறிப்பாக வைணவம், கௌடிய வைணவ மத பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

பிருந்தாவனம் காதல் கோயில்

பெயர்க் காரணம் தொகு

பிருந்தாவன நகரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. சமஸ்கிருத மொழியில் பிருந்தா என்றால் துளசி எனவும் வனம் என்றால் காடு எனவும் பொருள்.[2] இன்றுமிப்பகுதியிலுள்ள நிதிவனம் மற்றும் சேவாகஞ்ச் இரண்டும் துளசிச் செடிகள் நிறைந்து காணப்படுகின்றன.

கிருஷ்ண ஜென்ம பூமி தொகு

டில்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் அமைந்த மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான கோகுலம் (ஆயர்பாடி), பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களையும் இணைத்து, "கிருஷ்ண ஜென்மபூமி'’ அல்லது விரஜபூமி என்கின்றனர். இவை முக்கோணவடிவில் அமைந்துள்ளன. ஆழ்வார்கள் இத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளனர். மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, கேசவ தேவ் கோயில் என்று பெயரிட்டுள்ளனர். இங்கு ஓடும் யமுனை நதி கங்கையைப் போன்று புனிதமானதாக வணங்கப்படுகிறது. இந்த நதியை, "தூய பெருநீர் யமுனை' என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் பிருந்தாவனம் உள்ளது.

பிருந்தாவனத்தில் பனிரெண்டு காடுகள் உள்ளன. இவற்றுள் ஏழு வனங்கள் யமுனையின் மேற்குக் கரையிலும் ஐந்து கிழக்குக் கரையிலும் உள்ளன.[3]

  1. மகாவனம்
  2. காம்யகவனம்
  3. மதுவனம்
  4. தாளவனம்
  5. குமுத வனம்
  6. பாண்டிரவனம்
  7. பிருந்தாவனம்
  8. கதிரவனம்
  9. லோஹவனம்
  10. பத்ராவனம்
  11. பகுளாவனம்
  12. வில்வவனம்

வரலாறு தொகு

பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ஆகியன அவற்றுள் சிலவாகும். இதில் கோவிந்த தேவ் மந்திர் எனப்படுவது பொ.ஊ. 1590 இல் கட்டப்பட்டதாகும்.[4] பிருந்தாவன் பொ.ஊ. 16 ஆம் நூற்றாண்டு வரை காடுகளுக்கிடையே மறைந்திருந்ததாகவும் 1515-இல் சைதன்யர் என்ற புனிதர் கிருஷ்ணர் தொடர்புடைய இடங்களை எல்லாம் காணவேண்டும் என்ற நோக்கத்தோடு வந்தபோது பிருந்தாவனத்தைக் கண்டறிந்ததார். கிருஷ்ணரின் மீது தெய்வீகக் காதல் கொண்ட ஆண்மீக நோக்குடன் பிருந்தாவனத்தின் வெவ்வேறு புனித இடங்களில் அலைந்து திரிந்து அவரது ஆன்ம சக்தி மூலன் இதனைக் கண்டறிந்தார் என நம்பப்படுகிறது.[5] கடந்த 250 ஆண்டுகளில், நகரமயமாக்கலின் விளைவாக பிருந்தாவனத்தின் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் ஒரு சில இடங்களைத் தவிர மற்றவை எல்லாம் உள்ளூர் வாசிகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளால் குறைந்து வருகின்றன. கால்நடைகளைத் தவிர இக்காடுகளில் மயில்கள், குரங்குகள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் காணப்படுகின்றன. ஒரு சில இடங்களைத் தவிர குரங்குகள், மாடுகள் ஆகியவற்றை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணலாம்.

பரிக்ரமா எனப்படும் சுற்று வழிபாடு தொகு

கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி'யில் உள்ளன. இந்த `விரஜ பூமி' சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா' எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், `பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.[3]

படக்காட்சியகம் தொகு

மேற்கோள் தொகு

  1. "கூட்டத்தினரை காப்பவன் கிருஷ்ணன்". Archived from the original on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  2. Brindaban The Imperial Gazetteer of India, 1909, v. 9, p. 17.
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
  4. Brindaban   இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. .
  5. "Discovery of Vrindavan by Chaitanya Mahaprabhu". Archived from the original on 2011-01-23. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருந்தாவனம்&oldid=3574058" இலிருந்து மீள்விக்கப்பட்டது