வன்னியர்

வன்னியர் குல சத்திரியர்கள்

வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர்.[1][2] இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[3] இவர்கள் முன்னொரு காலத்தில் பள்ளி என்ற பெயரால் அறியப்பட்டனர்.

வன்னியர் அல்லது வன்னிய குல சத்திரியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
வட தமிழகம், புதுச்சேரி
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து சமயம்

சொற்பிறப்பு

வன்னியருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துகள் உள்ளன, சமசுகிருதத்தில் வன்னி என்னும் சொல்லுக்கு (நெருப்பு/தீ) என்று பொருள்[4][5] மற்றும் திராவிடத்தில் (வலிமை) என்பதாகும்.[6] அதாவது நெருப்பிலிருந்து (அக்னி/தீ) பிறந்தவர் என்று பொருள்படும். பள்ளி என்னும் சொல்லுக்கு சமசுகிருதத்தில் வனம் (காடு) என்பதாகும்.[7]

வன்னி என்னும் பெயரிலிருந்து வன்னியர்கள் தங்கள் சாதி பெயரைப் பெறுகிறார்கள் என்று அல்ஃப் ஹில்ட்பெடில் குறிப்பிடுகிறார்.[5] வன்னி என்ற வார்த்தை சமசுகிருத மொழியில் நெருப்பு என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் இது ஒரு முக்கியமான மரத்தின் பெயராகும். இது முனிவரின் தொடர்பு, மேலும் புராணங்களுடன் தொடர்புகளுக்கு இது வழிவகுக்கிறது.[8]

வன்னியர் குல பட்டங்கள்

படையாட்சி, பள்ளி, கவுண்டர், நாயக்கர், சம்புவரையர், காடவராயர், கச்சிராயர், காலிங்கராயர், மழவரையர், உடையார், சோழிங்கர் போன்ற 200க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் ஆவார்.[9]

வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.[8] வன்னி மரம் தல விருட்சமாக, தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது.

பிற பெயர்கள்

இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர். அதில் வன்னிய குல சத்திரியர், வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் போன்ற பிற பெயர்களும் அடங்கும்.[10]

வன்னியர் புராணம்

இந்தியாவில், புராணம் கொண்ட ஒரே சமூகத்தினர் வன்னியர்கள் ஆவர். இந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் என்னும் வன்னியர் புராணத்தில், இவர்களின் தோற்றம் பற்றி கூறப்பட்டுள்ளது.

தூர்வாசகர் முனிவருக்கும், கஜமோகிணிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வில்வலன்" மற்றும் "வாதாபி" இவர்களின் தாயாரான கஜமோகிணி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள். வில்வலனும், வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தான். இதனால் கோபம் அடைந்த அகத்திய மாமுனி வில்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவபெருமானை நோக்கி தவம் செய்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம் தெற்கு கடற்கறையின் மைய பகுதியில் அமைந்திருந்த ரத்னாபுரியை அரசால ஆரம்பித்தான். பின்னர் மாயனின் மகளான சொக்கன்னியை மணந்தான். இவன் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியார் துணை இருந்தார். பின்னர் வாதாபி தேவர்களை அதிகம் துன்புறுத்த ஆரம்பித்தான். இதை கண்ட நாரதமுனி, சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களை கூறினார். அதேசமயம் சம்பு மகரிஷி சிவபெருமானை நோக்கி யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது சம்பு மகரிஷிக்கு சிவபெருமான் அருள்பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து, வியர்வைத் துளியை (நீர்) அந்த யாகத்தில் விழச்செய்தார். யாகத்தில் விழுந்த அந்த நெருப்பில் இருந்து, வெள்ளை குதிரையில், கையில் வீரவாளுடன் தலையில் கிரீடத்துடன் ஸ்ரீ வீர ருத்ர வன்னியர் தோன்றினார். சிவபெருமானும், தாய் பார்வதியும் தேவேந்திரனின் மகளான மந்திரமாலையை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தனர். அவர்களின் பெயர் 1.கிருஷ்ண வன்னியர் 2.பிரம்ம வன்னியர் 3.சம்பு வன்னியர் 4.அக்னி வன்னியர் ஆவார்கள். இவர்களுக்கு காந்தா (சுசிலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களின் பெயர்கள் இந்திராணி, நாரணி, சுந்தரி, சுமங்கலி ஆகும். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை. போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை வன்னியக்கூத்து என்ற பெயரில் இன்றும் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் கூத்தாகவும் நடத்தப்படுகிறது. ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மகாராசனின் வழித் தோன்றல்களே வன்னியர்கள் என வன்னியர் புராணம் கூறுகிறது.[11][12]

சிலை எழுபது

கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். இந்நூலில் வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள, கம்பர் இந்நூலை எழுதியுள்ளார்.

மக்கள் தொகை

தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில், இவர்களே மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர்.[13]

தற்போது

வன்னியர்கள் 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தனர். குறிப்பாக செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 25 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் இருந்தனர். வன்னியர்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் அமைப்பிலிருந்து பெருமளவில் பயனடைகிறார்கள். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த இவர்கள், 1980 ஆம் ஆண்டுகளில் பல போராட்டங்களைத் தொடர்ந்து, அதில் வெற்றிக் கண்டு தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.

இந்த சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக வளர்ந்து, தமிழகத்தில் தற்போது முக்கியமான அரசியல்கட்சிகளில் ஒன்றாக உள்ளது.

உள்ஒதுக்கீடு

2020 ஆம் ஆண்டு, வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு தர வேண்டும் என பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்தது. ஆனால் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு, மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவில் உள்ஒதுக்கீடு தேவை என கோரினார். அவரின் கோரிக்கையை ஏற்று மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியீடப்பட்டது. அதன்படி வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவில் 10.5%. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.[14][15]

குறிப்பிடத்தக்க நபர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Barnett, Marguerite Ross (2015). The Politics of Cultural Nationalism in South India. Princeton University Press. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-40086-718-9. https://books.google.co.uk/books?id=YFF9BgAAQBAJ&pg=PA61. 
  2. Gorringe, Hugo (2005). Untouchable Citizens: Dalit Movements and Democratization in Tamil Nadu. SAGE Publications India. பக். 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-13210-199-4. https://books.google.co.uk/books?id=9ouHAwAAQBAJ&pg=PA59. 
  3. "The Vanniyar separatism".
  4. Dewaraja, Lorna Srimathie (1972). A study of the political, administrative, and social structure of the Kandyan Kingdom of Ceylon, 1707-1760. Lake House Investments. பக். 189. https://books.google.com/books?id=j5w5AQAAIAAJ. 
  5. 5.0 5.1 Alf Hiltebeitel (1991). The cult of Draupadī: Mythologies : from Gingee to Kurukserta. 1. Motilal Banarsidass. பக். 35. https://books.google.com/books?id=VncomfRVVhoC&pg=PA35. 
  6. Alf Hiltebeitel (1991). The Cult of Draupadī: Mythologies: From Gingee to Kurukserta. Motilal Banarsidass. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1000-6. https://books.google.com/books?id=VncomfRVVhoC&pg=PA38. 
  7. Gopalakrishnan, Subramanian (1988). The Nayaks of Sri Lanka, 1739-1815: Political Relations with the British in South India. New Era Publications. பக். 134. https://books.google.com/books?id=bG1uAAAAMAAJ. 
  8. 8.0 8.1 Hiltebeitel, Alf (1991) (in en). The cult of Draupadī: Mythologies : from Gingee to Kurukserta. Motilal Banarsidass. பக். 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120810006. https://books.google.com/books?id=VncomfRVVhoC&pg=PA36. 
  9. "Vanniyan In India".
  10. "List of Backward Classes approved by Government of Tamilnadu".
  11. "வன்னிய புராணம் - ஒன்று : (மூலமும் -உரையும்) (வன்னியர் -வரலாறு, கலை, பண்பாடு)".
  12. "வன்னியர் புராணம்".
  13. "மீண்டும் சாதி சங்கமாக கூனிக் குறுகும் பாமக-கருணாநிதி". ஒன் இந்தியா தமிழ் (09 சூலை, 2009)
  14. "வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்".
  15. "வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா; முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்".

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னியர்&oldid=3883660" இலிருந்து மீள்விக்கப்பட்டது