அந்தியோக்கியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
(வேறுபாடு ஏதுமில்லை)

01:24, 5 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

அந்தியோக்கியா (Antioch) என்னும் பழங்கால நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென் கிழக்குப் பகுதியில், சிரியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 12 மைல் தொலையில் அமைந்த நகரம் ஆகும்[1]. இந்நகருக்கு மேற்குப்பக்கத்தில் ஒரோண்டெஸ் (Orontes) என்னும் பேராறு ஓடுவதால் அதற்கு "ஒரோண்டெஸ் அருகில் அமைந்த அந்தியோக்கியா" (Antioch on the Orontes) என்னும் பெயரும் உண்டு.

பிற மொழிகளில் இந்நகரத்தின் பெயர்: கிரேக்கம்: Ἀντιόχεια ἡ ἐπὶ Δάφνῃ, Ἀντιόχεια ἡ ἐπὶ Ὀρόντου அல்லது Ἀντιόχεια ἡ Μεγάλη; இலத்தீன்: Antiochia ad Orontem; அரபி: انطاکیه (Antakya).

பழைய நகரான அந்தியோக்கியா புது நகரான "அந்தாக்கியா" (Antakya) அருகே துருக்கியில் அமைந்துள்ளது.

அந்தியோக்கியா உருவான வரலாறு

கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகா அலக்சாந்தரின் தளபதிகளுள் ஒருவராகிய முதலாம் செலூக்கஸ் நிக்கட்டோர் என்பவர் அந்தியோக்கியாவை நிறுவினார். இந்நகரம் மிகுந்த வளர்ச்சியடைந்து, நடு ஆசியாவில் அலக்சாந்திரியா நகரையே விஞ்சும் அளவுக்கு விரிவுற்றது. இந்நகரத்தில்தான் கிறித்தவ சமயம் யூதரல்லாத பிற இனத்தவரிடையே கி.பி. முதல் நூற்றாண்டில் முனைப்பாகப் பரவத்தொடங்கியது.

அந்தியோக்கியா பண்டைய சிரிய நாட்டை ஒருங்கிணைத்த நான்கு பெருநகர்களுள் ஒன்றாகும் (பிற நகர்கள்: செலூக்கியா, அப்பமேயா, இலவோதிக்கேயா). அந்நகர மக்கள் "அந்தியோக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். அதன் உச்ச வளர்ச்சியின்போது அங்கே ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்தார்களாம். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டதாலும், மம்லுக் இராணுவம் 1268இல் பேரளவிலான மக்களைக் கொன்றுகுவித்ததாலும் அந்தியோக்கியா நடுக்காலத்தில் சீரழியத் தொடங்கியது. மங்கோலியர் படையெடுப்பால் வர்த்தக வழிகள் அந்தியோக்கியாவின் ஊடே செல்ல தடை எழுந்ததும் இதற்கு ஒரு காரணமாகும்.

 
அந்தியோக்கியாவைக் கால்சிஸ் நகரோடு இணைத்த உரோமையர் கால நெடுஞ்சாலை.

உரோமை ஆட்சியின் கீழ் அந்தியோக்கியா

கி.மு. 83இல் அந்தியோக்கியா அர்மீனிய ஆட்சியின் கீழ் வந்தது. ஆனால், கி.மு. 65இல் அந்தியோக்கிய மக்கள் உரோமையரை அணுகினர். உரோமை ஆட்சியின் போது அந்தியோக்கிய "சுதந்திர நகர்" என்னும் நிலையில் தொடர்ந்தது. உரோமைப் பேரரசர்கள் அந்தியோக்கியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை எகிப்திய அலக்சாந்திரியாவை விடவும் மேலாக வளர்த்தெடுத்தனர். ஜூலியஸ் சீசர் கி.மு. 47இல் அந்தியோவுக்குச் சென்று அது தொடர்ந்து "சுதந்திர நகர்" என்னும் நிலையில் நீடிக்கும் என்று உறுதியளித்தார். சில்ப்பியுஸ் குன்றத்தில் ஜூப்பிட்டர் கடவுளுக்கு மாபெரும் கோவில் கட்டப்பட்டது. உரோமைப் பாணியில் அமைந்த பொதுவெளி (forum) உருவாக்கப்பட்டது. திபேரியுஸ் மன்னரின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூண்கள் வரிசை அமைந்த வழி சில்ப்பியுஸ் குன்றத்துக்கு இட்டுச்சென்றது. அக்ரிப்பா, திரயான், அந்தோனியுஸ் பீயுஸ், ஹேட்ரியன் போன்ற உரோமை மன்னர்கள் அந்தியோக்கியாவை அழகுபடுத்தியதோடு பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டடங்களையும் உருவாக்கினர். அந்தியோக்கியாவில் கோம்மொதுஸ் மன்னன் ஒலிம்பிக் விளையாட்டுகள் நிகழ்த்தினார். கி.பி. 256இல் பெர்சியப் படைகள் அந்தியோக்கியவைத் தாக்கி மக்கள் பலரைக் கொன்றன.

கிறித்தவ வரலாற்றில் அந்தியோக்கியா

கிறித்தவ சமயம் யூத நாட்டுக்கு வெளியே பரவத் தொடங்கிய காலத்தில் அந்தியோக்கியா மைய இடமாக அமைந்தது. அந்நகரில் யூத மக்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கியிருந்த "கெரட்டேயோன்" (Kerateion) என்னும் பகுதி நகரின் தெற்குப்பகுதியில் இருந்தது. யூத மக்களிடையே கிறித்தவ சமயத்தைப் பரப்பும் வண்ணம் பல மறைபரப்பாளர் சென்றனர். இயேசுவின் சீடரான புனித பேதுரு அங்கு போதித்தார். அதன் அடிப்படையில் இன்று அந்தியோக்கிய முதுவர் சபை தனக்கு முதன்மையிடம் உண்டு என்னும் கோரிக்கையை எழுப்புகிறது.

அந்தியோக்கியாவில் கிறித்தவ சமயத்தைப் பரப்பிய இரு பெரும் மறைபரப்பாளர்கள் பர்னபா, பவுல் (பிறப்பு: கி.பி. சுமார் 5; இறப்பு: கி.பி. சுமார் 67) ஆவர். பவுல் இந்நகரத்தில் கி.பி. 47இலிருந்து 55 வரை மறைபரப்பினார்[2]. இந்த மறைபரப்பாளர் கிறித்தவத்தை போதித்தபோது மக்கள் கூடி வந்து நற்கருணைக் கொண்ட்டாட்டம் நிகழ்த்திய குகைப் பகுதி இன்றும் உள்ளது.

 
அந்தியோக்கியாவில் முதல் நூற்றாண்டில் கிறித்தவர் வழிபாட்டுக்குக் கூடிய குகைப்பகுதி (பேதுரு குகை).

இவ்வாறு அந்தியோக்கியா கிறித்தவத்தின் தொடக்க காலத்தில் முதன்மை வாய்ந்த இடமாக மாறிற்று. கிறித்தவத்தின் பிற மூன்று நகர மையங்கள் இவை: எருசலேம், அலக்சாந்திரியா, உரோமை.

 
அந்தியோக்கியா நகர் மதில்சுவரின் ஒருபகுதி. காலம்: 12ஆம் நூற்றாண்டு.

புதிய ஏற்பாட்டில் உள்ள திருத்தூதர் பணிகள் என்னும் நூல் அந்தியோக்கியாவில் கிறித்தவம் பரவியதை விவரிக்கிறது[3]. அந்தியோக்கியா பற்றிய 16 குறிப்புகள் அந்நூலில் உள்ளன (காண்க: 6:5; 11:19,20,22,26,27; 13:1,13; 14:19,21,26; 15:22,23,30,35; 18:12). மேலும் கலாத்தியர் திருமுகத்திலும் 2 திமொத்தேயு திருமுகத்திலும் அந்தியோக்கியா பற்றிய குறிப்புகள் உண்டு.

சிறப்பாக, அந்தியோக்கியாவில்தான் முதன்முறையாக, இயேசுவைப் பின்பற்றிய மக்கள் "கிறித்தவர்கள்" என்னும் பெயரால் அழைக்கப்படத் தொடங்கினர். அது பற்றிய குறிப்பு இதோ:

கி.பி. 2ஆம் நூற்றாண்டளவில் அந்தியோக்கியாவில் நிலவிய கிறித்தவ சமூகம் மிகவும் வளர்ச்சியடைந்து அமைப்புப் பெற்ற குழுவாக விளங்கியது. அந்நகருக்கு ஆயராக கி.பி. சுமார் 35இலிருந்து 108 வரை வாழ்ந்த புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (Ignatius of Antioch) கி.பி. 69இலிருந்தே அந்தியோக்கு நகரின் ஆயராகச் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்குகின்ற பல நூல்களை ஆக்கினார்[4].

கி.பி. 4ஆம் நூற்றாண்டளவில் அந்தியோக்கிய திருச்சபை உரோமை மற்றும் அலக்சாந்திரியா ஆகிய நகர்களில் அமைந்த சபைகளைப் போல முதன்மை வாய்ந்ததாக விளங்கியது. அங்கு கலையழகு வாய்ந்த கிறித்தவப் பெருங்கோவில் ஒன்று கி.பி. 327-341இல் கட்டப்பட்டது. அதற்குக் குவிமாடம் இருந்தது; கற்பதிகை முறையில் உருவாக்கிய பல கலைப்படைப்புகளும் அக்கோவிலில் இருந்தன.

கான்ஸ்தாந்திநோபுள் நகரம் வளர்ந்து, எருசலேம் முது ஆயர் மையமாக மாறியபோது அந்தியோக்கியாவின் முதன்மை மங்கலாயிற்று. மேலும் கிறித்தவத்துக்குப் புறம்பான கொள்கைகள் அந்தியோக்கிய சபையில் நுழைந்ததும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. ஆயினும் கி.பி. 4-5 நூற்றாண்டுகளில் அந்தியோக்கியா கிறித்தவ விவிலிய ஆய்வுக்குப் பெரும் உந்துதல் அளித்தது.

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தியோக்கியா&oldid=735915" இலிருந்து மீள்விக்கப்பட்டது