தமிழ் நாட்டின் ஆறுகள் தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடிப்பு இடங்களில் பெய்த மழையினால் புதுவெள்ளம் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்,ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.. இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தாங்கள் போற்றி மகிழ்ந்து,பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் தங்கள் வீட்டில் பல விதமான சோறுகள், ( தேங்காய் சோறு, பொங்கல், எலுமிச்ச சோறு, தக்காளி சோறு, தயிர் சோறு,)அவல்,பொரி கடலை போன்ற உண்ணும் பொருள்களை தயார் செய்து அதை ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.