குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி
கிழக்கிலங்கை மட்டக்களப்பு பொலநறுவை எல்லைப்புறத்தில் உள்ள குடுப்பிமலையில் (சிங்களம்: தொப்பிகல) இருந்தாகக் கூறப்படும் புலிகளின் முக்கிய முகாம் ஒன்றை இலங்கை இராணுவம் ஜூலை 11, 2007 தாக்கி கைப்பற்றிக்கொண்டதாக இலங்கை அரசு அறிவித்தபோதும் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் எவரும் அப்பகுதியில் இருக்கவில்லை என்று பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த விடுதலைப்புலிகள் வன்னிப்பகுதிக்குச் சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது. இந்த இராணுவ வெற்றியைத் தொடர்ந்து 14 வருடங்களுக்கு பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. [1]. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த விடுதலைப்புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் குடும்பி மலையை ஏற்கனவே இரண்டுதடவை இந்தப்பகுதியை இந்திய அமைதிகாக்கும் படைகளிடமும் இலங்கை இராணுவத்தினரிடம் இழந்துள்ளதாகவும் இது மூன்றாவது தடவை என்றும் விடுதலைப் புலிகள் முற்றாகக் கிழக்கை விட்டு நீங்கவில்லை என்றும் அவர்கள் கெரில்லா (பேச்சுத் தமிழ்: கொரிலா) யுத்தத்தை இங்கு நடத்துவர் என்று தெரிவித்தார்கள்.
யாழ்ப்பாண குடாநாடும் கிழக்கு மாகாணமும் முழு இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் புலிகள் வன்னி பிரதேசத்தில் முடக்கப்பட்டனர்.
குடும்பிமலை வீழ்ச்சி வெற்றி விழா - 'கிழக்கின் உதயம்' தொகு
குடும்பிமலை முகாம் வீழ்ச்சியை இலங்கை அரசு ஒரு வெற்றி விழாவாக ஜூலை 19, 2007 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியது. அங்கு அப்போதைய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா கிழக்கின் வெற்றியை பொறித்த பட்டயம் ஒன்றை இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அளித்தார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி புலிகளின் ஈழக்கனவை சிதைத்துவிட்டதாகவும், 2007 வருட முடிவிற்குள் கிழக்கில் மாகாண மாவட்ட தேர்தல்கள் நடைபெறும் என்றும், முழுவீச்சுடன் பொருளாதார வளர்ச்சிப் பணிகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். இவ்விழாவை பிரதான எதிர்கட்சி,ஜேவிபி மற்றும் தமிழ்கூட்டமைப்பு என்பன புறக்கணித்திருந்தன. [2]