சஷ்டி அல்லது சட்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஆறாவது திதி சட்டி ஆகும். ஷட் எனும் வடமொழிச் சொல் ஆறு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஆறாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் ஆறாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் ஆறாம் நாளுமாக இரண்டு முறை சட்டித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் சட்டியைச் சுக்கில பட்சச் சட்டி என்றும், பூரணையை அடுத்த சட்டியைக் கிருட்ண பட்சச் சட்டி என்றும் அழைக்கின்றனர்.

சட்டித் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

வானியல் விளக்கம் தொகு

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] சட்டித் திதி ஆறாவது திதியும் 21 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 60 பாகையில் இருந்து 72 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சச் சட்டித் திதியும், 240 பாகையிலிருந்து 252 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சச் சட்டியும் ஆகும்.

இந்து சமயச் சிறப்பு நாட்கள் தொகு

இந்து சமயத்தினர்க்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாகக் கொண்டே வருகின்றன. இது முருகனுக்குரிய சிறப்பு நாளாகும். சட்டித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:

  • கந்தசட்டி விரத நிறைவு: ஐப்பசி மாத வளர்பிறைச் சட்டித் திதி.[2]
  • விநாயகருக்கான கார்த்திகைச் சட்டி 21 நாள் விரத நிறைவு: மார்கழி வளர்பிறைச் சட்டித் திதி.[3]

கபிலா சஷ்டி கபிலா சஷ்டி என்பது பாத்ரபத மாதத்தில் தேய்பிறையில் வருகின்ற சஷ்டிதிதியாகும். [4] இந்த நாள் சந்திரனுடைய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நாளில் விருப்ப தெய்வத்திற்கும், பசுவிற்கும் பூசை செய்தல் சிறப்பாகும். பசுவிற்கு புற்கள் போல உணவிடுதலும் நன்மைதரும்

ஆதாரம் தொகு

  1. Sharma, P.D., 2004. பக். 22.
  2. இந்து மக்களுக்கு ஒரு கையேடு, 2006. பக். 135.
  3. விநாயகர் விரதங்கள் பரணிடப்பட்டது 2014-01-03 at the வந்தவழி இயந்திரம் - மாலைமலர்.காம்.
  4. தினமலர் பக்திமலர் 01.10.2015 பக்கம் 17

உசாத்துணைகள் தொகு

  • இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்றம், 2006.
  • திரவியம், மு., இந்துசமயக் களஞ்சியம், திருமகள் நிலையம், 1995.
  • Balachandra Rao, S., Indian Astronomy: An Introduction, University Press (India) Private Limited, 2002.
  • Sharma, P. D., Hindu Astronomy, Global Vision Publishing House, 2004.

காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஷ்டி&oldid=3266143" இலிருந்து மீள்விக்கப்பட்டது