பெரும் தலைநெடுஞ்சாலை

பெரும் தலைநெடுஞ்சாலை (Grand Trunk Road , GT Road) தெற்கு ஆசியாவின் மிகத் தொன்மையான மற்றும் நீளமான நெடுஞ்சாலையை சேர் சா சூரி அமைத்தர் . பல நூற்றாண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைத்து வந்துள்ளது. இது கிழக்கே வங்காளத்திலிருந்து இந்தியாவின் வடக்கில் சென்று பாக்கிஸ்தானின் பெஷாவரில் முடிகிறது.

பாகிஸ்தானில் ஜீலம் ஆற்றின் மீது GT சாலை

தடம் தொகு

 
GT Road near Barhi, சார்க்கண்ட்

இன்று 2500 கி.மீ தொலைவுள்ள ஒரே தொடர்ந்த சாலையாக ஜி.டி சாலை உள்ளது. பங்களாதேசத்தின் நாராயண்கஞ்ச் மாவட்ட சோனார்காவில் துவங்கி இந்தியாவில் கொல்கத்தா,பர்த்மான்,துர்காப்பூர், அசன்சால்,தன்பாத், ஔரங்காபாத், வாரணாசி, அலகாபாத், கான்பூர், அலிகர்,மீரட்,தில்லி,கர்னால்,அம்பாலா,லூதியானா,ஜலந்தர்,அமிர்தசரஸ் நகரங்களைக் கடந்து பாக்கிஸ்தானில் லாகூர்,குஜ்ரன்வாலா,குஜ்ரத்,ஜீலம், ராவல்பிண்டி,அட்டோக் மாவட்டம்,நோசேரா,பெஷாவர் வழியே லான்டி கோடால் என்னுமிடத்தில் முடிகிறது.

இந்தியாவிற்குள் கொல்கத்தாவிற்கும் கான்பூருக்கும் இடையே இது தேசிய நெடுஞ்சாலை எண் 2 ஆகவும், கான்பூர்- தில்லி இடையே தே.நெ 91 ஆகவும் தில்லி - வாகா இடையே தே.நெ 1 ஆகவும் உள்ளது. தில்லிக்கும் முசாபர்நகரிடையே தேசிய நெடுஞ்சாலை 58 வடக்கே டேராடூனுகுச் செல்கிறது. பாக்கிஸ்தானில் இதன் பெரும்பகுதி தே.நெ 5 ஆக உள்ளது.

வரலாறு தொகு

 
இந்திய சாலைகளின் படிவளர்ச்சி. முதன்மை வரைபடம் முகலாயர் காலத்து தடங்களைக் காட்டுகின்றது, உள்படம் A வரலாற்றுக்கு முந்தைய பலாசார நிகழ்வுகளையும், B மௌரியர்களின் முந்தைய தடங்களையும், C மௌரியர் காலத்து சாலைகளையும் , D கிறுத்தவ காலத்து சாலைகளையும் E இந்திய "Z" சாலைப் பிணையத்தையும் காட்டுகின்றன.

மௌரியர்களின் காலத்தில் இந்தியாவின் மேற்கு ஆசியா மற்றும் யவன உலகுடனான தரைவழி வணிகப் பரிமாற்றம் வடமேற்கு நகரமான தக்சசீலா (தற்போது பாக்கிஸ்தானில் உள்ளது) வழியே நடைபெற்றது அண்மைய ஆய்வுகளின்படிதெரிய வந்துள்ளது.தக்சசீலா மௌரியப் பேரரசின் பிற பகுதிகளுடன் நன்றாக பிணைக்கப்பட்டிருந்தது. தக்சசீலாவிலிருந்து பாடலிபுத்திரம் (தற்போதைய பட்னா)வரை நெடுஞ்சாலையை அமைத்தனர். மூன்றாம் நூற்றாண்டில் இச்சாலை அமைக்கப்பட்டது[1]. இதன் பராமரிப்பைப் பேண பல அதிகாரிகளை நியமித்த சந்திரகுப்த மௌரியரைப் பற்றி அவரது அரசவையில் 15 ஆண்டுகள் கழித்த கிரேக்க தூதர் மெகஸ்தனீசு மூலம் அறிகிறோம்.

 
பல நாற்றாண்டுகளாக பெரும் தலைநெடுஞ்சாலை வட இந்தியாவின் முதன்மை சாலையாக இருந்து வந்துள்ளது. பிரித்தானியர் காலத்தில் அம்பாலா இராணுவக் குடியிருப்புப் பகுதி

16ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் புதிதாக ஓர் நெடுஞ்சாலையை அப்போது வட இந்தியா முழுமையும் ஆண்டுவந்த பஷ்டூன் அரசர் ஷேர் ஷா சூரியால் கட்டமைக்கப்பட்டது. இராணுவ, நிர்வாக நலன்களுக்காக தனது பேரரசின் பல பகுதிகளை இவ்வாறு இணைக்க விரும்பினார். இன்றிருக்கும் பெரும் தலைநெடுஞ்சாலையின் முன்னோடியாக கருதப்படும் இச்சாலை சதக்-இ-ஆசம் (இராச பாட்டை) என அழைக்கப்படலாயிற்று.

இச்சாலை துவக்கத்தில் அவரது தலைநகரான ஆக்ராவையும் அவரது பிறந்த ஊரான சசாராமையும் இணைக்கப் போடப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு மேற்கே மூல்தான் வரையும் கிழக்கே (தற்போது பங்களாதேசத்தில் உள்ள) சோனார்காவ் வரையும் நீட்டிக்கப்பட்டது. அவரது காலத்திற்கு பிறகு அவரது பரம்பரை முடிந்தபோதும் இச்சாலை அவரது பங்களிப்பை நினைவுபடுத்திக் கொண்டு பயனாகி வந்தது. பின்னர் வந்த முகலாய மன்னர்கள் இந்தச் சாலையை மேற்கில் நீட்டித்தனர். ஒரு நேரத்தில் கைபர் கணவாயைக் கடந்து ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் வரை இந்த சாலை இருந்தது. பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்தச் சாலையை மேலும் தரமுயர்த்தினர். கொல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை சீரமைக்கப்பட்டது. அவர்கள் காலத்தில் இது கிராண்ட் டிரங்க் ரோடு என்று மறுபெயரிடப்பட்டது.

இந்த சாலையின் இருபுறமும் மரங்கள் நடப்பட்டன. இடைவழி உணவகங்களும் தங்குவிடுதிகளும் ஏற்படுத்தப்பட்டன. மைல்கற்கள் நடப்பட்டன. இன்றும் சில பழைய கற்களை தில்லி - அம்பாலா நெடுஞ்சாலையில் காணலாம். இதனால் வணிகம், பயணம் மற்றும் அஞ்சல் சேவைகள் பயனடைந்தன. தவிர, மேற்கிலிருந்து முகலாயர்/ஆப்கானியர் துருப்பு நடமாட்டத்திற்கும் பிரித்தானியரின் துருப்புகள் வங்காளத்திலிருந்து கங்கைச்சமவெளி அடையவும் உதவியுள்ளது.

 
சிட்டகாங் துறைமுகத்துடன் தொடர்பு ஏற்படுத்திய ஜி.டி சாலையின் விரிவாக்கம் இன்று கோமில்லாவின் கோர்ட் சாலையாக உள்ளது.

இன்றும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இந்தச்சாலை ஓர் முக்கிய தடமாக இருந்து வருகிறது. இந்தியாவில் தங்க நாற்கரச்சாலை திட்டத்தின் பகுதியாக உள்ளது. "உலகில் வேறெங்கும் இல்லாதவாறு பெரும் தலைநெடுஞ்சாலை வாழ்வின் நதியாக" நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருகிறது.[2]

இதனையும் காண்க தொகு

மேலும் படிக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. எஸ். ராமகிருஷ்ணன் (2013). மறைக்கப்பட்ட இந்தியா. பக். 50, நீண்டு செல்லும் சாலை: விகடன் பிரசுரம். 
  2. A description of the road by Kipling, found both in his letters and in the novel "Kim". He writes: "Look! Brahmins and chumars, bankers and tinkers, barbers and bunnias, pilgrims -and potters - all the world going and coming. It is to me as a river from which I am withdrawn like a log after a flood. And truly the Grand Trunk Road is a wonderful spectacle. It runs straight, bearing without crowding India's traffic for fifteen hundred miles - such a river of life as nowhere else exists in the world."

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_தலைநெடுஞ்சாலை&oldid=3798166" இலிருந்து மீள்விக்கப்பட்டது