ஆர். சூடாமணி

தமிழ் எழுத்தாளர்

ஆர். சூடாமணி (R. Chudamani, 10 சனவரி 1931 – 13 செப்டம்பர் 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர்.

ஆர். சூடாமணி
பிறப்புராகவன் சூடாமணி
(1931-01-10)10 சனவரி 1931
சென்னை, தமிழ்நாடு
இறப்பு13 செப்டம்பர் 2010(2010-09-13) (அகவை 79)
பணிஎழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

1931 இல் சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர் சூடாமணி. சூடாமணி இளம் வயதிலேயே பெரியம்மை நோயால் தாக்கப்பட்டு வளர்ச்சி குன்றினார். இவரது தாயார் பெயர் கனகவல்லி. இவருக்கு இரு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி ஆவார். இன்னொரு சகோதரி பத்மாசனி சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர்கள் முன்னரே காலமாகிவிட்டனர். பாட்டி ரங்கநாயகி அம்மாளும் சிறந்த எழுத்தாளர். சூடாமணி திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏராளமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட இவர் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தம் உலகை அமைத்துக் கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை தொகு

இவரது முதலாவது சிறுகதை காவேரி என்ற பெயரில் 1957 இல் பிரசுரமானது.[1] 1960 இல் தனது மனதுக்கு இனியவள் என்ற புதினத்தை எழுதினார். இருவர் கண்டனர் என்ற இவர் எழுதிய நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற ஆர். சூடாமணி ஆரவாரம் இல்லாமல், மிக எளிமையாக, மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார். இரவுச்சுடர் என்ற இவரது கதை “யாமினி” என்ற பெயரில் 1996 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 'சூடாமணியின் கதைகள்' என்கிற பெயரில் இவரது சிறுகதைகளின் தொகுப்பொன்று வெளிவந்தது. "உள்ளக் கடல்' என்ற நாவலையும், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

ஓவியராக தொகு

இளம் வயதில் முறைப்படி ஓவியம் கற்றிருந்த இவர் நீர்வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளார். வெகுகாலம் வெளியுலகுக்கு வராத இவரது ஓவியங்கள் 2011 ஆம் ஆண்டு சென்னை சி.பி.ஆர்ட் சென்டரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.[2]

மறைவிற்குப் பின்னர் தொகு

எழுத்தாற்றல் மற்றுமின்றி, மனத்திண்மை, தீர்க்கதரிசனம், பெருநோக்கு, சேவை போன்ற அரிய பல பண்புகள் கொண்ட இவர் தமது காலத்திற்குப் பின்னர் தமது சொத்துக்களின் கிரய மதிப்பை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். சூடாமணி தானமளித்த தொகை மாணவர்களின் கல்விக்கும், தொழுநோயாளிகளின் சிகிச்சைக்காகவும் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறையாக நோயாளிகளுக்கும் பயன்படுகின்றது. நாட்டிலேயே தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் சூடாமணிதான் என்று ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் அறங்காவலர் நல்லி குப்புசாமி குறிப்பிடுகிறார்.[3]

சூடாமணி தேர்ந்தெடுத்த சேவை நிறுவனங்கள் தொகு

  • ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்
  • ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச மருந்தகம்
  • வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ், தரமணி [3]

வழங்கப்பட்ட தொகை தொகு

இவரது வீடு விற்று வந்த தொகை, 2011 ஆம் ஆண்டு ஒரு கோடியே ஐம்பது லட்சமும், 2012 ஆம் ஆண்டில் இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாயும் ஆக இந்த மூன்று நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. [3]

விருதுகள் தொகு

  • கலைமகள் வெள்ளி விழா விருதும் பரிசும் மனத்துக்கினியவள் நாவலுக்காக (1957)[1]
  • இலக்கியச் சிந்தனை ஆண்டு விருதை தமது "நான்காவது ஆசிரமம்' என்ற சிறுகதைக்காகப் பெற்றார்.
  • ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில், "இருவர் கண்டனர்' என்ற நாடகத்துக்காக 2-ம் பரிசைப் பெற்றுள்ளார்.
  • "பபாசி' அமைப்பு சார்பில் ரூ.1 லட்சம் பரிசு 2009 ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. பரிசை ஏற்றுக்கொண்ட அவர், பல்வேறு சேவை நிறுவனங்களுக்கு அந்தத் தொகையைப் பிரித்து வழங்கினார்.
  • இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதப் பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார். கீழே இலக்கியச் சிந்தனையின் மாதப் பரிசு பெற்ற சிறுகதைகள்
ஆண்டு மாதம் இதழ் சிறுகதைத் தலைப்பு
2003 மே குங்குமம் மாலை மலர்ச்சி
2000 மார்ச் இந்தியா டுடே கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி
1999 ஆகஸ்ட் கல்கி தரிசனம்
1992 செப்டம்பர் புதிய பார்வை புவனாவும் வியாழக் கிரகமும்
1988 ஜூன் கல்கி இறுக மூடிய கதவுகள்
1981 பிப்ரவரி கல்கி ஊனமும் உள்ளமும்
1971 அக்டோபர் கலைமகள் அரும்பு உலகம்
1970 அக்டோபர் கலைமகள் நாம் என்ன செய்வது

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "மனத்துக்கினியவளும் மரணமும்". காலச்சுவடு. Archived from the original on 2010-11-19. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2014.
  2. அமுதசுரபி;தீபாவளிச் சிறப்பிதழ் 2011; வெளிச்சத்துக்கு வந்த ஓவியங்கள்;பி.சக்தி
  3. 3.0 3.1 3.2 ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; மே 2012; ’மனிதர்களிலும் அவர் சூடாமணி’ கட்டுரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சூடாமணி&oldid=3688249" இலிருந்து மீள்விக்கப்பட்டது