நிலத்தடி நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிலத்தடி நீர்ப்படுகை-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
No edit summary
வரிசை 1:
#REDIRECT [[நிலத்தடி நீர்ப்படுகை]]
ஆசிரியர் பெயர்: Palaniappan Kandaswamy
 
அறி-4: அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும்
 
சிக்கல்களும் அறிவியல் தீர்வும்
 
 
நிலத்தடி நீர் என்றால் சாதாரண மக்களுக்கும் தெரியும். நிலத்திற்கு அடியில் இருக்கும் நீர் என்று வார்த்தையிலிருந்தே புரிகிறது. நிலத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழைநீர் மண்ணிற்குள்ளே ஊடுருவி அடியில் இருக்கும் பாறைகளுக்கு மேல் சேர்ந்து நிலத்தடி நீர் ஆகிறது என்பது பாலபாடம். பாறைகள் பல அடுக்குகளாக இருக்கும். மேல் மட்டத்திலுள்ள பாறைகளில் உள்ள வெடிப்புகளின் ஊடே நீர் கசிந்து கீழே சென்று அதற்கடுத்த மட்டத்திலுள்ள பாறைகளின் மேலும் சேமிக்கப்படும். இவ்வாறு நிலத்தடி நீர் பல மட்டங்களில் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த நிலத்தடி நீர், நிலமட்டத்தின் சரிவுகளுக்கு ஏற்ப பள்ளத்தை நோக்கி நகரும்/ஓடும். நீர் மெதுவாக நகர்ந்தாலும் ஓடுகிறது என்று சொல்வதுதான் மரபு. இந்த நீரோட்டத்திற்கு “நிலத்தடி நீரோட்டம்” என்று பெயர்.
 
 
அடிமட்ட பாறைகள், சரிவான பூமிகளின் கடைசி பகுதியில், தரையின் மேல் மட்டத்திற்கு வந்து விடுவதால், அங்கே இந்த நிலத்தடி நீர் கசிந்து ஒன்று சேர்ந்து ஊற்றாக வெளிவருகிறது. இந்த ஊற்று நீர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஓடையாகவும், ஆறாகவும மாறுகின்றன. மழை காலங்களில் நிலங்களின் மேல் மட்டத்திலிருந்து வடியும் நீரும் ஆற்றுடன் கலக்கும். ஆறுகள் கடைசியில் கடலில் கலந்து விடுகின்றன. கடல்நீர் மறுபடியும் ஆவியாகி, மேகமாகி, நிலப்பிரதேசங்களில் மழையாகப் பெய்கிறது. இந்த “நீர்ச்சுழற்சி” யைப்பற்றி எல்லாரும் படித்திருப்பார்கள்.
 
இது இயற்கையின் நியதி. மனிதன் இயற்கை விதிகளில் தலையிடாத வரையில் இதுமாதிரிதான் நடந்து கொண்டிருந்திருக்கிறது. மனிதனும் முடிந்தவரை இயற்கையோடு ஒன்றிணைந்துதான் வாழ்ந்திருக்கிறான். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தச்செய்தியை நன்றாக கவனத்தில் கொள்ளவும். நாடோடியாக அலைந்த காலம் போய், நிலையாக வாழும் நாகரிகம் தோன்றிய காலத்தில், நிலத்தடி நீர் ஆறுகளாக மாறி ஓடும் இடங்களில் மட்டுமே வாழ்ந்து, அங்கேயே ஆற்றுப்பாசனம் மூலம் விவசாயம் செய்து, அதிலிருந்து வரும் உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தான்.
 
காலப்போக்கில் ஆற்றுப்பகுதிகளின் சீற்றங்களை சமாளிக்க முடியாமலும், மற்றும் மக்கள் தொகை பெருகியதாலும் மழை நன்றாகப் பெய்யக்கூடிய மேட்டுப்பகுதிகளுக்கு மனிதன் குடி பெயர்ந்தான். அங்கு மானாவாரி விவசாயம் செய்து, கிடைக்கக்கூடிய உணவுகளை உண்டு வாழ்ந்தான். எதேச்சையாக நிலத்தை ஆழமாகத் தோண்டும்போது நீர் சுரப்பதைக் கண்டுபிடித்த பிறகு, கிணறுகள் தோன்றின. அவன் வாழக்கூடிய எல்லையும் விரிவடைந்தது. அதே நீரைக்கொண்டு விவசாயமும் செய்ய ஆரம்பித்தான். இவ்வாறுதான் நிலத்தடி நீரைக்கொண்டு செய்யப்படும் கிணற்றுப்பாசன விவசாய முறை பரவலாகப் பெருக ஆரம்பித்திருக்க வேண்டும். இது ஏறக்குறைய ஒரு இருநூறு முன்னூறு வருடங்களுக்கு முன்பு தோன்றியிருக்கலாம்.
 
இந்த கால கட்டத்தில்தான் நாணயங்கள் அதிகமாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்தன். அதுவரை இருந்த பண்டமாற்று முறைகள் குறைந்து நாணயங்களை மனிதன் பொருட்கள் வாங்குவதற்கு உபயோகப்படுத்த ஆரம்பித்தான். மனிதனின் சேமிப்பு, தானியமாகவோ, உண்ணும் பண்டங்களாகவோ இருந்தவரை, அவைகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாதாகையால், அவைகளை மக்கள் தாராளமாக உபயோகப்படுத்தி வந்தார்கள். தங்களுக்குப் போக மிஞ்சியதை தேவையானவர்களுக்கும் கொடுத்தார்கள். மனிதனுக்கு அப்போது பரந்த மனப்பான்மை இருந்தது. நாணயப் புழக்கம் வந்த பிறகுதான், மனிதன் சேமிப்புப் பழக்கத்தை ஆரம்பித்தான். விவசாயம் பொய்க்கும்போது வேண்டிய தேவைக்காகவும் மற்ற பலவித தேவைகளுக்காவும் சேமித்தான். பெண்கள் தங்க நகைகள் போட ஆரம்பித்ததும் இதே காரியத்திற்காகத்தான்.
 
சேமிப்பு அதிகமாக அதிகமாக, மனிதனுக்கு ஆசை வளர்ந்ததே தவிர குறையவில்லை. இன்னும், இன்னும், இன்னும், இன்னும் என்று சேர்த்தானே தவிர நிறுத்தவேயில்லை. தனக்கு, தன் பிள்ளைக்கு, தன் பேரனுக்கு, இப்படியாகவே போய், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகி விட்டது. விவசாயத்தையும் இந்த மனப்பான்மை மாற்றியது. இந்த மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நிலத்தடி நீரின் நிலைதான்.
 
என் முன்னோர்கள் விவசாயிகளாக இருந்தார்கள். ஆனால் தாக்குப்பிடிக்க முடியாமல் நகரத்திற்கு வந்துவிட்டார்கள். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் கிராமத்திலேயே விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய சிறு வயதில் (சுமார் பத்து பனிரெண்டு வயது இருக்கும்) விடுமுறை நாட்களில் ஊருக்குப்போவேன். என் மாமா தோட்டத்தில் சில நாட்களும், பெரியம்மா தோட்டத்தில் சில நாட்களும் கழிப்பேன்.
 
அந்தத் தோட்டங்கள் எல்லாம் கிணற்றுப்பாசனம் மூலம் பயிர் செய்யப்பட்டவை. தண்ணீர் இறைக்க “கவலை”, (சில ஊர்களில் கமலை என்பார்கள்) உபயோகப்படுத்துவார்கள். ஒரு கிணற்றுக்கு இரண்டு முதல் நான்கு கவலைகள் இருக்கும். சாதாரணமாக இரண்டு கவலைகள்தான் பெரும்பாலான கிணறுகளில் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். தோலினால் ஆன “பறி” என்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள். வடக்கயிறும் வார் கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிணற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும். அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும்.
 
ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் மூன்று அல்லது மூன்றரை ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.
 
அப்போது கிணறுகளில் நீர் மட்டம் தரை மட்டத்தில் இருந்து கீழே இருபது அடிக்குள் இருந்தது. அப்படி ஒரு கிணற்றில்தான் நான் நீச்சல் கற்றுக் கொண்டேன். கிணற்றின் மேலிருந்து குதிக்கப் பழகவில்லை. ஏனெனில் அதற்குள் விடுமுறை முடிந்து விட்டது. சரி அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அடுத்த வருடம் ஏதோ காரணத்தினால் மாமா தோட்டத்திற்கு போக முடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் போனால் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாற்பது அடிக்கு கீழே போய்விட்டது. தண்ணீருக்குள் ஜம்ப் பண்ணி நீரின் அடிமட்டத்திற்குப்போய் மேலே வரும் வித்தையை கற்க முடியாமலேயே போய் விட்டது.
 
 
என்ன ஆயிற்று என்றால், அந்த இரண்டு வருடங்களில் மின்சார பம்ப்புகள் அறிமுகமாயிருந்தன. அதனால் பல சௌகரியங்கள். கவலை இறைக்க இரண்டு ஜோடி மாடுகள், இரண்டு ஆட்கள் தேவையில்லை. தண்ணீர், கவலையில் வருவதை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக வாய்க்காலில் வந்தது. அதிக பரப்பு நிலத்தில் நீர் பாய்ச்சி விவசாயம் செய்ய முடிந்தது. அதிக பணம் சேர்ந்தது. அதிகமான கிணறுகளும் வெட்டப்பட்டன. கிணறுகளின் ஆழமும் கூடிப்போய் விட்டது.
 
இந்த மாற்றம் இந்திய விவசாயத்தின் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனை ஆகும். விவசாயியின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி. விவசாயியின் வருமானம் பன்மடங்கு பெருகியது. ஆள் தேவை, கால்நடைகளின் தேவை குறைந்தது. கடின உழைப்பு குறைந்தது. நேரம் மிச்சமாகியது. இரவிலும் பாசனம் செய்ய முடிந்தது. அவனுடைய வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்தது. விவசாயி சுகவாசி ஆனான். எவ்வளவு சௌகரியங்கள்? பின்னால் ஏற்படப்போகும் ஆபத்துகளை உணராமல் விவசாயி இந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தான்.
 
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் விவசாயப் புள்ளி விவரங்களை கொஞ்சமாக தருகிறேன். பயப்படாதீர்கள். ஏறக்குறைய மொத்த இந்தியாவின் பல மாநிலங்களின் நிலையும் இதுதான். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர்கள். இதில் பாதியில் அதாவது ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதில் பாதி மானாவாரி விவசாயம். மிச்சம் பாதி பாசன விவசாயம். பாசனத்திற்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஆற்றுப்பாசனம், குளத்துப்பாசனம், கிணற்றுப்பாசனம் ஆகியவையே அந்த மூன்று வகைகள். மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன. இப்படியாக கிணற்றுப்பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம் வழங்குகின்றது. தற்போதைய நிலவரப்படி மொத்த கிணறுகளின் எண்ணிக்கை 18 லட்சம்.
 
அதாவது ஒரு கிணறு 2/3 ஹெக்டேர் நிலத்தைத்தான் பாசனம் செய்கிறது. ஏறக்குறைய ஒண்ணேமுக்கால் ஏக்கர். இது ஒரு சராசரி கணக்கு. சில கிணறுகள் அதிக நிலத்தைப் பாசனம் செய்யலாம். அதே மாதிரி சில கிணறுகள் குறைவான நிலத்தைப் பாசனம் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் கிணறுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர, அவைகளினால் பாசனம் பெறும் நிலத்தின் அளவு கூடவில்லை.
 
இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
 
மின்சார மோட்டார் பம்பு செட்டுகளை உபயோகப்படுத்த ஆரம்பித்த புதிதில் விவசாயியின் வாழ்க்கை எப்படி ஒளிமயமாக மாறியது என்று பார்த்தோம். ஆனால் மனித மனம் விசித்திரமானது. முதலில் ஆசை தோன்றும். அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கடைசியில் பேராசையாக மாறும். பல ஆயிரம் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் கூட, இன்னும் சில ஆயிரம் கோடிகள் கிடைக்காதாவென்று அலைகிறார்கள். விவசாயியும் இதற்கு விலக்கில்லை. தண்ணீர் சௌகரியமாகக் கிடைக்க ஆரம்பித்ததும் தன் விவசாயத்தைப் பெருக்கினான். அதற்கு இன்னும் தண்ணீர் தேவைப்பட்டது. அதற்காக கிணற்றை ஆழப்படுத்தினான். ஒருவனைப்பார்த்து பலரும் இதையே செய்தார்கள். வசதி உள்ளவன் இன்னும் ஆழமாக வெட்டினான். இந்தச் சமயத்தில்தான் ஆழ்குழாய் கிணறுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாதாரண திறந்த வெளிக்கிணறுகளை மேலும் ஆழப்படுத்த முடியாததால் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகளுக்கு மாறினார்கள். முதலில் 500 அடி, பிறகு 600 அடி, இப்படியாக 1000, 1200 அடி ஆழமான ஆழ்குழாய் கிணறுகள் சர்வ சாதாரணமாய் விட்டன. இப்படியே ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கிணறுகளை ஆழப்படுத்தி, ஆழப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு போனார்கள். கிணற்று நீரின் தன்மையும் பல இடங்களில் மாறிப்போனது.
 
இந்த நீர்த் தேடலில் மக்கள் ஒரு தத்துவத்தை மறந்துவிட்டார்கள். நிலத்தடி நீர் என்பது ஒரு வற்றாத சுரங்கமல்ல. அது ஒரு பேங்க் சேமிப்பு கணக்கு மாதிரி. அந்தக்கணக்கில் எவ்வளவு பணம் போடுகிறோமோ அவ்வளவு பணம்தான் எடுக்கமுடியும். அதில் இருந்த முந்தைய சேமிப்பு முழுவதையும் எடுத்த பிறகு, புதிதாக எவ்வளவு போடுகிறோமோ அவ்வளவைத்தானே எடுக்க முடியும். தமிழ் நாட்டின் நிலத்தடி நீரின் நிலை இப்போது இந்த அளவிற்கு வந்துவிட்டது. விவசாயியின் நீர்ப்பேராசை நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது.
 
விவசாயியின் பேராசைக்கு தூபம் போட்டதில் அரசுக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ்நாட்டின், (ஏன், மொத்த இந்தியாவின் என்று கூட சொல்லலாம்) பெரிய சாபக்கேடு என்னவென்றால் “இலவசக் கலாச்சாரம்”. எல்லாம் இலவசம். டி.வி. இலவசம். கேஸ் அடுப்பு இலவசம். பெண்டாட்டி இலவசம் (இலவசக் கல்யாணம்), பொங்கல் சாமான்கள் இலவசம், தீபாவளிக்கு வேஷ்டி, சேலை இலவசம். இப்படியாக எல்லோரையும் பிச்சைக்காரர்களாக மாற்றியாயிற்று. இது போக அரசு வேலை வாய்ப்புத்திட்டம். காலையில் போய் பெயர் கொடுத்துவிட்டு மரத்தடியில் படுத்து தூங்கி எழுந்தால் நூறு ரூபாய் கூலி. கஷ்டப்பட்டு வேலை செய்பவன் முட்டாளாகிக்கொண்டு வருகிறான்.
 
இந்த வரிசையில் முதலில் வந்தது விவசாயிகளின் கிணறுகளுக்கு இலவச மின்சாரம். இதை நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு விஞ்ஞான நிபுணர்களும் ஒரு காரணம். அதாவது ஆற்றுப்பாசன விவசாயிகளும், குளத்துப்பாசன விவசாயிகளும் தங்கள் நீர்த்தேவைக்காக செய்யும் நீர்த்தீர்வை செலவு சுமார் நூறு ரூபாய்கள் மட்டுமே. ஆனால் கிணற்றுப்பாசன விவசாயிகள் கிணறு வெட்ட, மோட்டார் பம்ப் செட் வாங்க, மின்சார இணைப்பு வாங்க என்றெல்லாம் அதிக முதலீடு செய்த பின்பும், தொடர் செலவாக மின்சார கட்டணம் ஆயிரக்கணக்கில் கட்டவேண்டியதாகஇருந்தது. இதை ஈடுகட்டும் வகையில் கிணற்றுப்பாசன விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கிறதா என்றால் அது இல்லை. ஆகவே அவர்களுக்கு அரசு ஏதாவது வகையில் சலுகை காட்டவேண்டுமென்று போராட்டங்களும், கருத்துப் பரிவர்த்தனைகளும் நடந்ததன் விளைவாக, கிணற்றுப்பாசன விவசாயிகளின் மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
 
இங்குதான் ஆரம்பித்தது வினை. மின்சாரத்திற்கு காசு இல்லை என்று ஆனவுடன் நிலத்தடி நீர் உபயோகம் பன்மடங்காகப் பெருகியது. எவ்விதக்கட்டுப்பாடும் இல்லாமல் விவசாயிகள் நிலத்தடி நீரை உறிஞ்ச ஆரம்பித்தனர். நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குப் போனது. நிலத்தடி நீர் மக்களின் பொதுச்சொத்து என்கிற கருத்து யாருக்கும் இல்லாமற்போனது. யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்கிற மனப்பான்மையே எங்கும் நிலவியது. பல கிணறுகள் வறண்டு போயின. வளர்ந்து வரும் நகரத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு வேலைக்கு ஆட்களும் கிடைப்பது அரிதாகியது. அந்த விவசாயிகள் பலரும் “முட்டுக்கல்” விவசாயத்தைப் பண்ண ஆரம்பித்தார்கள். அதென்ன முட்டுக்கல் விவசாயம் என்கிறீர்களா, அதுதாங்க ரியல் எஸடேட் பிசினஸ். எல்லோரும் தங்கள் நிலங்களை புரோக்கர்களிடம் அக்ரீமென்ட் போட்டுவிட்டு காசை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
 
இந்த நிலையை வளர விட்டால் உணவுப்பஞ்சம் வந்துவிடுமென்ற பயம் அரசுக்கு வந்தது. உள்நாட்டு வெளிநாட்டு நிபணர்களை வரவழைத்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து, ஊரிலுள்ள கிணறுகளை எல்லாம் சொகுசு காரில் சுற்றிக் காண்பித்தார்கள். அவன் ஊர்ல அவன் கிணத்தைப் பார்த்ததே இல்லை. இந்தியாவுக்கு வந்துதான் கிணற்றைப்பார்க்கிறார்கள். ஆனால் அவன் கெட்டிக்காரன். இந்த உண்மையை வெளியில் சொல்வானா? அவர்களும் தஸ்புஸ் என்று இங்கிலீசில் பேசிக்கொண்டு, நம்ம ஆளுகள் கிட்ட இருந்தே எல்லா விசயமும் தெரிஞ்சுகிட்டு, இங்கலீசில் ஒரு பெரிய ரிப்போர்ட் கொடுத்தார்கள். அதில் “நீங்கள் பயப்படுகிறது முற்றிலும் சரி. இப்படியே விட்டால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில் தமிழ்நாடு பாலைவனமாகப் போய்விடும். உள்ளூர் நிபுணர்களை வைத்து இன்னும் பல தகவல்களைத் திரட்டிக்கொண்டு எங்கள் ஊருக்கு வரச்சொல்லுங்கள். இந்த ஊர் வெய்யிலில் எங்களால் சரியான தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே நாங்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடித்து சொல்லியனுப்புகிறோம்” என்று சொல்லிவிட்டு அவர்களின் கன்சல்டேஷன் பணத்தை வாங்கிக்கொண்டு பறந்து போனார்கள்.
 
இப்படி பலநாட்டு நிபணர்களுக்கும் சொம்பு தூக்கி, நம் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்தது என்னவென்றால்:
 
1.தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அருகி வருகிறது.
 
 
2.அதற்கு உடனடியாக ஏதாவது செய்தேயாகவேண்டும்.
 
 
3.என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து சொல்ல உடனடியாக ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படவேண்டும்.
 
 
4.அவர்கள் உடனே பல வெளிநாட்டுகளுக்குச் சென்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வரவேண்டும்.
 
 
5.இந்தக் குழுவிற்கு மாண்புமிகு வேளாண்அமைச்சர் தலைமை தாங்குவார்.
 
 
இப்படியாக பல அரசியல் கூத்துகள் நடந்து முடிந்த பிறகு, நம் உள்ளூர் நிபணர்கள் சில உத்திகளைக் கண்டுபிடித்தார்கள். முதலில் இந்த இலவச மின்சாரத்தைக்கட்டுப்படுத்த வேண்டும் என்ற உண்மை புலப்பட்டது. அரசியல் ரீதியாக ஒன்றை இலவசம் என்று ஆக்கிய பிறகு அதற்கு காசு வாங்க ஆரம்பிப்பது அரசியல் தற்கொலைக்கு சமம். இதற்காக நம் நிபுணர்கள் ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்தார்கள். செருப்பு காலுக்குப் பத்தவில்லையா? காலை வெட்டு! இந்த ரீதியில் மின்சாரம் சப்ளை செய்வதைக் கட்டுப்படுத்தினார்கள். 24 மணி சப்ளை போய் 20 மணி, 16 மணி, 12 மணி, 8 மணி என்று படிப்படியாகக் குறைத்து தற்போது இரண்டு தவணைகளாக மொத்தம் 6 மணி நேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படுகிறது. எதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் நம் மக்கள் அதற்கு பழகிக்கொள்ளுவார்கள் என்கிற உண்மை அரசியல்வாதிகளுக்குப் புரிந்து விட்டது.
 
பிறகு இஸ்ரேல் சென்று வந்த நம் நிபுணர் ஒருவர் “சொட்டு நீர்ப்பாசன முறையை” அறிமுகப்படுத்தினார். அப்போது நீர்ப்பாசன வல்லுநர்கள் எல்லோரும் “ஆஹா, நிலத்தடி நீர்ப்பிரச்சினை தீர்ந்துவிட்டது” என்று ஆர்ப்பரித்தார்கள். சில ஆண்டுகள் கழிந்த பிறகு அந்த முறையில் உள்ள சீர்கேடுகள் வெளிவர ஆரம்பித்தன. அதிக முதலீடு, தரமற்ற குழாய்கள், நம்நாட்டுக்கு உகந்த சரியான தொழில் நுட்பம் இல்லாமை, ஆகிய காரணங்களினால் இந்த சொட்டு நீர்ப்பாசன முறை எதிர்பார்த்த அளவு பலனைத்தரவில்லை. இப்போதும் பல விவசாயிகள் இந்த முறையை குறிப்பிட்ட சில பயிர்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்து வருகிறார்கள். உதாரணத்திற்கு திராக்ஷை பயிர். இதற்கு இந்த முறை மிகவும் லாபகரமாக இருக்கிறது. தென்னைக்கு ஓரளவு பரவாயில்லை. ஆனால் மற்ற பயிர்களுக்குப் பொருந்தவில்லை. அரசு 50 சதம் மான்யம் கொடுத்தும் இந்த முறை பிரபலமாகவில்லை.
 
 
 
விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் நீரைச்சிக்கனமாகப் பயன்படுத்தி மகசூல் குறையாமல் விவசாயம் செய்யும் முறைகளைப்பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் இந்தப்பிரச்சினையை நன்கு உணர்ந்திருக்கிறது. அவ்வப்போது விஞ்ஞான நிபுணர்கள் கூடி விவாதிக்கிறார்கள். பிரச்சினை என்னவென்று எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். தீர்வுகளைப்பற்றியும், அவைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்பதைப்பற்றி இன்னும் தெளிவான கருத்துகள் உருவாகவில்லை.
 
நிலத்தடி நீர் குறைவதினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்.
 
1.விவசாயம் நலிவுறும். கிணற்றுப்பாசனத்தையே நம்பியுள்ள விவசாயம் குறைந்துபோகும். விவசாயம் நலிவுற்றால் என்ன நடக்கும் என்று எல்லொரும் அறிவார்கள். சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கவேண்டிய நிலை உருவாகும். இப்போது இருக்கும் போக்குவரத்து வசதிகளினால் உணவுப் பொருட்களை இன்னோரிடத்திலிருந்து கொண்டு வர முடிந்தாலும் மொத்த உற்பத்தி குறைவதினால் நாட்டுக்கு இழப்புதான்.
 
 
 
2.நீர்த்தேவை அதிகமாக உள்ள தொழில்கள் நசியும். திருப்பூர் போன்ற நகரங்கள் நிலத்தடி நீரை வெகுவாக நம்பியிருக்கின்றன. பின்னலாடைத்தொழில் மூலம் பல்லாயிரக்கானவர்கள் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று நாட்டுக்கு அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் தொழில் இது. இம்மாதிரி பல தொழில்கள் நிலத்தடி நீரைச் சார்ந்து இருக்கின்றன. அவை எல்லாம் நிலத்தடி நீர் இல்லாவிட்டால் நசித்துவிடும்.
 
 
 
 
3.கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் குடியிருக்கும் மக்கள் தங்கள் குடிநீர்த்தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பியிருக்கிறார்கள். குடிநீர் என்றால் குடிப்பதற்கு மட்டும் என்று அர்த்தம் இல்லை. வீட்டிற்கு வேண்டிய அனைத்து உபயோகங்களுக்கிமான நீர் என்றுதான் அர்த்தம். நிலத்தடி நீர் அருகும் பட்சத்தில் குடியிருப்புக்ளையே காலி செய்யவேண்டிய நிலை உருவாகக்கூடும்.
 
 
 
4.இதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் இருக்கும் மற்ற சிறுசிறு தொழில்களும் நசித்துப்போகும். இச்சிறு தொழில்கள் மற்ற பெரும் தொழில்களையும் மக்கள் குடியிருப்புகளையும் சார்ந்திருப்பவையாக இருக்கும்.
 
 
 
 
5.சுற்றுச்சூழல் மாசடையும். சரியான விவசாயமும், தொழிலும், மக்கள் நடவடிக்கைகளும் இருந்தால்தான் ஒரு பகுதி சுத்தமாக இருக்கும். இல்லாவிடில் அந்தப் பகுதி தரிசாகப்போய் பாழடைந்து சுற்றுச் சூழல் மாசுபட ஏதுவாகும்.
 
 
 
இந்த நிலத்தடி நீர் அருகி வருவதை சமாளிக்க இரண்டு முக்கியமான வழிகள் இருக்கின்றன. தனி நபர் பொருளாதாரத்தை மேலாண்மை செய்வது போல்தான் இதுவும். அதாவது ஒன்று வரவை அதிகப்படுத்துவது. இரண்டு செலவைக்குறைப்பது.
 
முதலில் நிலத்தடி நீரின் வரவை அதிகப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்..
 
1.நிலத்தை உழுது வைத்தல்.
 
 
மழை பெய்யும்போது மழை நீர் என்ன ஆகின்றது என்று பலரும் கவனித்திருப்பார்கள். நிலம் கட்டாந்தரையாக இருந்தால் விழும் மழைநீர் முழுவதும் பள்ளத்தை நோக்கி வழிந்து ஓடி வீணாகி விடுகின்றது. இப்படி ஓடும் நீர் எல்லாம் சேர்ந்துதான் ஆறுகளை வெள்ளக்காடாய் மாற்றுகிறது. ஒரே நேரத்தில் இவ்வாறு அதிகமான நீர் ஓடும்போது அதைக்கட்டுப்படுத்த எல்லா இடங்களிலும் அணை கட்ட முடிவதில்லை.
 
நிலங்களை உழுது பண்படுத்தி வைத்திருந்தால் மழை பெய்யும்போது நிலம் மழைநீரை உறிஞ்சிக்கொள்ளும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீரானது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தின் அடி மட்டத்திற்கு சென்று நிலத்தடி நீராய்ச்சேரும். இது ஒரு முக்கியமான செயல்முறை. ஆகவே தரிசு நிலங்களை எப்பொழுதும் உழுது வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அந்த நிலத்தில் பெய்யும் மழைநீரானது தரை மட்டத்தில் வழிந்து ஓடாமல் நிலத்திற்குள் ஊடுருவிச்சென்று நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும்.
 
 
2.நிலங்களில் சமச்சீர் வரப்புகள் அமைத்தல்.
 
 
 
சாய்வாக இருக்கும் நிலங்களில் விழும் மழைநீரானது பூமியில் நிற்காமல் ஓடி வடிநீர் ஓடைகளில் சேர்ந்து விடும். அப்படி ஓடும் நீரால் நிலத்திற்குள் ஊடுருவிச்செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த நீரை வேகமாக ஓடாமல் கட்டுப்படுத்தினால் அந்த நீரானது பூமிக்குள் ஊடுருவிச் செல்ல கிடைக்கும் நேரம் அதிகமாகும். அப்போது நிலத்தடிநீர் அதிகரிக்கும்.
 
இதற்காக நிலங்களில் சமச்சீர் வரப்புகள் (Contour bunds) அமைத்தால் வேகமாக ஓடும் மழைநீரை நிறுத்தி வைக்கும். அப்போது அதிக அளவில் நீர் பூமியில் ஊடுருவிச்செல்ல வாய்ப்புகள் அதிகமாகும்.
 
3.வரப்புகளின் ஓரங்களில் வாய்க்கால்கள் வெட்டுதல்.
 
 
 
 
இந்த சமச்சீர் வரப்புகள் அமைக்கும்போதே, நீர் தேங்கும் பக்கத்தில் இந்த வரப்புகளை ஒட்டி அரை அடி அகலம், இரண்டடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை வெட்டி வைத்தால், மழை நீர் முழுவதும் அந்த வாய்க்கால்களில் தேங்கி, முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவிச் சென்றுவிடும். அப்போது இன்னும் அதிக நீர் நிலத்தடியில் சேரும்.
 
 
4.தடுப்பணைகள் கட்டுதல்
 
 
எவ்வளவு உத்திகளை நடைமுறைப்படுத்தினாலும் மழை காலங்களில் நீர் பல இடங்களிலிருந்து வழிந்து போகத்தான் செய்யும். இந்த நீர் பல காலமாகச் செல்லும் ஓடைகளை பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இந்த நீரை ஆங்காங்கே குளம் மாதிரி நிறுத்தி வைத்தால் அந்த நீர் பூமிக்குள் ஊடுருவிச் செல்லும் என்ற தத்துவம் விஞ்ஞானபூர்வமாக பல நாடுகளில் பரிசோதனைகளின் மூலம் அறியப்பட்டது.
 
இந்த உத்தியை நம் நாட்டிலும் பல இடங்களில் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்தது. இந்திய அரசு இந்த முறையை முடிந்த இடங்களில் எல்லாம் நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்திரவு பிறப்பித்து அதற்கான நிதியும் கொடுத்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாயிகளின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்பட்டது. எதற்கென்றால் இந்த தடுப்பணைகள் கட்டவும், அங்கு சேரும் நீரை சேமித்து வைக்கவும் போதுமான இடம் வேண்டும். அதற்கு தகுந்த விலை கொடுத்தாலும் விவசாயிகள் அந்த நிலத்தைக் கொடுக்க முன் வரவேண்டும்.
 
விவசாயிகள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்த மாதிரி தடுப்பணை கட்டிய இடங்ளில் ஏற்பட்ட நிலத்தடி நீர் அதிகரிப்பை நேரில் பார்த்து மனம் மாறினார்கள். பல இடங்களில் இருந்து எங்கள் நிலத்தில் தடுப்பணை கட்டுங்கள் என்று வேண்டுகோள்கள் வந்தன. தடுப்பணை கட்ட வசதி உள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகள் கட்டப்பட்டன. அதன் பலனை விவசாயிகள் கண்கூடாக அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.
 
5.ஏரிகள், குளங்களைப் பராமரித்தல்.
 
 
 
 
 
பள்ளியில் படிக்கும்போது சரித்திரப் பாடப் பரீட்சையில் ஏதாவது மன்னர் பெயரைக்கொடுத்து அவர் நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்று ஒரு கேள்வி கட்டாயமாக இருக்கும். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஒன்றும் யோசிக்கவே வேண்டியதில்லை. சாலைகள் போட்டார், மரங்கள் நட்டார், ஏரி, குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் கட்டினார் என்று தயங்காமல் எழுதிவிடலாம். முழு மார்க் கிடைத்துவிடும்.
 
 
ஆகவே ஒரு நாட்டின் வளம் பெருக, ஏரி, குளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பது விளங்கும். மழைநீர் அவைகளில் சேர்ந்து குடி நீராகவும், பாசனத்திற்கும் பயன்படுவது போக நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கும் மிகவும் உதவும்.
 
 
ஆனால் இன்று நடப்பது என்ன? எங்கள் ஊரில் ஒரு குளத்தை எங்கள் பஞ்சாயத்து தலைவர் பட்டா போட்டு விற்றுவிட்டார். ஏறக்குறைய தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் குளக்கரைகளிலும் குடிசை போட்டிருக்கிறார்கள். இதற்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் ஆதரவு. அந்த வட்டாரத் தலைவரை அழைத்து ஒரு கூட்டம் போட்டு ஒரு கொடிக் கம்பத்தை நட்டுவிட்டால் அந்தக் குளக்கரை பட்டா போடாத குடியிருப்பு ஆகிவிடும்.
 
 
கொஞ்சம் கொஞ்சமாக குளத்திற்கு உள்ளேயும் குடிசைகள் போடுவார்கள். மழைகாலத்தில் குளத்தில் தண்ணீர் சேரும்போது குளக்கரையை வெட்டி தண்ணீரை வெளியேற்றுவார்கள். இவர்களை யாரும் கேட்கமுடியாது. இவர்களுக்கு ஒரு லோகல் தலைவன் இருப்பான். அவன் ஒரு பக்கா ரவுடியாகவும், ஆளும் கட்சித்
 
தலைவனுக்கு அடியாளாகவும் இருப்பான். அவனை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்யமுடியாது.
 
 
6.வீடுகளில் மழைநீர் சேகரித்தல்.
 
 
பழங்காலத்தில் வீடுகள் எல்லாம் ஓட்டு வீடுகளாக இருந்தன. அப்போது மழை பெய்தால் மழைநீரெல்லாம் சேர்ந்து ஒரு மூலையில் விழும். அந்த நீரைச்சேகரித்து குடிப்பதற்காக பதனப்படுத்துவது வழக்கம். இதற்காக தனியாகத் தொட்டிகள் கூட சில ஊர்களில் கட்டுவது உண்டு. இப்பொழுது எல்லா ஊர்களிலும் தண்ணீர் விநியோகம் பைப்புகள் மூலம் நடைபெறுவதால் இந்த முறை வழக்கொழிந்து போயிற்று. ஆனாலும் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டபிறகு இந்த நீரையும் ஏன் உபயோகப்படுத்தக்கூடாது என்கிற எண்ணம் வந்தது.
 
போன ஆட்சியின்போது மழைநீர் சேகரிப்புத்திட்டம் அமல் படுத்தப்பட்டது. என்ன கொடுமை என்றால் எங்கே (கிராமப்புறங்களில்) செய்ய வேண்டுமோ அங்கே விட்டுவிட்டு தேவையில்லாத இடங்களில் (நகர்ப்புறங்களில்) அதை அமல்படுத்தினார்கள். நகர்ப்புறங்களில் ஏற்கனவே நீர் மட்டம் உயர்ந்து கட்டிடங்களுக்கு அபாயம் விளைவிக்குமளவிற்கு இருக்கிறது. இந்த திட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தினால் கணிசமான பலனை அனுபவிக்கலாம்.
 
 
7.ரிவர்ஸ் பம்ப்பிங்க்.
 
 
“பம்ப்பிங்க்” என்றால் நிரத்தடி நீரை நம் உபயோகத்திற்காக மேலேற்றுவது என்று பொருள். இதற்கு எதிராக, மேலே உள்ள நீரை நிலத்தடிக்கு அனுப்புவதை “ரிவர்ஸ் பம்ப்பிங்க்” என்று கூறுகிறார்கள். நிலத்தில் சில இடங்கள் பள்ளமாக இருக்கும். அங்கிருக்கும் நீர் எவ்வழியிலும் வெளியேற முடியாமல் போகும். அதை அப்படியே விட்டால் கொஞ்சம் நீர்தான் நிலத்தடிக்குச் செல்லும். மீதி நீர் ஆவியாகி பலனில்லாமல் போகும்.
 
அப்படிப்பட்ட இடங்களில் இந்த உத்தியை பயன்படுத்தலாம். இது எப்படியென்றால், நீர் தேங்கும் இடங்களில் குறைந்த இடைவெளியில் 10 அல்லது 15 அடி ஆழத்திற்கு போர் போட வேண்டும். சுமார் 10 போர்கள் போடலாம். அந்த இடத்தில் தேங்கும் நீர் இந்த போர்களின் வழியே நிலத்தின் அடி மட்டத்திற்கு சென்று அங்கிருந்து ஊடுருவி நிலத்தடி நீரோடு சேரும். என்னவோ கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிப்பது போல் தோன்றுகிறதல்லவா? இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தத்துவம் ஆகும்.
 
கோவை நகர்ப்புறத்தில் ஒரு சாலையில் தண்ணீர் வெளியில் போக வாட்டம் இல்லாததால் தேங்கிக்கொண்டு இருந்தது. அங்கே இந்த முறையை கடைப்பிடித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம்.
 
8.நதி நீர் இணைப்புத்திட்டங்கள்.
 
 
 
இவைகளைப்பற்றி பல காலமாகப் பேசிக்கொண்டு இருக்கிறோம். சில தலைப்புகள் அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்தவை. அவைகளில் இதுவும் ஒன்று. நம் அரசியல் வாதிகளுக்கு ஒரு பிரச்சினை பிடித்துப்போய்வுட்டது என்றால் அதைத் தீர்க்க மாட்டார்கள். அதைப்பற்றி பேசிப்பேசியே நாட்களை ஓட்டுவார்கள். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதற்கு இந்தப்பிரச்சினைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. குறிப்பாகத் தேர்தல் சமயங்களில் இந்தப் பிரச்சினைகளை எடுத்துக்கொள்வார்கள். வாய் கிழியப் பேசுவார்கள். தேர்தல் முடிந்ததும் பிரச்சினையை மறந்து விடுவார்கள். நம் நாட்டை ஆண்டவனாகப்பார்த்து காப்பாற்றினால்தான் விடிவு ஏற்படும் என்று எண்ணாமல் ஆழ்ந்த சிந்தனையும் தொலை நோக்குப் பார்வையும் கொண்டு செயல்பட்டால்தான் நம் நாட்டிற்கு நல்ல காலம் ஏற்படும்.
 
 
இனி நிலத்தடி நீரின் செலவைக்குறைப்பது அதாவது பயன்பாட்டில் எவ்வாறு சிக்கனமாக இருப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.
 
தனி நபர் வாழ்விலேயே செலவைக்குறைப்பது என்பது ஒரு கானல் நீராகவே இருக்கிறது. எல்லா மனிதர்களும் பணத்தை இருக்கும் வரை செலவு செய் என்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அது மாதிரியே விவசாயிகளும் நீரைப்பயன்படுத்துவதில் இதே கொள்கையைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருவன் மட்டும் சிக்கனமாக இருந்து என்ன பயன்? எல்லோரையும் கட்டுப்படுத்துங்கள், நானும் கட்டுப்படுகிறேன் என்கிற மனப்பான்மையில் நடந்து கொள்கிறார்கள். இந்திய மக்களுக்கு தேசப்பற்று என்பது சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதுடன் முடிந்து போகிறது. தேசத்தின் வளங்களைக் காத்து, அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொடுக்கும் பெரும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று யாரும் நினைப்பதேயில்லை. இது காலம் காலமாக இந்தியப்பிரஜையின் இரத்தத்தில் ஊறிப்போன குணமாகும்.
 
இருந்தாலும் என்றாவது ஒரு நாள் திடீரென்று எல்லோருக்கும் ஞானோதயம் வரலாம் இல்லையா? அந்த நாளில் என்னென்ன செய்யலாம் என்று இன்றே திட்டமிடல் அவசியம் அல்லவா? அதற்காகத்தான் கீழே உள்ள உத்திகள்.
 
நிலத்தடி நீரை சிக்கனமாக எவ்வாறு உபயோகிக்கலாம் என்று பார்க்கலாம்..
 
1.கிணறுகள் வெட்டுவதற்குக் கட்டுப்பாடு விதித்தல்.
 
 
இது தனி நபர் உரிமையில் தலையிடுவது போல் முதலில் தோன்றும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டுத் தென்னை மரம் ஒன்று அடுத்த வீட்டு ஓரத்தில் இருக்கிறது. சிறிய மரம். காய்கள் நிறைய இருக்கிறது. எட்டிப் பறித்து விடலாம். அந்த மரத்திலிருந்து ஒரு தேங்காயை அடுத்த வீட்டுக்காரர் எட்டிப் பறித்துக் கொள்கிறார். தென்னை மரம் வைத்தவர் சும்மா இருப்பாரா? ஏன் என் மரத்திலிருந்து தேங்காயைப்பறித்தீர்கள் என்று கேட்க மாட்டாரா?
 
அப்படிக்கேட்டால் அது தனி நபர் சுதந்திரத் தலையீடு என்று சொல்வீர்களா? மாட்டீர்கள். ஏன் என்றால் இந்த இடத்தில் மரத்தின் சொந்தக்காரர் யாரென்ற தெளிவு இருக்கிறது. ஆனால் இதைப்பாருங்கள். நிலத்தடி நீர் எல்லா நிலங்களுக்கு கீழும் பரந்திருக்கிறது. அது யாருக்குச்சொந்தம் என்று வரையறுக்கப் படவில்லை. நியாயமாக அது ஒரு பொதுச்சொத்து. அதைப் பயன்படுத்துவதில் ஒரு பொது நியதி நிர்ணயிக்கப்படவேண்டும். ஒருவருக்கு வசதி இருக்கிறது என்பதால் அவருடைய நிலத்தில் ஆழமாக ஒரு போர் போட்டு, மற்ற எல்லோருடைய நிலத்தின் கீழ் உள்ள நீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்வது எந்த விதத்தில் நியாயமாகும்?
 
ஆனால் இன்றுள்ள சமுதாயத்தில் இத்தகைய வாதங்களுக்கு இடம் இல்லை என்பது ஒரு வருந்தத்தக்க நிலையாகும்.
 
2.கம்யூனிடி கிணறுகள் அதாவது சமுதாயப் பொதுக் கிணறுகள்.
 
 
 
தனி நபர்கள் ஆதிக்கத்தினால் சமுதாய பொதுச்சொத்தான நிலத்தடி நீரின் பயன்கள் சிறு குறு விவசாயிகளுக்குப் போய்ச் சேருவதில்லை என்பதால் அரசே முன் வந்து சில இடங்களில் பரீட்சார்த்தமாக சமுதாயப் பொதுக் கிணறுகள் வெட்டினார்கள். இவை அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான பொதுச்சொத்தாக கருதப்படும். அவைகளிலிருந்து எடுக்கப்படும் நீர் அந்த விவசாயிகளுக்கே சேரும். அந்தக்கிணறுகளைப் பராமரித்து அவைகளிலிருந்து எடுக்கப்படும் நீரைப் பங்கிட்டு உபயோகப்படுத்துவது ஆகிய நடைமுறைப் பொறுப்புகள் அந்த விவசாயிகளையே சேர்ந்தவை. இதற்கு ஆகும் செலவுகளை அரசு பாதி மான்யமாகவும் பாதி கடனாகவும் கொடுத்தது. அந்தப் பகுதி விவசாயிகளுக்கு இந்த கிணறுகளைப் பராமரித்து அவைகளிலிருந்து வரும் நீரை எவ்வாறு உபயோகப்படுத்துவது போன்ற நடைமுறைகளை, நல்ல பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.
 
இது ஒரு நல்ல சமுதாயத்திட்டம். ஆனால் நம் மக்கள் இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் இது ஒரு பொதுச் சொத்துதானே, நமக்கென்ன ? என்கிற மனப்பான்மைதான். இது நம் அரசியல்வாதிகள் சொல்லிக்கொடுத்த பாடம்தான். எந்தப்போராட்டம் என்றாலும் சேதப்படுத்துவது அரசு பஸ்களைத்தான். அது தேச மக்களின் பொது சொத்தாயிற்றே, நமக்குத்தானே அது பயன்படுகிறது, அதை சேதப்படுத்தலாமா? என்ற உணர்வே மக்களுக்கு அறவே இல்லாமற்போனது. இந்த மனப்பான்மையின் காரணமாகவே ஏறக்குறைய அனைத்து சமுதாயப் பொதுக்கிணறுகளும் சரிவரப் பராமரிக்கப்படாமல் தூர்ந்து போயின.
 
3.நீர்த் தேவை குறைவான பயிர்களைப்பயிரிடுதல்.
 
 
 
நெல், வாழை, கரும்பு, மஞ்சள், போன்ற பயிர்களுக்கு நீர்த்தேவை அதிகம். சோளம், கம்பு, போன்ற பயிர்களுக்கு நீர்த்தேவை குறைவு. நிலத்தடி நீரை உபயோகிக்கும்போது நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடுதல் நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்க முடியும்.
 
 
வளர்ந்த நாடுகளில் நாட்டின் மொத்தத் தேவையை கருத்தில் கொண்டு எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன பயிர்கள் பயிரிடலாம் என்று கட்டுப்பாடு செய்கின்றார்கள். அந்த நாடுகளில் விவசாயப் பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயித்து விடுவதாலும், விவசாயிகளுக்கு உழைப்புக்குத் தகுந்த லாபம் கிடைப்பதாலும், இந்தக் கட்டுப்பாட்டுக்கு விவசாயிகளின் மத்தியில் எந்த எதிர்ப்பும் கிளம்புவதில்லை.
 
 
4.நீர்த் தேவை குறைக்கும் விவசாய உத்திகள்.
 
 
 
விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் பயிர்களின் நீர்த்தேவையைக் குறைக்கும் பல உத்திகளை ஆராய்ந்து கண்டு பிடிக்கிறார்கள். உதாரணமாக, தென்னைக்கு முன்பெல்லாம் வயல் முழுவதும் நீர் பாய்ச்சுவார்கள். அது தேவையில்லை, தென்னை மரத்தின் வேர்ப்பகுதியில் ஒரு வட்டப்பாத்தி அமைத்து அதற்கு மட்டும் தீர் பாய்ச்சினால் போதும் என்று ஆராய்ச்சிகள் கண்டு பிடித்தன. இப்போது ஏறக்குறைய எல்லா விவசாயிகளும் இந்த முறையில்தான் நீர் பாய்ச்சுகிறார்கள்.
 
இப்படி பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. விவசாயிகளும் அவைகளைக் கடைப்பிடித்து பயன் பெறுகிறார்கள்.
 
5.மல்ச்சிங்க் அல்லது மண்ணின் மேற்பரப்பை மூடி வைத்தல்.
 
 
 
நிலத்திற்கு நீர் பாய்ச்சியவுடன் அந்த நீரானது மண்ணில் சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு நனைக்கும். அந்த ஆழத்திற்குள்தான் பெரும்பாலான விவசாயப்பயிர்களின் வேர்கள் இருக்கின்றன. நீர் பாய்ச்சி முடித்தவுடன் மண்ணில் சேர்ந்த நீரானது செடிகளின் வேர்களினால் உறிஞ்சப்படுகின்றது. இது தவிர கணிசமான நீர் ஆவியாகவும் செல்கிறது. இந்த ஆவியாகும் செயல் மேல் மண்ணின் மூலமாகவே நடக்கிறது.
 
இவ்வாறு நீர் ஆவியாதலைக் குறைத்தால் மண்ணில் ஈரம் இன்னும் சிறிது நாட்களுக்கு இருக்கும். அதனால் பாசனம் செய்யவேண்டிய காலம் நீட்டிக்கும் அதாவது பயிர்களின் நீர்த்தேவை குறையும். இதற்கு மண்ணின் மேற்பரப்பில் பண்ணையில் கழிவாகும் இலைதழைகளை பரப்பி வைத்தால் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் ஆவியாவது குறையும். இந்த உத்தியையும் பெரும்பாலான விவசாயிகள் தென்னை, திராக்ஷை போன்ற பயிர்களுக்கு கடைப்பிடித்து வருகிறார்கள்.
 
6.சொட்டு நீர்ப்பாசன முறைகள்.
 
 
 
இஸ்ரேல் நாட்டில் ஒரு தண்ணீர் விநியோக இஞ்சினீயர் அகஸ்மாத்தாக கண்டு பிடித்த முறைதான் சொட்டு நீர்ப்பாசன முறை. அவருடைய அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு ஆலிவ் மரம் மற்ற மரங்களை விட மிகவும் அதிகமாக வளர்ந்திருந்தது. அது எப்படி என்று அவர் ஆராய்ந்தபோது அந்த மரத்திற்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு தண்ணீர்க் குழாயில் ஒரு லேசான கசிவு இருந்திருக்கிறது. அந்தக்கசிவு நீர் அந்த மரத்தின் வேர்களை எப்போதும் ஈரமாகவே வைத்திருந்திருக்கிறது. இதுதான் அந்த ஆலிவ் மரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அவர் யூகித்தார். இந்த யூகத்தை உறுதிப்படுத்த அவர் இன்னும் சில மரங்களுக்கு இதே மாதிரி குழாய்கள் அமைத்து அந்த மரங்களின் வேர்ப் பகுதியில் நீர் கசியுமாறு ஏற்பாடு செய்தார். சில வருடங்களில் அந்த மரங்களும் மற்ற மரங்களை விட அதீத வளர்ச்சி பெற்றன. இதை அவர் விவசாய விஞ்ஞானிகளுடன் விவாதித்து இந்த சொட்டு நீர்ப்பாசன முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். உலகில் பல கண்டுபிடிப்புகள் இந்த மாதிரி அகஸ்மாத்தாகக் கண்டு பிடிக்கப்பட்டவைகள்தான்.
 
 
 
இந்த சொட்டு நீர்ப்பாசன முறைகள் இஸ்ரேலில் முறைப்படுத்தப்பட்டு, பின் மற்ற நாட்டுகளுக்கும் பரவின. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டுக்குச் சென்ற நம் நாட்டு விஞ்ஞானி டாக்டர் சிவனப்பன் என்பவர் இந்த முறைகளைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டுவந்து தமிழ்நாட்டில் பரப்ப மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டார். மெதுவாக இந்த முறையானது பரவி இப்போது பல பயிர்களுக்கு, குறிப்பாக தென்னை, திராக்ஷை போன்ற பாசனம் செய்ய கடைப்பிடிக்கப் படுகிறது. இதன் நன்மைகளை உணர்ந்து அரசும் இந்த முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு அதற்காகும் செலவில் பாதிக்கு மேல் மான்யம் வழங்குகிறது.
 
7.நீர் உபயோகத்திற்கு கட்டுப்பாடுகள்.
 
 
 
இனி சொல்லப்போகும் உத்திகள் கொள்கை ரீதியான முடிவுகள் ஆகும். இதை அமல்படுத்த அரசு தேவையான கொள்கை முடிவுகள் எடுக்கவேண்டும்.
 
ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் நிலத்தடி நீரின் அளவைப் பொருத்துத்தான் அந்தப்பகுதியில் பொருத்தமான பயிர்கள் பயிரிடவேண்டும். இதற்கு அந்தப் பகுதி விவசாயிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். ஆனால் இன்று நிலவும் பொருளாதார, சமூக, அரசியல் சூழ்நிலையில் இது சாத்தியமாகுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாய் நிற்கிறது.
 
 
8.தொழில் நுட்ப வழிகாட்டுதல்.
 
 
 
விவசாய நீர்ப்பாசன முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்து விவசாய ஆராய்ச்சி நிலயங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. அவைகளின் பலனாக பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளை முறையாக விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.
 
 
9.கட்டண முறை நீர் விநியோகம்.
 
 
 
 
 
 
விவசாயிகளுக்கு நீலத்தடி நீர் என்பது ஒரு வற்றாத சுரங்கமல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தண்ணீர் என்பது ஒரு இலவசமாகவும் அபரிமிதமாகவும் கிடைக்கக் கூடிய பொருள் என்கிற எண்ணத்தை அனைவரும் மறக்கவேண்டும். குடிப்பதற்கான தண்ணீரை விலைக்கு வாங்கப் பழகி விட்டோம். குடியிருப்புப் பகுதிகளில் புழங்குவதற்கான நீருக்கு விலை கொடுக்கிறோம். அது போல விவசாயத்திற்கு வேண்டிய நீரையும் கட்டண முறையில் வாங்க வேண்டிய நிலையை உருவாக்கினால் நீரைக் கட்டுப்பாடாக உபயோகிக்கும் பழக்கம் உருவாகும்.
 
சொட்டு நீர்ப்பாசனம் பிரபலமாக இருக்கும் இஸ்ரேலில் ஒருவர் புதிதாக விவசாயப் பண்ணை ஆரம்பிக்க வேண்டுமென்றால், அவர் தேவையான நிலம் வைத்திருக்கவேண்டும். அந்த நிலத்தில் சொட்டுநீர்ப் பாசனத்திற்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களும் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்தால், அவர்கள் நிலத்தை ஆய்வு செய்து, அனைத்துப் பணிகளும் முடித்து வைத்திருந்தால் தண்ணீர் கனெக்ஷனுக்கு அனுமதி வழங்குவார்கள். நம் ஊரில் வீட்டு பைப் கனெக்ஷனுக்கு வைப்பது போல் ஒரு மீட்டரும் வைத்து விடுவார்கள். தண்ணீர் இவ்வளவுதான் உபயோகிக்கலாம் என்ற கட்டுப்பாடும் விதித்து விடுவார்கள். அந்த தண்ணீருக்குள் உங்கள் வசதிப்படி விவசாயம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீரை உபயோகித்திருந்தால் தண்ணீர் கனெக்ஷனை ரத்து செய்து விடுவார்கள்.
 
அங்கு விவசாயிகளுக்குள்ள ஒரு சௌகரியம் என்னவென்றால் அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஏற்றுமதி மார்க்கெட் இருக்கிறது. அதனால் நல்ல விலை கிடைத்து விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இருக்கிறது. நம் ஊரில் தக்காளி ஒரு சமயத்தில் முப்பது ரூபாய்க்கும் பின் ஒரு சமயத்தில் மூன்று ரூபாய்க்கும் விற்கிறது. அதிலும் வியாபாரிகள் எடுத்துக்கொண்டது போக மீதி பாதிதான் விவசாயிக்குப் போய்ச் சேருகிறது.
 
இந்த நிலை மாறவேண்டும். விவசாயம் ஒரு பெரும்பான்மையான தொழிலாக இருக்கும் ஒரு நாட்டில் இந்த நிலை இருப்பது மிகவும் வேதனையானது.
 
நிலத்தடி நீர்ப்பிரச்சினை நாளாக நாளாக அதிகரித்து வருகின்றது. விவசாய விஞ்ஞானிகளும், நீர்நுட்பவியல் நிபுணர்களும், பொருளாதார வல்லுநர்களும் இந்தப்பிரச்சினை பற்றி உணர்ந்திருக்கிறார்கள். அவ்வப்போது கருத்தரங்கங்கள் கூட்டி இதைப்பற்றி விவாதிக்கிறார்கள். பல புதிய கருத்துக்கள் அலசப்படுகின்றன.
 
இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானிகளிடையே நிலவும் கருத்துகளை தொகுத்துக் கூறுகிறேன்.
 
1.நிலத்தடி நீர்ப்பிரச்சினையை ஒரு தலையாய பிரச்சினையாகவும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதி அதனைத் தீர்க்கும் வழிமுறைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
 
 
2.அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய மக்களின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லவேண்டும்.
 
 
3.இந்தப் பிரச்சினைக்குண்டான தீர்வுகளை தீவிரமாக அமுல் படுத்தக்கூடிய கொள்கைப் பிடிப்புள்ள அரசு வேண்டும்.
 
 
 
இன்று இருக்கும் ஆட்சி முறையில் இவையெல்லாம் நடக்குமா என்பதை காலம்தான் சொல்லும். அரசு மற்றும் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்படாவிட்டால் ஒரு சமுதாயமே அழிந்து போகும் நிலை வரக்கூடும் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
 
வளர்ந்து வரும் நிலத்தடி நீர்ப்பிரச்சினையை எப்படி சமுதாயம் எதிர்கொள்ளும் என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
 
சமுதாய விழிப்புள்ள, தேசப்பற்று மிக்க, ஊழலற்ற அரசு என்றைக்கு அமைகிறதோ, அன்றைக்குத்தான் இந்தப்பிரச்சினைக்கு ஒரு விடிவு ஏற்படும். அப்படி ஒரு நாள் வருமென்று நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்விற்கு ஊன்றுகோல்.
"https://ta.wikipedia.org/wiki/நிலத்தடி_நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது