கல்பகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"இந்து சமய நூல்களில் '''கல்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:57, 13 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
இந்து சமய நூல்களில் கல்பகாலம் என்பது படைப்புக் கடவுள் பிரமனின் ஒரு பகலின் கால அளவைக் குறிக்கும்.
ஆயிரம் மகாயுகங்கள்
பகவத்கீதை [1] 'ஆயிரம் யுகங்களின் கால அளவு பிரமனின் ஒரு பகல் அளவு' என்று குறிப்பிடுகிறது. இங்கு 'யுகம்' என்பது 'மகாயுகம்' என்பதைக் குறிக்கிறது என்பதை உரையாசிரியர்கள் அனைவரும் சுட்டிக் காட்டுகிறர்கள். ஒரு மகாயுகம் என்பது தொடர்ந்து வரும் நான்கு யுகங்களின் கால அளவு. அதாவது வடமொழியில் 'சதுர்யுகம்' என்று வழக்கில் இருப்பது. இதன் அளவு கீழே காட்டியபடி:
யுகம் | ஆண்டுகள் |
---|---|
கிருதயுகம் அல்லது ஸத்யயுகம் | 17,28,000 |
திரேதாயுகம் | 12,96,000 |
துவாபரயுகம் | 8,64,000 |
கலியுகம் | 4,32,000 |
ஆக ஒரு மகாயுகம் என்பது 43,20,000 மானிட ஆண்டுகள் கொண்டது. ஆயிரம் மகாயுகங்கள் 432 கோடி மானுட ஆண்டுகளுக்குச் சமம்.
பதினான்கு மன்வந்தரங்கள்
ஒரு கல்பகாலத்திற்குள் பதினான்கு 'மனு'க்கள் வந்துசெல்கிறார்கள். 'மனு' என்பவர் பூமி அனைத்துக்கும் மன்னராவார். ஒரு மனுவின் காலம் 71 மகாயுகங்கள். இக்கால அளவிற்கு 'மன்வந்தரம்' என்று பெயர். இரு மன்வந்தரங்களுக் கிடையில் ஒரு இடைவேளை ('ஸந்தியா காலம்') நான்கு கலியுககால அளவு கொண்டதாக இருக்கும். அதாவது 17,28,000 மானிட ஆண்டுகள். 14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும். ஆக, பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
- 14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
- 15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.
ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்.
மன்வந்தரங்களின் பெயர்கள்
மன்வந்தரங்கள் கீழேயுள்ள வரிசையின்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும். ஒவ்வொரு மன்வந்தரமும் அப்பொழுதுள்ள மனுவின் பெயரைத் தாங்குகின்றது. இப்பொழுது நடப்பது ஏழாவது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரம். சூரியனுடைய மைந்தனான வைவஸ்வதர் இப்பொழுதுள்ள மனு. முதல் ஏழு மன்வந்தரங்கள் பின்வருமாறு.
- சுவாயம்புவ மன்வந்தரம்
- சுவாரோசிஷ மன்வந்தரம்
- உத்தம மன்வந்தரம்
- தாமச மன்வந்தரம்
- ரைவத மன்வந்தரம்
- சாக்ஷுஷ மன்வந்தரம்
- வைவஸ்வத மன்வந்தரம்
தற்போதைய மன்வந்தரம் முடிந்தபின் வரப்போகும் ஏழு மனுக்களின் பெயர்களும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன. அவை:
- ஸாவர்ணி
- தக்ஷஸாவர்ணி
- பிரம்மஸாவர்ணி
- தர்மஸாவர்ணி
- ருத்ரஸாவர்ணி
- தேவஸாவர்ணி
- இந்திரஸாவர்ணி
இன்றைய மன்வந்தரம்=
இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் 27 மகாயுகங்கள் சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது 28-வது மகாயுகம். இதனுள் மூன்று யுகங்கள் -- அதாவது, கிருதயுகம், திரேதாயுகம், துவபரயுகம் -- சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது கலியுகம். இதனுள் கி.பி.2011க்குச்சரியான கலியுக ஆண்டு 5112-13.
ஆதாரம்
இவ்வளவுக்கும் ஆதாரம் என்ன என்பது நியாயமான கேள்வி. புராணங்களில் சொல்லி வைத்திருப்பது என்பது ஓர் ஆதாரம்.ஆனால் நம் பகுத்தறிவுக்குகந்தபடி சற்று ஆராய்ந்தால் இதனில் பொதிந்திருக்கும் உண்மை சற்று புலப்பட வாய்ப்பு உண்டு. இன்று ஒரு குறிப்பிட்ட கிழமை ( எ.கா.புதன்கிழமை) என்றால் இதற்குள்ள முடிவான ஆதாரம் 'நேற்று செவ்வாய்க்கிழமை' என்பதுதான். நாம் பிறந்த தேதிக்குள்ள முழு ஆதாரம் நம் தாயின் வாக்குமூலமே. இப்படியே காலகதியின் ஒவ்வொரு அளவிற்குமுள்ள முடிவான ஆதாரம் அக்காலத்தில் வசித்தவர்களின் வாக்குமூலமே. இந்தியாவில் தொன்றுதொட்டு நடந்துவந்த மணம் முதலிய அத்தனை சுபகாரியங்களிலும், ஈமக்கிரியைகள் முதலிய அத்தனை அமங்கலச்சடங்குகளிலும் அன்றுள்ள நேரம் காலம் முதலிய கணக்கீடுகளைச் சொல்லாமல் ஒரு செயலும் நடப்பதில்லை, நடந்ததில்லை . இந்த வழியில்தான் சென்றகாலத்துக் கணக்கீடுகள் நமக்காக பஞ்சாங்கங்கள் என்று புழங்கப்படும் ஏடுகளில் குறிக்கப்பட்டு வருகின்றன போலும்.
உசாத்துணைகள்
- ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், எட்டாவது ஸ்கந்தம், அத்தியாயம் 13, 14.
மேற்கோள்கள்
- ↑ ஸஹஸ்ரயுகபர்யந்தம் அஹர்யத் பிரம்மணோ விது: -- பகவத் கீதை 8 - 17