கசக் கானரசு

நடு ஆசியாவின் முன்னாள் இசுலாமிய முடியரசு
(கசக் கானேடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கசக் கானரசு என்பது தங்க நாடோடிக் கூட்டத்தின் பின்வந்த ஒரு அரசு ஆகும். இது 15ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை தோராயமாக தற்கால கசகஸ்தான் குடியரசின் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அதன் அதிகபட்ச பரப்பளவை கொண்டிருந்தபோது இந்த கானரசு கிழக்கு குமனியாவிலிருந்து (தற்கால மேற்கு கசகஸ்தான்) பெரும்பாலான உஸ்பெகிஸ்தான், கரகல்பாக்ஸ்தான் மற்றும் சிர் தர்யா ஆறு வரை இருந்த பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. மேலும் உருசியா மற்றும் ஈரானில் உள்ள ஆஸ்ட்ரகான் மற்றும் குராசான் மாகணங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இது அடிமை வணிகத்தைலும் ஈடுபட்டிருந்தது. உருசியா மற்றும் நடு ஆசியா ஆகிய அண்டை நாடுகளின் மீது அவ்வப்போது தாக்குதல்களையும் நடத்தி வந்தது. எனினும் பிற்காலத்தில் தொடர்ச்சியான ஒயிரட் மற்றும் சுங்கர் படையெடுப்புகளால் இது பலவீனமடைந்தது. இதன் காரணமாக மூன்று நாடுகளாக பிரிந்தது. அவையும் படிப்படியாக தங்களது நிலையை இழந்து உருசியப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்பட்டன. இது நிறுவப்பட்ட நிகழ்வானது கஸகஸ்தான் நாட்டின் தொடக்கம்[1] என கருதப்படுகிறது. 2015ஆம் ஆண்டு கசக் கானரசின் 550வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.[2]

வரலாறு தொகு

1227 இல் ஆரம்பக் கசக் அரசானது புல்வெளியில் தங்க நாடோடி கூட்ட பேரரசுக்குள் உருவாக்கப்பட்டது. அந்த கசக் அரசின் பெயர் வெள்ளை நாடோடிக் கூட்டம் ஆகும். தங்க நாடோடிக் கூட்டத்திலிருந்து பிரிந்த பிறகு 1361 இல் வெள்ளை நாடோடி கூட்டமானது சுதந்திரமான அரசாக சில காலத்திற்கு நீடித்தது. சில நேரங்களில் வெள்ளை நாடோடி கூட்டமானது நீல நாடோடிக் கூட்டத்துடன் இணைந்து தங்க நாடோடிக் கூட்டம் நிறுவப்பட்டது. ஆனால் 1428 இல் தங்க நாடோடி கூட்டத்தின் கானான பரக் கான் இறந்த பிறகு தங்க நாடோடிக் கூட்டம் மட்டும் பிரியவில்லை. மாறாக, வெள்ளை நாடோடிக் கூட்டமும் பிரிந்தது. வெள்ளை நாடோடிக் கூட்டமானது உஸ்பெக் கானரசு மற்றும் நோகை நாடோடிக் கூட்டம் என்று பிரிக்கப்பட்டது. எஞ்சியிருந்த நிலப்பகுதிகள் தெற்கில் முஸ்தபா கான் மற்றும் வடக்கில் முகமது கான் ஆகியோரிடையே பிரித்துக் கொள்ளப்பட்டது. உஸ்பெக் கானரசானது தற்கால கசகஸ்தானின் பெரும் பகுதிகளைக் கொண்டிருந்தது. இது அபுல்-கய்ர் கானால் ஆட்சி செய்யப்பட்டது. அபுல்-கய்ர் கான் பரக் கானை கொல்வதில் சதி செய்து இருந்தார். அபுல்-கய்ர் கானின் தலைமையின் கீழ் உஸ்பெக் கானரசானது ஊழல் நிறைந்த, நிலையற்ற மற்றும் அடிக்கடி உள்நாட்டு பிரச்சினைகளை எதிர்கொண்ட பலவீனமான அரசானது. நிலைமையை இன்னும் மோசமாக்க உஸ்பெக் கானரசானது ஒயிரட்டுகளால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளானது. அவர்கள் நாடோடி குடியிருப்புகள் மற்றும் பெரிய நகரங்களை சூறையாடினர். பொருட்களை சூறையாடி, சேதம் ஏற்படுத்தி, குடிமக்களை கொன்றனர். 1457 இல் உஸ்பெக்குகள் மற்றும் ஒயிரட்டுகளுக்கு இடையில் அமைதி ஏற்பட்டது. ஆனால் அப்போரில் அபுல்-கய்ர் கான் கடும் தோல்வியை சந்தித்தார். இதன் காரணமாக உஸ்பெக்குகள் மத்தியில் அவர் நற்பெயரை இழந்தார்.

அடிமைமுறை தொகு

18ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் உருசியப் பேரரசானது சைபீரியாவுக்குள் விரிவடைய ஆரம்பித்தது. உருசிய குடியிருப்புகள் வோல்கா மற்றும் எய்க் ஆற்றுப் பகுதிகளில் தோன்ற ஆரம்பித்தன. எல்லைப்பகுதிகளில் கசக்-உருசிய உறவானது பதட்டமானதாக இருந்தது. இதன் காரணமாக உருசிய கொசக்குகள் கசக் நிலங்கள் மீதும் கசக்குகள் உருசிய குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

உசாத்துணை தொகு

  1. "Kazakh Khanate – 550th anniversary". e-history.kz. Archived from the original on 2019-10-29. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  2. "Kazakhstan to Celebrate 550th Kazakh Statehood Anniversary in 2015". Astana Times. http://astanatimes.com/2014/10/kazakhstan-celebrate-550th-kazakh-statehood-anniversary-2015/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசக்_கானரசு&oldid=3580199" இலிருந்து மீள்விக்கப்பட்டது