கோபிநாத் மொகந்தி

கோபிநாத் மொகந்தி (Gopinath Mohanty) (1914-1991) இவர் ஒரு சிறந்த ஓடியா எழுத்தாளர் ஆவார். இவர், ஞானபீட விருது மற்றும் 1955 ஆம் ஆண்டில் தேசிய சாகித்ய அகாதமி விருதை அவரது நாவலான அம்ருதாரா சந்தனா வுக்காகப் பெற்றார். கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர் சத்ய பிரகாஷ் மொகந்தி "இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கோபிநாத் மொகந்தி மிக முக்கியமான இந்திய புதின ஆசிரியர்." என்று குறிப்பிடுகிறார்.

1960 களில் மனைவி ஆதாரமணியுடன் கோபிநாத் மொகந்தி

தொழில் தொகு

மொகந்தி 1938 இல் ஒடிசா அரசின் நிர்வாக சேவையில் சேர்ந்து 1969 இல் ஓய்வு பெற்றார். பேராசிரியர் பிரபாத் நளினி தாஸ் அழைத்ததின் பேரில் பல்கலைக்கழக மானிய ஆணையத்தில் சேர்ந்து உத்கல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் தலைவராக பணியாற்றினார். 1970 களின் பிற்பகுதியில் உத்கல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பல்கலைக்கழக மானிய ஆணைய சிறப்பு வருகை பேராசிரியராகவும், குடியிருப்பு. - எழுத்தாளராகவும் இரண்டு ஆண்டுகள் பணிபிரிந்தார்.

1986 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் சான் ஓசே மாநில பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் இணை பேராசிரியராக சேர்ந்தார். அவர் 1991 ஆகஸ்ட் 20, அன்று கலிபோர்னியாவின் சான் ஓசேவில் இறந்தார்.

புதினங்கள் தொகு

கோபிநாத்தின் முதல் புதினமான மனா ககிராரா சாசா 1940 இல் வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து தாதி புதா (1944), பராஜா (1945) மற்றும் அம்ருதாரா சந்தனா (1947) போன்ற புதினங்கள் வெளியிடப்பட்டது. அவரது இலக்கிய வெளியீடு ஏராளமாக இருந்தது. அவர் இருபத்தி நான்கு புதினங்கள், பத்து சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாடகங்கள், இரண்டு சுயசரிதைகள், விமர்சனக் கட்டுரைகளின் இரண்டு தொகுதிகள் மற்றும் ஒடிசாவின் காந்தா, கடபா மற்றும் சோரா பழங்குடியினரின் மொழிகள் குறித்த ஐந்து புத்தகங்களையும் எழுதினார். டால்ஸ்டாயின் போர் மற்றும் அமைதி புத்தகத்தை, 'யுத் ஓ சாந்தி' என்ற பெயரில், (1985-86) மூன்று தொகுதிகளாகவும், ரவீந்திரநாத் தாகூரின் ஜோகாஜாக் (1965) ஐ ஒடியா மொழியில் மொழிபெயர்த்தார்.

பராஜா (1945) ஒரு பழங்குடி சமூகத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை ஆகும். இது ஒருவரின் மூதாதையரின் நிலத்துடனான இணைப்பை விவரிக்கும் கதையாக உள்ளது. சீதகாந்த் மகாபத்ரா இந்த நாவலை "சிதைந்த கனவுகளின் கதை" என்று விவரிக்கிறார். [1]  

மத்திய சாகித்ய அகாதமி விருதை (1955) பெற்ற முதல் புதினமான அம்ருதாரா சந்தனா (1947), ஒடிசாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள மற்றொரு பழங்குடியினரான காந்தர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது.

சிறுகதைகள் தொகு

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒடியா புனைகதை ஒரு புதிய திசையை எடுத்தது. பக்கீர் மோகன் சேனாபதி தொடங்கிய போக்கு 1950 களுக்குப் பிறகு வளர்ந்தது. கோபிநாத் மொகந்தி, சுரேந்திர மொகந்தி மற்றும் மனோஜ் தாஸ் ஆகியோர் இந்த காலத்தின் மூன்று இலக்கிய மணிகளாக கருதப்படுகிறார்கள். அவர்கள் ஒரு புதிய போக்கின் முன்னோடிகளாக இருந்தனர், அதாவது ஓடியா புனைகதைகளில் "தனிமனிதனை கதாநாயகனாக" வளர்ப்பது அல்லது முன்வைப்பது என்பது இவர்களின் கதைகளில் பிரதிபலித்தது. கோபிநாத்தின் மற்றொரு சிறுகதையான, 'பிம்புடி' பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது. இக்கதை, சென்னைக்கு அரிசி கடத்தல் செய்தவர்களைப் பற்றி ஒரு வன அதிகாரி சோதனை செய்ததை விவரிக்கிறது. [2]  

விருதுகள் தொகு

மொகந்தி 1950 இல் விசுவா மிலன் மேற்கோளைப் பெற்றார். அம்ருதாரா சந்தனா என்ற புதினத்திற்காக 1955 ஆம் ஆண்டில் முதல் மத்திய சாகித்ய அகாதமி விருதை வென்றார். இலக்கிய படைப்புக்கு வழங்கப்பட்ட முதல் சாகித்ய அகாதமி விருது இதுவாகும். 1973 ஆம் ஆண்டில் அவரது காவியமான மாட்டி மாதாலா வுக்காக ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. [3] 1970 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றிய நேரு விருது அவருக்கு வழங்கப்பட்டது, 1981 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருதை அவருக்கு இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பை தந்ததற்காக வழங்கியது. மேலும், அவர், படைப்பு எழுத்துக்காக இந்திய அரசாங்கத்தின் எமரிட்டஸ் உறுப்பினராக இருந்தார்.  

குறிப்புகள் தொகு

  1. reaching the other share, Delhi; B.R. publication, 1992 P.33
  2. Istahar-92, (26th Volume, 2nd Issue)
  3. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website. Archived from the original on 2016-07-14. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_மொகந்தி&oldid=3552159" இலிருந்து மீள்விக்கப்பட்டது