கோல்ட் கடற்கரை

கோல்ட் கடற்கரை (Gold Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட்.

கோல்ட் கடற்கரை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

லா ரிவியேர் அருகே தரையிறங்கும் கமாண்டோக்கள்
நாள் ஜூன் 6, 1944
இடம் ஆரோமான்ச்சே-லே-பெய்ன், லெ ஹாமல் மற்றும் லா ரிவியேர், பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் டக்ளஸ் அலெக்சாந்தர் கிரஃகாம் நாட்சி ஜெர்மனி வில்லெம் ரிக்டர்
நாட்சி ஜெர்மனி டயட்ரிக் கிராஸ்
பலம்
24,970 2 காலாட்படை டிவிசன்கள்
இழப்புகள்
~400 தெரியவில்லை

கோல்ட் கடற்கரை ஜூனோ மற்றும் ஒமாகா கடற்கரைகளுக்கு இடையே அமைந்திருந்தது. ஜூன் 6ம் தேதி பிரிட்டானிய 2வது ஆர்மியின் ஒரு உட்பிரிவான 50வது பிரிட்டானியக் காலாட்படை டிவிசன் மற்றும் 8வது கவச பிரிகேட் இங்கு தரையிறங்கின. கோல்ட் கடற்கரை ஐட்டம், ஜிக், கிங் என்று மேலும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஜெர்மானியத் தரப்பில் 716வது நகராத காலாட்படை டிவிசனும், 352வது காலாட்படை டிவிசனின் சில பிரிவுகளும் இக்கடற்கரையைப் பாதுகாத்து வந்தன. ஜூன் 6 அதிகாலை வான்வழி குண்டுவீச்சுடன் கோல்ட் கடற்கரை மீதான தாக்குதல் தொடங்கியது. காலை 7.25 மணியளவில் முதல் பிரிட்டானியப் படைப்பிரிவுகள் கோல்டில் தரையிறங்கின. சற்றே பலத்த எதிர்ப்பு இருந்தாலும் பிரிட்டானியப் படைகள் எளிதில் கோல்ட் கடற்கரையைக் கைப்பற்றி முன்னேறத் தொடங்கின. இரவுக்குள் 25,000 வீரர்கள் தரையிறங்கி விட்டனர். ஒமாகா மற்றும் ஜூனோ கடற்கரையில் தரையிறங்கிய படைகளோடு கோல்ட் கடற்கரைப் படைகள் கைகோர்த்து விட்டன. மறுநாள் பெர்ச் நடவடிக்கை தொடங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்ட்_கடற்கரை&oldid=1358162" இலிருந்து மீள்விக்கப்பட்டது