விநாயகம்

அரசியல்வாதி

தணிகை மீட்ட தளபதி எனப் பரவலாக அறியப்படும் கே. விநாயகம் திருத்தணியை தமிழகத்துக்கு மீட்டுக் கொடுக்கப் போராடியவர். ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டில் இருந்து பிரிந்த போது திருப்பதிக்கு தெற்கில் இருந்த பல பகுதிகள் தமிழகத்தோடு 1960ஆம் ஆண்டில் தான் இணைக்கப்பட்டது. அதை மீட்டு தந்ததில் பெரும்பங்கு விநாயகத்தைச் சேரும்.[1] இவர் திருத்தணி தமிழகத்தில் இணைந்த போது காங்கிரசு கட்சியில் இருந்தார்.[2]

தணிகை மீட்ட தளபதி விநாயகம்
தணிகை மீட்ட தளபதி விநாயகம்

திருத்தணி தமிழகத்தோடு இணைப்பு தொகு

இந்திய விடுதலைக்கு பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை வரை சொந்தம் கோரியது ஆந்திர அரசாங்கம். ஆனால் திருப்பதி வரை தமிழகத்துக்கு சொந்தம் என்றது தமிழகத் தரப்பு. ஆனால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது திருந்த்தனி வரை ஆந்திராவுக்குச் சென்றது. அதனால் தமிழர் பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கக் கோரி தமிழக மக்கள் போராடத் தொடங்கினர். திருத்தணியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று 1953ம் ஆண்டு தமிழர் மாநாடு நடத்தப்பட்டது. இதற்கு ம.பொ.சிவஞானம் தலைவராக இருந்தார். விநாயகம் தளபதியாகவும், கோல்டன் சுப்பிரமணியம் செயலாளராகவும் இருந்தனர். இவர்கள் தலைமையில் மாபெரும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

1953ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தார். போராட்டங்களின் விளைவாக எல்லை கமிஷன் அமைக்கப்பட்டு, திருத்தணியில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள 365 கிராமங்கள், 1960ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதன் நினைவாக தளபதி விநாயகம் பெயரில் திருத்தணியில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது.[1][3]

சட்டமன்றச்செயல்பாடுகள் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு எல்லை மீட்புப்போராட்டங்களுக்காக பல முறை பேசியும் அது தொடர்பான போராட்டங்களிலும் முன் நின்றவர் விநாயகம்.[4]

தெலுங்குத் திணிப்பு எதிர்ப்பு தொகு

தமிழர்கள் அதிகம் வாழும் சென்னை மாகாண வடக்குப் பகுதிகளில் 1908ஆம் ஆண்டு முதலேயே தெலுங்கு மொழி கட்டாயமொழி ஆக்கப்பட்டதாகவும் அம்மொழியிலேயே அரசு சார்ந்த ஆவணங்கள் எழுதப்பட்டதாகவும் அதனாலேயே தமிழர்கள் பலர் தெலுங்கர்களாக ஆக்கப்பட்டதாகவும் அந்த போலிக்கணக்காலேயே சித்தூர் மாவட்டம் ஆந்திரம் வசம் சென்றதாகவும் சட்டமன்றத்தில் விநாயகம் தெலுங்கர்களின் மீது குற்றம் சாட்டினார்.[5]

தமிழக வடக்கெல்லை மீட்புக்கு ஆதரவு தொகு

திருத்தணியும் அது சார்ந்த பகுதிகளும் 1956 முதல் 1960 வரை ஆந்திரத்தில் இருந்தன. அது தொடர்பாக 1955 நடந்த சட்டமன்றத்திலேயே தெலுங்கர்கள் தமிழகப் பகுதிகளை வரம்பு மீறி உரிமை கோருவதாக குற்றம் சாட்டினார் விநாயகம்.[6]

தமிழக தெற்கெல்லை மீட்புக்கு ஆதரவு தொகு

‎திருவாங்கூர்-கொச்சி அரசில் இருந்த தமிழர் பகுதிகளான தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாத்தங்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்களை சென்னை மாகாணத்துடன் இணைக்க திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு உட்பட பல தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். ஆனால் கன்னியாக்குமரி மாவட்டப்பகுதிகளும் செங்கோட்டை நகர்பகுதியும் மட்டுமே தமிழகத்துடன் இணைந்தன. தமிழர்களின் முக்கியப் பகுதியான தேவிக்குளம், பீர்மேடு திருவாங்கூர்-கொச்சி அரசிலேயே இருந்தது. இதற்குக் காரணமாக மலையாளி பணிக்கர் இருந்தார் என தமிழருக்கு ஆதரவாக சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டினார் விநாயகம்.[7]

ஆரணியாற்றுப் படுகை தொடர்பான பேச்சு தொகு

கிருஷ்ணா ஆற்றின் கிளையாறான ஆரணி ஆற்றின் படுகைகள் தமிழகத்தில் அதிகமிருந்தன. அது தமிழகத்துக்கு கிடைக்க பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு நிலத்தைப் பிரித்திருதால் அந்த ஆற்றுப்பகுதிகள் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும். ஆனால் ஆந்திர கம்யூனிஸ்டுகளும் தமிழகக் கம்யூனிஸ்டுகளும் பிர்க்காவின் அடிப்படைப் படிப் பிரிக்காமல் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்க வேண்டும் என அன்றைய இயல்புக்கு மீறி செயல்பட்டதாக சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டினார் விநாயகம்.[8]

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. 1.0 1.1 "திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு". தினகரன். 21 சூலை 2014 இம் மூலத்தில் இருந்து 2015-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150123144922/http://m.dinakaran.com/aDetail.asp?Nid=5481. பார்த்த நாள்: 22 பெப்ரவரி 2015. 
  2. India: A Reference Annual. இந்திய அரசாங்கம். 1967. p. 437.
  3. ஈ. எஸ். எஸ். இராமன், எம்.எல்.ஏ (1 ஏப்ரல் 2010). "திருத்தணி, தமிழகத்துடன் இணைந்த 50-வது ஆண்டு தினம்". தினத்தந்தி. http://www.maposi.com/2010/07/50.html. பார்த்த நாள்: 22 பெப்ரவரி 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. பழ. நெடுமாறன் (1995). தமிழன் இழந்த மண். தமிழ்க்குலம். pp. 26, 36, 39, 40, 44, 45, 48, .{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  5. உரை 1
  6. உரை 2
  7. உரை 3
  8. உரை 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=விநாயகம்&oldid=3944160" இலிருந்து மீள்விக்கப்பட்டது