ஊராளிக் கவுண்டர்

ஒரு சாதி

ஊராளிக்கவுண்டர் (Urali Gounder) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். ஊராளி என்ற சொல்லுக்கு "ஊரை ஆள்பவர்" என்று பொருள்.[1][2] சேர, சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் இவர்கள் ஊராட்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இவர்கள் துணிச்சலுக்காக அறியப்பட்டவர்கள் மற்றும் குதிரை சவாரி செய்வதில் திறமையானவர்கள். அம்பலக்காரர் போல, ஊராளிகளும், தங்கள் மூதாதையராக முத்துராசாவைக் கொண்டுள்ளனர்.[3][2]

அம்பலக்காரர், முத்திரியர், முத்துராசா, ஊராளிக்கவுண்டர், வேடர், வலையர், வேட்டுவர் ஆகியோருக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.[4] இவர்கள் அனைவரும் கலாசாரம் மற்றும் பண்பாட்டால் பெருமளவில் ஒத்துப் போகின்றனர், ஒரே மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.

ஊராளிகள், 'தொழில் அடிப்படையில், வலையரிலிருந்து பிரிந்து, காலப்போக்கில் அதுவே ஒரு தனித்த இனக்குழுவாக மாறியது என்று கருத இடமுண்டு' என்று எட்கர் தர்ஸ்டன் தம் நூலில் தெரிவித்துள்ளார்.[3]

நாட்டுப் பிரிவுகள்

ஏழகமண நாடுகள், இருபத்தி நான்கு கரை (அ) காணியாட்சி எனும் புறமண உட்பிரிவுகள் உண்டு.[5] மேலும் அறுபத்தி நான்கு கோத்திரம், தொன்னூற்று ஆறு கலைஞானமும் உண்டு[6].

நாடு மற்றும் கரைகள்

வடசேரி: - சூரியன், கங்கைநம்பி, பொத்தியான், பணிக்கன், பள்ளி, தாராக்கி (உளவாளி), புலிவென்றான், செட்டி, நரசிங்கப்பிரிவினர் ( சீரான், சிலம்பன் ), இடங்கைப்பிரிவினர், தாதன் பிரிவினர், படைமெச்சி (தளபதி, சேனாதிபதி ). இவர்களது குலதெய்வம் இராச்சாண்டார் திருமலை

பில்லூர்: - பொன்னம்பலம், பூச்சி, வாண்ட்ராயன், குருணி. இவர்களது குலதெய்வம் பெரியநாயகியம்மன்.

சேங்குடி: - முத்தியக்கருமன் (அ) நித்தியக்கருமன், தொண்டைமான், மூலக்காட்டான் எருதி, எல்லாம் வல்லன், செண்பகவள்ளி ( கங்கை நள்ளி ), வாழுங்கருத்தறிவான், தண்டாயுதன், பூவன் ( கண்ணுடைய பூபதி ). இவர்களது குலதெய்வம் விரையாச்சிலைநாதர்

கடவன்குடி (அ) வீராலி: - இவர்களது குலதெய்வம் பூர்த்திகோவில்.

தளைக்கா: - இவர்களது குலதெய்வம் நீலியம்மன்.

பளுவஞ்சி (அ) மங்காளி: - இவர்களது குலதெய்வம் மாகாளியம்மன், முப்புலியான்.

மருங்கி: - இவர்களது குலதெய்வம் பூதநாயகியம்மன்[6][2].

கடைநான்கு நாடுகளுக்கு கரை வகுக்கப்படவில்லை. அவரவர் வழிபடும் குலதெய்வ அடிப்படையில் மணவுறவு வைத்துக்கொள்கின்றனர்[2]. வடசேரி, பில்லூர், சேங்குடி நாட்டினர் வடசேரி ஊராளிகள் எனவும், மீதமுள்ள நான்கு நாட்டினர் நாட்டுச்சீமை ஊராளிகள் எனவும் குண்டுவ நாட்டுத் தெக்காடு (அ) நண்டுண்டி என்று அழைக்கப்படுகின்றனர்.

தலைவன் பட்டம் - கவுண்டன்[5].

இன்று பெரும்பாலும் பயிர்த்தொழில் செய்கின்றனர்[5].

ஆட்சி அமைப்பு

ஒவ்வொரு நாட்டுக்கும் எல்லைகள் வகுக்கப்பட்டு கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு நாடு என்பது பல ஊர்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு  தலைவன் இருப்பான். அவனுக்கு நாட்டாண்மை (அ) ஊர்க்கவுண்டன் என்று பெயர். ஊரில் நடக்கும் குமுகாயச்சடங்குகள், திருவிழா மற்றும் ஊர்ப் பஞ்சாயத்துகளை இவரே முன்னின்று நடத்துவார்.[2]

ஒவ்வொரு நாடும் மூன்று தலைவர்களைப் பெற்றிருக்கும். அவர்களுக்குப் பெரியதனம் என்று பெயர். அந்த நாட்டுக்குள் உள்ள ஊர்களையெல்லாம் மேலாண்மை செய்யும் அதிகாரம் இவர்களுக்கு உண்டு. நாட்டுக்கூட்டம் கூட்டுவது, குமுகாய வழக்கை மீறுபவர்களுக்கு தண்டனை அளிப்பது போன்ற அதிகாரங்கள் பெரியதனத்துக்கு உண்டு. பெரியதனங்களின் கட்டளைகளை செயல்படுத்துவது, ஊர்க்கவுண்டர்களுக்கு ஓலையை சாற்றுவது போன்ற பணிகளைச் செய்ய நாட்டுச்சாம்பன் அல்லது நாட்டாபிள்ளை ஒருவர் இருப்பார்.

ஒவ்வொரு நாடும் தன்னாட்சி கொண்ட அமைப்பாகும். ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டின் மீது மேலாண்மை செலுத்த இயலாது.

பெரியதனம் மற்றும் ஊர்க்கவுண்டர் பதவிகள் தொன்று தொட்டுப் பாரம்பரியமாக வாரிசு அடிப்படையில் நியமிக்கப்படுகிறது. ஒரு ஊர்க்கவுண்டர் இறந்தால் அவர் இறந்த எட்டாம் நாள், நாட்டுப் பெரியதனம் தன் ஆளுகைக்குட்பட்ட ஊர்க்கவுண்டர்களுக்கு ஓலை அனுப்பி நாட்டுக் கூட்டத்தைக் கூட்டுவார். இறந்த ஊர்க்கவுண்டருக்குக் குமுகாய வழக்கப்படி எட்டு முடித்து அவரின் வாரிசுதாரருக்குப் பெரியதனங்கள், மற்ற ஊர்க்கவுண்டர்கள் மற்றும் உறவின் முறையினரின் ஒப்புதலோடு புதியவருக்கு ஊர் நாட்டாண்மைகள் பரிவட்டம் கட்டுவார்கள். அன்று முதல் அவர் அந்த ஊரின் நாட்டாண்மையாகப் பொறுப்பேற்றுச் செயல்படுவார்.

ஊராளிக்கவுண்ட முத்துராசாக்கள், சிவன் மற்றும் திருமாலுக்குப் பல கோவில்களைக் கட்டினர்.[சான்று தேவை] இன்று திண்டுக்கல் மாவட்டம், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கோவை, சேலம் மாவட்டங்களில் பரவி வாழ்கின்றனர்.[சான்று தேவை]

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில் இவர்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் பிரிவில் உள்ளனர். இதில் திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளவர்கள் மிகவும் பிற்பட்ட சாதிகள் அல்லது சீர்மரபினர் சாதிகள் பிரிவில் உள்ளனர்.[7]

மேற்கோள்கள்

  1. "செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி". Google Docs. p. 6320. பார்க்கப்பட்ட நாள் 2020-06-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 புலவர்.கு.பொ.பெருமாள். ஊராளிக்கவுண்டர் வரலாறும் பண்பாடும் (இனவரைவியல்) (முதல் பதிப்பு, சனவரி - 2006 ). கரூர்: தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் சங்கம், புகழூர், கரூர் மாவட்டம். பக். 58, 59, 60, 61. 
  3. 3.0 3.1 Edgar Thurston. Castes and tribes of South India (Anthropological studies). 7. பக். 242. https://archive.org/details/castestribesofso07thuriala/page/242/mode/1up. 
  4. Edgar Thurston. Castes and Tribes of Southern India. 1. பக். 26. https://archive.org/details/castestribesofso01thuriala/page/26/mode/1up. 
  5. 5.0 5.1 5.2 தேவநேயப், பாவாணர். "தமிழர் வரலாறு p.322". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-01. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. 6.0 6.1 கி.பாலசுப்பிரமணியன் M.A.,B Ed.,. சங்க அமைப்பும் செயல்பாடும் (மாநில பொதுக்குழு கூட்ட அறிக்கை, 1971 - 2017). தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் சங்கம், பதிவு எண் : 278/2000 TRY, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காந்திக்கிரமம், கரூர் - 639004. பக். 14. 
  7. http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊராளிக்_கவுண்டர்&oldid=3413290" இலிருந்து மீள்விக்கப்பட்டது