எசு. எம். கமால்

இந்திய வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்

சேக்-உசைன் முகமது கமால் என்னும் எசு. எம். கமால் (1928 அக்டோபர் 152007 மே 31) வரலாற்று ஆய்வாளர். நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர்.[1] பல வரலாற்றுக் கருத்தரங்குகளில் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணவியல் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர்.[2] இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியில் நடைபெற்ற விடுதலைப் போர்களை ஆவணப்படுத்தியவர். வரலாறுப் பேரவைகள் பலவற்றில் உறுப்ப்பினராக இருந்தவர். தான் ஆற்றிய வரலாற்றுப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

பிறப்பு தொகு

முகமது கமால் இராமநாதபுரம் நகரில் வாழ்ந்த சேக் உசைன் (ஷேக்ஹூசன்) – காதர் அம்மாள் என்னும் இணையருக்கு மகனாக 1928 அக்டோபர் 15 ஆம் நாள் பிறந்தார்.[3]

கல்வி தொகு

வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts) பட்டம் பெற்றார்.[3]

பணி தொகு

தமிழ்நாட்டு அரசின் வருவாய்த் துறையில் நாற்பதாண்டுகள் பணியாற்றினார்.[1] எழுத்தராகப் பணியில் இணைந்து வட்டாட்சியர் நிலைவரை உயர்ந்து ஓய்வு பெற்றார்.

குடும்பம் தொகு

கமால், நூர்சகான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சர்மிளா என்னும் மகளும் இரு மகன்களும் உள்ளனர்.[4]

எழுதிய நூல்கள் தொகு

முகமது கமால் பின்வரும் நூல்களை எழுதியிருக்கிறார்

வ. எண் ஆண்டு நூலட்டை நூலின் பெயர் குறிப்பு
01 1984 இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் இணை ஆசிரிய நா. முகம்மது செரீபு
02 1987 விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் 1989ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் பாரட்டும் பெற்றது.
03 1987 மாவீரர் மருது பாண்டியர் 1991ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் பாரட்டும் பெற்றது.
04 1987 வள்ளல் சீதக்காதி திருமணவாழ்த்து
05 1990 முஸ்லீம்களும் தமிழகமும் 1988 ஆம் ஆண்டில் சென்னை சீதக்காதி அறக்கட்டளை பரிசு பெற்றது.
06 1991 அலிபாத்துஷா காப்பியம்
07 1992 மன்னர் பாஸ்கர சேதுபதி
08 1994 சேதுபதி மன்னர் செப்பேடுகள் 1994 ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் பாரட்டும் பெற்றது.
09 1996 சேதுபதியின் காதலி 1996 ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் பாரட்டும் பெற்றது. நெடுங்கதை
10 1997 சீர்மிகு சிவகங்கைச் சீமை
11 1998 சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் நெடுங்கதை
12 1999 திறமையின் திரு உருவம் ராஜா தினகர்
13 2000 செந்தமிழ் வள்ளல் சீதக்காதி
14 2001 மறவர் சீமை மாவீரன் மயிலப்பன்
15 2002 சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள்
16 2003 சேதுபதி மன்னர் வரலாறு
17 2004 இராமர் செய்த கோயில்
18 2005 நபிகள் நாயகம் வழியில்

இவை தவிர 7 நூல்கள் அச்சேறாமல், கையெழுத்துப்படிகளாக, இருக்கின்றன.

இந்நூல்கள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இதழாசிரியர் தொகு

கமால், தமிழ் அருவி என்னும் இசுலாமிய இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இவ்விதழ் இருதிங்களுக்கு ஒரு முறை வெளிவந்தது. இதன் முதல் இதழ் நவம்பர் 94 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[5]

தொடர்புடைய அமைப்புகள் தொகு

வரலாற்று ஆய்வாளரான கமால் பின்வரும் அமைப்புகளில் வானாள் உறுப்பினராக இருந்தார். .[1]

  1. இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம். (நிறுவுநர்)
  2. தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, வேலூர்.
  3. தென்னிந்திய வரலாற்றுக் காங்கிரசு
  4. தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரசு, சென்னை.
  5. அனைத்து இந்திய ஆவணக் காப்பாளர் இயக்கம், புதுதில்லி.
  6. ஊர்ப்பெயர் ஆய்வுக் கழகம், திருவனந்தபுரம்.
  7. தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
  8. மதுரை வட்டார வரலாற்று ஆவணக் குழு
  9. மதுரைத் தமிழ்ச் சங்கம்

விருதுகள் தொகு

கமால் வரலாற்று இலக்கியப் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் பின்வரும் விருதுகளை வழங்கி உள்ளன:[4],[3]

  1. இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது
  2. தமிழ்ப்பணிச் செம்மல் விருது
  3. சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல் விருது
  4. பாஸ்கர சேதுபதி விருது
  5. சேவா ரத்னா விருது
  6. ராஜா தினகர் விருது
  7. தமிழ்மாமணி விருது
  8. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது
  9. வள்ளல் சீதக்காதி விருது
  10. பசும்பொன் விருது
  11. அமெரிக்கா தக்சான் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம்

மறைவு தொகு

கிளாக்கோமா என்ற கண் நீரழுத்த நோயால் கமால் 2002 ஆம் ஆண்டில் தன்னிரு கண்களின் பார்வையையும் இழந்தார். அதன் பின்னரும் உதவியாளர்களின் உதவியோடு ஆறு நூல்களை எழுதினார். 2007 மே 31ஆம் நாள் இராமநாதபுரத்தில் காலமானார்.[4]

சான்றடைவு தொகு

  1. 1.0 1.1 1.2 எஸ். எம். கமால், சீர்மிகு சிவகங்கைச் சீமை, பசும்பொன் மாவட்ட கலை இலக்கிய வரலாற்று ஆய்வு மையம் – சிவகங்கை, மு. பதி. பிப்ரவரி 1997, பக்.v ,
  2. எஸ். எம். கமால், மாவீரர் மருதுபாண்டியர், ஷர்மிளா பதிப்பகம் – இராமநாதபுரம், மு.பதி. அக்டோபர் 1989, பின்னட்டை
  3. 3.0 3.1 3.2 எஸ். எம். கமால், மறவர்சீமை மாவீரன் மயிலப்பன், மு.பதி 2001, சர்மிளா பதிப்பகம் - இராமநாதபுரம், பின்னட்டை
  4. 4.0 4.1 4.2 எஸ்.எம்.கமாலின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்: தமிழக அரசுக்கு தமிழ்ச் சங்கம் நன்றி
  5. "நாள் ஒரு நூல்". Archived from the original on 2012-07-19. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._எம்._கமால்&oldid=3545589" இலிருந்து மீள்விக்கப்பட்டது