சரளா தாக்ரல்

முதல் இந்திய பெண் விமான ஓட்டுநர்

சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார்.[References 1] இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு 'பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்' (group ‘A’ aviation pilot license) பெற்றார். பிறகு தொழில் முறை விமானியாக 'பிரிவு ‘பி’ விமானி உரிமம்' (group B commercial pilot's licence) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக தடைபட்டது. விடாது மீண்டும் சுதந்திர இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர் தொழில் முறை விமானி உரிமம் பெற்று, பிறகு ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 1948 இல் பணியேற்று ஆறுமாதங்கள் அப்பணியில் நீடித்தார்.

சரளா தாக்ரல்
சரளா தாக்ரல்
பிறப்பு1914
இந்தியா
இறப்புமார்ச் 15, 2009
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுவரலாறு

உலக வரலாற்றில் முதன் முதலில் ரைட் சகோதரர்களால் நார்த் கரோலினா மாநிலத்தின் கிட்டி ஹாக் என்னுமிடத்தில் டிசம்பர் 17, 1903 அன்று வெற்றிகரமாக விமானம் பறக்கவிடப்பட்டது. உலக அளவில் பல நாடுகளில் பல நிறுவனங்கள் விமான சேவையில் 1909 ஆம் ஆண்டு முதல் இறங்கின. வான்பயணத்தின் பொற்காலம் (1918–1939) எனக் கருதப்பட்ட காலம் என்பது முதலாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, இரண்டாம் உலகப் போரின் துவக்கம் வரையில் உள்ள இடைப்பட்ட காலமாகும். இக்காலம் விமானங்களின் தொழில் நுட்பமும் எண்ணிக்கையும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்த காலமாகும்.

இக்காலத்தில் விமான சேவை வணிக அளவில் வளர்ந்தபொழுது பல விமானிகள் தோன்றினர். அவர்களில் மகளிர் பலரும் அடங்குவர். அமெரிக்காவின் ஹரியெட் குயிம்பி (Harriet Quimby) என்ற பெண்மணி 1911 ஆம் ஆண்டு விமானி உரிமம் பெற்று விமானத்தில் பறந்த முதல் பெண்மணி ஆவார். இவர் விமானி உரிமம் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பெண் விமானியாக சரளா தாக்ரல் (அக்காலத்தில் சரளா ஷர்மாவாக இருந்தவர்) விமானி உரிமம் பெற்றார். தற்காலத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம் (அக்கால இந்தியாவில் தனியார் நிறுவனமாக ஜே.ஆர்.டி டாட்டாவும் அவர் குடும்பத்தினரும் துவக்கிய வர்த்தக விமானசேவை) துவக்கப்பட்டு நான்காண்டுகளே ஆகியிருந்த காலகட்டத்தில், பெண்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான ஆண்களும் கார் ஓட்டுவது கூட அரிதாக இருந்த காலகட்டத்தில், சரளா விமானியானது ஒரு செயற்கரிய வியப்பூட்டும் சாதனை.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சுதந்திரத்திற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இந்தியாவின், தற்கால பாகிஸ்தானின் லாகூரில் பி. டி. ஷர்மா என்பரை தனது 16 வயதில் மணந்த சரளா 1914 இல் பிறந்தவர். இவரது கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமாக ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது. பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும் இடையே அந்நிறுவனம் தன் பயணச் சேவையை நடத்தி வந்தது. சரளாவின் கணவர் குடும்பத்தில் அந்நாட்களில் 9 பேர் விமானியாக இருந்தார்கள். முதன் முதலில் ஏர்மெயில் விமானியாக இந்தியாவில் உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி. டி. ஷர்மாதான். அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில் பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.

சரளாவையும் விமானியாக்குவதில் அவரது கணவரும் கணவரின் தந்தையும் ஆர்வமுடன் இருந்தனர். ஷர்மாவின் தந்தை சரளாவை லாகூர் ஃப்ளையிங் கிளப் -இல் சேர்த்து டிம்மி தஸ்த்தூர் என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார்.[References 2]

இந்தியாவின் முதல் பெண் விமானி தொகு

பயிற்சியாளர் தஸ்த்தூர், சரளாவிற்கு சரியாக 8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார். தனது கணவர் பணியிலிருந்து வரும்வரைக் காத்திருந்து அவரது அனுமதியுடன் 1936 ஆண்டு ஜிப்சி மாத் என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார். அப்பொழுது சரளாவிற்கு வயது 21 தான். தான் வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார்.[References 3]

இவர் விமானம் ஓட்ட கற்ற பிறகே கார் மற்றும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத அக்காலத்தில், தான் விமானி பயிற்சி பெறத் தனது குடும்பம், கணவர், உடன்பயின்ற மாணவர்கள், ஆசிரியர் என அனைவரும் மிகவும் ஆதரவு கொடுத்ததாகக் கூறும் இவர், இவரது நோக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே ஆள் ஃப்ளையிங் கிளப்பில் வேலை செய்த ஒரு ஊழியர் மட்டுமே என்றும் குறிப்பிடுகிறார். முதல் பெண் விமானியாகப் பறந்ததற்குப் பிறகு தனியாக லாகூர் ஃப்ளையிங் கிளப் விமானம் ஒன்றில் ஆயிரம் மணி நேரம் பறந்த பிறகு விமானியாக உரிமம் பெற்றார்.

இவர் கணவர் பி. டி. ஷர்மா ஒரு விமான விபத்தில் 1939 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பிறகு தொழில்முறை விமானியாகத் தகுதி பெற விரும்பி இவர் ஜோத்பூர் சென்றார்.[References 4] அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் துவங்கியதால் உள்நாட்டு விமானப் பயிற்சிகள் தடைபட்டது. எனவே, தனது தொழில்நிலை விமானியாகும் திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் லாகூர் சென்று மேயோ கலைக் கல்லூரியில் ஓவியம் கற்று வங்காள முறை ஓவியத்தில் நுண்கலையில் பட்டயப் படிப்பை முடித்தார்.

சுதந்திர இந்தியாவில் சரளாவின் வாழ்க்கை தொகு

நாடு சுதந்திரம் அடையும் நாள் அருகாமையில் வரும் பொழுது பாகிஸ்தானில் கலவரங்கள் அதிகரித்தது. பெண்கள் அவர்களது கணவர் அல்லது வீட்டில் பிற ஆண்கள் இறக்க நேர்ந்தால் எதிரிகள் கையில் சீரழியாமல் இருக்க, நஞ்சுண்டு உயிரை மாய்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு நச்சுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கைம்பெண்ணாக இரு சிறுமிகளுடன் இருந்த சரளாவை டெல்லிக்குச் சென்றுவிடும்படி ஆலோசனை வழங்கப்பட்டது. அவரும் நிலைமையை உத்தேசித்து தனது மகள்களுடன் புகைவண்டியில் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார்.

டெல்லியில் ஓவியங்களை வரைந்தும், ஆடை ஆபரணங்களை வடிவமைத்தும் விற்பனை செய்து ஒரு தொழிலதிபராக சரளா வாழ்க்கையைத் துவக்கினார். மகரிஷி சாமி தயானந்த சரஸ்வதி துவக்கிய ஆரிய சமாஜத்தின் வழிநடந்த இவர், அந்த சமாஜத்தின் இந்துமத சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் தனது பெற்றோர் தந்த ஆதரவினால் மீண்டும் பி.பி. தாக்ரல் என்பரை 1948 ஆம் ஆண்டு மறுமணம் புரிந்து கொண்டார். தனது தொழில்முறை விமானி பயிற்சியினைத் தொடர்ந்த சரளா 1948 ஆம் ஆண்டு தொழில்முறை விமானி உரிமமும் பெற்றார். அப்பொழுது செய்தித்தாளில் வெளிவந்த, ராஜஸ்தான் அரச குடும்பத்தின் அரச குடும்ப விமானத்திற்குப் பெண் விமானி தேவை என்ற விளம்பரத்திற்கு விண்ணப்பித்தார். ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக ஆறு மாதங்கள் அப்பணியை மேற்கொண்டார். [References 5]

மார்ச் 15, 2009 இல் உயிர்நீத்த சரளா தனது வாழ்நாட்களின் பிற்பகுதியில் ஆடை ஆபரணங்களை வடிவமைக்கும் பணியில் முழு ஈடுபாடு காட்டினார். [References 6] அச்சுப்பட்டை ஓவியங்களால் இவர் வடிவமைத்த சேலைகளும், கைவினை ஆபரணங்களும் பலராலும் விரும்பப்பட்டன. அவரது வாடிக்கையாளர்களில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட் குறிப்பிடத் தகுந்த ஒருவர்.[References 7]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2013-10-08.
  2. http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231
  3. http://www.tribuneindia.com/2006/20060205/society.htm
  4. http://www.tribuneindia.com/2006/20060205/society.htm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-08.
  6. http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/#comment-371
  7. http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/

வெளி இணைப்புகள் தொகு

காணொளி தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரளா_தாக்ரல்&oldid=3731775" இலிருந்து மீள்விக்கப்பட்டது