குலப்பாவை நீலக் குழல்.......................................50
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்
தெழிலாக வைத்தேக வேண்டா -கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு....................................51
அங்கண் முழுமதியம் செக்கரகல் வானத்து
எங்குமினி தெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்..................................52
சீரார்ந்த கொன்றை மலர் தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்...............................53
காருருவக் கண்டத்தெம் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோடு உழிதருவான் -நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு....................................54
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேல் பான்மதியி னுள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு...................................55
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலாத்தலையி னுள்ளூண் புறம்பேசக் கேட்டோ
நிலாத்தலையிற் சூடுவாய் நீ....................................56
நீயுலக மெல்லாம் இரப்பபினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய்- தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவம் மேலாட மிக்கு.....................................57
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர் போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு...................................58
பண்புணர மாட்டேன் நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைகண்டா- பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவது
எவ்வுருவோ நின்னுருவ மேல்...................................59
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே -மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோது
அம்மான் திருமேனி அன்று....................................60
அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைப்பேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது..................................61
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகாது
ஈதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோடு ஏற்றநாள்
வல்வேட னான வடிவு........................................62
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுவலி நின்றெரிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா ...................................63
நிலாவிலங்கு பொன்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாவிருந்த
செக்கரவ் வானமே யொக்குந் திருவடிக்கே
புக்கரவங் காலையே போன்று..................................64
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு....................................65
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங்கரிதாலோ
பைத்தாடு நும்மார்பிற் பாம்பு...................................66
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியும்
தாம்பயின்று தாழருவி தூஙஅகுதலால் - ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.....................................67
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் போல
சிலம்படிமேற் சொவ்வரத்தம் சேர்த்தி நலம்பெற்று
எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி........................................68
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் படிமேல்
குனியவல மாமடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு.................................69
எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிராது
எமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரி பாய்ந்தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரி பாய்ந்தாடும் இடம்....................................70
இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலம்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்.................................71
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய் மிக்குலக மேழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து....................................72
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது....................................73
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.....................................74
கலங்கி புனற்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதிஇயங்க லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்கலாலும்
விரிசடையாம் காணில் விசும்பு................................75
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடம் தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி......................................76
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரில் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு...................................77
அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து..................................78
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு................................79
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள்
அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்தக் கால்............................80
காலனையும் வென்றோம் கடுநரகங் கைகழன்றோம்
மேலை யிருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து...........81
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே யொத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியவாம் -தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிரும் சாயும் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்..............82
மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலும் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது....................83
நெடிதாய பொங்கெரியும் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கண்ணான் கண்................84
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்...................85
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்....................86
நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்..................87
இருளி னுருவென்கோ மாமேக மென்கோ
மருளில் மணிநீல மென்கோ அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத்து .....................88
ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் -ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டம்இருள்
கொண்டவா றென்இதனைக் கூறு................89
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட்டு
ஏறமிகப் பெருகின்என் செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடும் கங்கைத் திரை..................90
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோம் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைத்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்.....................91
என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கு
அருளாகம் வைத்த அவன்......................92
அவன் கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.................93
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்புமகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள்...................94
அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீர்
என்பணிவீ ரென்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமின் இங்கார்.............95
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து..............96
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்டு
உளைந்தெழுந்து நீஎரிப்ப மூவுலகும் உள்புக்கு
அளைந்தெழுந்த செந்தீ யழல்..................97
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ -கழலாடப்
பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு..................98
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்டு
அப்பேய்க் கணமவைதாம் காணவோ - செப்பெனக்கொன்று
ஆகத்தா னங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடுன் நடம்......................99
நடக்கிற் படிநடுங்கும் நோக்கின் திசைவேம்
இடிக்கில் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னேறு
உருமேறோ வொன்றா வுரை..................100
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினால் காரைக்கால் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோடு அண்ணலைச் சென்றேத்துவார்
பேராத காதல் பிறந்து.........................101
(மொத்தப் பாடல்கள் 101)
|