உருகுணை இராச்சியம்

(உறுகுணை இராச்சியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உறுகுனு இராச்சியம் (கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்[1] - கி.பி. பதினாறாம் நூற்றாண்டு)[2] இலங்கையில் உருகுணைப் பகுதியை மையமாகக் கொண்டு எழுந்த இராச்சியங்களின் பொதுப்பெயர். இது இலங்கையின் தற்போதைய தெற்கு மாகாணங்களும் தென்கிழக்கு மாகாணங்களும் இருக்கும் பகுதியில் அமைந்திருந்தது. இதனது தலைநகரமாக மாகாமம் காணப்பட்டது. இது இன்றைய காலத்தின் தென் மாகாணத்தில் உள்ள அம்பலாந்தோட்டைக்கும் திசமகாரமயவுக்கும் அருகில் காணப்படுகிறது. உறுகுணை இராச்சியத்தின் எல்லைகளாக வடக்கில் மகாவலி கங்கையும் வடமேற்கில் களு கங்கையும் உள்ளன. உருகுணையை மையமாக கொண்டு தமிழரும் சிங்களரும் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சியை அமைத்துள்ளனர்.

இலங்கைப்படத்தில் உறுகுணை இராச்சியம் குறிக்கப்பட்டுள்ளது

உருகுணை இராச்சியத்தின் அரசியல் பின்னணி தொகு

கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை உருகுணை தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.[3][1] இந்நிலையில் வட இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் தேவநாம்பிய திச்சன் ஆண்டுவந்தான். தேவநம்பிய தீசனின் பின் அவரது சகோதரனான மகாநாகனே அனுராதபுரத்தின் ஆட்சியாளனாக வரவேன்டும். ஆனாலும் அரச பட்டத்து இராணி தன் மகனுக்கு ஆட்சியை வழங்க எண்ணினாள். மகாநாகனைக் கொல்ல பல சூழ்ச்சிகள் செய்தாள். ஒருமுறை ஒரு மாம்பழத்தில் விசத்தைக் கலந்து அதனை மாம்பழக் கூடையில் வைத்து மகாநாகனுக்கு அனுப்பினாள். இதனை அரசியின் மகன் உண்டு மரணமடைந்தான். இந்தச்சம்பவத்தால் பயந்த மகாநாகன் உருகுணைக்கு தப்பி வந்து அங்கிருந்த தமிழ் அரசர்களிடம் தஞ்சமடைந்தான். பின்னர் யட்டால என்ற இடத்தில் அவனுக்கு என்றொரு மகன் பிறந்தான். அவன் யட்டால தீசன் என அழைக்கப்பட்டான். மகாநாகனுக்கு கோதாபயன் என்ற இன்னொரு மகனும் உண்டு. கோதாபயன் தன் மகனான காகவண்ண தீசனை உருகுணை இராச்சியத்துக்கு அரசனாக்க எண்ணி தன் பாட்டன் காலத்தில் இருந்து தங்கள் குடும்பத்துக்கு தஞ்சம் அளித்த தமிழ் அரசர்களையே கொன்று ஆட்சியைப் பிடித்தான்.[1] இவ்வாறு வரலாற்றின் படி இரண்டு நூற்றாண்டுகள் தமிழரிடம் இருந்த உருகுணை இராச்சியம் சிங்களவரிடையே சென்றது.

அரசர்கள் தொகு

  1. உருகுணை தமிழர்கள் (கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முறபட்ட காலத்தில் இருந்து கி.மு. 210 வரை)[1]
  2. கோதாபயன் (உருகுணை தமிழர்களை கொன்று ஆட்சி அமைத்தவன்)[1]
  3. காகவண்ண தீசன்
  4. துட்டகைமுனு
  5. தாட்டியன் - [4][5]
  6. தாதுசேனன் (பொ.பி. 463 - 479) - இராசராட்டிரப் பாண்டியர் காலத்தில் உருகுணையில் மறைந்து ஆட்சி நடத்தினான். அவர்களில் கடைசி அரசனான பிட்டியன் என்பவனை கொன்றதும் இலங்கையின் மற்றைய பகுதிகளையும் கைப்பற்றினான்.
  7. இராஜேந்திர சோழன்

புகலிடமான உருகுணை தொகு

எல்லாளன், பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்), இராசராட்டிரப் பாண்டியர், பல்லவர், முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்கள், சோழப் பேரரசர்கள், இரண்டாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்கள் போன்ற தமிழகத்தை சேர்ந்த மன்னர் குலத்தவர் இலங்கையின் மீது படை எடுத்து வட இலங்கையின் அநுராதபுர ஆட்சியைக் கைப்பற்றிய போதெல்லாம் சிங்களவருக்கு உருகுணையே ஒளிந்து கொண்டு ஆட்சி நடத்துவதற்கு புகழிடமாய் இருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் உருகுணையின் சில பகுதிகள் கண்டி இராச்சியத்துடன் இணைந்தன.[6]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். (211 - 218)/232. 
  2. வரலாறு , தரம் ஆறு , இலங்கை கல்வி வெளியீட்டுத்திணைக்களம் , பக்கம் 36
  3. ஸ்ரீசாகுசந்தர், தாதுவம்சம், பக்கம் 23-24
  4. Epigraphia Zeylonica, Vol 3, PP 216 - 219
  5. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  6. http://encyclopedia2.thefreedictionary.com/Ruhuna

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருகுணை_இராச்சியம்&oldid=2761356" இலிருந்து மீள்விக்கப்பட்டது