இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்

இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல் (கிரேக்க மொழி: Ἀποκαθήλωσις, Apokathelosis), என்பது இயேசுவின் வாழ்வை சித்தரிக்க கலைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் விவிலிய நிகழ்வாகும். விவிலியத்தில் யோவான் நற்செய்தி 19:38-42இல் இது விவரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இயேசுவின் சீடர்களுள் ஒருவரான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சாவுக்குப்பின் பிலாத்திடம் அனுமதி பெற்று இயேசுவின் சடலத்தை எடுத்துக் கொண்டு போனார். நிக்கதேம் என்பவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டி ஒரு புதிய கல்லரையில் இயேசுவை அடக்கம் செய்தார்கள்.

இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல் ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ். (1577-1640). காப்பிடம்: லீல், பிரான்சு.

இன்நிகழ்வின் முதல் பகுதி சித்தரிப்பில் சிலுவையிலிருந்து இறக்கப்படும் இயேசுவோடு, நற்செய்தியாளரான யோவான் மயக்கமுற்ற நிலையில் இருக்கும் இயேசுவின் தாய் மரியாவை தாங்குவதுபோல சித்தரிப்பது வழக்கம். இவர்களோடு மகதலேனா மரியாவும் சித்தரிக்கப்படுவார். இவர்களோடு பெயர் குறிக்காத பல ஆண்களும் பெண்களும் உதவி செய்வது போல சித்தரிக்கப்படுவர்.[1]

இவ்வகை சித்தரிப்பு பைசாந்திய கலையில் 9ஆம் நூற்றாண்டிலும், மேற்கு உலகில் 10ஆம் நூற்றாண்டிலும் புகழ் பெற்றது. இன்நிகழ்வு கத்தோலிக்க சிலுவைப் பாதையின் பதிமூன்றாம் நிலை ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. G. Schiller, Iconography of Christian Art, Vol. II, 1972 (English trans from German), Lund Humphries, London, p.164, ISBN 853313245