இப்தார் (ஆங்கில மொழி: Iftar,அரபு மொழி: إفطار‎) என்பது ரமலான் நோன்பு நோற்கும் இசுலாமியர் மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும். நோன்பை முடித்துக் கொள்பவர்கள் ஒன்றாகக் கூடி இவ் உணவை உண்பது வழக்கம். இது ஞாயிறு மறைந்த பின்னரே உட்கொள்ளப்படுகிறது. நோன்பை முடிப்பதற்கு முதன் முதலாக ஈச்சம்பழத்தை உண்பது வழக்கம்.

எகிப்து நாட்டில் இப்தார்
ஆட்டிறைச்சியைப் பொடியாக நறுக்கிச் சமைத்து மைதாப்புரோட்டாவுக்குள் வைத்துச் செய்யப்படும் கீமா புரோட்டா. பெங்களூர் கடை ஒன்றில்

ரமலான் திங்களின்போது இப்தார் நேரத்தில் பல வகையான சிறப்பு உணவுகளை இசுலாமியர் மிகுதியாக வாழும் பகுதிகளில் காண முடியும். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அரிசி மற்றும் கிராம்பு பட்டை போன்றவற்றால் செய்யப்படும் நோன்புக் கஞ்சியை மக்கள் உட்கொள்வர். இதை இசுலாமியரும் சில வேளைகளில் மற்ற சமயத்தவரும் நோன்பு இருப்பவர்களுக்குப் பரிமாறுவதுண்டு. இந்தியாவில் இசுலாமியர் மிகுதியாக வாழும் ஐதராபாத் நகரில் கலீம் என்ற உணவு முகன்மை பெறுகிறது. இவை தவிர சமோசா, மாட்டிறைச்சி வருவல், ஆட்டிறைச்சி கபாபு, சில இடங்களில் ஒட்டகக்கறி, பொரித்த காடை என பல வகையான இறைச்சி உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன.

மையக்கிழக்கு நாடுகளில், மசூதிகளிலும் பிற இடங்களிலும், பெரிய கூடாரங்களை அமைத்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு ரமலான் மாதம் முழுவதும் இப்தார் உணவுகளைப் பரிமாறுவது வழக்கம். இந்த நாடுகளில், பல வணிக நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்காக இப்தார் விருந்துகளைப் பெரிய விடுதிகளில் ஒழுங்கு செய்வது உண்டு. நூற்றுக்கணக்கில் இசுலாமியரும், பிற மதத்தவரும் இதில் கலந்து கொள்வதைக் காணலாம்.

இவற்றையும் காணலாம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்தார்&oldid=2739244" இலிருந்து மீள்விக்கப்பட்டது