ஆங்கிலேய-நேபாளப் போர்

ஆங்கிலேய-நேபாளப் போர் (1814–16) (Anglo-Nepalese War) (நேபாளி: नेपाल-अङ्ग्रेज युद्ध), பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் நோக்கில், நேபாள இராச்சியத்திற்கு எதிராக, கிபி 1814 - 1846 ஆண்டுகளில் தொடுத்த போராகும். போரின் முடிவில் இருதரப்பினரும், மார்ச், 1816 இல் சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தினரால் பிற இராச்சியத்தினரிடமிருந்து கைப்பற்றியிருந்த (தற்கால) கார்வால், குமாவுன், சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் ஆங்கிலேயர்களுக்கு விட்டுத்தரப்பட்டது.

மேற்கு தராய் பகுதி, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு விட்டுத் தரப்பட்டதால், ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய், நேபாள இராச்சியத்திற்கு நட்ட ஈடு வழங்க கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் காத்மாண்டு சமவெளியைக் கைப்பற்றும் நோக்கில் நேபாள இராச்சியத்தின் மீது படையெடுத்தனர். இதற்காக கம்பெனி ஆளுநர் மொய்ரா அதிக விலை கொடுக்க வேண்டியதாயிற்று.

வரலாற்றுப் பின்னணி தொகு

ஷா வம்சத்தை நிறுவிய கோர்க்காலிகளின் மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா, கிபி 1767ல் நடைபெற்ற கீர்த்திப்பூர் போர் மற்றும் 1768ல் நடைபெற்ற காத்மாண்டு போர்களில், நேவாரிகளான மல்லர்களின் காத்மாண்டு சமவெளியை கைப்பற்றி, தனது தலைநகரை காட்மாண்டுவில் நிறுவினார். பின்னர் நேபாளத்தின் பெரும் பகுதிகளை வென்று நேபாள இராச்சியத்தை நிறுவினார்.

இப்போர்களில் மல்லர்களுக்கு உதவ வந்த 2,500 படைகள் கொண்ட ஆங்கிலேய கம்பெனிப் படைகள், மலைப்பாங்கான பகுதிகளில் போரிடப் பயிற்சி இல்லாததால் தோற்றன.

1791ல் நேபாளத்தின் மேற்கு பகுதியின் குமாவுன், கார்வால் மற்றும் நேபாளத்தின் கிழக்கில் சிக்கிம் போன்ற பெரும் பகுதிகளை கைப்பற்றிய, பிரிதிவி நாராயணன் ஷாவின் பேரன் ராணா பகதூர் ஷா, நேபாள இராச்சியத்தை மேலும் விரிவாக்கினார்.

போருக்கான காரணங்கள் தொகு

கம்பெனி ஆட்சியாளர்கள், இந்தியாவில் தங்களது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், நேபாளிகள், மேற்கில் உள்ள குமாவுன் இராச்சியம் மற்றும் கார்வால் இராச்சியங்களை வென்றதுடன், கிழக்கில் உள்ள சிக்கிம் நாட்டையும் வென்று நேபாள இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். இதனால் நேபாளிகள் மீது ஆங்கிலேயர்கள் எரிச்சல் அடைந்தனர்.

வணிகம் தொகு

கிபி 1792 மற்றும் 1795ல் கிழக்கிந்திய கம்பெனியினர், திபெத்திற்கான தங்கள் வணிக வழித்தடங்களை, நேபாளம் வழியாக நடத்த, நேபாள மன்னரிடம் அனுமதி கோர தூதுக் குழுக்களை அனுப்பினர். ஆங்கிலேயர்களின் கோரிக்கையை நேபாள மன்னர் ஏற்க மறுத்துவிட்டார்.

எல்லைப் பிணக்குகள் தொகு

கிபி 1800களின் முடிவில், நேபாள ராஜாமாதா ராணி ராஜேந்திர லெட்சுமி ஆட்சிக் காலத்தில், பால்பா மலைப்பகுதி மற்றும் தராய் சமவெளியின் ரூபந்தேஹி பகுதிகள் நேபாள இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. [1] கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் பாதுகாப்பு பகுதியில் இருந்த ரூபந்தேகி பகுதியை 1804 முதல் 1812 முடிய ஷா வம்ச மன்னர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதுவே 1814 ஆங்கிலேய-நேபாளப் போருக்கான முக்கியக் காரணம் ஆகும்.[1][2][3]

போர் தொகு

தராய் சமவெளிகள் எளிதாக வெற்றி பெற்ற 8,000 படைவீரர்களைக் கொண்ட ஆங்கிலேயர்கள், மக்வான்பூரை கைப்பற்றி, காத்மாண்டுவை கைப்பற்ற முயன்றனர்.[4][5] [6][7]

ஆங்கிலேயர்களின் 4,500 வீரர்கள் கொண்ட இரண்டாவது படையினர், நேபாளிகள் கைப்பற்றிருந்த தற்கால உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் மற்றும் கார்வா இராச்சித்தை நேபாளிகளிடமிருந்து கைப்பற்றினர். [4][5]

போர் உடன்படிக்கை தொகு

 
4 மார்ச் 1816 அன்று சுகௌலி போர் உடன்படிக்கையின் படி, நேபாள நாட்டினர் ஆங்கிலேயர்களுக்கு விட்டுக் கொடுத்த சிக்கிம், டார்ஜிலிங், கார்வால், சிர்முர் பகுதிகளைக் காட்டும் வரைபடம்

ஆங்கிலேய-நேபாளப் போரில், நேபாளிகள் கை ஓங்கியிருந்ததாலும், போரில் ஆங்கிலேயர்களால் முன்னேற இயலாதபடியாலும், காலரா எனும் வயிற்றுப் போக்கு நோயால் அவதியுற்ற ஆங்கிலேயப் படைகள் தளர்ச்சி அடைந்ததாலும், ஆங்கிலேயர்கள் போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொண்டனர். இதன் படி, ஆங்கிலேயர்கள் நேபாளத்துடன், சுகௌலி எனும் இடத்தில் வைத்து 4 மார்ச் 1816 அன்று ஒரு போர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

இவ்வுடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியம் ஏற்கனவே கைப்பற்றியிருந்த சிக்கிம், டார்ஜிலிங், குமாவுன், கார்வால் மற்றும் மேற்கு தராய் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுத்தர ஒப்புக் கொள்ளப்பட்டது.

மேலும் நேபாள இராச்சியத்தின் கிழக்கு எல்லையாக மேச்சி ஆறும், மேற்கு எல்லையாக மகாகாளி ஆறும் நேபாள இராச்சியத்தின் எல்லையாக உறுதிப்படுத்தப்பட்டது. மேற்கு தராய் பகுதி ஆங்கிலேயருக்கு விட்டுத் தரப்பட்டதால், ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய், நேபாள இராச்சியத்திற்கு, நட்ட ஈடு வழங்க கம்பெனி ஆட்சியினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் நேபாள இராச்சியத்தில், ஒரு கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதுவர் ஒருவரை நியமிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Oldfield, p. 40.
  2. Smith, Warlike Preliminaries, Ch. 8, p. 172.
  3. Prinsep, Ch. 2, Causes of Nipal War, p. 54-80.
  4. 4.0 4.1 Anon (1816), p.427.
  5. 5.0 5.1 Fraser, p. 13.
  6. Smith, Plan of Operation, p. 215-219.
  7. Prinsep, p. 85.

உசாத்துணை தொகு

  • India-Board. (16 August 1815). Dispatches, dated Fort-William, 25 January 1815. The London Gazette. Issue: 17052. Published: 19 Aug 1815. pp. 1–8. [1]
  • India-Board. (8 November 1816). Dispatches, dated Fort-William, 30 March 1816. The London Gazette. Issue: 17190. Published: 11 Nov 1816. pp. 1–4. [2]
  • Anon. (1816). An account of the war in Nipal; Contained in a Letter from an Officer on the Staff of the Bengal Army. Asiatic journal and monthly miscellany, Vol 1. May, 1816. pp. 425–429. [3]
  • Fraser, James Baillie. (1820). Journal of a tour through part of the snowy range of the Himālā mountains, and to the sources of the rivers Jumna and Ganges. London: Rodwell and Martin. [4]
  • Anon. (1822). Military sketches of the Goorka war in India: in the years 1814, 1815, 1816. Woodbridge, Printed by J. Loder for R. Hunter, London. [5]
  • East India Company. (1824). Papers respecting the Nepaul War. Papers regarding the administration of the Marquis of Hastings in India. [6]
  • Marquis of Hastings. (1824). Summary of the operations in India: with their results : from 30 April 1814 to 31 Jan. 1823 . [7]
  • Prinsep, Henry Thoby. (1825). History of the political and military transactions in India during the administration of the Marquess of Hastings, 1813-1823, Vol 1. London: Kingsbury, Parbury & Allen. [8]

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anglo-Nepalese War
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலேய-நேபாளப்_போர்&oldid=3261234" இலிருந்து மீள்விக்கப்பட்டது