தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது, வளர்ந்து வரும் நகரமும்கூட.
இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறு, கல்வெட்டு, வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பே இந்நூல். நூலாசிரியரின் கடின உழைப்பும், சுவைபடச் சொல்லும் விதமும், ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும், செய்திகளும், வரலாறும் உள்ளனவா என்பதும் வாசிப்போரை வியக்க வைக்கின்றன.
நூலில் பின்னிணைப்பாக ஐவர் ராசாக்கள் கதை, கன்னடியன் போர், வீணாதிவீணன் கதை, ஆந்திரமுடையார் கதை ஆகியவற்றின் கதைப் பாடல்கள் வடிவங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை, வள்ளியூர் தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய முயல்வோருக்குப் பேருதவியாக இருக்கும்.