அங்கிள் டாம்ஸ் கேபின் (நூல்)

அங்கிள் டாம்’ஸ் கேபின் (Uncle Tom's Cabin)[1] 1852 ஆம் வருடம் வெளியான ஆங்கில நூல். அப்போதைய அமெரிக்காவின் நீக்ரோ அடிமை முறைக்கு எதிராக எழுந்த நூல். இந்நூலின் ஆசிரியர் ஹேரியட் எலிசபெத் பீச்சர். இவர் பள்ளி ஆசிரியையாக இருந்துவந்தவர். அடிமை முறைக்கு எதிரான புரட்சியை உருவாக்கிய நூல் என்று புகழப்படும் இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விவிலியத்திற்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையான நூல்.[2]

கதைக்களம் தொகு

அமெரிக்காவில் அப்போதைய காலகட்டத்தில் இருந்து வந்த நீக்ரோக்களை அடிமையாக வைத்திருக்கும் முறையின் யதார்த்த கொடுமைகளையும், அடிமைகளை விற்கும் போது அவர்களது குடும்பமும் உறவினர்களும் எதிர்கொள்ளும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் நூலில் காணலாம். வெளித்தோற்றத்திற்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முரட்டுத்தனமான சிறுமி, தான் கறுப்பின அடிமை என்பதால் புறக்கணிக்கப்படுவதை உணருவதும், முரட்டுத்தனத்தாலும், திருட்டு முதலான செயல்களாலும் தனது வெறுப்பை வெளிக்காட்டுவதுமாக இருக்கிறாள். இவளைப் போன்றே பல கிளைக் கதாபாத்திரங்களுக்கு இடையே, டாம் மாமா எனும் முக்கிய கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுகிறார். டாம் மாமா, தம் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறார். அதில் தொடங்கி, தமது குடும்பத்தினருடன் சேர முடியும் என்று டாம் மாமா எதிர்பார்ப்போடு செயல்படுவது வரையிலும் கதை தொடர்கிறது. அவர் சந்தித்த ஏமாற்றங்களும் கதையில் அறிய முடிகிறது. இதன் மூலம் அடிமை முறையின் சிரமங்களை வாசகர்களுக்கு உணர வைக்கும் நூலாக அமைத்துள்ளார் நூல் ஆசிரியர்.

அடிமையாக வைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் கடும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கட்டங்களில், ஆசிரியர் "இவர்கள் உங்கள் உறவினர்களாக இருந்திருந்தால்" எனும் கருத்தை எழுப்புவதன் மூலம் வாசகர்களைப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்வு பூர்வமாக உணர வைக்கிறார்.

கொடுமையான முறையை ஆதரிப்போருக்கு இடையிலும் மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் கதாபாத்திரங்களை அமைத்துள்ளார்.

இந்நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு