ஊத்துக்காடு தேவி எல்லையம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஊத்துக்காடு தேவி எல்லையம்மன் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு தேவி எல்லையம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:ஊத்துக்காடு, உத்திரமேரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உத்திரமேரூர்
மக்களவைத் தொகுதி:செங்கல்பட்டு
கோயில் தகவல்
தாயார்:தேவி எல்லையம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடித்திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

களைப்படைந்த மன்னன்

தொண்ட மண்டல பகுதியை ஆட்சி செய்த விஜயநகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயருக்கு சிறப்பிடம் உண்டு. ஒருமுறை கிருஷ்ணதேவராயர் படைகள், பரிவாரங்கள் இன்றி தனியாக ஒரு நாயை மட்டும் துணையாக கொண்டு காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். வேட்டையாடுவதில் அதிக ஆர்வத்தைக் கொண்ட கிருஷ்ணதேவராயருக்கு காட்டில் நேரம் போனதே தெரியவில்லை. வெகுநேரம் ஆகிவிட்ட சூழ்நிலையில் மன்னருக்கு அதிக தாகம் எடுத்தது. பல இடங்களில் நீர்நிலைகளைத் தேடிப் பார்த்து சோர்ந்து விட்ட அவர், ஒரு மரத்தின் அடியில் களைப்பாக அமர்ந்து விட்டார். அவருடன் சென்ற நாய், தனது மன்னனின் நிலைகண்டு, எங்காவது நீர்நிலை தென்படுகிறதா என்று தேடியது. வெகு தூரம் சென்ற அந்த நாய் ஓரிடத்தில் நீர்நிலையை கண்டது. பின்னர் அந்த நீரில் தனது உடலை நனைத்துக் கொண்டு மன்னன் இருந்த இடத்திற்கு விரைந்தது.

அம்மன் வெளிப்பட்ட தடாகம்

அங்கு தாகத்தின் களைப்பால் கண்ணயர்ந்து போய் இருந்த மன்னனின் முன்பாக தனது உடலை சிலிர்த்தது. அதில் இருந்து தெறித்த நீர் முகத்தில் பட்டு மன்னன் கண் திறந்தான். விழித்தெழுந்த மன்னர் தனது வள்ர்ப்பு நாய், நீர் தடாகம் உள்ளதை கண்டறிந்து வந்திருப்பதை புரிந்து கொண்டு எழுந்தார். நாயானது, குரைத்தபடியே நீர் தடாகத்தை நோக்கி ஓடியது. தடாகத்தை அடைந்ததும் மகிழ்ச்சி அடைந்த மன்னர் நீரை பருக முயன்றார்.

அப்போது அவருக்கு அருகில் எலுமிச்சைப்பழம் ஒன்று மிதந்து வந்தது. அதை அவர் பார்த்துக் கொண்டிருந்த வினாடி, நீர் தடாகத்தில் இருந்து ஊற்று தண்ணீர் போல் நீர் மேல்நோக்கி வெளியேறியது. அந்த ஆச்சரியம் மன்னருக்கு விலகும் முன்பாக கல்லால் வடிக்கப்பட்ட அம்மன் சிலை ஒன்று பேரிரைச்சலுடன் மேலெழுந்து வருவதைக் கண்டார்.

ஊற்றுக்காடு எல்லையம்மன்

இதற்கிடையில் வேட்டைக்கு சென்ற மன்னர் வர காலதாமதம் ஏற்பட்டதால், சேவகர்கள் அனைவரும் காட்டிற்கு மன்னனை தேடி வந்தனர். அவர்களும் நீர் தடாகம் இருக்கும் பகுதிக்கு வந்து ஆச்சரியத்தை கண்டனர். அம்மன் சிலையை வெளியே கொண்டுவரும்படி சேவகர்களுக்கு, மன்னன் உத்தரவிட்டான். இரும்புவலை தயார் செய்து சிலை வெளியே கொண்டுவரப்பட்டது. சிலையை வெளிக்கொண்டு வந்ததும் மன்னன் தனது உடலை தரையில் சாய்த்து அம்மனை வழிபட்டான். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் நல்வாழ்வு பெறும் வகையில் அந்த பகுதியிலேயே பெரிய ஆலயத்தை கட்டி அம்மனை அங்கு பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தான். அம்மன் சிலை காட்டு எல்லைப்பகுதி ஊற்றுநீர் தடாகத்தில் கிடைத்ததால், அம்மனுக்கு ஊற்றுக்காடு எல்லையம்மன் என்று பெயரிடப்பட்டது. தற்போது ஊற்றுக்காடு மருவி ஊத்துக்காடு எனப் பெயர் பெற்றது.

கூம்பு வடிவில் பலிபீடம்

மன்னன் கிருஷ்ண தேவராயர் தனது மெய்க்காப்பாளர் நாகல் நாயுடு அவரின் கனவில் தோன்றிய எல்லையம்மன், தன்னை ஊரின் கிழக்கு பகுதியில் வைத்து வழிபடும்படி கூறினார். அதன்படியே எல்லையம்மன் கோவிலை ஊரின் கிழக்கு பகுதியில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தனர். பிரதிஷ்டை செய்த சிறிது நேரத்தில் எல்லையம்மனின் உக்கிர பார்வையால், அந்த பகுதி பற்றி எரிந்தது. இதனால் ஊர் மக்கள் பயந்து போயினர். அப்போது பூசாரியின் அறிவுரைப்படி அம்மனின் திருவுருவசிலை நுழைவு வாயிலை பார்த்தபடி நேர் எதிராக வைக்காமல், சற்று விலகியபடி வைக்கப்பட்டது. பின்னர் அம்மனை சாந்தப்படுத்தும் பூஜைகள் செய்து சாந்த ரூபிணியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அம்மனின் திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள்ளே நுழைந்ததும் நான்கு கால் மண்டபத்தை காணலாம். தொடர்ந்து பலிபீடம், கொடி மரம் ஆகியவை அமைந்துள்ளது. மற்ற திருக்கோவில்களில் பலிபீடம் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் சற்று வித்தியாசமாக கூம்பு வடிவில் அமைந்துள்ளது. இதனால் ஊருக்குள் துர்தேவதைகள், பேய் பிசாசுகள் அண்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

கோயில் அமைப்பு தொகு

இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடித்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)