ஐயாதிச் சிறு வெண்டேரையார்

ஐயாதிச் சிறு வெண்டேரையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூற்றின் 363ஆம் பாடலாக உள்ளது. தேரையார் என்பது புலவர் பெயர். சிறுமை, வெண்மை ஆகிய அடைமொழிகள் இவரது பெயருடன் இணைந்துள்ளன. சிறுமை என்பது இவரது அடக்கத்தைப் புலப்படுத்தவும், வெண்மை என்பது இவரது கள்ளங்கபடமற்ற தன்மையை வெளிப்படுத்தவும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அடைமொழிகள் அக்கால மக்களால் அவருக்கு வழங்கப்பட்டவை.

துறை விளக்கம் தொகு

காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். பெருங்காஞ்சி என்பது வருஞ்சாவு வந்து இறப்பதைக் குறிக்கும். இந்தப் பாடலில் இருப்பவர் அனைவரும் இறப்பர் என்னும் உண்மையைக் கூறிச் செய்யவேண்டிய கடமைகளைப் புலவர் வலியுறுத்துகிறார்.

இவரது பாடல் தரும் செய்தி தொகு

ஆலம் இலையின் நடுவில் இருக்கும் பொருள் போலக் கடலுக்கு நடுவில் இந்த நிலப்பரப்பு உள்ளது. இந்த நிலப்பரப்பு முழுவதிலும் ஆங்காங்கே அதனைப் பாதுகாத்துவந்த அரசர்கள் கடல்நீர் இட்ட மணலைக் காட்டிலும் பலர். அவர்கள் பிணம் சுடும் காட்டை வாழ்விடமாகக் கொண்டு போய்விட்டனர். அவர்கள் பிறரிடம் கைப்பற்றிய நாடுகள் அவருக்குப் பின் வேறொருவர் கையில் உள்ளன.

அதனால், அரசே! நீயும் கேள். இந்த உலகத்தில் உடம்போடு நிலைத்திருக்கும் உயிர் எதுவுமே இல்லை. எல்லாம் மடங்கி அழிவது உண்மை. இது மாயம் இல்லை. (இயற்கையின் உண்மை) ஒருநாள் கள்ளியும், முட்புதரும் மண்டிக் கிடக்கும் புறங்காட்டில்(சுடுகாட்டில்) உப்பில்லாத பொங்கல் சோற்றை இழிபிறப்பினோன் தன் கையில் எடுத்து ஊட்ட, நீ அதனைப் பார்க்காமல் கிடப்பாய்.நிலம் என்னும் உண்கலத்தில் உள்ள உன்னை விலங்குகள் பலிஉணவாகக் கொள்ளும். அது உனக்கு வரும் கொணிய நாள். அந்த நாள் வருவதற்கு முன்பே நீ எண்ணிய செயலை நிறைவேற்றிவிடு. இந்த உலகத்தை முழுமையாகத் துறந்துவிடு.(துறப்பதுதான் செய்யவேண்டிய செயல்)