மூன்றாம் விக்ரகராஜா

சபலக்ச நாட்டின் ஆட்சியாளர்

மூன்றாம் விக்ரகராஜா (Vigraharaja III) (ஆட்சி சுமார் 1079-1090 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

மூன்றாம் விக்ரகராஜா
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 1079-1090 பொ.ச.
முன்னையவர்மூன்றாம் துர்லபராஜா
பின்னையவர்முதலாம் பிருத்விராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

விசாலன் அல்லது பிசாலன் என்றழைக்கப்படும் மூன்றாம் விக்ரகராஜா, சகமான மன்னர் சாமுண்டராஜனின் மகனாவார். இவர் தனது சகோதரர் மூன்றாம் துர்லபராஜாவுக்குப் பிறகு சகமான சிம்மாசனத்தில் அமர்ந்தார். [1]

பரமாரர்களோடு கூட்டணி தொகு

விக்ரகராஜாவின் ராணியின் பெயர் ரஜாதேவி என்பதாக பிஜோலியா பாறைக் கல்வெட்டு மூலம் அறியப்பட்டது. விக்ரகராஜா ரசோ என்ற காவியக் கவிதையில், இவர் முந்தைய பரமார மன்னன் போஜனின் மகள் ராஜமதியை மணந்ததாகக் கூறுகிறது. இருப்பினும், விக்ரகராஜா அரியணை ஏறுவதற்கு ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1055 பொ.ச. இல் போஜன் இறந்துவிட்டார். போஜனின் சகோதரர் உதயாதித்தன் தனது மருமகளை விக்ரகராஜாவுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கலாம் என வரலாற்றாசிரியர் ஆர்.பி.சிங் கருதுகிறார். [2] தசரத சர்மாவின் கூற்றுப்படி, அவர் உதயாதித்தனின் மகளாக இருந்திருக்கலாம். [1]

விக்ரகராஜா இவ்வாறு மாளவத்தின் பரமார அரசரான உதயாதித்தனுடன் திருமணக் கூட்டணியை உருவாக்கினார். பிருத்விராஜ விஜயம் என்றா நூல், உதயாதித்தனுக்கு சாரங்கன் என்ற குதிரையைக் கொடுத்ததாகக் கூறுகிறது. அதன் உதவியுடன் உதயாதித்தன் தனது எதிரியான கர்ணனை தோற்கடிக்க முடிந்தது. இவ்வாறு, மாளவத்தில் அமைதியையும் செழிப்பையும் நிலைநாட்ட பரமார மன்னனுக்கு விக்ரகராஜா உதவினார். [2] பிற்கால உரையான சுர்ஜனா சரிதமும் இந்தக் கணக்கை உறுதிப்படுத்துகிறது. ஆனால் கர்ணனைத் தோற்கடித்த விக்ரகராஜாவை தவறாகக் கருதுகிறது. [3]

விக்ரகராஜா சிவனை வழிபட மால்வாவில் உள்ள உஜ்ஜைனிக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. [2]

கசனவித்துகளுடன் மோதல் தொகு

இவர் மாளவத்தின் மன்னரான சகாப்-உத்-தினை தோற்கடித்ததாக ஹம்மிர மகாகாவ்யம் கூறுகிறது. இது வரலாற்று ரீதியாக துல்லியமானது அல்ல, ஏனென்றால் 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை முஸ்லிம்கள் மாளவத்தை ஆட்சி செய்யவில்லை. வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங்கின் கூற்றுப்படி, சகாப்-உத்-தின் கசனவித்தின் இப்ராஹிமின் தளபதியாக இருந்திருக்கலாம். [4]

இறப்பு தொகு

பிரபந்த கோசம் என்ற நூலின் கூற்றுப்படி, விக்ரகராஜா காமத்தின் மேல் அதிகம் நாட்டமுடையவராக சித்தரிக்கப்படுகிறார். மேலும் மகாசத்யா என்ற பிராமணனின் மனைவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றார். மகாசத்யாவின் சாபம் இறுதியில் இவரது மரணத்திற்கு வழிவகுத்தது. மற்றொரு புராண உரையான பிருத்விராஜ் ராசோ, பார்வதி தேவியை வேண்டிக் கொண்டிருந்த வைசியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறுகிறது. சிறுமியின் சாபம் இவரை துண்டா என்ற அரக்கனாக மாற்றியது. [5] இந்த இரண்டு நூல்களும் விக்ரகராஜாவின் மரணத்திற்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயற்றப்பட்டதால், இந்த புராணக்கதைகளின் வரலாற்றுத் துல்லியத்தை தீர்மானிப்பது கடினம். [3]

விக்ரகராஜாவுக்குப் பிறகு இவருடைய மகன் முதலாம் பிருத்விராஜா ஆட்சிக்கு வந்தார். [5]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Dasharatha Sharma 1959, ப. 36.
  2. 2.0 2.1 2.2 R. B. Singh 1964, ப. 127.
  3. 3.0 3.1 Dasharatha Sharma 1959, ப. 37.
  4. R. B. Singh 1964, ப. 127-128.
  5. 5.0 5.1 R. B. Singh 1964, ப. 128.

உசாத்துணை தொகு

  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_விக்ரகராஜா&oldid=3426188" இலிருந்து மீள்விக்கப்பட்டது