தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Mahajana College, Tellippalai
வரிசை 10:
அவரின் மறைவைத் தொடர்ந்து ஆசிரியராகக் கடமையாற்றிய நிறுவனரின் மகன் ரி. ரி ஜெயரட்ணம் அதிபராகப் பதவி ஏற்றார். இரண்டு பிரிவாக இயங்கிய பாடசாலையை ‘மகாஜனா’ என்ற பெயரைச் சூட்டி ஒரு படசாலையாகக் கொண்டு வந்தார். இவரே கல்லூரிக்கான இலட்சனை, கல்லூரிக் கீதம் போன்றவற்றை உருவாக்க உதவினார். இவரது காலப்பகுதியிலேயே நட்டநடுவே மைதானம், சுற்றிவர அடக்கமான வகுப்பறைகள், ஓரத்தில் மாணவர் விடுதி, அதன் அருகே அழகிய நடேஸ்வரப்பெருமாள் ஆலயம், மறுகரையில் திறந்தவெளி அரங்கம், முன்புறத்தில் வானளாவி நிமிர்ந்து நிற்கும் துரையப்பா நினைவு மண்டபம் போன்றவை எழுந்தன. ஜெயரத்தினம் 1970ம் ஆண்டு அவர் பணி ஓய்வெடுத்தார்.
 
==செம்பாட்டு மண்ணின் பண்பாட்டு வேர் மகாஜனா==
 
இலங்கையின் வட பகுதியில் நில வளம், நீர் வளம், கலை வளம், தெய்வீக சிந்தனை, கல்வி வளம், தொழில் வளம் முதலான அனைத்து வளங்களும் நிறைந்துள்ள வலிகாமம் பிரதேசத்திற்கு முக்கிய அடித்தளமாக விளங்குவது மகாஜனாக் கல்லூரி ஆகும். இலங்கையின் கல்வி வளர்ச்சியில் முக்கியமான இடம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கு உண்டு. நல்லைநகர் நாவலர் பெருமான் 'சுதேசிகளே! சொந்தப் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும், சைவப் பண்பாட்டின் கருவூலத்தையும் காப்பாற்றுவதற்குக் கல்லூரிகளை நிறுவுங்கள்'' என இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தன் கருத்தை முன் வைத்தார்.
 
அக்காலங்களில் நாவலர் பெருமானின் வாக்கைத் தெய்வவாக்காகக் கொண்ட சைவப் பெரியார் பலரும் பாடசாலைகளை ஸ்தாபிக்க தலைப்பட்டனர். பாவலர் அருளம்பலம் துரையப்பாபிள்ளை அவர்கள் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெல்லிப்பழைக் கிராமத்தில் பனஞ்சோலைகள் நிறைந்த இடத்தில் வியத்தகு மகாஜனா பாடசாலையை 1910 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 14 ஆம் திகதி தோற்றுவித்தார். இவர் ஒரு பாவலர்; புலமையாளர்; கல்விமான்; தேசப்பற்றாளர். இம்மாநிலம் பயனுற்று, மண்ணுலகம் மாண்பு பெற வாழும் வாழ்வே உண்மையான வாழ்வு என உலகுக்கு உணர்த்தியவர்தான் பாவலர். அவரது உயர்ந்த சிந்தனைகளாலும், நோக்கங்களாலும் உருவான 'மஹாஜனா' என்னும் விருட்சம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படிக்கட்டைக் கடந்து, நூற்றாண்டைக் கடந்து, பாவலரின் கனவை நிஜமாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.
 
1910 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் பாடசாலையுடனான தொடர்பை முறித்த பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தனது வீட்டில் மகாஜனா பள்ளிக்குக் கால்கோள் எடுத்தார். அதேகாலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளான கொக்குவில் இந்துப் பாடசாலை, மானிப்பாய் இந்துப் பாடசாலை போன்று தெல்லிப்பழை இந்துப் பாடசாலை என பாடசாலைக்குப் பெயர் சூட்டாமல், 'மகாஜனா' எனப் பெயர் சூட்டியமை 'யாவர்க்கும் உரியது' என்ற பாவலரின் தூரநோக்குப் பார்வையைப் புலப்படுத்துகிறது. 1911 ஆம் ஆண்டு பாடசாலைக்கான பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்த பாவலர், 1912 ஆம் ஆண்டு தற்போதைய கல்லூரி அமைந்துள்ள இடத்தில் பாடசாலைக்கான கட்டடத்தை நிறுவினார். 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக பாடசாலைக் கட்டடம் தரைமட்டமானதுடன், மீண்டும் பாவலரது வீட்டில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. 1919 ஆம் ஆண்டு தரைமட்டமான பாடசாலை மீண்டும் உயிர்பெற்று கட்டடம் கட்டப்பட்டு, பாடசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது. 1926 ஆம் ஆண்டு மகாஜனாவின் ஆரம்ப பாடசாலை தெல்லிப்பழை சரஸ்வதி கனிட்ட தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதுடன், அது 1928 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
 
அந்நிய ஆதிக்கத்தால் தமிழர் பண்பாடுகள் அழிவடையக் கூடாது என்ற ஆழமான உணர்வுகளால் உந்தப்பட்டு பாவலர் மகாஜனாவை ஆரம்பித்தார் என்றே வரலாறுகள் கூறுகின்றன. அம்பனைக் கிராம ஏழை விவாசாயிகளின் பிள்ளைகள் நிலையான செல்வமான கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இப்பாடசாலையை ஸ்தாபித்த பாவலர், இப்பாடசாலையில் 25.06.1929 வரை அதிபராகவும் இருந்து சேவையாற்றி மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் திரு.கா.சின்னப்பா அதிபராகப் பதவியேற்றார். 1935 ஆம் ஆண்டு அதிபர் கா.சின்னப்பா தலைமையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு, முதலாவது "மகாஜனன்' நூல் வெளியிடப்பட்டது.
 
மகாஜனாவானது, சைவத் தமிழ்ப் பண்பாட்டைக் கருவூலமாகக் கொண்டு கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. மக்கள் இக்கல்லூரியின் ஸ்தாபகரான பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களைக் 'கல்வியின் காவலனாக'ப் போற்றுகிறார்கள். தந்தை வழியில் கர்ம வீரராக மகாஜனாக் கல்லூரியைக் கட்டியெழுப்பியவர் ஆளுமை மிக்க அவரது புதல்வர் 'மகாஜன சிற்பி' அமரர் து.ஜயரத்தினம் அவர்கள். அவர் 1936 ஆம் ஆண்டு பாடசாலையில் சாரணியத்தை ஆரம்பித்து வைத்ததுடன், 1945 ஆம் ஆண்டு பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றார். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபைத் தலைவராக அணி சேர்த்த இவர், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு 'துர்க்கா துரந்தரி' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 1947 ஆம் ஆண்டு பாடசாலை இரண்டாம் தரப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன், அதே ஆண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்கள் பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டு மகாஜனா முதற்தர கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதுடன், அதிபர் து.ஜயரத்தினம் வடமாகாண ஆசிரியர் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
 
1950 ஆம் ஆண்டு கல்லூரியின் வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கும் முகமாக இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 1951 ஆம் ஆண்டு வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் கல்லூரி கீதம் மற்றும் கொடி கீதம் ஆகிய இரண்டையும் இயற்றினார். மேலும் அதே ஆண்டு முதன் முதலாக பொறியியல் துறைக்கு திரு.அ.வேல்சாமி பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார். தொடர்ந்து 1952 ஆம் ஆண்டு முதன் முதலாக திரு. எஸ். ஐ. சத்தியோசாதம் விஞ்ஞானத் துறைக்கும், திரு.கே.நல்லைநாதன் மற்றும் திரு.இ.குமாரதேவன் ஆகியோர் கலைத் துறைக்கும் தெரிவானார்கள். 1954 ஆம் ஆண்டு கல்லூரிக்கு நிதி சேகரிக்கும் முகமாக மிகப் பிரமாண்டமான களியாட்ட விழாவை து.ஜயரத்தினம் அவர்கள் ஒழுங்கு செய்தார். இக்களியாட்ட விழா ஒரு மாதம் நடைபெற்றதுடன், அதில் இந்தியக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்களியாட்ட விழாவில் லொத்தர் சீட்டிழுப்பு மூலம் கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
1955 ஆம் ஆண்டு துரையப்பா மண்டபம் (பொன் விழா மண்டபம்), நூல் நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1960 ஆம் ஆண்டு கல்லூரி தனது பொன் விழாவை கொண்டாடியதுடன், இவ்விழா துரையப்பாபிள்ளை ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவுடன் ஆரம்பமானது. இதன்போது கல்லூரி பொன்விழா மலர் வெளியிடப்பட்டதுடன், கல்லூரியில் சிவகாமி சமேத ஆனந்த நடராசர் ஆலயம் சமய சடங்கு கிரியைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கல்லூரியானது அவ்வருடம் 'தனியார் பாடசாலை' என்னும் அந்தஸ்தில் இருந்து 'அரசாங்கப் பாடசாலை' என்னும் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. அவ்வருடம் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1800 ஐ எட்டியது. கல்லூரியின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக 1961 ஆம் ஆண்டு கல்லூரி அதி உயர் தரத்துக்கு உயர்த்தப்பட்டது. 1969 ஆம் ஆண்டு கல்லூரியின் வைரவிழா மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் 1940 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹாஜனாவின் மும்மணிகளான மகாகவி உருத்திரமூர்த்தி, அ.செ.முருகானந்தம், அ.ந.கந்தசாமி மற்றும் செ.கதிரேசப்பிள்ளை ஆகியோர் ஈழத்து இலக்கிய உலகிற்கு வழங்கிய பங்களிப்புக்களால் மகாஹனாவின் பெயர் அழியா இடம் பெற்றது.
 
பாவலரின் மருமகளும், மகாஜன சிற்பி ஜயரத்தினம் அவர்களின் மனைவியுமான திருமதி. இராணிரத்தினம் ஜயரத்தினம் கடந்த 07.06.2010 அன்று தனது 90 ஆவது வயதில் லண்டனில் காலமானர். அவர் தனது கணவருடன் இணைந்து மகாஜன அன்னையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தன்னை அர்ப்பணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1971, 1972 ஆம் ஆண்டுகளில் முறையே திரு.மா.மாகாதேவன், திரு.பொ.ச.குமாரசாமி ஆகியோர் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்றனர். 1973ஆம் ஆண்டு திரு.க.சிவசுப்பிரமணியம் அதிபராகப் பொறுப்பேற்றதுடன், 1976 ஆம் ஆண்டு திரு.பொ.கனகசபாபதி அதிபராகக் கடமையேற்றார். தொடர்ச்சியாகப் பல ஆளுமை மிக்க அதிபர்களையும், தன்னலம் கருதாத பல நூறு ஆசிரியர்களையும் இக்கல்லூரி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் (ஐக்கிய இராட்சியம்) ஆரம்பிக்கப்பட்டதுடன், 1988 ஆம் ஆண்டு கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் சகல வசதிகள் கொண்ட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்ட 100 பாடசாலைகளில் மகாஜனாவும் ஒன்று என்பதுடன், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 பாடசாலைகளில் இதுவும் ஒன்று என்ற பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. 1991 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் (பிரான்ஸ்) உருவாக்கப்பட்டதுடன், 1994 ஆம் ஆண்டு கொழும்பு பழைய மாணவர் சங்கம் மீளமைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட போர் அனர்த்தம் காரணமாக கல்லூரி இடம்பெயர்ந்து, மீண்டும் தெல்லிப்பழையில் 1999 ஆம் ஆண்டு இயங்க ஆரம்பித்தது. 2001 ஆம் ஆண்டு ஸ்கந்தவரோதயக் கல்லூரியுடன் 'Battle of the Heros' துடுப்பாட்டப் போட்டி ஆரம்பிக்கப்பட்டதுடன், 2003 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் (ஜேர்மனி) ஆரம்பிக்கப்பட்டது.
 
இக்கல்லூரியானது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கி, பெரும்பான்மையான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாவதற்கு ஊன்று கோலாக இருந்துள்ளது. இலங்கையில் கல்விமான்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் பலரை உருவாக்கும் உன்னத பணியில் மகாஜனாவுக்கு தனிப் பங்கு உண்டு. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் கல்லூரி பல இடங்களில் இடம் பெயர்ந்து, தற்காலிக கொட்டகைகள் பலவற்றில் இயங்கியமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கல்லூரி தனது சொந்த இடத்தில் நூற்றாண்டைக் கண்டமை மன மகிழ்வுக்கு உரியது.
 
இங்கு கல்வி கற்ற ஒவ்வொருவரும் மகாஜனாவை தங்கள் அன்னையாக உணர்கிறார்கள்; பார்க்கிறார்கள்; மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள். 'மகாஜனா எங்கள் தாய்; எங்களது அறிவின் ஆதாரம்; நாங்கள் வரித்துக் கொண்ட இலட்சியங்கள், எங்களை வழிப்படுத்துகின்ற விழுமியங்கள், எங்கள் வாழ்வுக்கான திறன்கள், மேலான ரசனைகள் அனைத்தும் மகாஜனா அன்னையின் அருட்கொடைகள்'' என பேராசிரியர் நா.சண்முகலிங்கம் அவர்கள் பெருமை கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியின் பலனால் பல கல்வி நிறுவனங்கள் உருவாகின. அக்கல்வி நிறுவனங்களுக்கும் மகாஜனாவுக்கும் பாரியதொரு வேறுபாடு உண்டு. ஏனைய பாடசாலைகள் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த பேருள்ளம் கொண்ட நிலச் சுவாந்தார்கள் மற்றும் வள்ளல்கள் முதலியோரால் ஆரம்பிக்கப்பட்டன. அதேவேளை "இந்து போர்ட்' முதலிய கல்வி நிறுவனங்களால் ஸ்தாபித்துப் பராமரிக்கப் பட்டன. ஆனால் மகாஜனாக் கல்லூரியானது, கல்வி அறிஞர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு, கிராம மக்களாலும், பழைய மாணவர்களாலும், பெற்றோர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதனாலேயே ஒரு சிறிய பாடசாலை 'கிராமத்துப் பல்கலைக்கழகமாக'ப் பரிணமித்தது என்றால் அது மிகையாகாது.
 
அறுபது எழுபதுகளில் விளையாட்டுத்துறைகளில் குறிப்பாக உதைபந்தாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலும், இலங்கை முழுவதும் பல சாதனைகளை இக்கல்லூரி புரிந்துள்ளது.
 
"உனை நீ அறி' (Know thyself) என்ற பாடசாலை விருது வாக்குக்கு அமைய பாடசாலையின் தூரநோக்கு 'உயர் விழுமியங்களைப் பேணும் பூரண மனிதத்துவ மாணவ சமூக உருவாக்கம்' (Creation of perfect humanistic society of great values) ஆகும். இக்கல்லூரியில் தற்போது இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்காக மாணவர் முதல்வர் ஒன்றியம், உயர் தர மாணவர் மன்றம், தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், இந்து மன்றம், கிறிஸ்தவ மன்றம், விஞ்ஞான மன்றம், சமூகக் கல்வி மன்றம், சாரணியம், சுற்றாடல் பாதுகாப்பு மன்றம், ஒழுக்காற்று சபை, நுண்கலை மன்றம், சதுரங்கக் கழகம், இளம் புத்தூக்குனர் கழகம், நூலகர் மன்றம், பொது அறிவு மன்றம், விவாத மன்றம், மனைப்பொருளியல் மன்றம், தகவல் தொழிநுட்ப மன்றம், புகைப்படக் கலை மன்றம் முதலிய மன்றங்களும், இலங்கைச் செஞ்சிலுவை சங்கம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு, மாணவர் நலன்புரி படைப்பிரிவு முதலிய கழகங்களும் இயங்கின்றன.
 
இலங்கை அரசாங்கம் இக்கல்லூரி ஸ்தாபகரான அருளம்பலம் துரையாப்பாபிள்ளை அவர்களை கௌரவிக்கும் முகமாக ஞாபகார்த்த முத்திரை ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கல்லூரிப் பழைய மாணவரான பேராசிரியர் அருட்குமரன் 'Knighthood' பட்டம் பெற்றமையும் கல்லூரிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பேராசிரியர் அருட்குமரனுக்கு இவ்விருது கிடைத்த செய்தியை London Gazette - 'The most forward-thinking medical leader in this coutry' எனத் தனது இணையத் தளத்தில் விபரிக்கிறது.
 
ஆரம்ப காலத்தில் கிராமச் சூழலில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அறிவாலயம், படிப்படியாக வளர்ச்சி கண்டு இலங்கையின் பல பாகங்களில் உள்ள மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ததுடன், கடந்த நூறு ஆண்டுகளில் தலை சிறந்த கல்விமான்கள் பலரையும் உருவாக்கியுள்ளமை கல்லூரிக்கும், ஸ்தாபகருக்கும் மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும் கிடைத்த அளப்பரிய வெற்றியாகும். வேளாண்மை வளம் மிக்க செம்பாட்டு மண்ணில், தமிழர் பண்பாட்டு வேர்கள் ஆழப் பதிந்துள்ள தெல்லிப்பழை ஊரின் நடுவில், சைவமும் தமிழும் நிறைந்த கல்விச் செல்வம் தழைத்தோங்க வேண்டும் என்ற அவாவுடன் ஆரம்பிக்கப்பட்ட மகாஜனாவின் தொடக்கமானது, தமிழர்களின் மிக உயர்ந்த வரலாற்று நிகழ்வாக பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. தம்மொழி, மதம், நிலம், பண்பாடு முதலியவற்றைப் பேணிப் பாதுகாக்க நினைக்கும் ஒரு மனிதனின் உயர்ந்த எண்ணங்கள் வாழும் ஆலயமாக "மஹாஜனா அன்னை' போற்றப்படுகிறாள்.
==தலைமை ஆசிரியர்கள்==
* ரி. ரி.ஜெயரத்தினம்
"https://ta.wikipedia.org/wiki/தெல்லிப்பழை_மகாஜனக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது