'''காரைக்கால் அம்மையார்''' எழுதிய அற்புதத் திருவந்தாதி
==அற்புதத் திருவந்தாதி==
இப்பக்கத்தில் முதல் 50 பாடல்கள் உள்ளன. மீதிப் பாடல்களைப் பார்க்க [[இரண்டாம் பக்கத்துக்குச் செல்லவும்]]
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை..................................4
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்......................................5
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயினேன்.......................................7
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு......................................9
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று...................................10
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்
கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது......................................11
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு...................................12
தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லேபாவம் தான்.....................................13
தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்
தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர்
பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து......................................14
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்
புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி..................................15
இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்................................16
காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
ஆதியாய் நின்ற அரன்.........................................17
அரனென்கோ நான்முக னென்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
யானவனை எம்மானை இன்று....................................18
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.......................................19
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்......................................20
அவனே இருசுடர்தீ ஆகாச மாவான்
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.......................................21
வந்திதனைக் கொள்வதே ஒக்குமிவ் வாளரவின்
சிந்தையது தெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரான்நீர் உம்சென்னிப் பிறை.....................................22
பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா வுள்ள மிது............................................23
இதுவன்றே ஈசன் திருவுருவ மாமாறு
இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாய்என் சிந்தனைக்கே
இன்னும் சுழல்கின்ற திங்கு........................................24
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எஙகும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று....................................25
ஞான்ற குழற்சடைகள் பொன்வரை போல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பி்ன் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே தோன்றும் அரவு......................................26
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் -முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.....................................27
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவதும் எல்லாம் பொறியிலியேற்கு
என்முடிவ தாக இவர்...........................................28
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலம் கண்டார் பிறர்.....................................29
பிறரறிய லாகாப் பெருமையரும் தாமே
பிறரறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.......................................30
மகிழ்தி மடநெஞ்சே மானிடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமம் சேர்ந்தாய் - இகழாதே
யாரன்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு......................................31
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்..................................32
நூலறிவு பேசி நுழைவிலா தார் திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்தது
எக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே யாம்.....................................33
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தா லுள்ளி
அருகணையா தாரை அடும்......................................34
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்து
இடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு.......................................35
மறுவுடைய கண்டத்தீர் வாரசடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆவா - உறுவான்
தாளரமீ தோடுமேல் தானதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.........................................36
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்ததுவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.................................37
ஈண்டொளி சேர்வானத் தெழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைத்திலங்கு
கூரேறு கானேனக் கொம்பு......................................38
கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன்
அம்பவள மேனி யதுமுன்னம் - செம்பொன்
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து...................................39
மறித்து மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்டு
உள்ளாதார் கூட்டம் ஒருவு......................................................40
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து...............................41
நேர்ந்தரவம் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய் வளரமாட்டாதோ என்னோ
இளங்குழவித் திங்க ளிது.......................................42
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம் விலக்க வல்லமே
தானே யறிவான் தனக்கு........................................43
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான்......................................44
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்றன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையிலும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது................................45
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவி லீர்ஆவா -ஒளிகொள்மிடற்று
எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழும் திறம்.....................................46
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாக மீந்தான்
திருவடிக்கண் சேரும் திரு.....................................47
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவும் தேராது
அதுமதியொன் றில்லா அரா.....................................48
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய வோடி விராவுவதால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே யொப்பான் சடை...................................49
சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் -முடிமேல்
வலப்பாலக் கோல மதிவைத்தான் தன்பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.......................................50
|