யாழ்ப்பாணப் பொது நூலகம்

யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.[2][3] இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.

யாழ்ப்பாணப் பொது நூலகம்
தொடக்கம்1933
அமைவிடம்யாழ்ப்பாணம்
கிளைகள்6[1]
இணையதளம்யாழ்ப்பாணப் பொது நூலகம்
Map
Map
யாழ் பொது நூலகத்தின் நுழைவாயில்

வரலாறு தொகு

இந்த நிறுவனத்துக்கான கரு யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த கே. எம். செல்லப்பா (கனகசபை முதலித்தம்பி செல்லப்பா, 24 பெப்ரவரி 1896 – 14 ஏப்ரல் 1958) என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது.[4] இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.

 
நூலகக் கட்டிடத்தின் இன்னொரு தோற்றம்
 
நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம்

1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.

கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டிமுடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. கட்டிடவேலைகள் தாமதமாகவே நடைபெற்றன. 1959 இல் கட்டிடவேலைகள் முற்றாக முடிய முன்னரே, அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா நூலகத்தின் திறப்புவிழாவை நடத்தினார்.

நூலக எரிப்பு தொகு

உசாத்துணை தொகு

  1. "யாழ் நூலகம்". Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
  2. நீலவண்ணன். "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது". பார்க்கப்பட்ட நாள் 31 மே 2016.
  3. யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு
  4. NOTE ON HISTORY OF JAFFNA PUBLIC LIBRARY

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jaffna library
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்பாணப்_பொது_நூலகம்&oldid=3569254" இலிருந்து மீள்விக்கப்பட்டது