மௌரியப் பேரரசு

பண்டைக்கால இந்தியப் பேரரசு (கி. மு. 322 - கி. மு. 184)

மௌரியப் பேரரசு (Maurya Empire, பொ.ஊ.மு. 322 – பொ.ஊ.மு. 184) என்பது மகதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்தில் இரும்புக் காலத்தில் புவியியல் ரீதியாக விரிவடைந்திருந்த ஒரு வரலாற்றுச் சக்தியாகும். இது பொ.ஊ.மு. 322இல் சந்திரகுப்த மௌரியரால் நிறுவப்பட்டது. பொ.ஊ.மு. 185 வரை நீடித்திருந்தது.[21] சிந்து கங்கைச் சமவெளியை வென்றதன் மூலம் மௌரியப் பேரரசானது மையப்படுத்தப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரத்தில் (தற்கால பட்னா) அமைந்திருந்தது. ஏகாதிபத்திய மையத்திற்கு வெளியே பேரரசின் புவியியல் விரிவானது பேரரசு முழுவதும் தெளித்தது போல் பரவியிருந்த ஆயுதம் கொண்ட நகரங்களைக் கட்டுப்படுத்திய இராணுவத் தளபதிகளின் விசுவாசத்தைச் சார்ந்திருந்தது.[6][22][23] அசோகரின் (அண். பொ.ஊ.மு. 268 - பொ.ஊ.மு. 232) ஆட்சியின் போது பேரரசானது குறுகிய காலத்திற்கு இந்தியத் துணைக் கண்டத்தின் முக்கிய நகர மையங்கள் மற்றும் நெடுஞ்சாலைக் குடியிருப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொலைதூரத் தென்னிந்தியாவில் இருந்த பகுதிகள் தவிர மற்ற பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. அசோகரின் ஆட்சிக் காலம் முடிந்து சுமார் 50 ஆண்டுகள் கழித்து இது வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பிரகத்ரதரைப் புஷ்யமித்திர சுங்கன் அரசியல் கொலை செய்து மகதத்தில் சுங்கப் பேரரசை நிறுவியதற்குப் பிறகு பொ.ஊ.மு. 185இல் இப்பேரரசு கலைக்கப்பட்டது.

மௌரியப் பேரரசு
மௌரிய சாம்ராச்சியம்
பொ.ஊ.மு. 322–பொ.ஊ.மு. 184
மௌரியப் பேரரசின் அதிக பட்ச பரப்பு, அசோகர் கல்வெட்டுக்களின் அமைவிடங்களின் மூலம் காட்டப்பட்டதன் படி, வரலாற்றாளர்கள்: வின்சென்ட் ஸ்மித்;[1] ரமேஷ் சந்திர மஜும்தார்;[2] மற்றும் வரலாற்றுப் புவியியலாளர் யோசோப்பு ஈ. சுவர்த்ஸ்பெர்க் ஆகியோரால் அகக் காட்சியாக உருவாக்கப்பட்டதன் படி.[3]
மௌரியப் பேரரசின் அதிக பட்ச பரப்பு, அசோகர் கல்வெட்டுக்களின் அமைவிடங்களின் மூலம் காட்டப்பட்டதன் படி, வரலாற்றாளர்கள்: வின்சென்ட் ஸ்மித்;[1] ரமேஷ் சந்திர மஜும்தார்;[2] மற்றும் வரலாற்றுப் புவியியலாளர் யோசோப்பு ஈ. சுவர்த்ஸ்பெர்க் ஆகியோரால் அகக் காட்சியாக உருவாக்கப்பட்டதன் படி.[3]
பெரிய தன்னாட்சிப் பகுதிகளால் பிரிக்கப்பட்ட மையப் பகுதிகள் அல்லது கோட்டு வலைப்பின்னலாக மௌரியப் பேரரசின் நிலப்பரப்புகள் பின்வரும் அறிஞர்களின் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன: வரலாற்றாளர்கள் எர்மன் குல்கே மற்றும் தியேத்மர் ரோதெர்முன்ட்;[4] பர்டன் இசுடெய்ன்;[5] தாவீது லுட்டென்;[6] மற்றும் ரூமிலா தாப்பர்;[7] மானுடவியலாளர்கள் மோனிகா எல். ஸ்மித்[8] மற்றும் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா;[7] தொல் பொருள் ஆராய்ச்சியாளர் இராபின் கன்னிங்கம்;[7] மற்றும் வரலாற்று மக்கள் தொகையியலாளர் டிம் டைசன்.[9]
பெரிய தன்னாட்சிப் பகுதிகளால் பிரிக்கப்பட்ட மையப் பகுதிகள் அல்லது கோட்டு வலைப்பின்னலாக மௌரியப் பேரரசின் நிலப்பரப்புகள் பின்வரும் அறிஞர்களின் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன: வரலாற்றாளர்கள் எர்மன் குல்கே மற்றும் தியேத்மர் ரோதெர்முன்ட்;[4] பர்டன் இசுடெய்ன்;[5] தாவீது லுட்டென்;[6] மற்றும் ரூமிலா தாப்பர்;[7] மானுடவியலாளர்கள் மோனிகா எல். ஸ்மித்[8] மற்றும் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா;[7] தொல் பொருள் ஆராய்ச்சியாளர் இராபின் கன்னிங்கம்;[7] மற்றும் வரலாற்று மக்கள் தொகையியலாளர் டிம் டைசன்.[9]
தலைநகரம்பாடலிபுத்திரம்
(தற்கால பட்னா, பீகார்)
பேசப்படும் மொழிகள்மாகதிப் பிராகிருதம்
சமயம்
அரசாங்கம்முற்றிலுமான முடியரசு, (சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள படி)
மற்றும் இராஜமண்டலம்[18]
சாம்ராட் 
• பொ.ஊ.மு. 322 - பொ.ஊ.மு. 298
சந்திரகுப்த மௌரியர்
• பொ.ஊ.மு. 298 - பொ.ஊ.மு. 272
பிந்துசாரர்
• பொ.ஊ.மு. 268 - பொ.ஊ.மு. 232
அசோகர்
• பொ.ஊ.மு. 232 - பொ.ஊ.மு. 224
தசரத மௌரியர்
• பொ.ஊ.மு. 224 - பொ.ஊ.மு. 215
சம்பிரதி
• பொ.ஊ.மு. 215 - பொ.ஊ.மு. 202
சாலிசுகா
• பொ.ஊ.மு. 202 - பொ.ஊ.மு. 195
தேவவர்மன்
• பொ.ஊ.மு. 195 - பொ.ஊ.மு. 187
சத்தாதன்வன்
• பொ.ஊ.மு. 187 - பொ.ஊ.மு. 184
பிரகத்திர மௌரியன்
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• நந்தப் பேரரசை வெல்லுதல்
பொ.ஊ.மு. 322
• புஷ்யமித்திர சுங்கரால் பிரிகத்ரதர் அரசியல் கொலை செய்யப்படுதல்
பொ.ஊ.மு. 184
பரப்பு
பொ.ஊ.மு. 261[19]
(உச்ச பட்ச பரப்பளவின் குறைந்த பட்ச மதிப்பீடு)
3,400,000 km2 (1,300,000 sq mi)
பொ.ஊ.மு. 250[20]
(உச்ச பட்ச பரப்பளவின் அதிக பட்ச மதிப்பீடு)
5,500,000 km2 (2,100,000 sq mi)
நாணயம்பணம்
முந்தையது
பின்னையது
மகாஜனபதம்
நந்தர்
சுங்கர்
சாதவாகனர்
மகாமேகவாகன வம்சம்
இந்தோ சிதியன் பேரரசு
இந்தோ கிரேக்க நாடு
விதர்பா இராச்சியம் (மௌரிய சகாப்தம்)

அர்த்தசாஸ்திரத்தின் ஆசிரியரும்,[24] தனது வழிகாட்டியுமான சாணக்கியரின் வழிகாட்டுதலில் சந்திரகுப்த மௌரியர் ஓர் இராணுவத்தைத் திரட்டினார். நந்தப் பேரரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தார். அண். பொ.ஊ.மு. 322இல் மௌரியப் பேரரசுக்கு அடித்தளத்தை நிறுவினார். பேரரசர் அலெக்சாந்தரால் ஏற்படுத்தப்பட்டிருந்த சத்ரப்புகளைத் தோற்கடித்ததன் மூலம் மேற்கு திசையில் நடு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் தனது சக்தியைச் சந்திரகுப்தர் வேகமாக விரிவாக்கினார். பொ.ஊ.மு. 317 வாக்கில் வட இந்தியா முழுவதையும் இவரது பேரரசு கொண்டிருந்தது.[25] மௌரியப் பேரரசானது பிறகு, செலுக்கியர்-மௌரியர் போரின் போது ஒரு தியாடோச்சியும், செலூக்கியப் பேரரசை நிறுவியவருமான செலூக்கஸ் நிக்காத்தரைத் தோற்கடித்து, சிந்து ஆற்றுக்கு மேற்கே ஆப்கானித்தான் மற்றும் பலுச்சிசுத்தானம் ஆகிய நிலப்பரப்புகளைப் பெற்றது.[26][27]

மௌரியர்களுக்குக் கீழ் உட்புற மற்றும் வெளிப்புற வணிகம், விவசாயம் மற்றும் பொருளாதாரச் செயல்கள் செழித்தன. தெற்கு ஆசியா முழுவதும் பரவின. ஓர் ஒருமைப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான நிதி, நிர்வாக மற்றும் பாதுகாப்பு அமைப்பின் உருவாக்கம் காரணமாகச் செழித்தன. மௌரிய அரசமரபானது பாடலிபுத்திரத்திலிருந்து, தக்சசீலம் வரை பெரும் தலைநெடுஞ்சாலைக்கான ஒரு முன்னோடியைக் கட்டமைத்தது.[28] கலிங்கப் போருக்குப் பிறகு அசோகருக்குக் கீழ் பேரரசானது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால மையப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டிருந்தது. அசோகர் பௌத்தத்தைத் தழுவியதும், பௌத்தத் தூதர்களுக்கு ஆதரவளித்ததும், பௌத்தமானது இலங்கை, வடமேற்கு இந்தியா, மற்றும் நடு ஆசியாவுக்கு விரிவடைவதற்குக் காரணமானது.[29]

மௌரியக் காலத்தின் போது, தெற்காசியாவின் மக்கள் தொகையானது 1.5 கோடி முதல் 3 கோடி வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.[30] கலை, கட்டடக்கலை, கல்வெட்டுக்கள் மற்றும் உருவாக்கப்பட்ட நூல்கள்[6] ஆகியவற்றில் வழக்கத்திற்கு மீறிய உருவாக்கத்தால் இப்பேரரசின் காலமானது குறிப்பிடப்படுகிறது. ஆனால், கங்கைச் சமவெளியில் சாதி நிறுவப்பட்டது, இந்தியாவின் முதன்மையான இந்தோ ஆரிய மொழிகள் பேசும் பகுதிகளில் பெண்கள் உரிமை குறைந்தது ஆகியவற்றுக்கும் இக்காலம் குறிப்பிடப்படுகிறது.[31] தொல்லியல் ரீதியாகத் தெற்காசியாவில் மௌரியரின் ஆட்சிக் காலமானது வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் காலத்தின் கீழ் வருகிறது. அர்த்தசாஸ்திரமும்,[32] அசோகரின் கல்வெட்டுகளும் மௌரியக் காலம் குறித்த முதன்மையான எழுத்துப் பதியப்பட்ட ஆதாரங்கள் ஆகும். இந்தியாவின் தேசியச் சின்னமாகச் சாரநாத்தில் உள்ள சிங்கத் தூபி உள்ளது.

பெயர்க் காரணம் தொகு

மௌரியா என்ற பெயரானது அசோகரின் கல்வெட்டுகளிலோ அல்லது மெகஸ்தெனஸின் இண்டிகா போன்ற சமகாலக் கிரேக்க நூல்களிலோ காணப்படவில்லை. ஆனால் பின்வரும் ஆதாரங்களில் இது குறிப்பிடப்படுகிறது:[33]

  • உருத்ரதாமனின் (அண். பொ.ஊ.மு. 150) ஜூனாகத் பாறைக் கல்வெட்டானது சந்திரகுப்தர் மற்றும் அசோகரின் பெயர்களுக்கு முன்னாள் "மௌர்யா" என்ற முன்னொட்டைக் கொடுக்கிறது.[33]
  • புராணங்கள் (அண். பொ.ஊ. 4ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்) மௌர்யா என்ற சொல்லை ஓர் அரசமரபுப் பட்டமாகப் பயன்படுத்துகின்றன.[33]
  • பௌத்த நூல்கள் சந்திரகுப்தர் சாக்கியர்களின் "மோரியா" இனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றன. கௌதம புத்தரும் இந்தச் சாக்கியப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தான்.[33]
  • சைன நூல்கள் சந்திரகுப்தரை மயில்களைக் கவனித்துக் கொள்ளும் ஓர் அரச குலப் பொறுப்பாளரின் (மயூர-போசகர்) மகன் என்று குறிப்பிடுகின்றன.[33]
  • சங்க இலக்கியமும் இவர்களை 'மோரியர்' என்று குறிப்பிடுகிறது. நந்தர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது.[34]
  • பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குந்தளக் கல்வெட்டானது (பந்தனிக்கே பட்டணம், வடக்கு மைசூர்) அப்பகுதியை ஆண்ட அரசமரபுகளில் ஒன்றாக, கால வரிசைப்படி மௌர்ய்யா என்ற பெயரைக் குறிப்பிடுகிறது.[35]

சில அறிஞர்களின் கூற்றுப்படி, காரவேலரின் ஹாத்திகும்பா கல்வெட்டானது (பொ.ஊ.மு. 2ஆம் - 1ஆம் நூற்றாண்டு) மௌரியப் பேரரசின் சகாப்தத்தை முரிய காலா (மௌரிய சகாப்தம்) என்று குறிப்பிடுகிறது.[36] எனினும், இது விவாதத்திற்குரியதாக உள்ளது. கல்வெட்டாளர் தினேஷ்சந்திர சர்கார் போன்ற பிற அறிஞர்கள் இந்த வரிகளை முக்கிய-கலா ("முதன்மையான கலை") என்று வாசிக்கின்றனர்.[37]

பௌத்தப் பாரம்பரியப் படி, மௌரிய மன்னர்களின் மூதாதையர்கள் மயில்கள் (பாளி மொழியில் மோரா) அதிகமாக இருந்த ஒரு பகுதியில் குடியமர்ந்தனர். எனவே, அவர்கள் "மோரியர்கள்" என்று அறியப்பட்டனர். இதன் பொருள் "மயில்களின் இடத்தைச் சேர்ந்தவர்கள்" என்பதாகும். மற்றொரு பௌத்த நூலின் படி, இந்த மூதாதையர்கள் மோரிய-நகரா ("மோரிய-நகரம்") என்று அழைக்கப்பட்ட ஒரு நகரத்தைக் கட்டமைத்தனர். ஏனெனில், நகரமானது "மயில்களின் கழுத்தைப் போன்ற வண்ணமுடைய செங்கற்களால்" கட்டப்பட்டது.[38]

பௌத்த மற்றும் சைன நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மயில்களுடனான இந்த அரசமரபின் தொடர்பானது தொல்லியல் சான்றுகள் மூலம் வலுவூட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நந்தன்கர்க்கில் உள்ள அசோகரின் தூண் மற்றும் சாஞ்சியின் பெரிய தூயில் உள்ள ஏராளமான சிற்பங்கள் ஆகியவற்றில் மயில்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நவீன அறிஞர்கள் இந்த அரசமரபின் சின்னமாக மயில் இருந்திருக்கலாம் என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றனர்.[39]

துந்தி-ராஜா (முத்ரா ராக்ஷஸம் மற்றும் விஷ்ணு புராணத்தின் ஒரு 18ஆம் நூற்றாண்டு விளக்க உரையாளர்) போன்ற சில பிற்கால அறிஞர்கள் "மௌரியா" என்ற சொல்லானது முரா என்ற பெயரில் இருந்து வந்தது என்று குறிப்பிடுகின்றனர். முரா என்பவர் முதல் மௌரிய மன்னரின் தாய் என்றும் குறிப்பிடுகிறார். எனினும், புராணங்களே முரா என்ற பெயரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. நந்தர் மற்றும் மௌரிய அரசமரபுகளுக்கு இடையிலான தொடர்பு பற்றிக் குறிப்பிடவில்லை.[40] துந்தி ராஜரின் இந்த விளக்கமானது அவரே சொந்தமாக உருவாக்கியது போல் உள்ளது: சமஸ்கிருத விதிகளின் படி, முரா (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: முரா) என்ற பெண் பெயரானது "மௌரேயா" என்று தருவிக்கப்படும். "மௌரியா" என்ற சொல்லானது ஆண் பால் பெயரான "முராவில்" இருந்து மட்டுமே தருவிக்கப்பட இயலும்.[41]

வரலாறு தொகு

நிறுவப்படுதல் தொகு

மௌரியப் பேரரசுக்கு முன்னர் நந்தப் பேரரசானது பெரும்பாலான இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்டது. மகாஜனபாதங்களை வென்றதன் காரணமாக நந்தப் பேரரசானது ஒரு பெரிய, இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான சக்தி வாய்ந்த பேரரசாகத் திகழ்ந்தது. பல புராணங்களின் படி, சாணக்கியர் நந்தப் பேரரசின் தலைநகரமான மகத நாட்டின் பாடலிபுத்திரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு நந்தர்களிடம் ஒரு மந்திரியாகப் பணியாற்றினர். எனினும், நந்த அரசமரபின் பேரரசரான தன நந்தரிடம் அலெக்சாந்தரின் படையெடுப்புப் பற்றிய தகவலைச் சாணக்கியர் தெரிவித்த போது, சாணக்கியரைத் தன நந்தர் இகழ்ந்தார். சாணக்கியர் பழிவாங்குவதற்கும், நந்தப் பேரரசை அழிப்பேன் என்றும் சபதம் எடுத்தார்[42]. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சாணக்கியர் தப்பித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் தக்சசீலத்துக்குச் சென்றார். தக்சசீலம் ஒரு முக்கியமான கல்வி மையமாக இருந்தது. அங்கு ஆசிரியராகப் பணியாற்றச் சாணக்கியர் சென்றார். அவரது பயணத்தின் போது, ஒரு நேரத்தில் ஒரு கள யுத்தத்தைப் போன்ற ஒரு நாட்டுப்புற விளையாட்டை சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். அச்சிறுவர்களில் ஒருவர் தான் சந்திரகுப்தர். இளம் சந்திரகுப்தரைக் கண்ட சாணக்கியர் மதிப்புணர்வு கொண்டார். ஆட்சி செய்யத் தகுதி வாய்ந்த அரசருக்கான தகுதிகள் அவரிடம் இருப்பதாகக் கண்டார்.

அதே நேரத்தில், பேரரசர் அலெக்சாந்தர் தனது இந்தியப் படையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். பஞ்சாப்புக்குள் நுழைந்தார். பியாஸ் ஆற்றங்கரையில் இவரது இராணுவமானது கிளர்ச்சியில் ஈடுபட்டது. மற்றுமொரு இராணுவத்தை எதிர்கொள்ளும் நிலை இருந்ததால், மேற்கொண்டு கிழக்கு நோக்கி முன்னேறுவதற்கு மறுத்தது. அலெக்சாந்தர் பாபிலோனுக்குத் திரும்பினார். தன்னுடைய துருப்புகளில் பெரும்பாலானவர்களைச் சிந்து ஆற்றுக்கு மேற்கே நிலைப்படுத்தினார். பொ.ஊ.மு. 323இல் பாபிலோனில் அலெக்சாந்தர் இறந்து சிறிது காலத்திலேயே, அவரது பேரரசு அவரது தளபதிகளால் தலைமை தாங்கப்பட்ட சுதந்திரமான இராச்சியங்களாக சிதறுண்டது.[43]

மௌரியப் பேரரசானது சந்திரகுப்த மௌரியர் மற்றும் அவரது வழிகாட்டி சாணக்கியரின் தலைமைத்துவத்தின் கீழ் மகதப் பகுதியில் நிறுவப்பட்டது. சந்திரகுப்தரைத் தக்சசீலத்திற்குச் சாணக்கியர் அழைத்துச் சென்றார். அரசு மற்றும் நிர்வாகம் குறித்து அவருக்குப் பயிற்சி அளித்தார். தனது இராணுவத்திற்கு ஆட்களைத் திரட்டினார். அலெக்சாந்தரின் பேரரசை எதிர்த்து வந்து யௌதேயர்கள் போன்ற உள்ளூர் இராணுவக் குடியரசுகளைச் சந்திரகுப்தர் இணைத்தார். இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஒரு முக்கியமான பிராந்திய சக்தியாக மௌரிய இராணுவமானது சீக்கிரமே உருவானது. மாசிடோனியர்களால் நிறுவப்பட்ட சத்ரப்புகளை, பிறகு மௌரிய இராணுவமானது வென்றது.[44] பண்டைக்கால கிரேக்க வரலாற்றாளர்களான நியர்ச்சுசு, ஒனேசிக்துரியுசு மற்றும் அரித்தோபோலுசு ஆகியோர் மௌரியப் பேரரசு குறித்து ஏராளமான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளனர்.[45] கிரேக்கத் தளபதிகளான உதேமுசு மற்றும் பெயிதொன் ஆகியோர் பொ.ஊ.மு. 317 வரை சிந்து சமவெளியை ஆண்டு வந்தனர். பிறகு சந்திரகுப்த மௌரியர் தனது ஆலோசகர் சாணக்கியரின் உதவியுடன் போரிட்டு கிரேக்க ஆளுநர்களைத் துரத்தி அடித்தார். மகதத்தில் உருவாக்கப்பட்ட தனது புதிய அரியணையின் கீழ் சிந்து சமவெளியை இறுதியாகக் கொண்டு வந்தார்.[25]

சந்திரகுப்த மௌரியரின் முன்னோர்கள் குறித்த தகவலானது மர்மமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது. ஒரு பக்கம், விசாகதத்தர் எழுதிய நாடகமான முத்ரா ராக்ஷஸம் (இராட்சசனின் முத்திரை மோதிரம் - மகதத்தின் பிரதம மந்திரி இராக்ஷஸர் ஆவார்) போன்ற குறிப்பிடத்தக்க அளவிலான பண்டைக்கால இந்திய நூல்கள் இவர் அரச குல முன்னோரைக் கொண்டிருந்தார் என்று விளக்குகிறது. நந்தர் குடும்பத்துடன் கூட இவரைத் தொடர்புபடுத்துகின்றன. தொடக்க கால பௌத்த நூல்கள், மகாபரினிப்பன சுட்டா ஆகியவற்றில் மௌரியர்கள் என்று அறியப்பட்ட ஒரு சத்திரிய இனமானது குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மேற்கொண்ட வரலாற்றுச் சான்றுகள் இல்லாமல் எந்த ஒரு முடிவையும் எடுப்பது என்பது கடினமானதாக உள்ளது. சந்திரகுப்தர் முதன் முதலில் கிரேக்க நூல்களில் "சந்திரகோட்டோசு" என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ஓர் இளைஞனாக இவர் அலெக்சாந்தரைச் சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.[46] சாணக்கியர் நந்த மன்னனைச் சந்தித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. நந்த மன்னனைச் சாணக்கியர் கோபத்திற்கு உள்ளாக்கினர். பிறகு, மயிரிழையில் உயிர் தப்பினார்.[47]

நந்தப் பேரரசை வெல்லுதல் தொகு

மௌரியப் பேரரசின் நிலப்பரப்பு வளர்ச்சி
பொ.ஊ.மு. 600 மற்றும் பொ.ஊ.மு. 150க்கு இடையில் மகதம் மற்றும் மௌரியப் பேரரசின் நிலப்பரப்பு. இதில் நந்தப் பேரரசை (பொ.ஊ.மு. 321) ஆட்சியில் இருந்து சந்திரகுப்தர் தூக்கி எறிந்தது, செலூக்கியப் பேரரசிடமிருந்து கைப்பற்றியது, தெற்கு நோக்கிய விரிவாக்கம் (பொ.ஊ.மு. 273க்கு முன்னர்) மற்றும் அசோகர் கலிங்கத்தை (பொ.ஊ.மு. 261) வென்றது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.[3]
அதே இயங்கு படமானது குல்கே மற்றும் ரோதெர்முன்ட் ஆகியோரின் மாற்றங்களின் படி காட்சிப்படுத்தப்படுகிறது. எர்மன் குல்கே மற்றும் தியேத்மர் ரோதெர்முன்ட் ஆகியோர் அசோகரின் பேரரசானது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கி இருக்கவில்லை என்றும், அப்பகுதிகள் தன்னாட்சி கொண்ட பழங்குடியினங்களால் கட்டுப்படுத்தப்பட்டன என்றும் நம்புகின்றனர்.[48]

வரலாற்று ரீதியாக நந்தப் பேரரசுக்கு எதிரான சந்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து நம்பகமான தகவல்கள் கிடைக்கப் பெறுவதில்லை. நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புராணங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன. பௌத்த, சைன மற்றும் இந்து நூல்கள் மகதமானது நந்த அரசமரபால் ஆட்சி செய்யப்பட்டது என்று குறிப்பிடுகின்றன. சாணக்கியரின் வழிகாட்டுதலில் சந்திரகுப்தர் நந்தப் பேரரசை வென்றார் என்று குறிப்பிடுகின்றன.[49][50][51] சந்திரகுப்தர் மற்றும் சாணக்கியரின் இராணுவமானது முதலில் நந்தப் பேரரசின் வெளிப்புற நிலப்பரப்புகளைக் கைப்பற்றியது. இறுதியாக நந்தப் பேரரசின் தலைநகரமான பாடலிபுத்திரத்தை முற்றுகையிட்டது. பௌத்த நூல்களில் குறிப்பிடப்படும் எளிதான வெற்றிக்கு மாறாக, இந்து மற்றும் சைன நூல்களில் போரானது கடுமையாகச் சண்டையிடப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், நந்த அரசமரபானது ஒரு சக்தி வாய்ந்த மற்றும் நன்றாகப் பயிற்சி அளிக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டிருந்தது.[52][50]

பௌத்த மகாவம்ச திகா மற்றும் சைன பரிசிசுதபர்வன் ஆகிய நூல்கள் சந்திரகுப்தரின் இராணுவமானது நந்தத் தலைநகரைத் தாக்கியது வெற்றிகரமாக அமையவில்லை என்று பதிவிட்டுள்ளன.[53] சந்திரகுப்தரும், சாணக்கியரும் பிறகு நந்தப் பேரரசின் எல்லையில் ஒரு படையெடுப்பைத் தொடங்கினர். நந்தத் தலைநகரத்தை நோக்கித் தாங்கள் வரும் வழியில் பல்வேறு நிலப்பரப்புகளைப் படிப்படியாக வென்றனர்.[54] பிறகு வெல்லப்பட்ட நிலப்பரப்புகளில் காவல் படையினரை நிறுத்தியதன் மூலம் தங்கள் அணுகுமுறையைத் திருத்தினர். இறுதியாக நந்தத் தலைநகரான பாடலிபுத்திரத்தை முற்றுகையிட்டனர். அங்கு தன நந்தர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.[55][56] முத்ரா ராக்ஷஸ நாடகத்தில் இந்த வெற்றியானது புனையப்பட்டுள்ளது. சாணக்ய-சந்திரகுப்தப் புராணங்களின் மற்ற பதிப்புகளில் இல்லாத கதைகளும் இதில் உள்ளன. இந்த வேறுபாடு காரணமாகத் தாமசு டிரவுட்மன் இந்த நூலின் பெரும்பகுதியானது புனைவு அல்லது புராணம் என்றும், எந்த வரலாற்று அடிப்படையும் இல்லை என்றும் பரிந்துரைக்கிறார்.[57] இராதா குமுத் முகர்ஜியும் அதே போல முத்ரா ராக்ஷஸ நாடகத்தை வரலாற்று அடிப்படை இல்லாதது என்று கருதுகிறார்.[58]

இந்தப் புராணங்கள் நந்த மன்னர் தோற்கடிக்கப்பட்டார் என்று குறிப்பிடுகின்றன. சில நூல்களின் படி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். அதே நேரத்தில், பௌத்த நூல்கள் இவர் கொல்லப்பட்டார் என்று குறிப்பிடுகின்றன.[59] தன நந்தர் தோற்கடிக்கப்பட்ட பிறகு சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவினார்.[60]

சந்திரகுப்த மௌரியர் தொகு

 
மௌரியர்களின் தலைநகரமான பாடலிபுத்திரம். கும்ரகர் தளத்தில் தூண்களுடைய மண்டபத்தின் சிதிலங்கள்.
 
பாடலிபுத்திரத்தின் புலந்தி பக் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாடலிபுத்திரத் தலைநகரம். ஆண்டு அண். பொ.ஊ.மு. 4ஆம் - பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு.

பொ.ஊ.மு. 323இல் அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிறகு, பொ.ஊ.மு. 305இல் சந்திரகுப்தர் சிந்து சமவெளி மற்றும் வடமேற்கு இந்தியாவிலிருந்த சத்ரப்புகளைக் கைப்பற்றுவதற்கு ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கினார்.[61] அலெக்சாந்தரின் எஞ்சிய படைகள் தோற்றோடச் செய்யப்பட்டு, மேற்கு நோக்கித் திரும்பிய போது, செலூக்கஸ் நிக்காத்தர் இந்த நிலப்பரப்புகளைத் தற்காப்பதற்காகப் போரிட்டார். பண்டைக்கால நூல்களிலிருந்து இந்தப் படையெடுப்புகள் குறித்துப் பெரும்பாலான தகவல்கள் அறியப்படவில்லை. செலூக்கஸ் தோற்கடிக்கப்பட்டார். ஆப்கானித்தானின் மலைகள் நிறைந்த பகுதிகளுக்குப் பின் வாங்கினார்.[62]

பொ.ஊ.மு. 303இல் இரு ஆட்சியாளர்களும் ஓர் அமைதி ஒப்பந்தத்தை அமைத்தனர். இதில் ஒரு திருமண பந்தமும் அடங்கும். இதன் விதிகளின் கீழ் பரோபமிசதாய் (கம்போஜம் மற்றும் காந்தாரம்) மற்றும் அரச்சோசியா (காந்தாரம்) மற்றும் கெத்ரோசியா (பலுச்சிசுத்தானம்) ஆகிய சத்ரப்புகளைச் சந்திரகுப்தர் பெற்றார். செலூக்கஸ் 500 போர் யானைகளைப் பெற்றார். பொ.ஊ.மு. 301ஆம் ஆண்டு நடந்த இப்சுசு யுத்தத்தில் மேற்கு எலனிய மன்னர்களுக்கு எதிரான செலூக்கஸின் வெற்றியில் இந்த யானைப்படையானது ஒரு முக்கியமான பங்கை ஆற்றியது. தூதரக உறவுகள் நிறுவப்பட்டன. வரலாற்றாளர் மெகஸ்தெனஸ், தெய்மகோசு மற்றும் தியோனைசியசு போன்ற ஏராளமான கிரேக்கர்கள் மௌரிய அரசவையில் தங்கியிருந்தனர்.[63]

சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் இருந்த கிரேக்கத் தூதுவர்களில் ஒரு குறிப்பிடத்தக்கவர் மெகஸ்தெனஸ் ஆவார்.[64] மௌரியப் பேரரசு குறித்த தகவல்களுக்கு ஒரு முதன்மையான இலக்கிய ஆதாரமாக இவரது நூலான இண்டிகா விளங்குகிறது. அர்ரியனின் கூற்றுப்படி, தூதுவர் மெகஸ்தெனஸ் (அண். பொ.ஊ.மு. 350 - அண். பொ.ஊ.மு. 290) அரச்சோசியாவில் வாழ்ந்தார். பாடலிபுத்திரத்திற்குப் பயணித்தார். [65]மௌரிய சமூகத்தை ஒரு சுதந்திரத்தை விரும்பும் சமூகமாக மெகஸ்தெனஸ் விளக்கியிருந்தது, அதன் மீது படையெடுப்பதைத் தவிர்ப்பதற்குச் செலூக்கஸுக்கு ஒரு காரணமாக இருந்தது. எனினும், படையெடுத்திருந்தாலும் அங்கு வெற்றி பெற முடியாது என்பதே செலுக்கஸின் முடிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிந்தைய ஆண்டுகளில் செலூக்குஸுக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், திரும்பி வந்த பயணிகளின் இதே போன்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மௌரியப் பேரரசுடன் தூதரக உறவுகளைப் பேணி வந்தனர்.[61]

சந்திரகுப்தர் ஒரு வலிமையான மையப்படுத்தப்பட்ட அரசை, நிர்வாகத்துடன் பாடலிபுத்திரத்தில் நிறுவினார். மெகஸ்தெனஸின் கூற்றுப்படி, பாடலிபுத்திரமானது "64 வாயில்கள் மற்றும் 570 பாதுகாப்புக் கோபுரங்களைக் கொண்ட ஒரு மரத்தாலான மதில்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது". அயேலியன் என்ற வரலாற்றாளர், மெகஸ்தெனஸைப் போல் விவரிக்காமல், பாடலிபுத்திரத்தைக் குறிப்பிடாமலும் இருந்தாலும், இந்திய அரண்மனைகளை பாரசீகத்தின் சூசா அல்லது எகபடனாவுடன் ஒப்பிடும் போது பேரழகுடன் இருந்ததாக விளக்கியுள்ளார்.[66] அக்காலப் பாரசீக நகரங்களுடன் பாடலிபுத்திர நகரத்தின் கட்டடக்கலையானது பல்வேறு ஒற்றுமைகளைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது.[67]

சந்திரகுப்தரின் மகனான பிந்துசாரர் மௌரியப் பேரரசின் ஆட்சியைத் தென்னிந்தியாவை நோக்கி விரிவாக்கினார். புகழ்பெற்ற சங்க காலத் தமிழ்ப் புலவரான மாமூலனார் தக்காணப் பீடபூமிக்குத் தெற்கே இருந்த தமிழ்நாட்டை உள்ளடக்கியிருந்த பகுதிகள், எவ்வாறு கர்நாடகத்தைச் சேர்ந்த துருப்புகளைப் பயன்படுத்தி மௌரிய இராணுவத்தால் படையெடுக்கப்பட்டன என்பதை விளக்கியுள்ளார். வடுகர் (தமிழ்நாட்டுக்கு உடனடி வடக்கேயுள்ள ஆந்திர-கர்நாடகப் பகுதிகளில் வாழும் மக்கள்) மௌரிய இராணுவத்தின் முன்வரிசைப் படையை அமைத்தனர் எனக் குறிப்பிடுகிறார்.[34][68] தெய்மச்சுசு என்று பெயரிடப்பட்ட ஒரு கிரேக்கத் தூதரையும் தனது அரசவையில் சந்திரகுப்தர் கொண்டிருந்தார்.[69] சந்திரகுப்த மௌரியர் ஒட்டு மொத்த இந்தியாவையும் அடிபணிய வைத்தார் என்று புளூட்டாக் குறிப்பிடுகிறார். வரலாற்றாளர் ஜஸ்டினும் சந்திரகுப்த மௌரியர் "இந்தியாவை உடைமையாகக் கொண்டுள்ளார்" என்று கவனித்து விவரித்துள்ளார். இந்தத் தகவல்களுக்குத் தமிழ் சங்ககால இலக்கியங்கள் வலுவூட்டுகின்றன. அவற்றில் தற்போதைய தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் போடியில் குன்றில் தங்களது தென்னிந்தியக் கூட்டாளிகளுடன் மௌரியப் படையெடுப்பானது நடைபெற்றதையும், அவர்களது எதிரிகள் தோற்கடிக்கப்பட்டதையும் குறிப்பிடுகின்றன.[70][71]

சந்திரகுப்தர் தனது அரியணையைத் துறந்தார். சைன ஆசிரியரான பத்திரபாகு முனிவரைப் பின்பற்றினார்.[72][73][74] பல ஆண்டுகளுக்குச் சரவணபெலகுளாவில் ஒரு துறவியாகச் சந்திரகுப்தர் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. பிறகு, சைனப் பழக்கமான சல்லேகனையின் படி உணவு உண்ணாமல் இருந்து இறந்தார்.[75]

பிந்துசாரர் தொகு

 
மௌரியப் பேரரசின் ஒரு கர்ஷப்பண மதிப்புடைய ஒரு வெள்ளி நாணயம். பிந்துசார மௌரியரின் காலம், சுமார் பொ.ஊ.மு. 297 - பொ.ஊ.மு. 272, பாடலிபுத்திரப் பட்டறை. முன்பக்கம்: சூரியனுடன் கூடிய குறியீடுகள். பின்பக்கம்: குறியீடு. அளவு: 14 x 11 மில்லி மீட்டர். எடை: 3.4 கிராம்.

மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியரின் மகனாகப் பிந்துசாரர் பிறந்தார். பல்வேறு புராணங்கள் மற்றும் மகாவம்சம் உள்ளிட்ட பல நூல்களில் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.[76][full citation needed] தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ("பிந்துசாரோ") போன்ற பௌத்த நூல்கள் இதைச் சுட்டிக் காட்டுகின்றன. 12ஆம் நூற்றாண்டு சைன எழுத்தாளர் ஹேமச்சந்திரனின் பரிசிஸ்த-பர்வான் நூலில் பிந்துசாரரின் தாயின் பெயர் தூர்தரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[77] சில கிரேக்க நூல்களிலும் இவரது பெயரை "அமித்ரோச்சதேசு" அல்லது அதன் மாறுபட்ட வடிவங்களாகக் குறிப்பிடுகின்றன.[78][79]

வரலாற்றாளர் உபிந்தர் சிங் பிந்துசாரர் அரியணைக்குக் பொ.ஊ.மு. 297 வாக்கில் வந்தார் என்று மதிப்பிடுகிறார்.[68] வெறும் 22 வயதேயான பிந்துசாரர் தற்போதைய வடக்கு, நடு மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளுடன், ஆப்கானித்தானின் சில பகுதிகள் மற்றும் பலுச்சிசுத்தானம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய பேரரசைப் பெற்றார். பிந்துசாரர் இந்தப் பேரரசை இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு, தற்போதைய கருநாடகம் வரை விரிவாக்கினார். மௌரியப் பேரரசின் கீழ் 16 அரசுகளைக் கொண்டு வந்தார். இவ்வாறாகக் கிட்டத்தட்ட அனைத்து இந்தியத் தீபகற்பப் பகுதியையும் கொண்டு வந்தார். இரண்டு கடல்களுக்கு இடைப்பட்ட நிலத்தை இவர் வென்றார் என்று கூறப்பட்டது. அதாவது, வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலுக்கு இடைப்பட்ட தீபகற்பப் பகுதியை வென்றார் என்பதாகும். நட்புறவு கொண்ட தமிழ் இராச்சியங்களான மன்னர் இளஞ்சேட்சென்னியால் ஆளப்பட்ட சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் ஆகியோரின் நிலப்பரப்புகளைப் பிந்துசாரர் வெல்லவில்லை. இந்த அரசுகள் தவிர்த்து, பிந்துசாரரின் பேரரசின் பகுதியாக இல்லாத இந்தியாவில் இருந்த ஒரே ஒரு இராச்சியம் கலிங்கம் (தற்கால ஒடிசா) ஆகும்.[80] கலிங்கமானது பின்னர் இவரது மகன் அசோகரால் வெல்லப்பட்டது. தன் தந்தையின் ஆட்சியின் போது, உஜ்ஜைனின் ஆளுநராக அசோகர் சேவையாற்றினார். இது அந்தப் பட்டணத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.[81][82]

பிந்துசாரரின் வாழ்க்கையானது ஆவணப்படுத்தப்படவில்லை. இவரது தந்தை சந்திரகுப்தர் அல்லது இவரது மகன் அசோகர் ஆகியோரின் வாழ்வும் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. இவரது ஆட்சியின் போது சாணக்கியர் தொடர்ந்து பிரதம மந்திரியாகச் சேவையாற்றினார். இந்தியாவிற்கு வருகை புரிந்த நடுக்கால திபெத்திய அறிஞரான தரநாதர், "16 இராச்சியங்களின் உயர்குடியினர் மற்றும் மன்னர்களை அழிக்கவும், கிழக்கு மற்றும் மேற்குப் பெருங்கடல்களுக்கு இடையில் இருந்த நிலப்பரப்பின் முழுமையான எசமானராக இவ்வாறாக உருவாவதற்கும்" பிந்துசாரருக்குச் சாணக்கியர் உதவி புரிந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.[83] இவரது ஆட்சியின் போது தக்சசீலத்தின் குடிமக்கள் இரண்டு முறை கிளர்ச்சியில் ஈடுபட்டனர். முதல் கிளர்ச்சிக்குக் காரணம், இவரது மூத்த மகன் சுசிமாவின் நல்முறையில் நடக்காத நிர்வாகம் ஆகும். இரண்டாவது கிளர்ச்சிக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், பிந்துசாரரால் தனது வாழ்நாளில் இந்த இரண்டாவது கிளர்ச்சியை அடக்க இயலவில்லை. பிந்துசாரின் இறப்பிற்குப் பிறகு அசோகரால் இந்தக் கிளர்ச்சி நொறுக்கப்பட்டது.[84]

எலனிய உலகத்துடன் பிந்துசாரர் நட்பு கொண்ட தூதரக உறவுகளைப் பேணி வந்தார். தெய்மச்சுசு என்பவர் செலூக்கியப் பேரரசர் முதலாம் அந்தியோசூஸ் சோத்தரின் தூதுவராகப் பிந்துசாரரின் அரசவையில் இருந்தார்.[85] பலிப்போத்ராவின் (பாடலிபுத்திரம், மௌரியத் தலைநகரம்) மன்னர் இலம்புலுசு என்கிற ஒரு கிரேக்க எழுத்தாளரை வரவேற்றார் என்று தியோதோருசு குறிப்பிட்டுள்ளார். இந்த மன்னர் பொதுவாகப் பிந்துசாரர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்.[85] எகிப்திய மன்னரான பிலதெல்புசு இந்தியாவிற்கு தியோனைசியசு என்று பெயர் கொண்ட ஒரு தூதுவரை அனுப்பினார் என்று பிளினி குறிப்பிடுகிறார்.[86][87] சைலேந்திர நாத் சென் என்ற வரலாற்றாளர் இது பிந்துசாரின் ஆட்சியின் போது நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது என்கிறார்.[85]

தனது தந்தை சந்திரகுப்தரைப் (பிற்காலத்தில் சைன சமயத்திற்கு மதம் மாறினார்) போல் இல்லாமல் பிந்துசாரர் ஆசீவகப் பிரிவின் நம்பிக்கையைக் கொண்டிருந்தார். பிந்துசாரரின் குருவான பிங்கலவத்சர் (ஜனசனர்) என்பவர் ஆசீவகப் பிரிவைச் சேர்ந்த ஒரு பிராமணர் ஆவார்.[88] பிந்துசாரரின் மனைவி இராணி சுபத்ரங்கியும் (இராணி தர்மா/அக்கமகேசி) ஒரு பிராமணர் ஆவார்.[89] அவர் சம்பாவைச் (தற்காலப் பகல்பூர் மாவட்டம்) சேர்ந்த ஓர் ஆசீவகப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். பிராமண மடங்களுக்கு (பிராமண-பட்டோ) ஏராளமான நன்கொடையைப் பிந்துசாரர் வழங்கினார் என்று குறிப்பிடப்படுகிறது.[90]

பிந்துசாரர் பொ.ஊ.மு. 270களில் இறந்தார் என்று வரலாற்றுச் சான்றுகள் பரிந்துரைக்கின்றன. பொ.ஊ.மு. 273 வாக்கில் பிந்துசாரர் இறந்தார் என்று உபிந்தர் சிங் குறிப்பிடுகிறார்.[68] பொ.ஊ.மு. 274 வாக்கில் இவர் இறந்தார் என்று அலைன் டேனியலோ நம்புகிறார்.[83] இவர் பொ.ஊ.மு. 273 - பொ.ஊ.மு. 272 வாக்கில் இறந்தார் என்று சைலேந்திர நாத் சென் நம்புகிறார். இவரது இறப்பிற்குப் பிறகு 4 ஆண்டுகள் வாரிசுப் போராட்டம் நடைபெற்றது என்று அவர் குறிப்பிடுகிறார். இதற்குப் பிறகு இவரது மகன் அசோகர் பொ.ஊ.மு. 269 - பொ.ஊ.மு. 268இல் பேரரசரானார்.[85] 28 ஆண்டுகளுக்குப் பிந்துசாரர் ஆட்சி செய்தார் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது.[91] சந்திரகுப்தருக்கு பின் வந்த ஆட்சியாளராக "பத்ரசாரர்" என்பவரைக் குறிப்பிடும் வாயு புராணமானது அவர் 25 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார் என்று குறிப்படுகிறது.[92]

அசோகர் தொகு

 
அசோகரின் சிங்கத் தூபி, சாரநாத், அண். பொ.ஊ.மு. 250.
 
வைசாலியில் உள்ள அசோகரின் தூண்.
 
அசோகரின் 6வது தூண் கல்வெட்டின் (பொ.ஊ.மு. 238) உடைந்த துண்டு. பிராமி எழுத்து முறையில் மணற்கல்லில் எழுதப்பட்டுள்ளது. தற்போதைய இருக்குமிடம் பிரித்தானிய அருங்காட்சியகம்.

ஓர் இளம் இளவரசராக அசோகர் (பொ.ஊ.மு. 272 - பொ.ஊ.மு. 232) உஜ்ஜைன் மற்றும் தக்சசீலத்தில் கிளர்ச்சிகளை நொறுக்கிய ஒரு செயல் ஆற்றல் நிறைந்த தளபதியாகத் திகழ்ந்தார். ஒரு முடியரசராக இவர் குறிக்கோள்கள் உடையவராகவும், ஆக்ரோஷமானவராகவும் திகழ்ந்தார். தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் பேரரசின் முதன்மை நிலையை மீண்டும் நிறுவினார். ஆனா, கலிங்கத்தை இவர் வென்றது (பொ.ஊ.மு. 262 - பொ.ஊ.மு. 261) இவரது வாழ்வின் திருப்பு முனையான நிகழ்வாகத் திகழ்ந்தது. ஒரு பெரிய பகுதியில் சக்தியை நிலநிறுத்துவதற்காகக் கோட்டைகளைக் கட்டுவதற்கும், அதை உடைமையாகத் தற்காத்து வைத்திருப்பதற்கும் கலிங்கத்தை இவர் பயன்படுத்தினார்.[93] வீரர்கள் மற்றும் குடிமக்களின் பிரிவைக் கொண்ட கலிங்கப் படைகளை வெல்வதில் அசோகரின் இராணுவம் வெற்றியடைந்தது. இந்த ஆக்ரோஷமான சண்டையில் 1,00,000 வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அசோகரின் சொந்த வீரர்களான 10,000 பேருக்கும் மேற்பட்டோரும் அடங்குவர். போரின் அழிவு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த தாக்கங்கள் ஆகியவற்றால் அதிகமான பாதிப்புக்கு இலட்சக் கணக்கான மக்கள் ஆளக்கப்பட்டனர். இந்த அழிவைத் தானே கண்டபோது அசோகருக்கு வருத்தம் ஏற்பட்டது. கலிங்கத்தை இணைக்கும் நிகழ்வானது நிறைவேற்றப்பட்ட போதும், அசோகர் புத்தரின் போதனைகளைப் பின்பற்ற ஆரம்பித்தார். போர் மற்றும் வன்முறையைத் தவிர்த்தார். ஆசியா முழுவதும் பயணிக்க சமயத் தூதுவர்களை அனுப்பினார். மற்ற நாடுகளுக்குப் பௌத்தத்தைப் பரப்பினார். தன்னுடைய சொந்த தர்மக் கருத்துக்களையும் கூட இவர் பரப்பினார்.[சான்று தேவை]

வேட்டை மற்றும் வன்முறை நிறைந்த விளையாட்டு நடவடிக்கைகளைத் தடை செய்தது, ஒப்பந்த அடிப்படையிலான மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட பணி முறையை நிறுத்தியது ஆகியவற்றின் மூலம் அகிம்சைக் கொள்கைகளை அசோகர் செயல்படுத்தினார். போரால் பாதிக்கப்பட்ட கலிங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடினமான பணி மற்றும் கொத்தடிமை முறைக்குக் கட்டாயப்படுத்திப் பயன்படுத்தப்பட்டனர். ஒரு பெரிய மற்றும் சக்தி வாய்ந்த இராணுவத்தை இவர் பேணி வந்த போதும், அமைதியை நீடித்திருக்கச் செய்யவும், அதிகாரத்தைப் பேணுவதற்கும் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவி இருந்த அரசுகளுடன் நட்பு ரீதியிலான உறவுகளை அசோகர் விரிவாக்கம் செய்தார். பௌத்தத் தூதுக் குழுக்களுக்கு ஆதரவளித்தார். நாடு முழுவதும் ஒரு பெரிய பொதுப்பணிக் கட்டடங்களைக் கட்டும் நடவடிக்கையை மேற்கொண்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலான அமைதி, ஒருமைப்பாடு மற்றும் செழிப்பு ஆகியவை இந்திய வரலாற்றில் மிகுந்த வெற்றிகரமான மற்றும் புகழ்பெற்ற முடியரசர்களில் ஒருவராக அசோகரை ஆக்கியது. நவீன இந்தியாவில் அகத்தூண்டுதல் ஏற்படுத்தும் ஒரு குறைபாடற்ற நபராக இவர் இன்றும் திகழ்கிறார்.[சான்று தேவை]

பாறைகளில் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுக்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் காணப்படுகின்றன. மேற்கே ஆப்கானித்தான் முதல் தெற்கே ஆந்திரா (சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்) வரையிலும் அசோகரின் கல்வெட்டுக்கள், இவரது கொள்கைகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுகின்றன. பெரும்பாலும், பிராகிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், இரண்டு கல்வெட்டுக்கள் கிரேக்க மொழியிலும், ஒரு கல்வெட்டு கிரேக்கம் மற்றும் அரமேயம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. இவரது பேரரசின் எல்லைப்புறப் பகுதிகளில் கிரேக்கர்கள், காம்போஜர்கள் மற்றும் காந்தாரர்கள் இருக்கிறார்கள் என அசோகரின் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. நடு நிலக் கடல் பகுதி வரையிலும் மேற்கே கிரேக்க ஆட்சியாளர்களுக்குத் தூதுவர்களை அசோகர் அனுப்பினார் என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன. எலனிய உலகத்தில் அப்போதிருந்த ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் துல்லியமாக, அம்தியோகோ (அந்தியோச்சுசு), துலமயா (தாலமி), அம்திகினி (அந்திகோனோசு), மகா (மகசு) மற்றும் அலிகசுதரோ (அலெக்சாந்தர்) ஆகியோரை அசோகரின் போதனைகளைப் பெற்றவர்களாகத் துல்லியமாகக் குறிப்பிடுகின்றன.[சான்று தேவை] இந்தக் கல்வெட்டுக்கள் இந்த ஆட்சியாளர்களின் நிலப்பரப்பை "600 யோஜனங்கள் தாண்டி" (ஒரு யோஜனை என்பது சுமார் 11.2 கிலோ மீட்டர்) இருப்பதாகத் துல்லியமாகக் குறிப்பிடுகின்றன. இந்தியாவின் நடுப்பகுதி முதல் கிரேக்கம் வரையிலான தூரமான சுமார் 6,400 கிலோமீட்டரை இவை குறிப்பிடுகின்றன.[94]

வீழ்ச்சி தொகு

அசோகருக்குப் பிந்தைய 50 ஆண்டுகளானது பலவீனமான மன்னர்களால் ஆளப்பட்ட காலத்தைக் குறித்தது. இவருக்குப் பிறகு இவரது பேரன் தசரத மௌரியர் ஆட்சிக்கு வந்தார். அசோகருக்குப் பின் அசோகருடைய மகன்கள் யாராலும் அரியணையில் அமர இயலவில்லை. இவரது மூத்த மகனான மகிந்தன் ஒரு பௌத்தத் துறவியானார். குணாளன் பார்வையற்றவர் ஆனார். இதன் காரணமாக அவரால் அரியணை ஏற இயலவில்லை. கௌர்வகியின் மகனான திவாலன் அசோகருக்கு முன்னரே இறந்து விட்டார். இவருடைய மற்றொரு மகனான ஜலௌகர் குறித்து சிறிதளவே தகவல்கள் அறியப்படுகின்றன.

தசரதருக்குக் கீழ் பேரரசானது ஏராளமான நிலப்பரப்புகளை இழந்தது. பிறகு குணாளனின் மகனான சம்பிரதி இவற்றை மீண்டும் வென்றார். சம்பிரதிக்குப் பிறகு மௌரியர்கள் ஏராளமான நிலப்பரப்புகளை மெதுவாக இழக்க ஆரம்பித்தனர். பொ.ஊ.மு. 180இல் சத்தாதன்வன் தன் தளபதி புஷ்யமித்திர சுங்கனால் ஓர் இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கொல்லப்பட்டார். அவருக்கு வாரிசுகள் இல்லை. இவ்வாறாக, மகா மௌரியப் பேரரசானது இறுதியாக முடிவுக்கு வந்தது. சுங்கர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

அசோகருக்குப் பிறகு பதவிக்கு வந்த பலவீனமான மன்னர்கள், பேரரசானது இரண்டாகப் பிரிந்தது, பேரரசுக்குள் சில பகுதிகளின் வளர்ந்து வந்த சுதந்திரமான நிலை, எடுத்துக்காட்டாக சோபகசேனுசால் ஆளப்பட்டது, ஒரு சில நபர்களின் கைகளில் ஒட்டு மொத்த அதிகாரமும் இருந்த ஒரு கனமான தலைமை நிர்வாகம், எந்த ஒரு தேசிய உணர்வும் இல்லாது இருந்தது,[95] பேரரசின் மிகப்பெரிய பரப்பளவானது கையாள முடியாததாக அதை ஆக்கியது மற்றும் கிரேக்க பாக்திரியப் பேரரசின் படையெடுப்பு ஆகியவை இதன் வீழ்ச்சிக்குக் காரணங்களாக முன்மொழியப்படுகின்றன.

இராய் சௌதாரி போன்ற சில வரலாற்றாளர்கள் மௌரியப் பேரரசின் "இராணுவ முதுகெலும்பை" அசோகரின் அமைதி வாதமானது வலுவற்றதாக்குகிறது என்று வாதிடுகிறார். ரூமிலா தாப்பர் போன்ற மற்றவர்கள் அசோகரின் அமைதிவாதத்தின் விரிவு மற்றும் தாக்கமானது "பெரியளவுக்கு மிகைப்படுத்தப்படுகிறது" என்று பரிந்துரைக்கிறார்.[96]

சுங்க ஆட்சிக் கவிழ்ப்பு (பொ.ஊ.மு. 185) தொகு

அசோகாவதானம் போன்ற பௌத்த நூல்கள் பிரகத்ரதர் அரசியல் கொலை செய்யப்பட்டதும், சுங்கப் பேரரசு உருவாக்கப்பட்டதும் பௌத்தத்தைச் சமய ரீதியாக இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கிய ஓர் அலை போன்ற நிகழ்வுகளுக்கு வழி வகுத்ததாகவும்,[97] இந்து சமயம் புத்தெழுச்சி பெற உதவியதாகவும் குறிப்பிடுகின்றன. ஜான் மார்ஷல்[98] என்ற தொல்பொருள் ஆய்வாளர் புஷ்யமித்ர சுங்கர் இந்தக் கொடுமைப்படுத்தலுக்கு முக்கியமான காரணமாக இருந்திருப்பார் என்று குறிப்பிடுகிறார். எனினும், பிந்தைய சுங்க மன்னர்கள் பௌத்தத்திற்கு அதிகப்படியான ஆதரவை அளித்ததாகக் கருதப்படுகிறது. எட்டியென் லமோட்டே[99] மற்றும் ரூமிலா தாப்பர்[100] போன்ற பிற வரலாற்றாளர்கள் புத்த மதத்தினர் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய தொல்லியல் ஆதாரங்கள் இல்லை என்று வாதிடுகின்றனர். இந்த இடர்ப்பாடுகளின் விரிவு மற்றும் அளவு ஆகியவை மிகைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

இந்தோ கிரேக்க இராச்சியம் நிறுவப்படுதல் (பொ.ஊ.மு. 180) தொகு

மௌரியர்கள் வீழ்ச்சியடைந்த நிகழ்வானது கைபர் கணவாயைக் காவல் அற்றதாக்கியது. அலை போன்ற அயல்நாட்டுப் படையெடுப்புகள் தொடர்ந்தன. இந்த வீழ்ச்சியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கிரேக்கப் பாக்திரிய மன்னரான தெமேத்ரியசு பொ.ஊ.மு. 180 வாக்கில் தெற்கு ஆப்கானித்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் பகுதிகளை வென்றார். இந்தோ கிரேக்க நாட்டை உருவாக்கினார். சிந்து ஆற்றுக்குத் தெற்கில் இருந்த பகுதிகளில் இந்தோ கிரேக்கர்கள் தங்களது நிலப்பரப்புகளைப் பேணி வந்தனர். நடு இந்தியாவுக்குள் சிறு தாக்குதல்களை நடத்தினர். இது ஒரு நூற்றாண்டுக்கு நீடித்தது. இவர்களுக்குக் கீழ் பௌத்தமானது செழித்தது. இவர்களின் மன்னர்களில் ஒருவரான மெனாண்டர் பௌத்தத்தில் ஒரு புகழ்பெற்ற நபராக உருவானார். இவர் ஒரு புதிய தலைநகரை சகாலா என்ற பெயருடன் நிறுவினார். இதுவே தற்கால நகரமான சியால்கோட் ஆகும். எனினும், இவர்களது நிலப்பரப்பு விரிவாக்கம் மற்றும் ஆட்சியின் தாக்கம் ஆகியவை பெரும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. நாணய ஆதாரங்கள் இவர்கள் கிறித்து பிறப்பது வரை துணைக்கண்டத்தில் நிலப்பரப்புகளைத் தக்க வைத்திருந்தனர் என்று காட்டுகின்றன. சுங்கர்கள், சாதவாகனர்கள் மற்றும் கலிங்கர்கள் போன்ற உள் நாட்டுச் சக்திகளுக்கு எதிராக இவர்களது வெற்றிகளின் விரிவுத் தன்மை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. தெளிவாகத் தெரிவது யாதெனில், பொ.ஊ.மு. 70 வாக்கில் சிதிய பழங்குடியினங்கள் இந்தோ சிதிய பேரரசு என்ற பெயரைக் கொண்டு இந்தோ கிரேக்கர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டன என்பது ஆகும். அவர்கள் சிந்துப் பகுதிக்குத் தெற்கே இருந்த நிலங்கள், மதுரா பகுதி மற்றும் குசராத்து ஆகியவற்றைக் கொண்டிருந்தனர்.[சான்று தேவை]

இராணுவம் தொகு

மௌரியப் பேரரசின் இராணுவமானது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தது என மெகஸ்தெனஸ் குறிப்பிடுகிறார். அவை (i) கடற்படை (ii) இராணுவப் போக்குவரத்து (iii) காலாட் படை (iv) பெரிய கவண் விற்களைக் கொண்ட குதிரைப்படை (v) இரதப் பிரிவுகள் மற்றும் (vi) யானைப் படை ஆகியவை ஆகும்.[101]

நிர்வாகம் தொகு

 
மௌரிய சகாப்த சிறு சிலைகள்

பேரரசானது நான்கு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதன் ஏகாதிபத்தியத் தலைநகரமானது பாடலிபுத்திரத்தில் அமைந்திருந்தது. அசோகரின் கல்வெட்டுகளில் இருந்து நான்கு மாகாணத் தலைநகரங்களின் பெயர்களான தோசாலி (கிழக்கு), உஜ்ஜைன் (மேற்கு), கனககிரி (தெற்கு) மற்றும் தக்சசீலம் (வடக்கு) ஆகியவை தெரிய வருகின்றன. மாகாண நிர்வாகத்தின் தலைமைத்துவத்தில் குமாரர் (அரச குல இளவரசர்) இருந்தார். மாகாணங்களை மன்னரின் பிரதிநிதியாக இவர் நிர்வகித்தார். குமாரருக்கு உதவுவதற்காக மகாமத்தியர்களும், மந்திரிகளின் அவையும் இருந்தது. ஏகாதிபத்திய அளவில் இந்த நிர்வாக அமைப்பானது பேரரசர் மற்றும் அவரது மந்திரி பரிசத்தால் (மந்திரிகளின் அவை) பிரதிபலிக்கப்பட்டது.[சான்று தேவை] ஒரு நன்றாக வளர்ச்சியடைந்த நாணயம் அச்சிடும் அமைப்பை மௌரியர்கள் நிறுவினர். நாணயங்கள் பெரும்பாலும் வெள்ளி மற்றும் செப்பில் இருந்து உருவாக்கப்பட்டன. சில தங்க நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன. நாணயங்கள் பரவலாக வணிகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன.[102]

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ள விரிவான அரசமைப்பின் படி, பேரரசின் நிர்வாகமானது இருந்தது என வரலாற்றாளர்கள் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். நகர சுகாதாரம் முதல் பன்னாட்டு வணிகம் வரை அனைத்தையும் ஒரு நுணுக்கங்கள் உடைய பொதுப்பணி சேவையானது நிர்வகித்தது. இரும்புக் காலத்தின் போது உலகில் இருந்த மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்று பேரரசின் விரிவாக்கத்தையும், தற்காப்பையும் சாத்தியமாக்கியது என்று தோன்றுகிறது.[103] மெகஸ்தெனெஸ், பேரரசிடம் 6 இலட்சம் காலாட்படை, 30,000 குதிரைப்படை, 8,000 இரதங்கள் மற்றும் 9,000 போர் யானைகள், இது தவிர ஆதரவளிப்பவர்கள் மற்றும் பணியாளர்கள் என பேரரசானது கொண்டிருந்தது எனக் குறிப்பிடுகிறார்.[104] உட்புற மற்றும் வெளிப்புறப் பாதுகாப்புத் தேவைகளுக்காக ஒரு விரிவான வேவு அமைப்பானது தகவல்களைச் சேகரித்தது. வன்முறை நிறைந்த போர்முறை மற்றும் விரிவாக்கத்தை அசோகர் கை விட்டு இருந்த போதும், பேரரசைப் பாதுகாக்கவும், மேற்கு மற்றும் தெற்காசியாவின் நிலைத்தன்மைக்கும் இந்தப் பெரிய இராணுவத்தை அசோகர் தொடர்ந்து பேணி வந்தார்.[சான்று தேவை] மௌரியப் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் பெருமளவிலான பகுதிகள் இருந்த போதும், அவற்றில் பல பகுதிகள் அணுக இயலாதவையாகவும், பேரரசின் தலைநகரத்தில் இருந்து தொலை தூரத்தில் அமைந்திருந்தாலும், தகவல் பரவல் மற்றும் ஏகாதிபத்தியச் செய்திகள் அனுப்பப்படுதல் ஆகியவற்றின் தாக்கமானது வரம்பு இடப்பட்டதாகவே இருந்தது.[105]

பேரரசின் பொருளாதாரமானது "ஒரு பொதுவுடமையாக்கப்பட்ட முடியரசு", "கிட்டத்தட்ட ஒரு அரச பொதுவுடமைவாதம்" மற்றும் உலகின் முதல் பொது நல அரசு என்று குறிப்பிடப்படுகிறது.[106] மௌரிய அமைப்பின் கீழ் நிலத்தைத் தனியார் வைத்திருக்கும் நிலை அறவே இல்லை. ஏனெனில் அனைத்து நிலமும் மன்னரால் உடைமையாகக் கொண்டிருக்கப்பட்டிருந்தது. உழைக்கும் வர்க்கத்தினர் மன்னருக்குத் திறை செலுத்தினர். இதற்கு மாறாக பேரரசர், உழைக்கும் வர்க்கத்தினருக்கு விவசாயப் பொருட்கள், விலங்குகள், வித்துகள், கருவிகள், பொதுக் கட்டமைப்பு மற்றும் இடர்பாட்டுக் காலங்களில் உணவைக் கிடங்கில் சேமித்து வைத்தல் ஆகியவற்றைச் செய்தார்.[106]

உள்ளூர் அரசாங்கம் தொகு

அர்த்தசாஸ்திரமும், மெகஸ்தெனெஸின் பதிவுகளும் மௌரியப் பேரரசானது அதன் நகரங்களை நிர்வகிப்பதற்காக உருவாக்கிய நுணுக்க விவரங்களையுடைய நகர அமைப்பைப் பற்றி, பாடலிபுத்திரத்தை விளக்கும் போது குறிப்பிடுகின்றன. நகர அவையானது 30 ஆணையர்களைக் கொண்டிருந்தது. அது ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இவை நகரத்தை நிர்வகித்தன. முதல் குழுவானது சம்பளங்களை நிர்ணயித்தும், பொருட்களைக் கொடுப்பதையும் கவனித்துக் கொண்டது. இரண்டாவது குழுவானது அயல்நாட்டு முக்கியஸ்தர்கள், பயணிகள் மற்றும் வணிகர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்தது. மூன்றாவது குழுவானது நூல் பதிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ பதிவேடுகளைக் கவனித்துக்கொண்டது. நான்காவது குழுவானது உற்பத்திப் பொருட்கள் மற்றும் பொருட்களின் விற்பனையைக் கவனித்துக் கொண்டது. ஐந்தாவது குழுவானது வணிகத்தை ஒழுங்குபடுத்துதல், உரிமம் வழங்குதல், எடைகள் மற்றும் அளவீடுகளைச் சரிபார்த்தல் ஆகியவற்றைச் செய்தது. ஆறாவது குழுவானது விற்பனை வரிகளை வசூலித்தது. தக்சசீலம் போன்ற சில நகரங்கள் தங்களது சொந்த நாணயங்களை வெளியிடும் தன்னாட்சியைக் கொண்டிருந்தன. சாலைகளைப் பராமரித்தல், சாலைகள், பொதுக் கட்டடங்கள், சந்தைகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் போன்ற பொது நலப் பணிகளை கவனித்துக் கொள்ள நகர அவையானது அதிகாரிகளைக் கொண்டிருந்தது.[107] கிராமத்தின் அதிகாரப்பூர்வத் தலைவராக கிராமிகரும், பட்டணங்களில் நகரிகரும் பணி புரிந்தனர்.[108] நகர அவையானது சில நீதித்துறை அதிகாரங்களையும் கொண்டிருந்தது. மௌரிய நிர்வாகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாக இருந்தது. வணிகர்கள், விவசாயிகள், கொல்லர்கள், குயவர்கள், தச்சர்கள் மற்றும் மேலும் கால்நடைகள் போன்ற மௌரியப் பேரரசில் இருந்த பல்வேறுபட்ட மக்களின் தரநிலைகளை வரிசைப்படுத்தும் பொறுப்பானது கிராம அதிகாரிகள் (கிராமிகர்கள்) மற்றும் நகர அதிகாரிகள் (நகரிகர்கள்) ஆகியோரிடம், பெரும்பாலும் வரி விதிக்கும் தேவைகளுக்காக வழங்கப்பட்டிருந்தது.[109] இந்தப் பணிகள் சாதிகளாக ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தன. இது இந்திய சமூகத்தின் ஒரு அம்சமாக உள்ளது. இன்றும் இந்திய அரசியலில் இந்நிகழ்வு தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

பொருளாதாரம் தொகு

 
மௌரிய சிறு சிலை, ஆண்டு பொ.ஊ.மு. 2ஆம் நூற்றாண்டு.

தெற்காசியாவில் முதல் முறையாக அரசியல் ஒற்றுமை மற்றும் இராணுவப் பாதுகாப்பானது அதிகப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்தியுடன் கூடிய, ஒரு பொதுவான பொருளாதார அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வணிகம் மற்றும் தொழிலுக்கு அனுமதியளித்தது. இதற்கு முந்தைய சூழ்நிலையான நூற்றுக்கணக்கான இராச்சியங்கள், பல சிறிய இராணுவங்கள், சக்தி வாய்ந்த உள்ளூர்த் தலைவர்கள் மற்றும் இரு பிரிவினருக்கும் அழிவை ஏற்படுத்திய போர்முறை ஆகியவை ஒரு கட்டுப்பாடான மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கு வழிவிட்டன. வரி மற்றும் பயிர் வசூலிக்கும் பிராந்திய மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட சுமைகளிலிருந்து விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. அர்த்தசாஸ்திரத்தில் அறிவுறுத்தப்பட்ட கொள்கைகளின் படி ஒரு தேசிய மயமாக்கப்பட்ட நிர்வாகம் மற்றும், கண்டிப்பான ஆனால் நியாயமான வரி அமைப்பிற்கு விவசாயிகள் வரி செலுத்தினர். இந்தியா முழுவதும் ஒரு ஒற்றைப் பணம், பிராந்திய ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒரு வலைப்பின்னல் அமைப்பு, மற்றும் வணிகர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினருக்கு நீதி மற்றும் பாதுகாப்பை வழங்கிய ஒரு பொதுப்பணி சேவை ஆகியவற்றைச் சந்திரகுப்த மௌரியர் நிறுவினார். கொள்ளைக்காரர்கள், பிராந்தியத் தனியார் இராணுவங்கள் மற்றும் சிறு பகுதிகளில் தங்களது சொந்த முதன்மை நிலையை நிலை நிறுத்த முயன்ற சக்தி வாய்ந்த தலைவர்கள் ஆகியோரின் பல குழுக்களை மௌரிய இராணுவமானது துடைத்து அழித்தது. வரி வசூலிப்பதில் குழுக்கள் இருந்த போதிலும், உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அவர்கள் பல பொதுப்பணித் திட்டங்கள் மற்றும் நீர் வழிகளுக்கு ஆதரவளித்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் ஒற்றுமை மற்றும் உள்நாட்டு அமைதி காரணமாக இந்தியாவில் உள்நாட்டு வணிகமானது பெருமளவுக்கு விரிவடைந்தது.[சான்று தேவை]

இந்தோ கிரேக்க நட்புறவு ஒப்பந்தத்தின் கீழ் அசோகரின் ஆட்சியின் போது அயல்நாட்டு வணிக வலைப்பின்னல் அமைப்பானது விரிவடைந்தது. தற்கால பாக்கித்தான் மற்றும் ஆப்கானித்தான் எல்லையில் உள்ள கைபர் கணவாயானது வியூக ரீதியில் முக்கியமான வணிக வழியாகவும், வெளிப்புற உலகத்துடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழியாகவும் உருவானது. மேற்காசியாவில் இருந்த கிரேக்க அரசுகளும், எலனிய இராச்சியங்களும் இந்தியாவின் முக்கியமான வணிகக் கூட்டாளிகளாக உருவாயின. தென்கிழக்காசியாவுக்குள் மலாய் தீபகற்பத்தின் வழியாகவும் வணிகமானது விரிவடைந்தது. பட்டுப் பொருட்கள் மற்றும் ஜவுளிகள், நறுமணப் பொருட்கள் மற்றும் இந்திய உணவுகள் ஆகியவை இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களாக இருந்தன. மௌரியப் பேரரசுடனான விரிவடைந்த வணிகம் காரணமாக வெளிப்புற உலகமானது புதிய அறிவியல் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அறிந்தது. ஆயிரக்கணக்கான சாலைகள், நீர்வழிகள், கால்வாய்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற பொதுப்பணிக் கட்டமைப்புகளைக் கட்டுவதற்கும் அசோகர் ஆதரவளித்தார். வரி விதிப்பு மற்றும் பயிர் வசூலிப்பு உள்ளிட்ட பல நிலை கொண்ட கடினமான நிர்வாக வழிமுறைகளை எளிதாக்கியது, பேரரசு முழுவதும் உற்பத்தி மற்றும் பொருளாதாரச் செயல்பாடு அதிகரிப்புக்கு உதவி புரிந்தது.[சான்று தேவை]

பல வழிகளில் மௌரியப் பேரரசின் பொருளாதாரச் சூழ்நிலையானது பல நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய உரோமைப் பேரரசுடன் ஒப்பிடக் கூடியதாக இருந்தது. விரிவான வணிகத் தொடர்புகள் மற்றும் கூட்டு நிறுவனங்களை ஒத்த அமைப்புகளை இரு பேரரசுகளுமே கொண்டிருந்தன. பெரும்பாலும் அரசால் செயல்படுத்தப்பட்ட பொது நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்புகளை உரோம் கொண்டிருந்த அதே நேரத்தில், மௌரிய இந்தியாவானது ஏராளமான தனியார் வணிக அமைப்புகளைக் கொண்டிருந்தது. இந்த அமைப்புகள் முழுமையாகத் தனியார் வணிகத்திற்காகவே நிலை பெற்றிருந்தன. மௌரியப் பேரரசுக்கு முந்தைய காலத்திலேயே இவை வளர்ச்சி அடைந்திருந்தன.[110]

மௌரியப் பேரரசின் நாணய முறை

சமயம் தொகு

பேரரசின் காலம் முழுவதும் பண்டைய வேத சமயமானது ஒரு முக்கிய சமயமாகத் திகழ்ந்தது.[112] மௌரியர்கள் பண்டைய வேத சமயத்திற்கு ஆதரவளித்தனர். சைனம் மற்றும் பௌத்தத்திற்கும் ஆதரவு அளித்தனர். சிறிய சமயப் பிரிவுகளான ஆசீவகம் போன்றவையும் ஆதரவைப் பெற்றன. மௌரிய காலத்தின் போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இந்து நூல்கள் எழுதப்பட்டன.[113]

 
பத்திரபாகு குகை, சரவணபெலகுளா. இங்கு தான் சந்திரகுப்த மௌரியர் இறுதி வரை உணவு உண்ணாமல் இருந்து இறந்தார்.

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சைன நூல், முடி துறந்த பிறகு சைன சமயத்திற்குச் சந்திரகுப்த மௌரியர் மாறினார் என்று குறிப்பிடுகிறது. தனது அரியணை மற்றும் உலக வாழ்வைத் துறந்த பிறகு, அலைந்து திரிந்த ஒரு சைனத் துறவிகளின் குழுவினருடன் அவர் இணைந்தார். தனது இறுதி நாட்களில் கடுமையான, ஆனால் சுய தூய்மைப்படுத்தும் சைனப் பழக்கமான சல்லேகனையைச் (உணவு உண்ணாமல் இறப்பது) சந்திரகுப்த மௌரியர் பின்பற்றினார். கருநாடகத்தின் சரவணபெலகுளாவில் இறந்தார்.[114][74][115][73] அசோகரின் பேரனான சம்பிரதியும் சைன சமயத்திற்கு ஆதரவளித்தார். சுகத்தின் போன்ற சைனத் துறவிகளின் போதனைகளால் சம்பிரதி தாக்கம் பெற்றார். இந்தியா முழுவதும் 1.25 இலட்சம் சைனக் கோயில்களை அவர் கட்டியதாகக் கூறப்படுகிறது.[116] அகமதாபாத், விரம்கம், உஜ்ஜைன் மற்றும் பலிதனா ஆகிய இடங்களில் இன்றும் அவை காணப்படுகின்றன.[சான்று தேவை] அசோகரைப் போலவே சம்பிரதியும் கிரேக்கம், பாரசீகம் மற்றும் மத்திய கிழக்கிற்கு சைன மதத்தைப் பரப்புவதற்காக தூதுவர்களையும், போதனையாளர்களையும் அனுப்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்று வரை இதற்கு ஆதரவளிக்கக்கூடிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை.[117][118]

 
தூபி, இது புத்தரோடு தொடர்புடைய பொருட்களைக் கொண்டிருந்தது. இது உண்மையில் மௌரியப் பேரரசால் கட்டப்பட்ட சாஞ்சி வளாகத்தின் நடுப்பகுதியில் அமைந்திருந்தது. ஆனால், இதைச் சுற்றியுள்ள சிறு தூண்களின் வரிசையானது சுங்கர்களால் கட்டப்பட்டது. அலங்காரமுடைய வாயிலானது சாதவாகனர் காலத்தில் கட்டப்பட்டது.
 
தர்மராஜிக தூபி, தக்சசீலம், தற்போதைய பாக்கித்தான். இதுவும் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

சமந்தபசதிகம் மற்றும் மகாவம்சம் ஆகிய பௌத்த நூல்கள் பிந்துசாரர் பண்டைய வேத சமயத்தைப் பின்பற்றினார் என்று பரிந்துரைக்கின்றன. பிந்துசாரரை "பிராமண பட்டோ" ("பிராமணர்களின் துறவி") என்று அழைக்கின்றன.[119][120]

பேரரசின் மையமாக இருந்த மகதப் பகுதியானது பௌத்தத்தின் பிறப்பிடமாகவும் திகழ்ந்தது. அசோகர் தொடக்கத்தில் பண்டைய வேத சமயத்தைப் பின்பற்றினார்.[சான்று தேவை] பிறகு பௌத்தத்திற்கு மதம் மாறினார். கலிங்கப் போரைத் தொடர்ந்து இவர் விரிவாக்கம் மற்றும் ஆக்ரோஷத்தைக் கைவிட்டார். அர்த்தசாஸ்திரத்தில் கடுமையாகக் கட்டளையிடப்பட்டிருந்த படையின் பயன்பாடு, முனைப்பான சட்ட திட்டங்கள், வரி வசூலிப்பதற்கான இரக்கமற்ற நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான செயல்கள் ஆகியவற்றைக் கைவிட்டார். தன் மகன் மகிந்தன் மற்றும் மகள் சங்கமித்தை ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஒரு பௌத்த சமயப் பரப்பும் குழுவை இலங்கைக்கு அசோகர் அனுப்பினார். இலங்கையின் மன்னரான திசா பௌத்தக் கொள்கைகள் மீது மிகுந்த மதிப்பு கொண்டார். தானே பௌத்த மதத்திற்கு மாறினார். தன்னுடைய அரசின் சமயமாகப் பௌத்தத்தை ஆக்கினார். மேற்கு ஆசியா, கிரேக்கம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பல பௌத்த சமயப் பரப்பும் குழுக்களை அசோகர் அனுப்பினார். மடாலயங்கள் மற்றும் பள்ளிகள் கட்டுவதற்கும், பேரரசு முழுவதும் பௌத்த இலக்கியங்களைப் பதிப்பிக்கவும் திட்டங்களைத் தொடங்கினார். சாஞ்சி மற்றும் மகாபோதிக் கோயில் போன்ற 84,000 கோயில்களை இந்தியா முழுவதும் இவர் கட்டினார் என நம்பப்படுகிறது. ஆப்கானித்தான் மற்றும் தாய்லாந்தில் பௌத்த மதத்தின் பொது மதிப்பை அதிகரித்தார். இந்தியா மற்றும் தெற்காசியாவின் பௌத்தப் பிரிவினர் தனது தலைநகருக்கு அருகில் மூன்றாம் பௌத்த மாநாட்டைக் கூட்டுவதற்கு அசோகர் உதவினார். பௌத்த மதத்தின் பெரும்பாலான சீர்திருத்தம் மற்றும் விரிவாக்கத்தை இந்த அவை மேற்கொண்டது. இந்திய வணிகர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினர். மௌரியப் பேரரசு முழுவதும் இம்மதத்தைப் பரப்புவதில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றினர்.[121]

சமூகம் தொகு

மௌரியர் காலத்தின் போது தெற்காசியாவின் மக்கள் தொகையானது 1.5 முதல் 3 கோடி வரை மதிப்பிடப்படுகிறது.[122] டிம் டைசன் மௌரியப் பேரரசின் காலமானது கங்கைச் சமவெளியில் குடியமர்ந்த இந்தோ ஆரிய மக்களிடையே சாதி நிலை நிறுத்தப்படுவதைக் கண்டது என்கிறார். வளர்ந்து வந்த சாதியமைப்புக்குள் பழங்குடியின மக்கள் இணைக்கப்பட்டனர். இந்தியாவின் இந்தோ ஆரிய மொழி பேசும் பகுதிகளில் பெண்களின் உரிமை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார். எனினும், இந்த "இது துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்த மக்களைப் பாதிக்கவில்லை" என்கிறார்.[123]

கட்டடக்கலையில் எஞ்சியவை தொகு

 
பராபர் குகைகளில் மௌரியக் கட்டடக்கலை. லோம ரிஷி குகை. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு.

இக்காலத்தின் மிகச் சிறந்த நினைவுச் சின்னமானது சந்திர குப்த மௌரியரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, பாலிபுத்ராவின் (பாட்னாவின் தற்போதைய கும்ஹரார்) பழைய அரண்மனை ஆகும். இந்த அரண்மனையின் எஞ்சிய பாகங்கள் அகழ்வாய்வு மூலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது பல கட்டடங்களின் ஒரு குழு எனக் கருதப்படுகிறது. இதில் மிக முக்கியமானது ஏராளமான தூண்களால் தாங்கப்பட்டுள்ள மண்டபம் ஆகும். இந்தத் தூண்கள் மரங்களால் ஆக்கப்பட்டிருந்தன. தூண்கள் வழக்கமான வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக மண்டபத்தை ஒரு குறிப்பிடத்தக்க சிறிய சதுர இடைவெளிகளாகப் பிரித்து இருந்தன. இதில் உள்ள தூண்களின் எண்ணிக்கை 80 ஆகும். ஒவ்வொன்றும் 7 மீட்டர் உயரமுடையவையாக இருந்தன. இதை நேரில் கண்ட மெகஸ்தெனஸ் இந்த அரண்மனையானது முதன்மையாக மரங்களால் கட்டப்பட்டுள்ளதாகவும், பாரசீகத்தின் சூசா மற்றும் எகபடனாவில் உள்ள அரண்மனைகளைக் காட்டிலும் அழகிலும், நேர்த்தியிலும் மிஞ்சியதாகத் தான் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தங்க மூலம் பூசப்பட்ட இதன் தூண்கள் தங்கக் கொடிகள் மற்றும் வெள்ளிப் பறவை உருவங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்தக் கட்டடங்களுடன் ஒரு விரிவான பூங்காவும், அதில் மீன் குளங்களும், ஏராளமான வகைப்பட்ட அலங்கார மரங்களும், அழகுக்காக வளர்க்கப்படும் புதர்களும் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.[124][சான்று தேவை] சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும் இக்காலத்தைச் சேர்ந்த அரண்மனை அமைத்தலின் வகையைக் குறிப்பிடுகிறது. கல் தூண்களின் பிந்தைய எஞ்சிய பாகங்கள் ஒரு உருண்டையான நீண்ட தூண்களாகவும், மிருதுவான மேற்புறத்தையும் கொண்டிருந்தன. இதில் ஒரு தூண் முழுவதுமாக சேதம் அடையாமல் கண்டறியப்பட்டுள்ளது. தொடக்க கால மரத்தூண்களை எடுத்துவிட்டு கல்தூண்களைக் கொண்டு மாற்றியதற்கு அசோகர் காரணமாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.[சான்று தேவை]

 
ஒரு தொடக்க கால தூபி. இதன் விட்டம் 6 மீட்டர் ஆகும். இதன் பக்கவாட்டில் குடையானது கீழே விழுந்துள்ளது. சக்பட், சக்தராவுக்கு அருகில். மௌரிய ஆட்சியைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு.

அசோகரின் ஆட்சிக் காலத்தின் போது கல் வேலைப்பாடானது ஒரு மிகுந்த வேற்றுமை கொண்ட பணியாக மாறி இருந்தது. கம்பீரமாக, தனியாக நிற்கும் தூண்கள், தூபி வேலிகள், சிம்மாசனங்கள் மற்றும் பிற பிரம்மாண்டமான அமைப்புகளை உள்ளடக்கியதாக அது இருந்தது. கற்கலையின் சிறிய துண்டுகள் கூட பளபளப்பாகத் தெரியும் அளவுக்கு மிகுந்த மெருகூட்டப்பட்ட நிலைக்கு இந்தக் காலத்தின் போது கற்களின் பயன்பாடானது மிகுந்த நேர்த்தியை அடைந்திருந்தது. இந்தக் காலம் பௌத்தக் கட்டடக்கலையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஏராளமான தூபிகளைக் கட்டியதற்கு அசோகர் காரணமாக இருந்துள்ளார். இவை பெரிய மாட விதானங்கள் ஆகும். புத்தரின் குறியீடுகளை இவை தாங்கி இருந்தன. இதில் மிக முக்கியமானவை சாஞ்சி, புத்தகயை மற்றும் பர்குட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன என்று கருதப்படுகிறது. அமராவதி தூபியும் இதில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. மௌரிய கட்டடக்கலையின் மிகுந்த பரவலான எடுத்துக்காட்டுகளாக இருப்பவை அசோகரின் தூண்களும், கல்வெட்டுகளும் ஆகும். இவை பெரும்பாலும் மிக நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இது போன்ற கல் வேலைப்பாடுகள் 40க்கும் மேல் பரவியுள்ளன.[125][சான்று தேவை]

மௌரியர்களின் அரசமரபின் சின்னமாக மயில் இருந்தது. நந்தன்கர்க் மற்றும் சாஞ்சி தூபி ஆகிய இடங்களில் உள்ள அசோகரின் தூண்களில் சித்தரிக்கப்பட்ட படி இது இருந்தது.[39]

சாஞ்சியில் உள்ள மௌரிய கட்டட அமைப்புகள் மற்றும் அலங்காரங்கள் (பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு)
 
மௌரியர்களின் கீழ் சாஞ்சியில் அமைக்கப்பட்ட பெரிய தூபியின் தோராயமான மீள் கட்டமைப்பு.

இயற்கை வரலாறு தொகு

 
இரு யக்சர்கள், ஒரு வேளை பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இவை பாடலிபுத்திரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரு பிராமி எழுத்துமுறை பொறிப்புகளானவை   ... (யகே..., இதன் பொருள் "யக்சர்..." என்று தொடங்குகின்றன. இவை பிந்தைய காலத்தைச் சேர்ந்ததாகும், அண். பொ.ஊ.மு. 2ஆம் நூற்றாண்டுக் காலம், குசானர் காலம்.[127]

மௌரிய அரசமரபின் காலத்தின் போது இந்தியாவில் விலங்குகளைப் பாதுகாப்பது என்பது வலியுறுத்தப்பட்டது. மௌரியப் பேரரசானது இந்தியாவில் ஓர் ஒன்றுபடுத்தப்பட்ட அரசியல் தன்மையைக் கொடுத்த முதல் பேரரசாக இருந்தது. காடுகள் மற்றும் அங்கு வாழ்ந்த உயிரினங்களை நோக்கிய மௌரியர்களின் மனப்பான்மையானது ஆர்வத்துடன் கூடியதாக இருந்தது.[128]

மௌரியர்கள் காடுகளை முதலில் மூலப்பொருட்களாகக் கண்டனர். இவர்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான காட்டு பொருளானது யானை ஆகும். இராணுவ வலிமையானது அக்காலத்தில் குதிரைகள் மற்றும் வீரர்களை மட்டும் சார்ந்திருக்காமல், போர் யானைகளையும் சார்ந்திருந்தது. அலெக்சாந்தரின் முந்தைய தளபதிகளில் ஒருவரான செலூக்கஸ் தோற்கடிக்கப்பட்டதில் இவை ஒரு முக்கியப் பங்காற்றின. மௌரியர்கள் யானைகள் காட்டிலிருந்து பெறப்படுவதைக் காத்துக்கொள்ள விரும்பினர். ஒரு யானையை வளர்ப்பதை விட, காட்டு யானைகளைப் பிடித்து, அடக்கி, அதைப் பயிற்றுவிப்பதானது செலவு குறைந்ததாகவும், குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் இருந்தது. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமானது பண்டைக்கால அரசு முறையில் யானைகளின் பங்கைப் பற்றி குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் யானைக் காடுகளின் தற்காப்பாளர் போன்ற அதிகாரிகளின் பொறுப்புகளையும் தெளிவாகக் குறிப்பிட்டது.[129]

காட்டின் எல்லையில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட யானைகளுக்கான ஒரு காட்டை அவர் நிறுவ வேண்டும். காவலர்களின் துணையுடன் யானைகளைப் பாதுகாப்பதே தலைமை யானை வனத்துறையினரின் அலுவலகத்தின் பணியாக எந்த நிலப்பரப்பிலும் இருக்க வேண்டும். யானையைக் கொல்பவர் மரணத்தால் தண்டிக்கப்படலாம்.

மரங்கள் கிடைப்பதைப் பாதுகாப்பதற்கு தனி காட்டுப்பகுதிகளை உருவாக்குவதையும் மௌரியர்கள் செய்தனர். மேலும், சிங்கங்கள் மற்றும் புலிகளின் தோலுக்காகவும் தனி வனப்பகுதிகளைக் குறித்து வைத்தனர். மற்ற இடங்களில் விலங்குகளின் பாதுகாப்பாளரானவர் திருடர்கள், புலிகள் மற்றும் பிற கொன்றுண்ணிகளை ஒழிப்பதன் மூலம் வனப் பகுதியை மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்றும் பணியையும் செய்தார்.[சான்று தேவை]

வியூக அல்லது பொருளாதார ரீதியில் சில காட்டு மண்டலங்களை மௌரியர்கள் மதித்தனர். அவற்றின் மீது தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தனர். மௌரியர்கள் அனைத்து காட்டுப் பழங்குடியினரையும் நம்பிக்கையற்ற முறையில் அணுகினர். அவர்களை இலஞ்சம் மற்றும் அரசியல் பணிய வைத்தல் மூலம் கட்டுப்படுத்தினர். உணவு சேகரிப்பவர்கள் அல்லது ஆரண்யகர்கள் என்று அழைக்கப்பட்ட அவர்களில் சிலரை மௌரியர்கள் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும், விலங்குகளைப் பொறி வைத்துப் பிடிப்பதற்கும் பணியில் அமர்த்தினர். சில நேரங்களில் பதட்டம் நிறைந்ததாகவும், சண்டைகள் நிறைந்திருந்த இந்த உறவு முறையானது எவ்வாறாயினும் பெரிய பேரரசைப் பாதுகாப்பதற்கு மௌரியர்களுக்கு உதவியது.[130]

தனது ஆட்சிக் காலத்தின் பிந்தைய பகுதியில் அசோகர் பௌத்தத்தைத் தழுவிய போது தன்னுடைய நிர்வாகப் பாணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தார். விலங்குகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது மற்றும் அரச குடும்ப விலங்கு வேட்டையைக் கூட கைவிட்டது உள்ளிட்ட மாற்றங்களைக் கொண்டு வந்தார். வன உயிர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்திய மற்றும் இந்தச் சட்டங்களை தன்னுடைய கல்வெட்டுகளிலும் கூட பொறித்த வரலாற்றின் முதல் ஆட்சியாளராக[not in citation given] இவர் திகழ்கிறார். இந்தக் கல்வெட்டுகள், மன்னரின் எடுத்துக்காட்டைப் பலரும் பின்பற்றி விலங்குகளைக் கொல்வதை கைவிட்டனர் என அறிவிக்கின்றன. அவற்றில் ஒன்று பெருமையாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:[130]

எம்மன்னர் மிகச்சில விலங்குகளையே கொன்றார்.

அசோகரின் கல்வெட்டுகள் ஆட்சியாளர்களின் எண்ணத்தையே பெரும்பாலும் பிரதிபலிக்கின்றனவே தவிர, உண்மையில் நடந்த நிகழ்வுகளை அல்ல. அரச குல வேட்டையில் மான்களைக் கொல்வதற்கு 100 பணம் அபராதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, விதித்த சட்டங்களை மீறுபவர்கள் இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல், மீன் பிடித்தால் மற்றும் காடுகளுக்குத் தீ வைத்தல் ஆகிய பொதுவான குடிமக்களால் சுதந்திரமாகச் செய்யப்பட்ட செயல்கள் இந்த சட்டக் கட்டுப்பாடுகளில் இருந்து மாறுபட்ட நிலையைக் காட்டுகின்றன.[130]

எலனிய உலகுடனான தொடர்புகள் தொகு

 
மௌரிய வளையக்கல், நிற்கும் பெண் தெய்வத்தின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு பாக்கித்தான், பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு.

பேரரசு நிறுவப்பட்ட போது தொகு

எலனிய உலகுடனான தொடர்புகள் மௌரியப் பேரரசு தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சந்திரகுப்த மௌரியர் பேரரசர் அலெக்சாந்தரைச் சந்தித்தார் என்று புளூட்டாக் குறிப்பிடுகிறார். இச்சந்திப்பு வடமேற்கில் தக்சசீலத்தை ஒட்டிய பகுதியில் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது:[131]

தான் ஒரு இளைஞனாக இருந்த போது, சந்திரோகோட்டோசு அலெக்சாந்தரைத் தானே நேரில் கண்டார். தன்னை நாட்டின் எசமானர் ஆக்கிக் கொள்ளத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அலெக்சாந்தர் நூழிலையில் தவறவிட்டார் என்று இவர் பிந்தைய காலத்தில் அடிக்கடி கூறினார் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், நாட்டின் மன்னன் தனது தீய நடத்தை காரணமாக வெறுக்கப்பட்டான்.

—புளூட்டாக் 62-4[132][131]

வடமேற்கை மீண்டும் வெல்லுதல் (அண். பொ.ஊ.மு.. 317 - பொ.ஊ.மு. 316) தொகு

சந்திரகுப்தர் இறுதியாக வட மேற்கு இந்தியாவை ஆக்கிரமித்தார். இந்த நிலப்பரப்புகள் முன்னர் கிரேக்கர்களால் ஆளப்பட்டன. அங்கு இவர் அலெக்சாந்தருக்குப் (ஜஸ்டின்) பிறகு ஆள விடப்பட்டிருந்த சத்ரப்புகளுக்கு (இவை "பிரீபெக்துகள்" என்று மேற்கத்திய நூல்களில் குறிப்பிடப்படுகின்றன) எதிராகச் சண்டையிட்டார். இவர் சண்டையிட்டதில் ஊதேமுசு என்பவரும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊதேமுசு மேற்கு பஞ்சாபின் ஆட்சியாளராக, பொ.ஊ.மு. 317இல் தான் திரும்பிச் செல்லும் வரை ஆட்சி புரிந்தார். அல்லது சிந்துப் பகுதியில் இருந்த கிரேக்கக் காலனிகளின் ஆட்சியாளரான பெய்தோன் என்பவர் பாபிலோனுக்கு பொ.ஊ.மு. 316இல் திரும்பிச் செல்லும் வரை ஆட்சி செய்தார். அவருடன் சந்திரகுப்தர் போரிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை]

அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிறகு, இந்தியா அலெக்சாந்தரின் பகுதிகளை வென்றது. அடிமை முறை சுமையிலிருந்து விடுவித்துக் கொள்வது போல வென்றது. இந்த விடுதலையைத் தொடங்கி வைத்தது சந்திரகோத்தோசு. ஆனால், அவர் வெற்றிக்குப் பிறகு விடுதலையை அடிமை முறையாக மாற்றி விட்டார். அரியணையைப் பெற்ற பிறகு, அயல்நாட்டு ஆதிக்கத்தில் இருந்து எந்த மக்களை அவர் விடுவித்தாரோ, அந்த மக்களை தானே ஒடுக்க ஆரம்பித்தார்.

—ஜஸ்டின் 15. 4.12 – 13[133]

பிறகு அவர் அலெக்சாந்தரின் பகுதிகளுக்கு எதிராகப் போருக்குத் தயாரான போது, ஒரு பெரிய காட்டு யானையானது அவரிடம் சென்றது. அது தான் அடக்கப்பட்டது போல, அவரைத் தனது முதுகில் ஏற்றிக் கொண்டது. அவர் தனிச் சிறப்பான போர் வீரனாகவும், போர்த் தலைவனாகவும் உருவானார். இவ்வாறாக, அரச சக்தியைப் பெற்ற பிறகு, சொலூகோசு தனது எதிர்காலப் மேன்மைக்காகத் தயாராகிக் கொண்டிருந்த போது, சந்திரகோத்தோசு இந்தியாவைக் கொண்டிருந்தார்.

—ஜஸ்டின் 15. 4. 19[134]

செலூக்கஸுடன் சண்டையும், கூட்டணியும் (பொ.ஊ.மு. 305) தொகு

 
மௌரியப் பேரரசின் பல்வேறு அண்டை அரசுகள் உள்ளிட்ட வட மேற்கு எல்லையைக் காட்டும் வரைபடம்.

அலெக்சாந்தரின் முந்தைய பேரரசின் ஆசியப் பகுதியின் மாசிடோனிய சத்ரப்பான செலூக்கஸ் நிக்காத்தர் பாக்திரியா மற்றும் சிந்து ஆறு (அப்பியன், உரோமின் வரலாறு, சிரிய போர்கள் 55) வரை இருந்த கிழக்கு நிலப்பரப்புகளை வென்று தனது சொந்த அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார். பொ.ஊ.மு. 305இல் பேரரசர் சந்திரகுப்தருடன் ஒரு பிரச்சனையில் இவர் ஈடுபடுவது வரை இது தொடர்ந்து:

அண்டை தேசங்களுக்காக எப்போதுமே பதுங்கி இருந்து காத்துக் கொண்டிருந்த, ஆயுதமேந்துவதில் வலிமையானவரும், அவையில் இணங்கச் செய்பவருமான அவர் (செலூக்கஸ்), மெசபத்தோமியா, ஆர்மீனியா, "செலூக்கிய" கப்படோசியா, பாரசீகம், பார்த்தியா, பாக்திரியா, அரேபியா, தபௌரியா, சோக்தியா, அரசோசியா, இர்கானியா, மற்றும் பிற அண்டை மக்களான, அலெக்சாந்தரால் அடி பணிய வைக்கப்பட்டிருந்தவர்களை, சிந்து ஆறு வரை பெற்றார். அலெக்சாந்தருடையதற்கு அடுத்து ஆசியாவில் மிகுந்த விரிவான எல்லைகளைக் கொண்டதாக இவரது பேரரசு இருந்தது. பிர்கியா முதல் சிந்து ஆறு வரை இருந்த ஒட்டு மொத்த பகுதியும் செலூக்கஸினுடையதாக உடையதாக இருந்தது.

—அப்பியன், உரோமின் வரலாறு, "சிரிய போர்கள்" 55[135]

இந்தச் சண்டை குறித்து எந்த ஒரு நூலும் எஞ்சியிருக்காத போதும், இந்தியப் பேரரசருக்கு எதிராக செலூக்கஸ் மோசமாகச் செயலாற்றினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், சொலூக்கஸ் எந்த ஒரு நிலப்பரப்பையும் வெல்வதில் தோல்வி அடைந்தார். உண்மையில், அவர் தான் ஏற்கனவே கொண்டிருந்த ஏராளமான பகுதிகளைச் சரணடைய வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இருந்த போதிலும், செலூக்கஸும், சந்திரகுப்தரும் இறுதியாக ஒரு ஒப்பந்தத்தை அடைந்தனர். இசுதிராபோ என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி, பொ.ஊ.மு. 305இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப் படி, செலூக்கஸ் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிலப்பரப்புகளைச் சந்திரகுப்தரிடம் விட்டுக் கொடுத்தார். இதில் கிழக்கு ஆப்கானித்தான் மற்றும் பலுச்சிசுத்தானம் ஆகியவையும் அடங்கும்.[சான்று தேவை]

திருமண கூட்டணி தொகு

 
அயல் நாட்டவரின் சிலை. இது சாரநாத்தில் கண்டெடுக்கப்பட்டது. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு.[136] மௌரிய காலத்தில் சிந்து கங்கைச் சமவெளியில் இருந்த மேற்காசிய பகலவர்கள் அல்லது சகர்களின் உயர் குடியினரின் ஒரு உறுப்பினராக ஒரு வேளை இவர் இருந்திருக்கலாம்.[137][138][139]

பொ.ஊ.மு. 303இல் சந்திரகுப்தரும், செலூக்கஸும் ஓர் அமைதி ஒப்பந்தம் மற்றும் ஒரு திருமணக் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டனர். சந்திரகுப்தர் பரந்த நிலப்பரப்புகளைப் பெற்றார். பதிலுக்குச் செலூக்கஸுக்கு 500 போர் யானைகளைக் கொடுத்தார்.[140][141][142][143][144] இது ஓர் இராணுவச் சொத்தாகும். பொ.ஊ.மு. 301இல் இப்சுசு யுத்தத்தில் இந்த யானைகள் ஒரு தீர்க்கமான பங்கை ஆற்றின.[145] இந்த ஒப்பந்தத்துடன், மேலும் மெகஸ்தெனெஸை ஒரு தூதுவராக செலூக்கஸ் சந்திரகுப்தரிடம் அனுப்பினார். பிறகு, சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரரிடம் தெய்மகோசை அனுப்பினார். இவர்கள் பாடலிபுத்திரத்தில் (தற்கால பட்னா, பீகார்) இருந்த மௌரிய அவைக்கு வருகை புரிந்தனர். மூத்த பிளினியால் பதிவு செய்யப்பட்டுள்ள படி, பிற்காலத்தில், அசோகரின் சமகாலத்தவரான தாலமிப் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் தாலமி, மௌரிய அரசவைக்கு தியோனைசியசு என்று பெயரிடப்பட்ட ஒரு தூதுவரை அனுப்பினார்.[146][சான்று தேவை]

பெரும்பாலான அறிஞர்கள் சிந்து ஆற்றுக்கு மேற்கே பரந்த நிலப்பரப்பைச் சந்திரகுப்தர் பெற்றார் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றனர். இதில் இந்து குஃசு, தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆகியவையும் அடங்கும்.[147][148] தொல்லியல் ரீதியாக மௌரிய ஆட்சி குறித்த வலுவான குறிப்புகளான அசோகரின் கல்வெட்டுக்கள் போன்றவை தெற்கு ஆப்கானித்தானின் காந்தாரம் வரை காணப்படுகின்றன.

அவர் (செலூக்கஸ்) சிந்து ஆற்றைக் கடந்தார். இந்தியர்களின் மன்னரான சந்திரகோத்தோசுவுடன் (மௌரியர்) போரிட்டார். சந்திரகோத்தோசு நீரோடையின் கரைகளில் வாழ்ந்து வந்தார். இப்போரானது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது வரை நடந்தது. பிறகு, அவர்கள் ஒரு திருமணக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டனர்.

—அப்பியன், உரோமின் வரலாறு, சிரிய போர்கள் 55

அவருடன் (சந்திரகோத்தோசு) ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு, கிழக்கு சூழ்நிலையை சீர்ப்படுத்திய பிறகு, செலூக்கஸ் அந்திகோனுசுவுடன் போருக்குச் சென்றார்.

—ஜுனியானுசு ஜஸ்டினுசு, இஸ்தோரியம் பிலிப்பிகரம், லிப்ரி, 15. 4.15

"எபிகாமியா" திருமண ஒப்பந்தமானது கிரேக்கர்கள் மற்றும் இந்தியர்களுக்கு இடையிலான சட்டபூர்வ திருமணமானது அரசாங்கங்களுக்கு இடையில் எற்பட்டது என்பதை அடையாளப்படுத்துகிறது. எனினும், இது அரசமரபின் ஆட்சியாளர்கள் அல்லது பொதுமக்கள் அல்லது இருவருக்கும் இடையில் நடைபெற்றதா என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.[சான்று தேவை]

மேற்குக்கு பௌத்தத் தூதுக் குழுக்கள் (அண். பொ.ஊ.மு. 250) தொகு

அசோகரின் கல்வெட்டுகளில் தனது பௌத்த போதனைகளைப் பெற்றவர்களாக அக்கால எலனிய மன்னர்களை அசோகர் குறிப்பிடுகிறார். எனினும், இந்நிகழ்வு குறித்த மேற்குலக வரலாற்றுப் பதிவுகள் எதுவும் தற்போது எஞ்சியிருக்கவில்லை.

தர்மத்தின் வெற்றியானது இங்கு பெறப்பட்டது, இந்த எல்லைகளில், 600 யோசனைகள் (5,400 - 9,600 கி. மீ.) தாண்டியும் கூட, எங்கே கிரேக்க மன்னர் அந்தியோச்சுசு ஆட்சி செய்கிறாரோ அங்கும், அவரை தாண்டி நான்கு மன்னர்கள் தாலமி, அந்திகோனோசு, மகிசு மற்றும் அலெக்சாந்தர் ஆகியோர் ஆட்சி செய்கின்றனர். அங்கும் தர்மம் வெல்லப்பட்டது. தெற்கே சோழர், பாண்டியர் மற்றும் தாமிரபரணி (இலங்கை) வரை வெல்லப்பட்டதைப் போல.

அசோகர் கல்வெட்டுக்கள், 13ஆம் பாறைக் கல்வெட்டு, எஸ். தம்மிகா.[முதன்மையற்ற ஆதாரம் தேவை]

அசோகர் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு அவரவர் நிலப்பரப்புகளில் மூலிகை மருத்துவம் மேம்படுத்தப்படுவதையும் ஊக்குவித்தார்:

எங்கும் கடவுள்களால் விரும்பப்படுபவரான மன்னர் பியாதசியின் (அசோகர்) நிலப்பரப்பில் மற்றும் எல்லைகளைத் தாண்டி இருக்கும் மக்களான சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர்கள், கேரளபுத்திரர்கள், மற்றும் தாமிரபரணி வரை, மற்றும் கிரேக்க மன்னர் அந்தியோச்சுசு ஆட்சி செய்யும் இடம் வரை, மற்றும் அந்தியோச்சுசுவின் அண்டையவராக இருக்கும் மன்னர்கள் மத்தியிலும், எங்கும் கடவுள்களால் விரும்பப்படுவரான மன்னர் பியாதசி இரு வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு மருந்துகளை அளித்தார்: மனிதர்களுக்கான மருத்துவம் மற்றும் விலங்குகளுக்கான மருத்துவம். எங்கெல்லாம் மனிதர்களுக்கு அல்லது விலங்குகளுக்கு ஏற்ற மருத்துவ மூலிகைகள் கிடைக்கவில்லையோ, அவற்றை இறக்குமதி செய்து வளர்த்தேன். எங்கெல்லாம் மருத்துவ வேர்கள் அல்லது பழங்கள் கிடைக்கவில்லையோ அவற்றை இறக்குமதி செய்து வளர்த்தேன். மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக சாலைகளின் இரு பக்கவாட்டிலும் தொடர்ச்சியாக கிணறுகளைத் தோண்டினேன். சாலைகளின் இரு பக்க வாட்டிலும் மரங்களை வளர்த்தேன்.

இந்தியாவிலிருந்த கிரேக்கர்கள் பௌத்தத்தைப் பரப்பியதில் ஒரு செயல் முனைப்புடன் பெரிய பங்கை ஆற்றியதாகத் தோன்றுகிறது. அசோகரின் தூதுவர்களில் சிலரான தர்மரக்சிதா போன்றோர் பாளி நூல்களில் கிரேக்க ("யவனர்") பௌத்தத் துறவிகளுக்கு தலைமை தாங்கிச் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்த போதனைகளை பரப்புவதில் முனைப்புடன் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.(மகாவம்சம், 12[152][முதன்மையற்ற ஆதாரம் தேவை])

மௌரியப் பேரரசின் வீழ்ச்சி தொகு

மௌரியப் பேரரசின் வாரிசுரிமைச் சண்டைகளாலும்; உள்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகளாலும், பேரரசர் அசோகர் மறைந்த 50 ஆண்டுகளில், இறுதி மௌரியப் பேரரசர் பிரகத்திர மௌரியன் (ஆட்சிக் காலம்:கி மு 185 – 180) காலத்தில் மௌரியப் பேரரசு வீழ்ச்சியுற்றது.[153] கிமு 185ல் பிரகத்திர மௌரியன் காலத்தில் மௌரியப் பேரரசு, மகத நாட்டு அளவில் சுருங்கியது. சுங்க வம்சத்து புஷ்யமித்திர சுங்கன் எனும் படைத்தலைவரால், கிமு 180ல் பிரகத்திர மௌரியன் கொல்லப்பட்டார்.[154]

இந்தோ கிரேக்க நாடு நிறுவப்படுதல் (பொ.ஊ.மு. 180) தொகு

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவின் வடமேற்கில் உள்ள கைபர் கணவாய் பாதுகாப்பின்றி இருந்ததால், நடு ஆசியாவின் கிரேக்க பாக்திரியா நாட்டவர்கள், பொ.ஊ.மு. 180ல் கைபர் கணவாய் வழியாக மௌரியப் பேரரசின் வடமேற்குப் பகுதிகளை கைப்பற்றி, சகலா போன்ற புதிய நகரங்களை நிறுவினர். மன்னர் மெனாண்டர் பௌத்த சமயத்தை ஆதரித்து பின்பற்றினார். இந்தோ கிரேக்க நாட்டினர், மௌரியப் பேரரசின் தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான், பஞ்சாப், இராஜஸ்தான் பகுதிகளைக் கைப்பற்றினர்.

இலக்கியம் தொகு

இலக்கியத் துறையின் வளர்ச்சியிலும் மௌரியர் காலத்திற்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. இந்து சமயம், பௌத்தம், சமணம் என்பன சார்ந்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இந்து மத இலக்கியங்கள் சமஸ்கிருத மொழியிலும் பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பிராகிருத மொழியிலும், சமண இலக்கியங்கள் பெரும்பாலும் பாளி மொழியிலும் தோன்றியிருந்தன.

இந்துமத இலக்கியங்களின் வரிசையில் மகாபாரதம் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்க வேண்டும். பதினெண் புராணங்கள் சிலவும் இக்காலத்திலேயே தோன்றின என்பர்.

இந்திய வரலாற்றில் மிகப்பெரும் பொருளியல், அரசியல் கருத்துக்களைக் கூறும் நூலாகிய கௌடில்யரின் அர்த்தசாஸ்திரமும் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றது. அது 15 அதிகாரங்களையும் 180 உப பிரிவுகளையும் 6000 பாடல்களையும் கொண்டதாய் விளங்குகின்றது. மூன்று காண்டங்களில் வகுத்து நோக்கப்படுகின்றது.

  • 1ம் காண்டம் - அரசன் அமைச்சரவை பற்றிக் கூறுவது
  • 2ம் காண்டம் - பொருளியல் அரசியல் சட்டங்கள் பற்றிக் கூறுவது
  • 3ம் காண்டம் - மைய, மாநில ஆட்சி, போர் முறைகள், அரச தந்திரங்கள் என்பன பற்றிக் கூறுவது.

இவற்றோடு அரசனுடைய ஏகாதிபத்திய ஆட்சிக்குரிய வழியைக் கூறுவதுடன், பிராமணர்களுக்கும் உயர்ந்த சமூக அந்தஸ்தினை வழங்கும் நூலாகவும் விளங்குகின்றது.

மனுநெறி பற்றிக் கூறும் மனுதரும சாத்திரம் பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றது என்பர். இது ஆசார காண்டம், பிராயச்சித்த காண்டம், வியவகார காண்டம் எனும் 3 காண்டங்களையும் 7777 சுலோகங்களையும் கொண்டது. வர்ணாச்சிரம தர்மக் கோட்பாடு, அது சார்ந்த வாழ்க்கை முறை என்பவற்றையும் அவை சார்ந்த வாழ்க்கை முறைகளையும் வைதீக மரபின் அடிப்படையில் சட்ட ரீதியாக விளக்கும் நூலாகவே அமைகின்றது.

இவை தவிர ஜைமினியின் மீமாம்சக சூத்திரம், பாதபாதராயணரின் பிரம்ம சூத்திரம் என்பனவும், கௌதம, வசிஷ்ட், ஆபஸ்தம்ப, போதாயண தர்ம சாஸ்திரங்களும் இக் காலத்திலேயே தோற்றம் பெற்றன என்பர்.

பண்டைய இந்தியாவின் வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்யும் மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டுத் தூதுவனால் எழுதப்பட்ட இண்டிகா நூல்[155] எனும் நூலும் இக்காலத்து இலக்கியங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கதாகும். மெகஸ்தனிஸ் சந்திரகுப்த மௌரியனது அரசவையில் தங்கியிருந்து பாடலிபுத்திர நகரம், அரண்மனை, மௌரியரது ஆட்சித்திறம், இந்தியாவின் வனப்பு முதலியவற்றைத் தம் நூலில் தொகுத்திருந்தார். எனினும் இந்நூல் இன்று கிடைக்கப்பெறாமை துரதிர்ஷ்டவசமானதாகும்.

மெருதுங்காவின் விகரசிரேனியின் படி மௌரியர்கள் பொ.ஊ.மு. 312இல் ஆட்சிக்கு வந்தனர்.[156]

காலவரிசை தொகு

  • பொ.ஊ.மு. 322: நந்தப் பேரரசை சந்திரகுப்த மௌரியர் வெல்கிறார். மௌரிய அரசமரபைத் தோற்றுவிக்கிறார்.[157]
  • பொ.ஊ.மு. 317–316: இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியை சந்திரகுப்த மௌரியர் வெல்கிறார்.
  • பொ.ஊ.மு. 305–303: செலூக்கியப் பேரரசைத் தோற்கடித்ததன் மூலம் சந்திரகுப்த மௌரியர் நிலப்பரப்பைப் பெறுகிறார்.
  • பொ.ஊ.மு. 298–269: சந்திரகுப்தரின் மகனான பிந்துசாரரின் ஆட்சி. இவர் தக்காணம் மற்றும் தென்னிந்தியாவின் பகுதிகளை வெல்கிறார்.
  • பொ.ஊ.மு. 269–232: சந்திரகுப்தரின் பேரனான அசோகருக்குக் கீழ் மௌரியப் பேரரசானது அதன் உச்சத்தை அடைகிறது.
  • பொ.ஊ.மு. 261: அசோகர் கலிங்க இராச்சியத்தை வெல்கிறார்.
  • பொ.ஊ.மு. 250: அசோகர் பௌத்தத் தூபிகளைக் கட்டுகிறார். கல்வெட்டுக்களைக் கொண்ட தூண்களை எழுப்புகிறார்.
  • பொ.ஊ.மு. 184: ஒரு மௌரியத் தளபதியும், சுங்க அரசமரபைத் தோற்றுவித்தவருமான புஷ்யமித்திர சுங்கனால் கடைசிப் பேரரசரான பிரகத்ரதர் கொல்லப்படும் போது பேரரசானது வீழ்ச்சி அடைகிறது.

ஆட்சியாளர்களின் பட்டியல் தொகு

ஆட்சியாளர் ஆட்சி குறிப்புகள்
சந்திரகுப்த மௌரியர் பொ.ஊ.மு. 322–297 முதல் ஒன்றிணைந்த இந்தியப் பேரரசின் நிறுவனர்.
பிந்துசாரர்   பொ.ஊ.மு. 297–273 தன் அயல்நாட்டுத் தூதரக உறவுகளுக்காக அறியப்படுபவர். விதர்பா கிளர்ச்சியை நொறுக்கியவர்.
அசோகர்   பொ.ஊ.மு. 268–232 இந்த அரசமரபின் சிறந்த பேரரசர். இவரது மகன் குணாளன் கண் பார்வையற்றவர் ஆக்கப்பட்டார். இவருக்கு முன்னரே இறந்தார். அசோகருக்குப் பின் இவரது பேரன் ஆட்சிக்கு வந்தார். கலிங்கப் போர் வெற்றிக்காகவும் அறியப்படுகிறார்.
தசரத மௌரியர்   பொ.ஊ.மு. 232–224 அசோகரின் பேரன்.
சம்பிரதி பொ.ஊ.மு. 224–215 தசரதரின் சகோதரர்.
சாலிசுகா   பொ.ஊ.மு. 215–202
தேவவர்மன் பொ.ஊ.மு. 202–195
பிரகத்திர மௌரியன் பொ.ஊ.மு. 195–187 இவரது ஆட்சியின் காலத்தில் மௌரியப் பேரரசானது சுருங்கி விட்டது.
பிரகத்ரதர் பொ.ஊ.மு. 187–184 பொ.ஊ.மு. 185இல் இவரது தளபதி புஷ்யமித்திர சுங்கனால் அரசியல் கொலை செய்யப்பட்டார்.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Smith, Vincent Arthur (1920), The Oxford History of India: From the Earliest Times to the End of 1911, Clarendon Press, pp. 104–106
  2. Majumdar, R. C.; Raychaudhuri, H. C.; Datta, Kalikinkar (1950), An Advanced History of India (Second ed.), Macmillan & Company, p. 104
  3. 3.0 3.1 Schwartzberg, Joseph E. A Historical Atlas of South Asia பரணிடப்பட்டது 26 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம், 2nd ed. (University of Minnesota, 1992), Plate III.B.4b (p.18) and Plate XIV.1a-c (p.145)
  4. Hermann Kulke 2004, ப. 69-70.
  5. Stein, Burton (2010), A History of India, John Wiley & Sons, p. 74, ISBN 978-1-4443-2351-1, In the past it was not uncommon for historians to conflate the vast space thus outlined with the oppressive realm described in the Arthashastra and to posit one of the earliest and certainly one of the largest totalitarian regimes in all of history. Such a picture is no longer considered believable; at present what is taken to be the realm of Ashoka is a discontinuous set of several core regions separated by very large areas occupied by relatively autonomous peoples.
  6. 6.0 6.1 6.2 Ludden, David (2013), India and South Asia: A Short History, Oneworld Publications, pp. 28–30, ISBN 978-1-78074-108-6
  7. 7.0 7.1 7.2 Coningham, Robin; Young, Ruth (2015), The Archaeology of South Asia: From the Indus to Asoka, c.6500 BCE – 200 CE, Cambridge University Press, pp. 451–466, ISBN 978-1-316-41898-7
  8. Coningham, Robin; Young, Ruth (2015), The Archaeology of South Asia: From the Indus to Asoka, c.6500 BCE – 200 CE, Cambridge University Press, p. 453, ISBN 978-1-316-41898-7
  9. Dyson, Tim (2018), A Population History of India: From the First Modern People to the Present Day, Oxford University Press, pp. 16–17, ISBN 978-0-19-882905-8, Magadha power came to extend over the main cities and communication routes of the Ganges basin. Then, under Chandragupta Maurya (c.321–297 bce), and subsequently Ashoka his grandson, Pataliputra became the centre of the loose-knit Mauryan 'Empire' which during Ashoka's reign (c.268–232 bce) briefly had a presence throughout the main urban centres and arteries of the subcontinent, except for the extreme south.
  10. Nath sen, Sailendra (1999). Ancient Indian History and Civilization. Routledge. பக். 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788122411980. https://www.google.com/books/edition/Ancient_Indian_History_and_Civilization/Wk4_ICH_g1EC?hl=en&gbpv=1&dq=maurya+dynasty+sen&printsec=frontcover. 
  11. 11.0 11.1 11.2 Bronkhorst, Johannes; Flood, Gavin (July 2020) (in en). The Oxford History of Hinduism: Hindu Practice. Oxford University Press. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-873350-8. https://books.google.com/books?id=fxT0DwAAQBAJ&pg=PA68. 
  12. Omvedt, Gail (18 August 2003) (in en). Buddhism in India: Challenging Brahmanism and Caste. SAGE Publications. பக். 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-9664-4. https://books.google.com/books?id=rSF8b5hbyP0C&pg=PT70. 
  13. Smith, vincent A. (1981). The Oxford History Of India Part. 1-3, Ed. 4th. Oxford University Press. பக். 99. https://archive.org/details/in.ernet.dli.2015.99999/page/n121/mode/2up. ""the only direct evidence throwing light ....is that of Jain tradition. ...it may be that he embraced Jainism towards the end of his reign. ...after much consideration I am inclined to accept the main facts as affirmed by tradition .... no alternative account exists."" 
  14. Dalrymple, William (2009-10-07) (in en). Nine Lives: In Search of the Sacred in Modern India. Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4088-0341-7. https://books.google.com/books?id=Mc2IVc6obeAC&pg=PT21. ""It was here, in the third century BC, that the first Emperor of India, Chandragupta Maurya, embraced the Jain religion and died through a self-imposed fast to the death,......"" 
  15. Keay, John (1981) (in en). India: A History. Open Road + Grove/Atlantic. பக். 85–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8021-9550-0. https://books.google.com/books?id=0IquM4BrJ4YC&pg=PT174. 
  16. 16.0 16.1 Jeffery D. Long (15 April 2020) (in en). Historical Dictionary of Hinduism. Rowman & Littlefield. பக். 255. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5381-2294-5. https://books.google.com/books?id=IWXRDwAAQBAJ&pg=PA255. 
  17. Boyce, Mary; Grenet, F. (January 1991) (in en). A History of Zoroastrianism, Zoroastrianism under Macedonian and Roman Rule. BRILL. பக். 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-29391-5. https://books.google.com/books?id=Euh5DwAAQBAJ&pg=PA149. 
  18. Avari, Burjor (2007). India, the Ancient Past: A History of the Indian Sub-continent from C. 7000 BC to AD 1200 பரணிடப்பட்டது 23 நவம்பர் 2022 at the வந்தவழி இயந்திரம் Taylor & Francis. ISBN 0415356156. pp. 188-189.
  19. Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D.". Social Science History 3 (3/4): 132. doi:10.2307/1170959. 
  20. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 223. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 16 September 2016. 
  21. Dyson, Tim (2018), A Population History of India: From the First Modern People to the Present Day, Oxford University Press, pp. 16–17, ISBN 978-0-19-882905-8 Quote: "Magadha power came to extend over the main cities and communication routes of the Ganges basin. Then, under Chandragupta Maurya (c.321–297 bce), and subsequently Ashoka his grandson, Pataliputra became the centre of the loose-knit Mauryan 'Empire' which during Ashoka's reign (c.268–232 bce) briefly had a presence throughout the main urban centres and arteries of the subcontinent, except for the extreme south."
  22. Hermann Kulke 2004, ப. xii, 448.
  23. Romila Thapar (1990). A History of India, Volume 1. Penguin Books. பக். 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-013835-8. 
  24. Keay, John (2000). India: A History. Grove Press. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8021-3797-5. 
  25. 25.0 25.1 R. K. Mookerji 1966, ப. 31.
  26. செலூக்கஸ் நிக்காத்தர் ceded the territories of Arachosia (modern Kandahar), Gedrosia (modern பலுச்சிசுத்தானம்), and Paropamisadae (or காந்தாரதேசம்). Aria (modern ஹெறாத் நகரம்) "has been wrongly included in the list of ceded satrapies by some scholars ... on the basis of wrong assessments of the passage of Strabo ... and a statement by Pliny" (Raychaudhuri & Mukherjee 1996, p. 594).
  27. John D Grainger 2014, ப. 109: Seleucus "must ... have held Aria", and furthermore, his "son Antiochos was active there fifteen years later".
  28. Bhandari, Shirin (2016-01-05). "Dinner on the Grand Trunk Road" (in அமெரிக்க ஆங்கிலம்). Roads & Kingdoms. பார்க்கப்பட்ட நாள் 2016-07-19.
  29. Hermann Kulke 2004, ப. 67.
  30. Dyson, Tim (2018), A Population History of India: From the First Modern People to the Present Day, Oxford University Press, p. 24, ISBN 978-0-19-882905-8 Quote: "Yet Sumit Guha considers that 20 million is an upper limit. This is because the demographic growth experienced in core areas is likely to have been less than that experienced in areas that were more lightly settled in the early historic period. The position taken here is that the population in Mauryan times (320–220 BCE) was between 15 and 30 million—although it may have been a little more, or it may have been a little less."
  31. Dyson, Tim (2018), A Population History of India: From the First Modern People to the Present Day, Oxford University Press, p. 19, ISBN 978-0-19-882905-8
  32. "It is doubtful if, in its present shape, [the Arthashastra] is as old as the time of the first Maurya", as it probably contains layers of text ranging from Maurya times till as late as the 2nd century CE. Nonetheless, "though a comparatively late work, it may be used ... to confirm and supplement the information gleaned from earlier sources". (Raychaudhuri & Mukherjee 1996, pp. 246–247)
  33. 33.0 33.1 33.2 33.3 33.4 Irfan Habib & Vivekanand Jha 2004, ப. 14.
  34. 34.0 34.1 Singh, Upinder (2008) (in en). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131716779. https://books.google.com/books?id=Pq2iCwAAQBAJ&q=mokur+sangam+poem&pg=PA385. 
  35. "Annual Report Of Mysore 1886 To 1903" – via Internet Archive.
  36. (in en) Epigraphia Indica Vol.20. Achaeological Survey of India. 1920. பக். 80. https://archive.org/details/epigrahiaindicav014769mbp. 
  37. தினேஷ்சந்திர சர்கார் (1968). "The Satavahanas and the Chedis". in ரமேஷ் சந்திர மஜும்தார். The Age of Imperial Unity. Bharatiya Vidya Bhavan. பக். 215. https://books.google.com/books?id=J1SgAAAAMAAJ. 
  38. R. K. Mookerji 1966, ப. 14.
  39. 39.0 39.1 R. K. Mookerji 1966, ப. 15.
  40. H. C. Raychaudhuri 1988, ப. 140.
  41. R. K. Mookerji 1966, ப. 8.
  42. Sugandhi, Namita Sanjay (2008). Between the Patterns of History: Rethinking Mauryan Imperial Interaction in the Southern Deccan. பக். 88–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780549744412. https://books.google.com/books?id=8bdULPF4gNYC&pg=PA88. [தொடர்பிழந்த இணைப்பு]
  43. Kosmin 2014, ப. 31.
  44. Nath sen, Sailendra (1999). Ancient Indian History and Civilization. Routledge. பக். 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788122411980. https://www.google.com/books/edition/Ancient_Indian_History_and_Civilization/Wk4_ICH_g1EC?hl=en&gbpv=1&dq=maurya+dynasty+sen&printsec=frontcover. 
  45. Nath sen, Sailendra (1999). Ancient Indian History and Civilization. Routledge. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788122411980. https://www.google.com/books/edition/Ancient_Indian_History_and_Civilization/Wk4_ICH_g1EC?hl=en&gbpv=1&dq=maurya+dynasty+sen&printsec=frontcover. 
  46. :"Androcottus, when he was a stripling, saw Alexander himself, and we are told that he often said in later times that Alexander narrowly missed making himself master of the country, since its king was hated and despised on account of his baseness and low birth." Plutarch 62-3 Plutarch 62-3 பரணிடப்பட்டது 28 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  47. :"He was of humble Indian to a change of rule." Justin XV.4.15 "Fuit hic humili quidem genere natus, sed ad regni potestatem maiestate numinis inpulsus. Quippe cum procacitate sua Nandrum regem offendisset, interfici a rege iussus salutem pedum ceieritate quaesierat. (Ex qua fatigatione cum somno captus iaceret, leo ingentis formae ad dormientem accessit sudoremque profluentem lingua ei detersit expergefactumque blande reliquit. Hoc prodigio primum ad spem regni inpulsus) contractis latronibus Indos ad nouitatem regni sollicitauit." Justin XV.4.15 பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2016 at the வந்தவழி இயந்திரம்
  48. Hermann Kulke 2004, ப. 69–70.
  49. Thapar 2013, ப. 362–364.
  50. 50.0 50.1 Sen 1895, ப. 26–32.
  51. Upinder Singh 2008, ப. 272.
  52. Mookerji 1988, ப. 28–33.
  53. Hemacandra 1998, ப. 175–188.
  54. Mookerji 1988, ப. 33.
  55. Malalasekera 2002, ப. 383.
  56. Mookerji 1988, ப. 33-34.
  57. Trautmann 1971, ப. 43.
  58. Chandragupta Maurya and His Times, Radhakumud Mookerji, Motilal Banarsidass Publ., 1966, p.26-27 Mookerji, Radhakumud (1966). Chandragupta Maurya and His Times. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120804050. https://books.google.com/books?id=i-y6ZUheQH8C&pg=PA27. பார்த்த நாள்: 2016-11-26. 
  59. Mookerji 1988, ப. 34.
  60. Roy 2012, ப. 62.
  61. 61.0 61.1 From Polis to Empire, the Ancient World, C. 800 B.C.-A.D. 500. Greenwood Publishing. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0313309426. https://books.google.com/books?id=JEvN6XwWTk8C&pg=PA252. பார்த்த நாள்: 16 August 2019. 
  62. Kistler, John M. (2007). War Elephants. University of Nebraska Press. பக். 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0803260047. https://books.google.com/books?id=-5RHK4Ol15QC&pg=PA64. பார்த்த நாள்: 16 August 2019. 
  63. s, deepak (2016-10-25) (in en). Indian civilization. deepak shinde. https://books.google.com/books?id=r5NRDQAAQBAJ&q=Megasthenes%2C+Deimakos+and+Dionysius&pg=PA89. 
  64. Kosmin 2014, ப. 38.
  65. Arrian. "Book 5". Anabasis. http://websfor.org/alexander/arrian/book5a.asp. "Megasthenes lived with Sibyrtius, satrap of Arachosia, and often speaks of his visiting சந்திரகுப்த மௌரியர், the king of the Indians." 
  66. "In the royal residences in India where the greatest of the kings of that country live, there are so many objects for admiration that neither Memnon's city of சூசா with all its extravagance, nor the magnificence of எகபடனா is to be compared with them. ... In the parks, tame peacocks and pheasants are kept." Aelian, Characteristics of animals book XIII, Chapter 18, also quoted in The Cambridge History of India, Volume 1, p411
  67. Romila Thapar (1961), Aśoka and the decline of the Mauryas, Volume 5, p.129, Oxford University Press. "The architectural closeness of certain buildings in Achaemenid Iran and Mauryan India have raised much comment. The royal palace at Pataliputra is the most striking example and has been compared with the palaces at Susa, Ecbatana, and Persepolis."
  68. 68.0 68.1 68.2 Upinder Singh 2008, ப. 331.
  69. Kosmin 2014, ப. 32.
  70. Chatterjee, Suhas (1998) (in en). Indian Civilization and Culture. M.D. Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788175330832. https://books.google.com/books?id=KItocaxbibUC&q=nanda+empire+extension&pg=PA157. 
  71. Dikshitar, V. R. Ramachandra (1993) (in en). The Mauryan Polity. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120810235. https://books.google.com/books?id=LA91rqvCB2EC&q=podiyil+hill+maurya&pg=PA58. 
  72. R. K. Mookerji 1966, ப. 39–40.
  73. 73.0 73.1 Geoffrey Samuel 2010, ப. 60.
  74. 74.0 74.1 Romila Thapar 2004, ப. 178.
  75. R. K. Mookerji 1966, ப. 39–41.
  76. Srinivasachariar 1974, ப. lxxxvii.
  77. Motilal Banarsidass (1993). "The Minister Cāṇakya, from the Pariśiṣtaparvan of Hemacandra". in Phyllis Granoff. The Clever Adulteress and Other Stories: A Treasury of Jaina Literature. பக். 204–206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120811508. https://books.google.com/books?id=Po9tUNX0SYAC&pg=PA204. 
  78. Kosmin 2014, ப. 35.
  79. Alain Daniélou 2003, ப. 108.
  80. Dineschandra Sircar 1971, ப. 167.
  81. William Woodthorpe Tarn (2010). The Greeks in Bactria and India. Cambridge University Press. பக். 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781108009416. https://books.google.com/books?id=-HeJS3nE9cAC&pg=PA152. 
  82. Mookerji Radhakumud (1962). Asoka. Motilal Banarsidass. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0582-8. https://books.google.com/books?id=uXyftdtE1ygC&pg=PA8. 
  83. 83.0 83.1 Alain Daniélou 2003, ப. 109.
  84. Eugène Burnouf (1911). Legends of Indian Buddhism. New York: E. P. Dutton. பக். 59. https://archive.org/stream/legendsofindianb00burn#page/20/mode/2up. 
  85. 85.0 85.1 85.2 85.3 S. N. Sen 1999, ப. 142.
  86. "Three Greek ambassadors are known by name: Megasthenes, ambassador to Chandragupta; Deimachus, ambassador to Chandragupta's son Bindusara; and Dyonisius, whom Ptolemy Philadelphus sent to the court of Ashoka, Bindusara's son", McEvilley, p.367
  87. India, the Ancient Past, Burjor Avari, pp. 108–109
  88. Arthur Llewellyn Basham, History and doctrines of the Ājīvikas: a vanished Indian religion, pp. 138, 146
  89. Anukul Chandra Banerjee, Buddhism in comparative light, p. 24
  90. Beni Madhab Barua, Ishwar Nath Topa, Ashoka and his inscriptions, Volume 1, p. 171
  91. Kashi Nath Upadhyaya (1997). Early Buddhism and the Bhagavadgita. Motilal Banarsidass. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120808805. https://books.google.com/books?id=JBbznHuPrTYC&pg=PA33. 
  92. Fitzedward Hall, தொகுப்பாசிரியர் (1868). The Vishnu Purana. IV. Trübner & Co. பக். 188. https://books.google.com/books?id=0943AQAAMAAJ&pg=PA188. 
  93. Allchin, F. R.; Erdosy, George (1995). The Archaeology of Early Historic South Asia: The Emergence of Cities and States. Cambridge: Cambridge University Press. பக். 306. https://archive.org/details/archaeologyofear0000allc. 
  94. அசோகர் கல்வெட்டுக்கள், 13th Rock Edict, translation S. Dhammika.
  95. Thapar, Romila (2012). Aśoka and the Decline of the Mauryas. Oxford Scholarship Online. doi:10.1093/acprof:oso/9780198077244.003.0031. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780198077244. https://www.oxfordscholarship.com/view/10.1093/acprof:oso/9780198077244.001.0001/acprof-9780198077244-chapter-7. 
  96. Singh 2012, ப. 131, 143.
  97. According to the அசோகாவதானம்
  98. Sir John Marshall (1990), "A Guide to Sanchi", Eastern Book House, ISBN 81-85204-32-2, p. 38
  99. E. Lamotte, History of Indian Buddhism, Institut Orientaliste, Louvain-la-Neuve 1988 (1958)
  100. Romila Thapar (1960), Aśoka and the Decline of the Mauryas, Oxford University Press, p. 200
  101. Kangle, R. P. (1986) (in en). A Study. Motilal Banarsidass Publ.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0041-0. https://books.google.com/books?id=dzxwTS0-nbUC&q=megasthenes+navy&pg=PA66. 
  102. Nath sen, Sailendra (1999). Ancient Indian History and Civilization. Routledge. பக். 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788122411980. https://www.google.com/books/edition/Ancient_Indian_History_and_Civilization/Wk4_ICH_g1EC?hl=en&gbpv=1&dq=maurya+dynasty+sen&printsec=frontcover. 
  103. Gabriel A, Richard (30 November 2006). The Ancient World :Volume 1 of Soldiers' lives through history. Greenwood Publishing Group. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780313333484. https://books.google.com/books?id=HscIwvtkq2UC&pg=PA301. 
  104. R. C. Majumdar 2003, ப. 107.
  105. Kulke, Herman (2004). History of India. Routledge. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415329200. https://www.google.com/books/edition/A_History_of_India/RoW9GuFJ9GIC?hl=en&gbpv=1&dq=india++history&printsec=frontcover. 
  106. 106.0 106.1 Roger Boesche (2003). The First Great Political Realist: Kautilya and His Arthashastra. Lexington Books. பக். 67–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7391-0607-5. https://books.google.com/books?id=K85NA7Rg67wC&pg=PA67. 
  107. (in en) Indian History. Allied Publishers. 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184245684. https://books.google.com/books?id=MazdaWXQFuQC&q=pataliputra+local+government+system&pg=SL1-PA262. 
  108. Narain Singh Kalota (1978). India As Described By Megasthenes. http://archive.org/details/in.ernet.dli.2015.172447. 
  109. "Explained: History and politics of caste census in Bihar | India News - Times of India". The Times of India.
  110. The Economic History of the Corporate Form in Ancient India. பரணிடப்பட்டது 4 பெப்பிரவரி 2016 at the வந்தவழி இயந்திரம் மிச்சிகன் பல்கலைக்கழகம்.
  111. CNG Coins பரணிடப்பட்டது 27 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம்
  112. Nath sen, Sailendra (1999). Ancient Indian History and Civilization. Routledge. பக். 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788122411980. https://www.google.com/books/edition/Ancient_Indian_History_and_Civilization/Wk4_ICH_g1EC?hl=en&gbpv=1&dq=maurya+dynasty+sen&printsec=frontcover. 
  113. Ray, A. (2016). Towns and Cities of Medieval India: A Brief Survey. Taylor & Francis. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-351-99731-7. https://books.google.com/books?id=4TslDwAAQBAJ. 
  114. R. K. Mookerji 1966, ப. 39-41.
  115. Hermann Kulke 2004, ப. 64-65.
  116. John Cort 2010, ப. 142.
  117. John Cort 2010, ப. 199.
  118. T. K. Tukol. Jainism in South India. http://www.fas.harvard.edu/~pluralsm/affiliates/jainism/article/south.htm. 
  119. S. M. Haldhar (2001). Buddhism in India and Sri Lanka (c. 300 BC to C. 600 AD). Om. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788186867532. https://books.google.com/books?id=jOkQAQAAIAAJ. 
  120. Benimadhab Barua (1968). Asoka and His Inscriptions. 1. பக். 171. https://books.google.com/books?id=79w9AAAAMAAJ. 
  121. Jerry Bentley, Old World Encounters: Cross-Cultural Contacts in Pre-Modern Times (New York: Oxford University Press), 46
  122. Dyson, Tim (2018), A Population History of India: From the First Modern People to the Present Day, Oxford University Press, p. 24, ISBN 978-0-19-882905-8 Quote: "Yet Sumit Guha considers that 20 million is an upper limit. This is because the demographic growth experienced in core areas is likely to have been less than that experienced in areas that were more lightly settled in the early historic period. The position taken here is that the population in Mauryan times (320–220 bce) was between 15 and 30 million—although it may have been a little more, or it may have been a little less."
  123. Dyson, Tim (2018), A Population History of India: From the First Modern People to the Present Day, Oxford University Press, p. 19, ISBN 978-0-19-882905-8
  124. "L'age d'or de l'Inde Classique", p23
  125. "L'age d'or de l'Inde Classique", p22
  126. Described in Marshall p.25-28 Ashoka pillar.
  127. Ramaprasad, Chanda (1919). Indian Antiquary A Journal Of Oriental Research Vol.48. பக். 25-28. https://archive.org/details/in.ernet.dli.2015.532716. 
  128. Allen, Charles (2012). Ashoka: The Search for India's Lost Emperor. London: Hachette Digital. பக். 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-408-70388-5. 
  129. Rangarajan, M. (2001) India's Wildlife History, pp 7.
  130. 130.0 130.1 130.2 Rangarajan, M. (2001) India's Wildlife History, pp 8.
  131. 131.0 131.1 Mookerji, Radhakumud (1966) (in en). Chandragupta Maurya and His Times. Motilal Banarsidass. பக். 16–17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120804050. https://books.google.com/books?id=i-y6ZUheQH8C&pg=PA16. 
  132. "Plutarch, Alexander, chapter 1, section 1". www.perseus.tufts.edu.
  133. "(Transitum deinde in Indiam fecit), quae post mortem Alexandri, ueluti ceruicibus iugo seruitutis excusso, praefectos eius occiderat. Auctor libertatis Sandrocottus fuerat, sed titulum libertatis post uictoriam in seruitutem uerterat; 14 siquidem occupato regno populum quem ab externa dominatione uindicauerat ipse seruitio premebat." Justin XV.4.12–13 பரணிடப்பட்டது 20 ஏப்பிரல் 2017 at the வந்தவழி இயந்திரம்
  134. "Molienti deinde bellum aduersus praefectos Alexandri elephantus ferus infinitae magnitudinis ultro se obtulit et ueluti domita mansuetudine eum tergo excepit duxque belli et proeliator insignis fuit. Sic adquisito regno Sandrocottus ea tempestate, qua Seleucus futurae magnitudinis fundamenta iaciebat, Indiam possidebat." Justin XV.4.19 பரணிடப்பட்டது 20 ஏப்பிரல் 2017 at the வந்தவழி இயந்திரம்
  135. "Appian, The Syrian Wars 11". Archived from the original on 3 நவம்பர் 2007.
  136. Bachhofer, Ludwig (1929) (in en). Early Indian Sculpture Vol. I. Paris: The Pegasus Press. பக். 239–240. https://indianculture.gov.in/rarebooks/early-indian-sculpture-vol-i. 
  137. Page 122: About the Masarh lion: "This particular example of a foreign model gets added support from the male heads of foreigners from Patna city and Sarnath since they also prove beyond doubt that a section of the elite in the Gangetic Basin was of foreign origin. However, as noted earlier, this is an example of the late Mauryan period since this is not the type adopted in any Ashoka pillar. We are, therefore, visualizing a historical situation in India in which the West Asian influence on Indian art was felt more in the late Mauryan than in the early Mauryan period. The term West Asia in this context stands for Iran and Afghanistan, where the Sakas and Pahlavas had their base-camps for eastward movement. The prelude to future inroads of the Indo-Bactrians in India had after all started in the second century B.C."... in Swaraj Prakash Gupta (1980) (in en). The Roots of Indian Art: A Detailed Study of the Formative Period of Indian Art and Architecture, Third and Second Centuries B.C., Mauryan and Late Mauryan. B.R. Publishing Corporation. பக். 88, 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-391-02172-3. https://books.google.com/books?id=0lDqAAAAMAAJ. .
  138. According to Gupta this is a non-Indian face of a foreigner with a conical hat: "If there are a few faces which are nonIndian, such as one head from Sarnath with conical cap ( Bachhofer, Vol . I, Pl . 13 ), they are due to the presence of the foreigners their costumes, tastes and liking for portrait art and not their art styles." in Swaraj Prakash Gupta (1980) (in en). The Roots of Indian Art: A Detailed Study of the Formative Period of Indian Art and Architecture, Third and Second Centuries B.C., Mauryan and Late Mauryan. B.R. Publishing Corporation. பக். 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-391-02172-3. https://books.google.com/books?id=0lDqAAAAMAAJ. 
  139. Annual Report 1907-08. 1911. பக். 55. https://archive.org/details/in.ernet.dli.2015.35434/page/n101/mode/2up. 
  140. R. C. Majumdar 2003, ப. 105.
  141. Ancient India, (Kachroo, p.196)
  142. The Imperial Gazetteer of India (Hunter, p.167)
  143. The evolution of man and society (Darlington, p.223)
  144. W. W. Tarn (1940). "Two Notes on Seleucid History: 1. Seleucus' 500 Elephants, 2. Tarmita", The Journal of Hellenic Studies 60, p. 84–94.
  145. Kosmin 2014, ப. 37.
  146. "Pliny the Elder, The Natural History (eds. John Bostock, H. T. Riley)". Archived from the original on 28 July 2013.
  147. Vincent A. Smith (1998). Ashoka. Asian Educational Services. ISBN 81-206-1303-1.
  148. Walter Eugene Clark (1919). "The Importance of Hellenism from the Point of View of Indic-Philology", Classical Philology 14 (4), pp. 297–313.
  149. Reference: "India: The Ancient Past" p.113, Burjor Avari, Routledge, ISBN 0-415-35615-6
  150. Kosmin 2014, ப. 57.
  151. Thomas Mc Evilly "The shape of ancient thought", Allworth Press, New York, 2002, p.368
  152. Mahavamsa chapter XII பரணிடப்பட்டது 5 செப்தெம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம்
  153. Aśoka and the Decline of the Mauryas by Romila Thapar, Oxford University Press, 1960 P200
  154. Army and Power in the Ancient World by Angelos Chaniotis/Pierre Ducrey(Eds.), Franz Steiner Verlag Stuttgart, P35
  155. Megasthene-Indika
  156. Kailash Chand Jain 1991, ப. 85.
  157. D. C. Ahir (1998). Buddhism in North India and Pakistan. பக். 121. 

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mauryan Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌரியப்_பேரரசு&oldid=3903657" இலிருந்து மீள்விக்கப்பட்டது